April 25, 2010

என் சமீபத்திய கவிதைகள் மூன்று








1.ஒரு அவமானம் தொடர்பான கவிதை

அவமானம் என்பது சுய பரிசோத்னை
ஆகவே அதனை விரும்பி எதிர்கொள்கிறேன்
என்னை அவமானப்படுத்த நினைப்பவர்கள்
மிகவும் அழகானவர்கள்
யன்னலை அறைந்த அவர்களின் மோதிர விரல்கள்
மிகுந்த ஒளிவீசுவதை கண்டிருக்கிறேன்
அவமானங்கள் கழிவிரக்கத்தை அதிகரிப்பதால்
பெரும் நாயகத்தன்மைக்கும்
அல்லது
ஒரு நாவலுக்கான எழுச்சிக்கும்
உந்தி தள்ளுகின்றன
ஒரு பெருத்த அவமானத்துக்குபின்
எழுதப்படுவதால் இக்கவிதை
கவிதையில்லாமல் போனதற்காக
வருத்தப்படுகிறேன்
நான் துக்கத்தில் இருப்பதால் கவிதை வாசிப்பவர்கள்
பிறகு என்னை குறித்து யோசிக்காமல்
வேறு ஒன்றை அல்லது
கடற்பறவை உங்கள் வீட்டுக்குள் நடந்து வருவதை
ரசிக்க தயாரகும்படி உத்தரவிடுகிறேன்

2. யாரவள் ..

என்னை தெரியாத ஒருவளின் அருகே
மழை சாயங்காலத்தில் ஒதுங்கிநின்றேன்
சட்டென அவள் அதைச்செய்வாள்
என எதிர்பார்க்கவில்லை
வானம் ஒடுங்கி நின்றது
மழை முடிந்தது
நான் முழுவதுமாக நனைந்திருந்தேன்

3.நிம்மதியாக இறங்கி வாருங்கள்

செத்துப்போன எலியை கண்டு யாரும்
பயப்படவேண்டாம் அது ஒருக்காலும் உங்களுக்கு
தீமை செய்யாது
தோழர்களே நம்பிக்கையுடன் வெளியே வாருங்கள்
அது நேற்றிரவு உங்களால் கொல்லப்பட்ட எலியல்ல
காலாதிகாலமாய் மீது விழுந்த அடிகளால்
ஏற்பட்டிருக்கிறது இந்த துர்மரணம்
முடிந்தால் ஒருமாலையிட்டு பரிகாரம் தேடுங்கள்
அல்லாவிடின்
உங்கள் தோட்டங்களில் சிறுகுழிக்கேனும் இடம் கொடுங்கள்
கவலை வேண்டாம்
உங்கள் கனவில் அது ஒருக்காலும் வந்து பயமுறுததபோவதில்லை
அல்லது சுவர்களை கீறி தொந்தரவு தரப்போவதில்லை
மனிதர்களே நிம்மதியாக இறங்கி வாருங்கள்
உங்களின் கைக்கெடிகாரங்கள் பத்திரமாக இருக்கட்டும்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...