July 18, 2016

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது -திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை

கண்டராதித்தனின் “ திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை
 -அஜயன் பாலா

தமிழ் கவிதைகள்  இன்று  ஒரு  மிகப்பெரிய வெற்றிடத்துக்குள் வந்து மூச்சு முட்டி நிற்கின்றன .இந்த வெற்றிடம்  தற்காலிகமானதுதான் . சிறுகதை போலோ, நாவல் போலோ, கவிதைக்கு மிகப்பெரிய இடைவெளிகள் தமிழ் இலக்கிய சூழலில் எப்போதுமே உண்டானதில்லை.மேலும் அரைகவிகள் , காசு கவிகள், துதிபாடிகள் கவிஞர் என்ற பேரில் எல்லா காலத்திலும் தமிழகத்தில்  நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தின் அதிகமாக விற்பனையாகும் இதழ் முதல், கடைக்கோடி  இதழ் வரை கவிதை இல்லாமல் பிரசுரமாவதை அச்சு இயந்திரமே  விரும்புவதில்லை . அந்த அளவுக்கு   கவிதைகள்  அதிகமாக எழுதப்படுகின்றன . மற்ற மொழிகளில் இது போல கவிதைகள் எழுதப்படுகின்றனவா என்று  தெரியவில்லை.

இப்படியான சூழலில் சிறந்த கவிதைகள் எனும் ஒரு இடத்தை ஒரு தொகுப்பு  பெறுவது சவாலான  விஷயமே. திருச்சாழல் தொகுப்பு  வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம்  ஆகப்போகும் சூழலில்  இது போன்ற  விமர்சன கூட்டங்கள் கவிதைக்கும் கவிஞனுக்கும்  பெருமை சேர்க்கின்றன. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த  தென் திசை இலக்கிய வட்ட அமைப்பிற்கும்  அமைப்பாளர்களுக்கும் ,நண்பர்  அதீதன் சுரேன் மற்றும் தேவிமகன் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

ழ கவிதை களுக்குபிறகு நீண்ட இடைவெளியுடன் கவிதயுலகம் விரக் விட்டு எண்ணக்கூடிய கவினர்களால் மட்டுமே இயங்கி வந்த நிலையில்
2000க்குப்பின் கவிதை உலகம் பெண் கவிஞர்கள் மூலமாக மிகப்பெரிய உடைப்பை உண்டாக்கியது. இத்னை   தொடர்ந்து 2004க்குப்பின் புதிய அலையாக ஆண்கவிஞர்களும் புற்றீசல் போல படையெடுத்தனர். புது எழுத்து காலம் என்று கூட சொல்லுமளவிற்கு அந்த காலத்தின் கவிஞர்களுக்கு முழுவதுமாக மேடை கொடுத்து, அந்த பாய்ச்சலுக்கு வழி வகை செய்தார் மனோன் மணி.அந்த புது எழுத்து காலத்தில் ஸ்ரீநேசன், ராணி திலக், பழனி வேல் ஆகியோருடன் அறிமுகமானவர் கண்டராதித்தன்.

இந்த அலையில் இவர்களுக்கு சற்று முன்னதாக லஷ்மி மணிவண்ணன் யவனிகாஸ்ரீராம் சங்கர ராம சுப்ரமணியன் . ஆகியோர் வந்திருந்தாலும்,

அதே போல இந்த அலையின் பிந்திய ஆளாக பிரன்சிஸ் கிருபா, அய்யப்ப மாதவன் ஆகியோர் இணைந்திருந்தாலும்,

இவர்கள் அனைவருமே இக்காலத்தின் சிறந்த கவிகளாக அவரவர் தொகுப்பு வரும் வெவ்வேறு காலங்களில்  கால இடைவெளிகளில் அறியப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து இசை இளங்கோ கிருஷ்ணன், செல்மா பிரியதர்ஷன்,  லிபி ஆரண்யா,  சபரி நாதன் ,வெயில் ரியாஸ் குரானா,  நரன் ,கதிர்பாரதி  ,  போகன் சங்கர் போன்ற கவிஞர்கள் இச்சரடை தொடர்ந்து இன்றுவரை எழுதி வந்தாலும்,    .            
இவர்களுள் கண்டராதித்தன்  கவிதைகள் இன்று வரை மிகுந்த தனித்தன்மை  கொண்டவையாக  இருக்கின்றன என்பது அதன் சிறப்பு.

குறிப்பாகவே அவரது முந்தைய இரு தொகுப்புகளான 2001ல் வெளியான கண்டராதித்தன் கவிதைகள் மற்றும் 2007ல் வெளியான சீதமண்டலம், இவை இரண்டின் மூலமாக மட்டுமே அவருக்கு இந்த பெயர் கிட்டியிருப்பதை மொழிசார் கவியுலகு நன்கறியும்.  இதன் மூலம் கண்டராதித்தன்  மட்டுமே சிறந்த கவி என்பதான அர்த்தம் இல்லை, அவரைக்காட்டிலும்  வேறு  சிலருக்கும் காலத்தின்  அரிய சிம்மாசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கட்டுரை கண்டராதித்தன் கவிதைகளின் ஈரப்பசையை மட்டுமே அளவெடுக்கவிருப்பதால் அவருடைய அந்த சிம்மாசனத்துக்கும் மூன்றாவது தொகுப்பான திருச்சாழலுக்கும்   பொருத்தம் உள்ளதா, இல்லை சிம்மாசனத்துக்கு  முட்டுகிட்டு கொடுக்கவேணுமா,  இல்லை சிம்மாசனத்தையே அப்புறப்படுத்திவிடலாமா, என்பதை பரிசோதித்து பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

 அவருடைய முந்தைய இரு தொகுப்பின் கவிதையாக்கத்தை லேசாக ஒரு எட்டு பார்த்துவிட்டு இன்றைய கவிதைகளில் என்னவாக உருமாற்றம் அடைந்துள்ளார் என்பதை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

2000ல் வெளியான முதல் தொகுப்பான கண்டராதித்தன் கவிதையில் அவரிடம்  கவித்துவமாய் சொல்வதற்கு பாடு பொருட்கள் அல்லது இறைச்சி நிறையவே இருந்தது. கீழ் காணும் பூ பற்றிய கவிதையில் ஒரு பூ நம்மை வந்தடையும் விதத்தை பட்டியலிடுவதை  பார்ப்போம்.


கவிதை

           //ஒரு நீதியை நமக்கு சொல்வது போல்
பூக்கள் பூக்கின்றன

ஒரேயொரு பூக்கூந்தல் இந்த வீதி
முழுவதையும் அழகாக்கிவிடுகிறது

பூக்களின் வழி பெண்கள் மேலும்
சுந்தரமாகிறார்கள்

உற்சவ மூர்த்தி  தண்டை மாலைகளுடன்
அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்

பூப்பல்லக்கில் அசைந்து போகிறது
அண்ணாரது பூத உடல்
நமக்கென  நீதிகளை
பூக்கின்றன செடிகள்  அதனால்
நமக்கு கிடைக்கிறது ஒன்றிரண்டு
பூக்கள்
            
பூ வெவ்வேறு விதமாக நம்மை வந்தடைவதை இக்கவிதை  காட்சி படுத்துதலின் மூலம் முழுமையான கவிதையாக  நம்மை வந்தடைகிறது 
இந்த குணம் அவரது அடுத்த தொகுப்பான சீத மண்டலத்தில் பெரும்பாய்ச்சலை சந்திக்கிறது. கவிதை என்பது இறைச்சி பொருளை தாண்டி மொழியின் சாத்தியத்தை அல்லது கவிதையிலிருந்து கவிதையை லாவகமாக வெளியேற்றும் தன்மையுடையதாக மாற்றிக்கொள்கிறார்.  சீத மண்டலத்தின் எந்த  கவிதைக்கும் சாவி இல்லை. இறுக்கமான சொற்களை தைத்து அதை விந்தையான வடிவத்தில் தைத்து இறைச்சியை கண்டடைய முடியமல் வாசகனை திணறவைத்து  வெளியேற்றும் அந்த வித்தையை, மிக தேர்ந்த தொழில் நுட்பத்துடன்  செய்திருந்தார்.  அவரது சமகாலத்தில் வேறு யாருக்கும் இத்தகைய வசீகர இறுக்கம் வாய்க்கவில்லை, இவரது சம காலத்தவர்களான ஸ்ரீநேசன் , ஷங்கர் யவனிக்கா ஆகியோர் வாசிப்பின் பேரின்பத்தை முன்வைத்த கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தபோது முற்றிலும் புதிர்த்தன்மையான  சொற்கட்டுமானத்தின் மூலம் ஒரு வசீகரத்தை தக்கவைத்துக்கொண்ட கவிதைகளாக  காணப்பட்டது   சீதமண்டலத்தின்  சிறப்பு .

அவரது மொழியில், திராவிட திரைப்பட பணியிலான ஒரு சப்த ஒழுங்கையும் இக்கவிதைகளில் காணமுடியும். ஒருபுறம் சப்தரீதியான அற்றொழுக்காத மொழி ஒழுங்கும் உள்ளிடாக அர்த்தச்சிதைவுமாக இக்கவிதைகளின் வசீகரம்  மிகுந்த தனித்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது.

உதாரணத்துக்கு சீதமண்டலத்தில் அவரது கவிதை
  தலைப்பு : நீ எழுது

//கள்வர்கள் கபட தாரிகள் பாவிகள்
திரியும்  இருண்ட தெருக்களில்
உனக்கொரு மேசை தயாரிக்கப்பட்டது//

என துவங்கி

//ஆள் அம்பு அரிவாளென ஆயுதங்கள் வடிக்கும்
உலைக்களத்தின் ஓசையை கேட்டோம்
கேடு மிகுந்ததால்
அலறும் பட்சிகளின்
 சப்தத்தை கேட்டோம்
பெண்டிரும் சிசுவும் கதறும்
ஓலத்தையும் கேட்டோம்
அன்பையோ சமாதானத்தையோ
காதலையோ துயரத்தையோ
உன்மூலம் அறிந்து
ஆகாயத்திலிருந்து  எவனும் வந்து
தழுவத்தேவையில்லை தேவடியா மகனே //
( சீத மண்டலம் )

என முடியும் கவிதையின் கேட்டோம் டோம் டோம் என சப்த ஒழுங்கினூடே, கட்டுண்டோம் பொறுத்திருந்தோம் என திராவிட பாரம்பரியத்தின் மொழி ஒழுங்கினூடே, இறுதியில் தேவடியா மகனே என அதிரும் கடைசி வரியின்  முரண் தான் கண்டராதித்தனின் கவிதைகளின் பலம்.

அவரது இந்த மொழி அடுக்குகளின் திராவிட இயக்க வசனங்களின் சாயல்  எனக்கு குறையாக படவில்லை, மாறாக அது அவரது உத்தியாக கவிதைக்குள் தான் உருவாக்க முனையும் சட்டகத்துள்  வரலாற்றினுள்  வாசகனை கழுத்தை பிடித்து அழுத்த உதவும் உபாயமாக அறியமுடிகிறது.மேலும் வரிகளுக்குள்  ஒளிந்திருக்கும் அந்தகாரம் காலத்தின் இருண்ட மடிப்புகளக இருப்பதால் நவீன கவிதையின் சாத்தியத்தை இக்கவிதைகள் ,முழுமையாக வரித்துக்கொள்கின்றன,
கண்டராதித்தனின் கவிதைகளின் சிறப்பே இந்த வரிகளுக்கிடையிலான அந்த காரம் தான்.இந்த காரத்தினுள் நுழைந்து அர்த்தங்களை தேடும் வாசகன், சோழ கோயில்களின் வவ்வால் மண்டிய   குகையில் புதையுண்டவனாகிவிடுவான். இப்படியாக ஒருபுறம் தமிழ் புரணிகத்தை கட்டியெழுப்பும்  வரிகள் இன்னொருபுறம்  தேவடியா மகன் இந்த இரண்டும் சேர்ந்த அவரது குரல் ஒருவகையில் நிலவுடமை சமூகத்தின் மரபை இழக்காத குரல்களாக இருந்தாலும், இன்னொரு புறம் அவற்றின் கட்டுகளிலிருந்து வெளியேற தவிக்கும் நவ கவிஞனின் குரலாகவும் இரண்டு வேறுபட்ட தவனியில் இயக்கம் கொள்கின்றன. சீதமண்டலம் மூலமாக கண்டராதித்தன் பெற்ற இந்த தனித்த அடையாளம் அவரது மூன்றாவது தொகுப்பான திருச்சாழலில் சற்று நீர்த்த வடிவிலேயே காணப்படுகிறது.

 இடைப்பட்ட காலத்தின் புதியகவிகள் மற்றும் முந்தைய தொகுப்பின் மீதான விமர்சனங்கள் அவரையும் வசன கவிதைகள் என அழைக்கப்படும் ப்ளேய்ன் பொயட்ரிக்குள் விழத்தட்டியிருக்கூடும்

 திருச்சாழல் தொகுப்பின் இரண்டாவது கவிதையான  “கடவுள் முட்டாள்களிடம் அனபாயிருக்கிறார் எனும் கவிதையில் இதுவரையில்லாத  புதிய கண்டாராதித்தனை  எளிமையான வசனங்களினூடே பார்க்க முடிகிறது.  இன்று வெறும் துண்டுதுண்டாக மொழி பிடிமானம் இல்லாத நடைமுறை வாழ்க்கையின் சில்லுகளை வார்த்தையாக கோர்ப்பதை கவிதையாக்கத்தின் புதிய தொழில்நுட்பமாக பார்க்கமுடிகிறது. கிட்டத்தட்ட இந்த பாணி எரிசலூட்டும் வகையில் அதன் அழிவை எய்து விட்ட நிலையில்    கண்டராதித்தன் எனக்கும் தவில் வாசிக்க வரும் என நிரூபிக்க முயல்வதை  வெறும் பரிசோதனையாக மட்டும் எடுத்துக்கொள்ளமுடியாது.

இது போன்ற கவி சவால்கள் உயர்ந்த கவிஞனின் கால  தடுமாற்றங்களாகத்தான் கணக்கில் எடுக்க முடியும். இன்னபிற கவிதைகளில் இந்த நேரடி வசன தன்மையில்லாவிட்டாலும்  முந்தைய தொகுப்பின் அடர்த்தியான மொழி திரவ நிலைக்கு இறங்கியுள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. காலத்தோடு   தன்னை புதுப்பித்துக்கொள்ள முனையும் போது கவிஞன் தன் அடையாளங்களையும் காப்பற்றிக்கொள்ளவேண்டியது  அவசியம். முந்தைய தொகுப்பின் ஒரே சொல்முறை அல்லது பாடுபொருளில்லிருந்து விலகி இத்தொகுப்பில் பல்வேறு முயற்சிகளை கவிஞர் முன்னெடுத்துள்ளார் .  பொதுவாக கண்டரின் கவிதைகளின் தனித்த  பாணி  வியக்கப்பட்ட அளவிற்கு தனியாக சிறந்த கவிதை என எந்த கவிதையும் அடையாளப்படவில்லை . உதாரணத்துக்கு யவனிக்காவின் குறைந்த கூலிக்கு முந்திரிகொட்டை உடைப்பவன். ஸ்ரீநேசனின் நள்ளிரவில் ஏசுகிறிஸ்து . ஷங்கரின்  சிங்கத்துக்கு பல் துலக்குபவன் போன்ற அடையாளமான கவிதைகள் என எதையும்  இவரிடம் சொல்ல முடியாது . ஆனால் இத்தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் பாணியிலிந்து விலகி எழுதப்பட்டிருக்கின்றன .   சிறந்த கவிதைகள் அடையாளமான கவிதைகள் அவர் எழுதியுள்ளார். குறிப்பாக  ஞானப்பூங்கோதைக்கு  வயது 40, மகளின்  கண்ணீர் , நோய்ப்பிண்டம் , நீண்டகால எதிரிகள் என சிலவற்றை பிரித்து எடுத்து கூற முடியும்
 அவ்வகையில் இந்த போராட்டத்தில்   ஒரு  கவிஞனாக கண்டராதித்தன் வெற்றி பெற்றவராகவே கருதமுடியும்.

தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக நோய்ப்பிண்டம் எனும் கவிதை அவரது முந்தைய தொகுப்பின்  பாய்ச்சல்களை பன் மடங்கு கடந்துவிட்டதை உணர முடிகிறது. வழக்காமான பாணியிலிருந்து விலகிய இக்கவிதையின் பாடுபொருள் கவிஞனின் தீவிர அகவுலகம் பற்றி பேசுகிறது. கண்டராதித்தனின் கவிதைகளில் பொதுவாக சுயம் சார்ந்த கவனங்கள்   இருப்பதில்லை .  மனதின் முன் விழும் சாயைகளை பற்றியே அவரது கவிதைகளில் கவலை மிகுந்திருக்கும் அது காதலியாகவோ, நண்பனாகவோ, எதிரியாகவோ அல்லது வழிப்போக்கனாகவோ இருக்கக்கூடும்.  தன் துயரம் துன்பம் எதையும் கவிதைக்குள் இறக்கிவைக்காத கண்டராதித்தனின் இந்த நோய்பிண்டம்  கவிதை மிக மிக நுட்பமான கவிதை எழுதுபவனின் உளவியல் சிக்கலை பாடு பொருளாக்கி கவிதையாகவும் வடிவமைத்திருக்கிறது அதன்முதல் வரியே இவ்விதம் துவங்குகிறது.

//தானொரு மன நோயாளி என்பதையறிந்த கவிஞன்
அதனை முழுமுற்றாக ஏற்கிறான் ,பெருமிதப்படுகிறான் //

எனத்துவங்கி தீவிரமான மன அவஸ்தைகளை கவிதையாக்கி எழுதி செல்கிறது.
இது போல  நண்பனாகிய எனக்கும் வேத புரீஸ்வரனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கும் . திருக்கோலம்  என தலைப்பிட்ட கவிதை பின் சோமன் சாதரணம், மகளின் கண்ணீர் , சஞ்சாரம் சீபத்த ஆகிய கவிதைகளில் கண்டராதித்தனின் சீத மண்டலத்தின் தனித்த அடையாளத்தை அதன் கெட்டித்தன்மையை உணரமுடிந்தது.

மகளின் கண்ணீர் கவிதையில் வழக்கத்துக்கு மாறாக கவிஞர் ஒரு காட்சியை விவரிக்க துவங்குகிறார். தேர்ந்த சினிமா காட்சியைப் போல விரியும் அக்கவிதையில்  இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் மோதிக்கொண்டதை தொடர்ந்து, அதில் ஒருவரான கவிஞனின் முகத்தில் எதிர்பட்டவன் ஓங்கி குத்து விடுகிறான் , இதனால் முகத்தில் ரத்தம் வழிய கவிஞன் நிற்பதை முன்னாள் அமர்ந்திருக்கும் மூன்றுவயது மகள் பார்க்கிறாள். அவன் எதிர்பார்த்தார் போல அவள் அழவில்லை . மகள் அழாத காரணத்தை யோசித்தப்படியே கவிஞன் செல்ல சட்டென மகளின் பிஞ்சு விரல்கள் அவன் காயத்தை தடவுகின்றன . பின் அவள் கண்ணீர் இதயத்தை நனைக்க,
இறுதியாக  என் தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது இது என முடிக்கிறார்.

இது போன்ற சம்பவ விவரிப்பு கவிதைகள் அல்லது கதை சொல்லும் கவிதைகள் அவரிடம் வேறு எதுவுமே இல்லை. இதை வாசிக்கும் போது ஸ்ரீநேசனின் இன்னொரு கவிதை ஞாபகத்தில் வருகிறது. தலைப்பு தெரியவில்லை . அதன் சாரமான சம்பவம்  இப்படியாக துவங்குகிறது.  ரயில் பெட்டியில் பழம் விற்கும் ஒரு பெண்ணை காவலாளி கண்மூடித்தனமாக தாக்குகிறான் . அந்த காட்சியை நமக்கு விவரித்துசெல்லும் கவிஞன் ஸ்டேஷனில் அதை கண்டு பலரும் வேடிக்கை பார்ப்பதை சொல்லி  எல்லோரும் அந்த பெண்ணுக்காக வருத்தப்பட கவிஞன் மட்டும்  தாய் அடிபடும் இந்த காட்சியை பார்க்க நேரும் அவளது மகனின் நிலைப்பற்றி யோசிப்பார். ஒரு கவிதையாக வாசிப்பவனை உலுக்கிவிடக்கூடிய கவிதை இது  ஒப்பீட்டளவில் இரண்டும் சிறந்த கவிதைகளே.  நேசனின் கவிதையில் ஒரு அதிர்ச்சி இருக்கும் ஆனால் அதைக்கடந்து  கண்டரின் கவிதையின் இறுதி வரியான “ தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது  எனும் வரியில் ஒரு காவியத்தன்மையான உணர்ச்சியை கவிஞரால் நம் மனதில் சித்திரமாக உருவாக்க முடிவது, இக்கவிதையின் சிறப்பு . பிக்‌ஷ்னை  தாண்டி  இந்த வரிக்கவிதையாக  தன்னை   நிறுவிக்கொள்ள  உதவுகிறது.

தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை  ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது
இக்கவிதையும்  ஒரு அனுபவ விவரிப்பு கவிதைதானென்றாலும் கவிதையின் அடியோட்டமான  ஒரு புனைவு  இதன் கவித்தன்மையை சாத்தியப்படுத்திவிடுகிறது,
தன்னைப்போல ஒரு பெண்ணை உணர்வது  என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். எனக்கு தெரிந்து உலக சினிமாக்கள் அல்லது கதைகளில் கூட இடம்பெறாத புதிய கற்பனை .

அதே போல சின்ன சின்ன கவிதைகளும் சட்டென  ஈர்த்து விடுகின்றன

//சமயத்தில் பெரும்
அவமானத்தை
ஏற்பதற்கு
குற்றத்தை நீ செய்திருக்க
வேண்டிய   அவசியமில்லை //

எனும் நான்கு வரி கவிதையில் பெரும் வலியும் வேதனையும் உள்ளடங்கியிருக்கின்றன , என் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வே அத்ற்கு சாட்சி . ஒரு பெரிய அவமானத்தை குற்றமே செய்யாமல் தலை குனிந்து ஏற்க வேண்டிய சந்தர்ப்பம்  எனக்கு ஒருமுறை உருவானது.

சென்னையில் நான் குடியேறிய ஆரம்ப காலத்தில் என் அறை நண்பனாக தங்கியிருந்தவன் .. நள்ளிரவில் அடுத்த வீட்டின்  காம்பவுண்ட் ஏறி படுக்கை அறையை ஆர்வம் மிகுதியில்  எட்டிப்பார்த்துவிட . அவர்கள் அதை பார்த்தவுடன் ஓடிவந்து அறையில் படுத்துக்கொண்டான் . பின் அவர்கள் கூட்டமாக வந்து கதவைத்தட்ட என்ன விவரம் என தெரியாமல் எழுந்து கதவை திறந்த எனக்கு அடியும் உதையும் கிடைத்தது. பிறகு விவரம் தெரியவந்தபின் என் அறை நண்பனை காட்டிகொடுக்காமல் நானே பழியை ஏற்றுக்கொண்டேன்.

கண்டராதித்தனின் இக்கவிதை சட்டென என் வாழ்வின் பக்கத்தை அறுத்து என் முன் காண்பிப்பதாக இருந்தது.

தொகுப்பில் கவிதையாக சேர்க்க முடியாத அல்லது ,முழுமையாகத  சொத்தை கவிதைகளும் இருக்கின்றன.  குறிப்பாக சங்கரலிங்கனாரின்  லீனியர் குடி
சாவை தள்ளும் சிறுமி போன்றவை  இக்கவிதை தொகுப்பில் தவிர்த்திருக்க வேண்டியவை.

பொதுவாக கண்டராதித்தன் கவிதைகளை வாசிப்பவர்கள் கவிஞர் எந்த காலத்தில் வாழ்கிறார் என்ற  ஐயமேற்படக்கூடும் ..இன்று கவுரவக்கொலைகளும்  நவீன மயமாக்களின் பாதிப்புகளல்லாமாக கழியும்  ஒரு காலத்தில் கண்டராதித்தனை இவை எதுவுமே தாக்கவில்லையா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. 

கண்டரின் கவிதைகளின் உச்சமான கவிதைகளில் சீத மண்டலம் எனக்கு இப்போதும் முதன்மையாக இருக்கிறது.

என்ற போதிலும் தனித்துவம் குறையாத அவனது கவிமொழி இன்னமும் தொடர மேலும் வளர நண்பனாகவும் ஒரு மொழியின் உபாசகனாகவும் அவன்மேல் கொள்ளைபிரியமே

யவனிகா ஸ்ரீராம் , கண்டராதித்தன் , ஸ்ரீநேசன், ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரும் இதர தனித்தன்மை மிக்கவர்களாக  இருந்தாலும்  கவிதைக்குள் செயல்படும் நிலப்பரப்பு மற்றும் சொல் முறை மொழி ஆகியவற்றில் தனித்தன்மையை அவர் தக்கவைத்துக்கொள்கிறார்.  2010க்குப் பிறகான கவிஞர்களில் மற்ற மூவருக்கும் வாரிசுளை நம்மால் கணடெடுக்க முடியும்,
ஆனால் கண்டராதித்தனின்  கவிதா செய்முறை என்பது வாரிசுகளை அண்டவிடாமல் தனித்து நிற்கிறது.



No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...