May 30, 2016

தேவி



நான் ஓரு வயோதிகனாக
உன்னை பின தொடர்கிறேன்
மறக்க முடியாத அந்த
பாடலை நினைவூட்டுகிறது
பின்னல் அசைவு
சிறு வயதில்
தொலைத்த விளையாட்டு
பொருளை திருப்பி
தருவாய் நீ செல்லமே
வெகுதூரம் வந்துவிட்டேன்
இன்னும் பின்னல் மனதில்
அசைந்து கொண்டேயிருக்கிறது
எதுவுமே இல்லாவிட்டாலும்
இருப்பதுபோலவே தோற்றச்
செய்யும் என் அன்பு மாயா
என்மேல் கனிவு கொண்டு
இல்லாமல் செய்து விடு

May 15, 2016

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - - _ அசதா

 புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - அசதா

    
    இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி இவற்றில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தபடி வந்திருக்கும் சிறுகதை மேற்சொன்னவற்றில் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் கண்டிருக்கிறது. சிறுகதை வாசகத் துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு உகந்ததொரு அளவில் (பக்க எண்ணிக்கை) இருந்தது அதன் பிரபல்யத்துக்கு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு சாத்தியங்களை, புதுமைகளை நிகழ்த்தவும் ஏதுவாயிருந்திருக்க வேண்டும். ஆனாலும் சுந்தர ராமசாமியின் உவமை ஒன்றைக் கடன்பெற்றுச் சொல்வதாயிருந்தால் சிறுகதை எழுதுவது திமிங்கிலத்தை நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கச் செய்வது போல. இதனாலேயே சிறுகதை சவாலான விஷயமாக இருக்கிறது.

     எனினும் மனித உணர்வுச் சிக்கல்களை, அரிதான அகதரிசனங்களை, மாபெரும் ஆனந்தமாகவும் துக்கமாகவும் அபத்தமாகவும் நிகழும் மானுட வாழ்வினை- பல நேரம் அவ்வாழ்வின் ஒரு விள்ளலை அல்லது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தமக்குள் நிகழ்த்தி பெரும் வெற்றி கண்டவை சிறுகதைகள். தமிழ்ச் சிறுகதை தனக்கான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தபோதும் மேலைச் சிறுகதைகளிலிருந்தும் அது கடன் பெற்றிருக்கிறது, அல்லது உலகின் ஏனைய மொழி இலக்கியங்களில் போல மேலைச் சிறுகதைப் போக்குகளை அவதானித்து  தனக்கான சிறுகதையை அது உருவாக்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதையின் நெடிய வரலாற்றைப் பேசாமல் தொண்ணூறுகளின் தமிழ்ச் சிறுகதைப் போக்குகளிலிருந்து தொடங்கலாம்.

          தொண்ணூறுகளில் யதார்த்த சிறுகதை வழக்கொழிந்துவிட்டதென்ற களிகூடிய ஒரு ரகசியப் பெருமிதம் பல தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கையாளர்களிடையே சுற்றி வந்தது. புதிய நூற்றாண்டு தொடங்கிய சில காலத்தில் யதார்த்த சிறுகதையைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துவிடும் என்றும் நம்பப்பட்டது. ‘யதார்த்த சிறுகதை மரணித்துவிட்டது என்ற ஒரு பிரகடனம் மட்டுமே குறையாயிருந்தது. அதேநேரம் எண்பதுகளும் தொண்னூறுகளும் தமிழ்ச்சிறுகதையில் மிகத் தீவிரமான ஆண்டுகளைக் கொண்டிருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது. மேலைச் சிறுகதைகளிலிருந்து விலகி லத்தீனமெரிக்க இலக்கியங்களின் பக்கம் நம் கவனம் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதுதான் தமிழில் மிகு புனைவுக் கதைகள் தீவிரமாக எழுதப்பட்டன. அவருக்கும் முன்பும் பிறகுமாக பல்வேறு ஆளுமைகள் இந்த மிகுபுனைவு காலகட்டத்தில் இயங்கினாலும் எஸ். ராமகிருஷ்ணனையும் அவரது ‘தாவரங்களின் உரையாடல் கதைத்தொகுப்பையும் இக்காலகட்டத்தின் துலக்கமான ஒரு அடையாளமாகக் காண விரும்புகிறேன். மிகு புனைவுக் கதைகளின் கதவுகளைத் திறந்து விட்டதில் இக்கதைத் தொகுப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

            பிறகு வந்த வருடங்களில் யதார்த்த சிறுகதையின் பிடரியைப் பற்றி அதன்மேலேறி நின்ற மிகுபுனைவுக் கதை மெல்லக் கீழிறங்கி ஒதுங்கி நின்றது. ‘கிளர்ச்சியுற்ற சிறுவர்கள் என ஜெயமோகன் லத்தீனமெரிக்க புனைகதையாளர்களைக் குறிப்பிட்டது நிஜம்தானோவென்ற ஐயம் ஏற்பட்டது. கு.ப.ரா, புதுமைப் பித்தன், வண்ணநிலவன் கதைகளெல்லாம் ஏன் வசீகரம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கின்றன என்ற கேள்வி வந்தது. மிகுபுனைவுக் கதைகள் பரீட்சார்த்தமானவை மட்டுமே என்பதான பிம்பம்  வலுவூன்றி இருந்தாலும்  இந்தக் காலகட்டத்தில் மிகுபுனைவுக் கதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒருவிதமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மிகுபுனைவு சிறுகதைகள் பரீட்சார்த்த எல்லையைத் தாண்டியவை என வாசகத் தளத்தில் நிரூபிக்க இன்னமும்  பிரயத்தனம் நடந்தபடிதான் இருக்கிறது.  மிகுபுனைவுக் கதைகள் மீதான இந்த அவநம்பிக்கையை மிகுபுனைவு எழுதுபவர்கள்தான் போக்க முடியும்.  

         பொதுவாவே சமகாலத் தமிழ்ச் சிறுகதை வெளி சோபையற்றுப் போய் புனைவெழுத்து என்பது நாவல்கள் மட்டுமே என்றாகியிருக்கிறது. இரண்டு சிறுகதைகள் எழுதிய எழுத்தாளரையும் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது என பதிப்பாளர்கள் கேட்கையில் சிறுகதைக்கான சந்தை மதிப்பை நாம் அறிய முடிகிறது. போனால் போகிறதென்று இடையிடையே சிறுகதைகளும் எழுதும் நாவலாசிரியர்களாலும் சந்தைமதிப்பு போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காத சிறுகதை எழுத்தாளர்களாலும்  சிறுகதைகள் வழக்கற்றுப் போகாமல் இருந்து வருகின்றன. மிகுபுனைவைப் பொருத்தவரை இன்று சிறுகதைகள் குறைவாகவே எழுதும் தீவிர புனைவெழுத்தாளரான கோணங்கி, மிகுபுனைவு நுட்பங்களை கைக்கொண்டு கதைகளைப் படைக்கும் சுரேஷ்குமார இந்திரஜித், மாய யதார்த்த கூறுகளைத் திறம்படத் தன் கதைகளில் கையாளும் பா.வெங்கடேசன் எனச் சிலரே அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.

     தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகுபுனைவுக் கதைகள் பெற்றிருக்கும் இடத்தினை மனதிற்கொண்டு அதிகமும் மிகுபுனைவு வகையைச் சார்ந்த கதைகளை உடைய ‘அஜயன்பாலா கதைகள் சிறுகதைத் தொகுப்பை நாம் அணுகலாம். பத்து  கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சில கதைகள் மட்டுமே யதார்த்த வகையைச் சேர்ந்தவை. மீதமிருக்கும் கதைகளில் மிகுபுனைவு தரும் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் அஜயன்பாலா அனேக கதைகளைத் தம்மளவில் வடிவநிறைவு கொண்ட, தேர்ச்சிமிக்க  மொழியுடன்கூடிய, வாசிப்பு சுவாரஸ்யம் குன்றாத கதைகளாகத் தந்துள்ளார் என்பதை இத்தொகுப்பின் பலமாகக் கூறவேண்டும். கதை வடிவமும் கூறுமுறையும் இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. வாழ்வின் நெருக்கடிகள் உந்தித் தள்ள விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இளைஞனொருவன், சுயபச்சாதாபம் கொண்டு தனிமையில் உழல்பவன், காதலியிடம் காதலைச் சொல்ல இயலாதவன் என்பதான ஒரு பாத்திரம் இக்கதைகளில் தூலமாகத் தோன்றுகிறது. இந்த எதிர்மறைகள் சூழ வாழும்போதும் இயற்கையோடு தன்னை அடையாளம் காண்பவனாகவும், கடந்துபோகையில் வசீகரிக்கும் ஒரு யுவதியின் முகத்தை ரசிக்கத் தயங்காதவனாகவும் அவன் இருக்கிறான்.

     தன் காதலியின் பிறந்தநாளுக்காக நண்பன் வாங்கிய கைக்குட்டை ஓர் இரவு இவனிடம் தங்கிவிடுகிறது, மறுநாள் பூங்காவில் சூழ்நிலை கருதி நண்பனின் காதலிக்கு இவன் காதலனாக சற்று நேரம் நடிக்கிறான். இறுதியில் நண்பன் வந்துவிட, இவனை விட்டு அவர்கள் அந்த தினத்தைக் கொண்டாடக் கிளம்புகிறார்கள். இவன் தன் மழைக்கோட்டோடு அங்கு நிற்கிறான். அது மழைபொழியும் வேளையாக இருந்தும் அந்த மூவரில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்திருக்கிறான். சொல்லப்போனால் அன்று இந்த உலகில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்தவனாக இருக்கிறான். ‘அந்த நிமிடமும் என் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் மழைக் கோட்டிற்குள் நின்றுகொண்டிருந்தேன் எனும்போது மழைக்கோட்டு மனதின் முக்காடாக மாறுகிறது, அவனை விடவும் மழைக்கோட்டு அங்கு முக்கியமானதாகிறது. கதையின் இறுதியில் அவன் கொள்ளும் துக்கம் அல்லது ஏமாற்றத்தை அது பரிபூரணமாக்குகிறது. ஒருவன் வாங்கும் மழைக்கோட்டு உலகியல் பயன்பாட்டில் மழையினூடாக அவனது தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குவது, ஆனால் சூக்குமமான ஒரு அகநோக்கில் அது மழை என்ற அற்புதத்தையும் மனிதனையும் பிரித்து வைப்பது. இந்த அடிப்படை புரியும்போது ‘மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’ கதை இன்னொரு பரிமாணத்தை அடைகிறது.

    ‘முருகேசன்  இத்தொகுப்பின் முக்கியமான கதை. சமகால சமூக-அரசியல் இயங்கு நிலைகளில் நுட்பமான உபாயங்கள் மற்றும் தந்திரங்கள்வழி வெகுமக்கள் மனதில் கருத்துக்களை கட்டமைத்து அவர்தம் சிந்தனையை புறவயமாகக் கட்டுப்படுத்தும் நுண் அரசியலை பகடியுடன் விவரிக்கிறது கதை. உதாரணமாக ஊரில் பித்தளைப் பாத்திரம் காணாமல் போனால் அது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுவது.  பெரும் மூடர் கூட்டத்தில் நுண்ணுர்வும், சுய சிந்தனையும் கொண்டவன் தனித்து ஒதுக்கப்படும் அவலமும் இத்தகு சமூக-அரசியல் கட்டமைப்பில் எதிர்ப்பு என்பதுகூட முறைப்படுத்தப்பட்ட ஒரு ஏமாற்றுத் தந்திரமாக இருப்பதும் இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது. யுவான் ருல்ஃபோவின் அனாக்ளீட்டோ மோரோனஸ் கதையை வாசித்தவர்கள்  ‘முருகேசன் கதையை இன்னும் சிறப்பாக உள்வாங்கமுடியும்.

     இத்தொகுப்பில் எனக்கு மிகவும் உவப்பான கதையாக ‘சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ...கதையைச் சொல்வேன். சின்ன முதலாளி, உயரமான சார் ஒருவர், ஒல்லி வாத்தியார் என வழக்கமாக நாம் காணும் பொதுக் குறியீட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் இதில் வருகிறார்கள். இப்பெயர்கள் இந்தக் கதையை குறிப்பிட்ட விசேஷங்கள் ஏதுமற்ற கதையாகக் காட்டுகின்றன ஆனால் உண்மையில் அது அப்படியல்ல ஒரு கார்ட்டூன் கதை போல முயல்வேட்டைக்கு வரும் சின்ன முதலாளியுடன் தொடங்கும் இக்கதை பச்சை நிலவைப் பள்ளிக்கூடப் பையில் வைத்து சிறுவன் பள்ளிக்குச் செல்வதாகத் தொடர்கிறது. பிரகாசமாகத் தெரியும் பந்தைப் பார்த்து  அது நிலாவைத் தொட்டுவிடாதே எனச் சின்ன முதலாளி கேட்குமிடம் கவனிக்கத் தக்கது. இறுதியில் சிறுவன் ஏமாற்றத்துடன் நிற்க நிலவு வானுக்கே சென்றுவிடுகிறது. முள்ளங்கித் தோட்டத்துக்குக் கடல் வந்து போயிருந்தது போன்ற வரிகளைக் கொண்டு பெரும் புனைவாக விரியும் இக்கதையில்பசிக்குது என வயிற்றைத் தடவிக் காண்பிக்கும் சிறுமி வரும் வரி வாசகனை விழுத்தாட்டி விடுவது. அர்த்தங்கள் மற்றும் குறியீடுகளுக்கப்பால்  நிற்கும் இக்கதை வியப்பையும் மனவிகசிப்பையும் ஒருங்கே தோற்றுவிக்கும் பாங்கில் ஒரு நவீன தேவதைக் கதையாகவும் இருக்கிறது.

     தமிழ் நவீன இலக்கியவாதிகள் கூட்டமாக சந்தித்து அளவளாவும் பொழுதுகள் எப்படிப்பட்டவை என அறிய விரும்பும் ஒரு வெளியாளுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவது கடவுளர் சபை. கடவுளர் சபை என்ற தலைப்பின் மரியாதை நிஜமானதா அல்லது பகடியின்பாற்பட்டதா என்பது இக்கதையை வாசிக்கும் எழுத்தாளர்களின் சுயஅனுபவம் சார்ந்த ஊகத்துக்கு விடப்படுகிறது.

      ரயிலின் முகமான எஞ்சினைக்கூடப் பார்க்கமுடியாத கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் கார்டாகப் பணிபுரியும் ஒருவன், தனிமையும் கழிவிரக்கமும் கொண்டவனாக துருவேறிய இரும்பாலான அந்தக் கடைசிப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறான். பச்சை போர்த்திய வயல்கள் ஜன்னல் வழியே தெரியும்போது மனம் விகசிப்பவன். ஆடுமேய்க்கும் பெண்ணிடம் அவன் கொடுக்க முடியாத அந்த ரொட்டித் துண்டு தனிமையாலும் இறுக்கத்தாலும் அவன் ஆழ்மனதில் இறுகிக் கிடக்கும் விண்டு தரமுடியாத அன்புதான் என நாம் அறிகிறோம். கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி என்பது இதுவரையான தமிழ்ச் சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளில் அலாதியான ஒரு குறியீடு என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
       தார்கோவெஸ்கியின்சேக்ரிஃபைஸ்படத்தின் நாயகன் போரின் அழிவிலிருந்து இந்த உலகைக் காப்பாற்றிவிட்டால் என் வீட்டை எரித்துவிடுகிறேன் என பிரதிக்ஞை கொள்வது போல ‘இரண்டாம் வெளிகதையில் அபத்தமான இந்த உலகியல் சூழலில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு அபத்தமான செயலைச் செய்ய வேண்டுமென முடிவெடுக்கிறார்கள் நாயகனும் அவனது நண்பர் ஒருவரும்.ஆனால் நாயகனின் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பது  ஒரு சுயநலமே என்பதை நாம் அறிகிறோம். ஒரு பழம் நினைவை மீட்டெடுக்க முனையும் அவனது பயணம் வெறுமையை எதிர்கொள்வதில் முடிகிறது. இக்கதையில் பின்னோக்கிச் சொல்லப்படும் கதை ஈர்ப்பற்ற தன்மையாலும் முடிவின் செயற்கைத்தன்மையாலும் வசீகரம் குன்றிவிடுகிறது. வழக்கமாக ஈயடிக்கும் மியூசிக் அகாடமியில் செவ்வியல் இசைகேட்க கைகளில் பாப்கார்னும் ஐஸ்கிரீமுமாக முண்டியடிக்கும் கூட்டத்தைப் பாரத்துவிட்டு நண்பர்கள் மேற்சொன்ன அபத்த செயலுக்கான முடிவையெடுக்கும் இடம் ரசிப்புக்குரியது. 

        மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’கதையில் போல ஈடேறாக் காதல்களே தொகுப்பின் பிற காதல் கதைகளிலும் காணக்கிடைக்கின்றன. ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதையில் காதலில் நிராகரிக்கப்பட்டவன் தன் உயிரைவிட்ட பின்னரே தான் விரும்பிய பெண் காதலிக்கத் துவங்கியிருப்பதை அறிகிறான். ‘ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் கதையிலும் சூசையை அதுவரை உதாசீனம் செய்துவந்த ரோஸ்லின் அவன் தற்கொலை செய்துகொண்டபின்பே அவன்மீதான காதலால் துக்கித்து அழுகிறாள். ‘மலை வீட்டின் பாதை, கதையில் பெண்களால் கதைநாயகனுக்குள் காதல் போன்ற ஒன்று உருவாகி அது ருசுப்படும் முன்பே தீர்மானமாக அழிக்கவும்படுகிறது. ஆகவே காதலின் பாலையிலேயே தன் கதை மாந்தர்களை திரிய வைக்கிறார் ஆசிரியர்.

   தாண்டவராயன்கதையிலும் இருள் ஒரு குறியீட்டுப் பின்புலமாக இருக்கிறது. தாண்டவராயன் தெருவில் மட்டும் சூரியன் உதிக்காத நிகழ்வு அத்தெருவாசிகளை பீதிக்குள்ளாக்குகிறது. இந்த இருளும் அறியாமையாகத்தான் இருக்கிறது. இக்கதையின் நிரந்தர இருள் என்ற அதீதம் தரும் புனைவு சாத்தியங்கள் சரியாக கைக்கொள்ளப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்படிக்கு கதை செயற்கையான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது. இருளைப் போக்கும் மின்சாரத்தை விசையை இயக்கி அளிப்பவனான பண்டாரத்திடம் சட்டென்று அதிகாரம் வந்துவிடுகிறது. அவனைப் பயந்து மரியாதையுடன் அனைவரும் தள்ளி நிற்க ஒருவன் மட்டும் அருகில் செல்கிறான், அது பண்டாரத்தின் பொருத்தாமல் விட்ட சட்டைப் பித்தான்களைப் பொருத்திவிடத்தான் எனும்போது தேவைகளை முன்வைத்த மனிதரின் நைச்சியமான நடத்தை குறித்த காட்சி அங்கு கிடைக்கிறது.

      அஜயன்பாலாவின் கதைகளில் வரும் பெண்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மூன்றாவது அறை நண்பனின் காதலியாக வரும் பெண் ‘என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப்போனதுஎனும்போது தூய ஆன்மாவை விடவும் கம்பீரத்தை விரும்புகிற பெண்ணாக இருக்கிறாள்.  தனது அக்காவின் கணவனுடன் கனவில் சல்லாபிப்பது பற்றிய குற்றவுணர்வற்றவளாக இருக்கும் ரோஸலின் அதைக் கனவளவிலேயே நிறுத்திக் கொண்டவளாய் கனவில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய வேறொருவனைத் தேடவும் செய்கிறாள். இவ்வாறு இருவருமே தமது தெரிவுகள் பற்றிய தெளிவு கொண்ட நவீன யுகத்துப் பெண்களாக இருக்கிறார்கள்

       தேர்ந்த கதைசொல்லிக்குரிய லாவகமான மொழியும் காட்சிகளை நுட்பத்துடன் விவரிக்கும் பாங்கும் அஜயன்பாலாவை வசீகரமானதொரு கதை சொல்லியாக்கியிருக்கின்றன. புனைவு தரும் சவால்களை அவர் அதற்கான தளத்திலிருந்து எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதற்கு இக் கதைத்தொகுதி சான்று. புனைவின் சுவாரஸ்யம் மட்டும் இலக்காக அன்றி மானுட வாழ்வைப் பேசும் பிரதிகளாகவும் தன் கதைகளை படைக்க முயன்றிருக்கிறார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் அகத்தோற்றத்தை, அவர்தம் உளச்சார்புகளை, சம்சயங்களை மொழியில் லாவகமாக வெளிப்படுத்துகிறார். பல கதைகள் குறியீடுகளாகவும் குறியீடுகளை தமக்குள் கொண்டனவாகவும் நிகழ்கின்றன. சில கதைகள் போகிற போக்கில் மாய யதார்த்தக் கூறுகளைத் தொட்டுச் செல்கின்றன.

     சம்பவங்களை புறவயமாகச் சித்தரித்து நின்றுவிடும் கதைகளிலும்கூட நுட்பமான அங்கதத்துடன் சமூக விமர்சனம் ஒளிந்திருப்பதைக் காண முடிகிறது. நுண்ணிய காட்சி விவரணைகள் கதைகளுக்கு வலுசேர்ப்பனவாக இருக்கின்றன. அதீதங்களைப் பேசும் கதைகளில் இத்தகு நுட்ப அவதானிப்புகள் அக்கதைக்குள்ளான நம்பகத்தன்மையை சாத்தியமாக்குகின்றன.

‘        ஜீன்ஸ் அணிந்த பறவைகள் கதையில் வெற்றிலை போட்டு மென்றபடியிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியிடம் குடும்பத்துப் பெண் ஒருவர் தன் குறைகளைக் கூறி அழும் இடத்தினை, பாலியில் தொழிலாளியான மக்தலேனாவை கல்லடியிலிருந்து இயேசு காப்பாற்றும் சம்பவத்தின் மாற்று-எதிர் நிகழ்வாக ஒருவர் பார்க்க முடியும். தம் போக்கிலான இதுபோன்ற அற்புதங்கள் அஜயன்பாலாவின் ப் பத்துக் கதைகளுக்குள்ளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. மொத்தமாகக் இக்கதைகளை வாசிப்பது அஜயன்பாலாவின் புனைவுலகின் பிரத்யேக வாசனையும் ருசியும் நமக்குத் தரும் அனுபவமும் ஒரு மொழியில் விரியும் அதிபுனைவின் அற்புதத்துக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.

      1. முத்துக்கள் பத்து’ என்ற தொகுப்பில் இந்தப் பத்துக்  கதைகளை வெளியிடும் அம்ருதா பதிப்பகத்துக்கும்  அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்.

-அசதா. 

May 14, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்


                     
தமிழில்  மொழிபெயர்க்கப்பட்ட காட்பாதர் (பாகம் 1) திரைக்கதை நூலுக்கான முன்னுரை 
- அஜயன்பாலா



                                   

நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும்
தங்களுக்கு சாதகமாக இருப்பற்றை  நன்மை என்றும்  எதிரானவற்றை தீமை என்றும் அதிகார வர்க்கங்கள் காலம் காலமாக வகைப்படுத்தி வந்துள்ளன.. 
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள  தங்களது நியாயங்களை மீட்டெடுக்க அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க முயல்கிறபோது  வன்முறையும் களவும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
பிற்பாடு அவர்கள் கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்றம் எனற வட்டத்துக்குள் சிக்கி குற்றவுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.
உலகில் இவர்களுக்கான அறத்தை பேசி அதை தத்துவமாக்கியவர் நீட்ஷே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்தது. அதிகார வர்க்கம் எப்போதும் கடவுளையும் அதன் வழி புனிதத்தையும் மையமாக கொண்டே கட்டமைக்கப்படுவதால் நீட்ஷே கடவுளை சாகடிக்க வேண்டிய கட்டாயம் தேவையாகிப்போனது.
நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும்  காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவனாக இருக்கும் படங்கள் அங்கீகாரம் பெற்றன .
அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள்.ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்து கொள்ளத்துவங்கினர் .
காட்பாதர் செய்த மகத்தான சாதனை இது தான் . தத்துவார்த்த ரீதியாக சமூகத்தில் தீமையின் பிறப்பிடத்தை பற்றிய நியாயத்தை பேசி அதற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியது  இத்வே  காட்பாதர் திரைக்கதையின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை .
மரியாபூசோ இதனை முதன் முதலில் நாவலாக எழுதியபோது சாதாரண த்ரில்லராகத்தான் இருந்தது. ஆனால் அது இலக்கியமானது பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ வின் திரைக்கதை மூலமாகத்தான்.
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அதற்கான முழு முதல் காரணம் மேற் சொன்னவைகள்தான்
அத்தகைய திரைக்கதையை தமிழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திறமையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.

இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின்  முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக்கூடும் .ஆனால் அப்போதும் புலப்படாத படத்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்படக்கூடும்
தமிழ் திரைப்பட சூழலுக்கும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் ,உலக சினிமா ரசிகர்களுக்கும் ,இலக்கியவாதிகளுக்கும் நாதன் பதிப்பகத்தின் மகத்தான் பரிசு இந்நூல்
ராஜ் மோகன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்படத்தின் மீதான் காதலும் கொண்டவர். எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடியவர் .
அவரிடம் இவ்விஷயம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்





May 4, 2016

முன்னுரை - பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள்

முன்னுரை


முன்னுரை

பொன் ரவீந்திரனின் -
தனிமையை பருகும் கோப்பைகள்

இந்த கவிதைகள் ஆபத்பாந்தவனாக எனை அதுவே வந்தடைந்ததாக நான் கருதுகிறேன். எனது முந்தைய இலக்கிய செயல்பாடுகளை அறிந்தவர்கள் இதனை நன்கு உணர முடியும். இக்கவிதைகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தில்
காலத்தின் பக்கங்கள் 2002 நவம்பர் மாதத்தில் புரள்கிறபோது மையிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த என் நூதன புத்த்கவெளியீடு காட்சிகளும்   தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்களுடன்   பாரீஸ் பேருந்து நிலையத்தை ஒட்டிய மதுவிடுதியில் இதர எளிய பகல்நேர குடியர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்ட  கவிஞர்களின் சந்திப்பும்  மனபிரிண்டரிலிருந்து சடசடவென புகைப்பட பிரதிகளாக  வெளியில்வந்து விழுகின்றன. அன்றைய நாளே கிடத்தட்ட கொண்டாட்டங்களுக்கான நாள். நானும் இதுவரை என் எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறேன் எத்த்னையோ நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்.ஆனாலும் அது போல களிப்பு நிறைந்ததொரு நாளை என் வாழ்வில் இதுவரை கண்டடைந்ததில்லை.அது எனக்கு மட்டுமல்ல நிகழ்வில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் அப்படியாகத்தான் இருந்தது. பிற்பாடு இந்நிகழ்வு குறித்து பெரும் சர்ச்சைகள் மூண்டபோது அந்நிகழ்வில் கலந்து கொண்ட யூமா வாசூகி அது குறித்து ஒரு சிற்றிதழில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்த போது அவ்விலக்கிய நிகழ்வின் உள்லார்ந்த ஆன்மீக செயல்பாட்டை அழகாக அடிக்கொடிட்டிருந்தார்.

உண்மையில் இன்று நினைத்துபார்க்கிறபோது ஆச்சர்யமாவும் வியப்பகவும் இருக்கிறது அந்நிகழ்வு. அன்று அந்நிகழ்வில் பங்கேற்ற பலகவிஞர்கள்.சிமோகன்.,யூமாவாசூகி, சங்கரர்ராம சுப்ரமணியம், யவனிகா ஸ்ரீராம் என தமிழில் இன்று முன்னணிகவிஞர்கள் அனைவருமே அன்று அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இப்போது நினைக்கிறபோது மன இறுக்கங்களுக்கு மாற்றாக காலம் மதுவை முன்னிறுத்த வேண்டி அல்லது அதற்கு சமூக மதிப்பீட்டை உருவாக்க வேண்டி அன்று எங்களை பகடையாக பயன்படுத்திக்கொண்டதோ என்றும் எண்னத்தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டுவிஷ்யங்கள் இது தொடர்பாக எனக்கு முக்கியமானதாக படுகிறது. அந்நிகழ்வு பிற்பாடு பவணிகபத்திரிக்கைகளில் திரிக்கப்பட்ட செய்தியாகி பின் தொடர் மதுவிடுதி இலக்கிய கூட்டங்களுக்கு அடிகோலியதும்
 தொடர்ந்து ஐடி யுக எழுச்சி காரணமாக நகரத்தின் மாறுதல்காரணமாக டாஸ்மாக்குகள் நிரம்பி வழிந்து பின் மது குறித்தான்ன மதிபீடுகள் சமூகத்தில் மாறத்துஅவங்கியதும் இதில் கூர்ந்து கவனிக தக்க அம்சமாக கருதுகிறேன் . காரணம் அன்று எங்களின் குடி நிகழ்வை கடுமையாக எதிர்த்த பல ஒழுக்க எழுத்தாளர்கள் பிற்பாடு குடி கலாச்சரத்தையும்  அதுகுறித்து எழுதுவதையும் தங்களின் பெருமைகளில் ஒன்றாக கருதத்துவங்கினர். நாஞ்சில் நாடன் போன்ற கலாச்சாரம் சார்ந்து அதன் மாண்பை எழுதக்கூடிய எழுத்தாளர்களே  டாஸ்மார்க் பார் கலின் செயல்பாட்டை பற்றி பெரும்பத்திரிக்கையில் எழுத வேண்டிய காலத்தின் நிர்பந்தங்கள் ஏற்பட்டன. இப்படியான செயல்பாடுகளை வைத்து பார்க்கிற போது அன்றைய எங்களின் அந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை பெரு மழைக்கு முன்பாக பறவைகள் இடம் பெயர்வதையும்  பஞ்சத்துக்கு முன்பாக வீதிகளில் எலிகளின் நடமாட்டத்தையும் போலவே கருதுகிறேன்.


காலச்சாரத்தில் கவிஞனின் செயல்பாடுகள் பல இடங்களில் அப்படியாகத்தான் நிகழ்ந்து வருகிறது.பெரும்பாலும் மொழியின் மூலமாக அவன் எழுதும் கவிதைகளின் வாயிலாக சில சொற்களை மாற்றி போட்டு அவன்  நிகழ்த்தும் மாயங்கள் பிற்காலங்களில் சமூகத்தின் பெரும் மாறுதல்களுக்கான அடிப்படை காரணிகளாக மாறிவிடுகின்றன.அவன் அக்கலத்தில் சொற்களின் மூலமாக உண்டாக்கும் கலகம் பலருக்கு அதிர்ச்சிகளையும் ஏற்கவியலாததன்மைகளையுமே  தோற்றுவிக்கும்.முள்ளை முள்ளால் எடுப்பது போல மனித மனதுள் சொற்களால் கட்டமைக்கப்பட்ட உலகை மாற்றியமைக்க அல்லது புணருத்தாரணம் செய்ய அல்லது  தலைகீழாக புரட்டி போட  சொற்களாலாயே செய்ய வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் பொன் ரவீந்திரனின் தனிமையை பருகும் கோப்பைகள் எனும் இந்த கவிதை தொகுதியை நான் கவனத்தில் எடுக்கிறேன்.இதில் உள்ள கவிதைகளில் பூடகம் இல்லை.பெரும் கவித்துவ ஆளுமையோ மொழி பிரவாகமோ இல்லை.ஆனால் எளிமை இருக்கிறது.மட்டுமல்லாமல் இச்சமூகம் வெறுத்து ஒதுக்கும் அல்லது ஏற்க தயங்கும் ஒரு இருள் உலகம் இருக்கிறது. இப்படியான இருள் உலகங்கள் கவிதைகளாக உருப்பெறுவதன் மூலம் உண்டாகும் அரசியல் மாற்றங்கள் மறைமுகமானவை. முதல் பார்வைக்கு இவை வெறுமனே குடியை பற்றி அந்த உலகை பற்றி பேசுபவையாக இருந்தாலும்  இவை சமூகத்தின் நிராகரிக்கப்பட்ட விஷ்யங்களை பொதுத்தளத்துக்கு கொண்டு வந்து அவற்றிற்கு ஒரு பொது மதிப்பீட்டை உருவாக்கிதருகின்றன. மேலும் இந்த நவீன உலகம் நம்மை சுற்றி உருவாக்கிவரும் அபாயத்திற்கு நகர்சார்ந்த அறமதிப்பிடுகளும் நடுத்தர குடும்பங்களும் முழுதாக இசைந்து கொடுத்து  அழிவுக்கு கட்டியம் கூறுகிறபோது அந்த மதிப்பீடுகளை களைத்து போட்டு எதிர் ஆட்டம் ஆடுவதற்கு இது போன்ற கலக கவிதைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

-          அஜயன்பாலா

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...