December 18, 2015

மலைவீட்டின் பாதை




மலைவீட்டின் பாதை

நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.

சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத் தலையில் உரச் சாக்கினைக் கவிழ்ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம்
தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.

இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச் செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனுக்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான்.
வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிகவும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உபசரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும்பாண்மையான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.
உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, புதுயுகம்  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) காசி எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத்தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.
     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது. புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை. தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.
ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.
சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.
கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது.
மலைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.
இதுதான் சேதுவின் வீடா?




படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.
ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.
பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.
ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.
கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.
குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.
சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.
ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.
கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.
சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.
ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.
     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.
     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.
     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.
     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.
அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 
இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.
மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.
உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.
     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?
அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.
இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.
அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...