April 26, 2017

பாடலாசிரியர் அண்ணாமலை - அஞ்சலி



-[ அஜயன் உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு

இல்லை அண்ணாமலை, முத்துக்குமார் எனக்கு  ரொம்ப க்ளோஸ் அவந்தான் எல்லா பாட்டும் எழுதுவான்.  வாக்கு குடுத்துட்டேன்,பைசாவே வாங்காம எழுதி தரேன்னு  வேற சொல்லியிருக்கான்.

அப்ப எனக்கும் பைசா வேணாம், அவன் நாலு பாட்டு எழுதட்டும். நான் ஒரே ஒரு பாட்டு எழுதறேன்.

அண்ணாமலை அவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம், தப்பா நெனச்சிக்காதீங்க...

மேற்படியான உரையாடல் எனக்கும் அண்ணமலைக்கும் சுமார் பத்து பதினைந்து தடவையாவது நடந்திருக்கும்விகடன் வாசலில் பொது நிகழ்ச்சிகளில், எனது நாதன் பதிப்பக வாசலில் என ஒவ்வொரு முறையும்  இறுதியில்
ஆமாம்... ஆமாம்... எனக்கும் தெரியும்,  இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாருங்க 
என கேட்பதோடு முடியும் .

காலம் இருவரையும் ஒருசேர ஒரு மாத இடைவெளியில் கவ்விக்கொண்டது பெரும் துயரம்
தமிழுக்கு தமிழ் திரைப்படத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு .

போட்டிகள் நிறைந்த பாடல் எழுதும் துறையில் மற்றவர்களை போல  முட்டி மோதாமல் தனக்கான பாதையில்   கிடைக்கும் பாடலில் முழு திறமையும் வெளிப்படுத்தி நிதானமாக நடந்து செல்லும் சுபாவம்தான் அண்ணாலையின் இயல்பு  .  பழகுவதற்கு தண்ணீரைவிட  சுலபமான மனிதர் . அத்தனை  இலகு, அத்தனை  எளிமை. அதிகரமில்லாத குழைவான அவரது உடலே அதற்கு சாட்சி. மளிகை கடையில்  சோப் பணியனுடன் அடுத்து என்ன வேண்டும் என ஆர்வமாக கேட்கும் சிறுவனைபோல  அவர் உடலில் அத்தனை  பணிவு.
 பத்தாண்டுகளாக தொடர்ந்து பார்த்து வந்ததில் யாரையும் தவறாகவோ, புண்படுத்தும் விதமாகவோ  அவர் பேசி பார்த்ததில்லை.





பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்  மவுண் ரோட் ஆனந்தவிகடன் அலுவலக வாசலில் வைத்துதான் யாரோ முதன் முதலாக   அறிமுகப்படுத்தினார்கள் .
 அவரைப் பார்ப்பதற்கு முன்பே அந்த பெயரை என் மனம் அறிந்திருந்தது.  ” யாரோ அண்ணாமலையாம்,  ’ஜீவி’யில் வேலைசெய்பவராம். அவர் தான் அந்த சீரியல் பாட்டு எழுதினாராம் ”  காற்றுவாக்கில் அவரைப்பற்றி நண்பன் ஒருவன் சொன்னது, முதல் சந்திப்பின் போது மனதில் ஸ்க்ரோலிங்காக ஓடியது.  ஏதோ ஒரு காரியமாக விகடன் அலுவலகம் சென்று விட்டு   வந்து கொண்டிருந்தபோது   டீக்கடை வாசலில் தான் யாரோ அறிமுகப்படுத்தினார்கள். இவர்தான் அண்ணாமலை, பாடல் ஆசிரியர். சீரியல்களுக்கெல்லாம்  பாட்டு எழுதிகிட்டு வர்றார். சினிமாவுலயும் ட்ரை பண்ணிகிட்ருக்கார் . ஒல்லியான தேகம் மழலைச் சிரிப்பு. கொட்டோவியம் குலுங்குவது போல உடலசைவு . காற்று போல இருக்கிறாரே என முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துப் போனது.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து  நாயகன் தொடர் நிமித்தம் வாரவாரம்  விகடன் அலுவலகம் (அப்போது அலுவலகம் கிறீம்ஸ் ரோடில் இருந்தது.)  செல்லும் போதெல்லாம் அண்ணாமலையை பார்க்க முடிந்தது.

 சாப்ளின்  தொடர் எழுதும்போதுதான் தேடி வந்து கட்டிபிடித்துக்கொண்டார் .  பிரமாதமா எழுத்திட்டீங்க அஜயன்  அந்த கைகளின் இறுக்கம் அவரைப்பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை உண்டாக்கியது .
 இலங்கையை பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை யின் குடும்பத்தினர் அவர் பிறப்பதற்கு முன்பே தமிழ் நாட்டுக்கு வந்து  விழுப்புரம் அருகே செட்டிலாகியிருந்திருக்கின்றனர்.  இயற்பெயர் சுரேசன் .  பச்சையப்பன் கல்லூரி மாணவரான அவர் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக   வைரமுத்துவோடு நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார்.  அவரைப்போல  பாடலாசிரியராக  ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்றாலும்  குடும்ப சூழல் காரண்மாக விகடனில் இணைந்து  பத்திரிக்கையாளராகி விட்டவர் .

நான் கூட அவரிடம் சினிமாவில் பாடல் எழுதுவதுதான் லட்சியம் என்றால்  வேலையை விட்டு முழுதாக களம் இறங்கலாமே என கேட்டபோது தான்  கிட்டத்தட்ட எட்டு லட்சத்திற்கு கடனாளியாக இருப்பதகாவும் முழுவதும் அடைக்கும் வரை, விகடன் வேலையை விடமுடியாது  என்றும் தன்னை சுற்றிப் பின்னிக்கிடக்கும்  மாய வலையைசொன்னார்அந்த நேரத்தில் எனக்கு அது பெரும் அதிர்ச்சி. ஆயிரம் ரூபாய் கடனிருந்தாலே பதட்டமாகி வாழ்க்கை பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடும்போது, லட்சக்கணக்கில் அவர் பின்னால் இருந்த கடன் சுமை என்னை அதிர வைத்துவிட்டது. இவ்வளவு கடன் சுமையுடன் எப்படி இவரால சிரிக்கவும் பேசவும் முடிகிறது, என ஆச்சர்யப்பட்டேன்.

ஒருநாள்  அதே போல, மதிய நேரத்தில்  சாப்பிட்டு முடிந்து அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டிருந்த போது, பின்பக்கமாக  வந்து தோளை தொட்டவர்,  ”தான் புதியதாக ஒரு  பாடல் எழுதிக்கொண்டிருப்பதாகவும் அதை கேட்டு எப்படியிருக்கிறது என சொல்லமுடியுமா” என்றும்  ஆசையுடன் கேட்டார்அவரே என் காதில் கெட்போனை  காதில் மாட்டிவிட்டு  வாக்மேனை தட்டிவிட்டார்அது வெறும் ட்யூன்தான், நல்ல குத்துப்பாட்டுக்கான இசையாக அது இருந்ததுஅதற்கு தான் எழுதியிருக்கும் வரிகளை பாடிக்காண்பித்தார் . ”என் உச்சி மண்டையில் சுர்ருங்குது”  என துவங்கும் அப்பாடல்  அவர் அபிநயத்துடன் பாடிக்காண்பிக்க   பாடலை நான் வெகுவாகப் பாராட்டினேன் .
பிற்பாடு அந்த பாடல் வேட்டைகாரன் படத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்று அவருக்கு மிகப்பெரிய புகழையும் அடையாளத்தையும் பெற்று தந்தது.

பிற்பாடு சந்திக்கும் போதெல்லாம்  கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற உரையாடல் தவிர்க்கமுடியாமல் வந்து போகும்.

விகடன் தொடர் முடிந்த பின் நான் சாலிக்கிராமம் காவேரி தெருவில் பதிப்பக வேலைகளுக்காக ஒரு சிறு அலுவலகம் துவங்கியிருந்தேன் . அண்ணாமலை கிட்டத்தட்ட வாரத்தில் இருமுறையாவது உதவியாளருடன் அங்கு வருவார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அலுவலகம் அருகிலிருந்த படியால்  அடிக்கடி அவர் கொடுக்கும் ட்யூனை   இங்குதான் டைப் செய்வார் . பல கவிஞர்கள் பாடல் எழுத  சிங்கப்பூர், பாங்காக், மலேசியா போன்ற இடங்களுக்கும்,சிலர் ஈ.சீ.ஆர்  ரிசார்ட்டுகளுக்கும், சிலர்  பூங்கா, கடற்கரை  என வெவ்வேறு இடங்களுக்குசெல்வதைப் பார்த்திருக்கிறேன், முத்துக்குமார் கூட  பாட்டு எழுத காரில் நீண்டதூர பயணம் செய்தபடி எழுதுவான், நானும் உடன் பயணித்துமிருக்கிறேன். அவன் சொல்ல, சொல்ல எழுதியுமிருக்கிறேன் . ஆனால் அண்ணாமாலை பத்துக்கு பத்து அடியில் மூணு கம்ப்யூட்டரும், ஜெராக்ஸ் மிஷினும் இருக்கும் அலுவலகத்தில் சாலையோர இரைச்சலுடன் ஆட்கள் நடமாட்டமும்  மிகுந்த அந்த சிறு அலுவலகத்தில் அமர்ந்து, காதில்  ஹெட்போனை  பொருத்தியபடி பாட்டுக் கேட்டுக்கொண்டே டைப் செய்வது, ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். .ஆனால் அப்படி எழுதிய பாடல்கள் வெற்றி பெற்று அவருக்கும் பெயரையும் புகழையும் உருவாக்கின.

வெறும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் பல பணிகளை மேற்கொண்டார் . விந்தன் அறக்கட்டளை  சார்பாக  ஆண்டுதோறும் விழா நடத்தி வந்தது. அந்த விழாவை நடத்தி தரும் பொறுப்பை முழுதாக அவரே ஏற்று நடத்தி வந்தார். அதற்காக   வருடம் ஒருமுறை மிக நீண்ட கட்டுரை ஒன்றை என் அலுவலகத்தில் வைத்தே எழுதுவார் .
பல சமயங்களில்  ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை தினங்களில் அழைப்பார் . ஒரு அவசரமான பணி உடனே எழுத வேண்டும், கொஞ்சம் வரமுடியுமாஎனக் கூப்பிடுவார்.
நானே  ஒருமுறை என்ன அண்ணாமலைலேப் டாப் வாங்கி வீட்டில் நிம்மதியாக டைப் செய்யலாமே. அட நீங்க வேற, வீட்ல இருந்தா அந்த பிரச்சனை, இந்த பிரச்சனைனு எல்லா பிரச்சனையும் மண்டையில ஓடிகிட்டு இருக்கும், இதுல பாட்டு எங்கருந்து வரும்  அதனாலதான் இங்க வரேன்.  உங்க அலுவலகம் தான் எனக்கு ஊட்டி, கொடைக்கானல் என்பார் .

ஒருநாள் அலுவலகம் வந்தவர்இன்விடேஷன்  நீட்டினார். குழந்தைக்கு  பர்ஸ்ட் ஆனிவர்சரி பர்த்டே வச்சிருக்கேன், அவசியம் வந்துடுங்க என்றார்அப்ப உங்களுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்ச  என கேட்க , இல்லீங்க பதினேழு வருஷம் ஆச்சு, இப்பதான் பாக்கியம் கிடைச்சுது என்றார்.

என்ன அஜயன் முத்துக்குமார் இப்படி பண்ணிட்டானேஎன  துக்கத்துடன் வந்தவர் அவனுக்கான அஞ்சலி கட்டுரை எழுதத்தான் வந்துருக்கேன் என்றார். கட்டுரை எழுதும் போது முத்துகுமாரின் குணங்களை வியந்து, புகழ்ந்து  என்னிடம் பேசியபடி, இப்படி போயிட்டானே என்றார்.

என் அலுவலகத்தின் உதவியாளரான ஜேம்ஸுக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும்  என்ன சார், இவ்ளோ பெரிய பாடலாசிரியர், இவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் என ஆச்சர்யப்படுவான்.

கடைசியாக பார்த்து ஒரு வாரம் இருக்கும் இச்சூழலில் தான் அவரது மரணசெய்தி என்னை அடித்து நொறுக்கியது.

முத்துமாரின் அதிர்ச்சியிலிருந்து முழுதாய் விலகிவருவத்ற்கு முன்பே இன்னொரு அதிர்ச்சி கொஞ்ச காலத்துக்கு முன் வாசன் .

 பாடல் எழுத வருபவர்கள் என்று மட்டுமல்ல எழுத்து சார்ந்து இத்துறைக்கு வருபவர்கள் எல்லோருமே மன நெருக்கடிக்கும் மன அழுத்ததுக்கும் ஆளாகுவது புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே தொடர்கிறது .

வெளிவரும் ஒவ்வொரு சினிமாக்களின் கடைக்காலிலும் ஒரு எழுத்தாளனின் அவலக்குரல்  புதைக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தில்லாமல் சினிமா இல்லை .  எழுத்திலிருந்து தான் உதிக்கிறது. அது பாடலாகட்டும் படமாகட்டும்.  ஆனால் அதே சமயம் ஒரு எழுத்தாளனுக்கு பாடலாசிரியனுக்கும் சினிமாவில் கிடைக்கும் கவுரவமும்  மதிப்பீடும் மிக மிக அவமனகரமான் விஷயம்

ஒரு நடிகருக்கோ அல்லது இதர தொழில்நுட்பகலைஞர்களுக்கோ கொடுப்பதுபோல உழைப்புக்கான கூலி எழுத்து சார்ந்தவர்களுக்கு மரியாதையாக உடனடியாக கொடுப்பதில்லை

இதில் பல விதி விலக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்  உண்டு

ஆனால் எண்பது சதவிதம்  பேர் அவனை அலைக்கழித்து அவமானப்படுத்தி  அவனாக பலமுறை கேட்டு வறுபுறுத்தியபிந்தான்  ஓரளவு இளகுகிறார்கள். பல சமயங்களில்  வறட்டு பிடிவாதம் காரணமாகவொ  தொடர்ந்த வாய்ப்பு காரணமாகவோ பணம் கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து மன அழுத்தமடைகிறார்கள்

போராட்ட காலத்தில் மட்டுமல்ல போராடி வளர்ந்து நிலையான இடத்தை பிடித்த பிறகும்  இதே நிலைதான்

படைப்புகளுக்காக உண்டாகும் மன நெருக்கடி போக இது  போன்ற சூழலில் நடக்கும் அவமானங்களினால் உண்டாகும் மன அழுத்தங்களும் சேர்ந்துகொள்வதே  எழுத்து சார்ந்த படைப்புத்துறையில் உள்ளவர்கள் அதிலிருந்து தப்பிக்க வழி தேடி  வேறு சில   பாதைகளில் அலைவதும் பிற்பாடு சடுதியில் ஒரு நாள்  மனைவி குழ்நதைகளை நிர்க்கதியாக்கிவிட்டு உலக வாழ்க்கைதுறப்பதற்கும் காரணம் 

அண்ணாமலையும் இப்படியான மன நெருக்கடிகளுக்கு பலியானவர்தான்.


April 7, 2017

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

 நண்பா!   ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு













அதோ லாரி பக்கமாக
சுவற்றோரம் சிற்றிடைவெளி
நீ இறுக்கிக்கட்ட வாகான இடம்
கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும்
லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த
வரலாற்றை ஆராயாதே
நீ லங்கோட்டை இழுத்து
கட்டும்போது ஓரு தெரு நாய்
உன்னை வேடிக்கை பார்க்கிறது
பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய்
அந்த நாயோ சட்டென
பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை கிராஸ் செய்து ஓடுகிறாள்
நீயோ குரைக்காமல்
மனிதர்களை அண்ணாந்தபடி
விளக்கு தூணை தேடுகிறாய்
நன்றி நண்பா
ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு
_அஜயன் பாலா

April 6, 2017

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலும் , ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் - சில பொருத்தப்பாடுகள்


(வாசகசாலை அமைப்பின் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட நிகழ்வுக்காக 14/03/2017 அன்று ஆற்றிய உரை )



 வாசக சாலை அழைப்பின் பேரில் சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் நாவல் குறித்து  நான் ஆற்றவுள்ள இந்த சிற்றுரையை கேட்க வந்திருக்கும்  அசோக் நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி .வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம்  எனும் முதல் நாவல் துவங்கி ,ராஜமய்யர் , வைமு கோதைநாயகியம்மாள் வடுவூர் துரைசாமி அய்யங்கார் என தொடர்ந்து இன்று சரவண சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், அபிலாஷ் சந்திரன், விநாயக முருகன் என இன்றைய தலைமுறை வரை ஆயிரத்துக்கும் அதிகமான நாவல்கள் எழுதப்பட்டு வந்தாலும் இவற்றுள் இலக்கிய தன்மையோடு எழுதப்பட்ட தரமான நாவல்கள் என பெயர் பெற்ற நாவல்களை ஐம்பதுக்குள் சுருக்கிவிடலாம்.  
தமிழின் சிறந்த நாவல்கள் குறித்து போதிய விமர்சனங்கள் இல்லாவிட்டாலும்  1986 வரையிலான நாவல்கள் குறித்து  புதுயுகம் எனும் இதழில் சி.மோகன் ஒரு அருமையான கட்டுரை எழுதி அதில் தன் ரசனைக்கு முப்பது நாவல்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டார். எனக்கு தெரிந்து தமிழ் நாவல்கள் குறித்த உருப்படியான கட்டுரை அது ஒன்று மட்டுமே . அந்த பட்டியலில் தமிழின் மிகச்சிறந்த நாவல் எதுவுமில்லை என்றும் சிறந்த நாவல் என மோகமுள்ளையும்,.ஜே.ஜே சிலகுறிப்புகள் , மற்றும் புளியமரத்தின் தோணி  மூன்றையும் குறிப்பிட்டு அதற்குப் பின் ஒரு முப்பது சிறந்த நாவல்களை பட்டியலிட்டிருப்பார்.  உண்மையில் உருப்படியான தேர்வு அது.  இது போன்ற நூலகங்களில் அந்த நாவல்கள் அனைத்தும் கிடைக்கும். என் பதின் பருவத்தில் என்  ஊர் செங்கல்பட்டு நூலகத்தில் அப்போது கிட்டத்தட்ட அனைத்து நூல்களும் கிடைத்தன. மூன்று மாதங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிடலாம்.  
அதில் ஒன்றாக அவர் குறிப்பிட்டிருக்கும் நாவல் வாடி வாசல்.
வாடிவாசல் ஜல்லிக்கட்டை பின்புலமாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாடி வாசல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசியல் நிகழ்வுகள் மூலமாக  தெரிந்திருக்கும்.   மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டைதான் நாவலின் மையம். இங்கு அமர்ந்திருக்கும் பலர் அந்நாவல் பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும் எனவே உங்கள் வசதிக்காக முதலில் அதன்  கதையை சுருக்கமாக உங்களுக்கு கூறிவிடுகிறேன்.

அன்று சல்லிக்கட்டு நாள். இன்னும் சற்று நேரத்தில் அந்த செல்லாயி சாட்டு கிராமமே அல்லோகலப்பட போகிறது. நாவலின் பிராதான பாத்திரமான பிச்சியும் அவனது மைத்துனன் மருதனும் அந்த கிராமத்துக்கு வருவதிலிருந்து துவங்குகிறது கதை .அவர்கள் யாரென தெரியாமல் தங்கள் ஜமீன் காளைகளின்  பெருமையையும் துள்ளிதிரியும் யாருமே பிடிக்க முடியாத அதன் வீரத்தையும் வம்படியாக பேசித்திரிகிறான் அசலூர்க்கார கிழவன் ஒருவன் . அவரது வம்படியான் பேச்சுக்கு பதிலடி போட்டு பேசுகிறான் பிச்சி. துவக்கத்தில் அவன் யாரெனத் தெரியாமல் கிழவனும் தன் ஜமீன் காளைகளின் பெருமைக்கு மீசை முறுக்கி பேசுகிறான் . பிற்பாடு  பிச்சி வேறுயாருமல்ல மாடு அணைவதில் வல்லவன் என பேரெடுத்த அம்புலித்தேவனின் மகன் தான் என அறிந்ததும் அவன் மேல் வாஞ்சையும் நெகிழ்ச்சியையும் கொள்கிறான்..



 பல வருடங்களுக்கு முன் ஜமீன் காளைகளிலேயே பிரசித்தி பெற்றதுமான காரியெனும் காளையினால், குத்துப்பட்டு இறந்தவன் தான் அம்புலித்தேவன். தந்தையைக் கொன்ற  காளையை அடக்கி அவரது எண்ணத்தை ஈடேற்றவே இந்த சல்லிகட்டில் பிச்சி கலந்துகொள்ள வந்திருக்கிறான் என்பதை அறிந்து ”எப்பேர்ப்பட்ட வீரனின் மகனாடா நீ” என கிழவன்  உச்சி முகர்ந்து  பிச்சிக்கு ஆசிகளை வழங்குகிறான்.  சல்லிக்கட்டு துவங்குகிறது, வாடி வாசலில் காளைகள் சீறிப்பாய்கின்றன, எப்ப சப்பை காளைகளை மற்றவர் பிடிக்க விட்ட பிச்சியும் மருதனும் யாரலும் பிடிக்கவே முடியாது என அறிவிக்கப்பட்ட அடங்கா காளைகளான  பில்லை,  கொராலு  ஆகியவற்றை மருதனின் துணையோடு அடக்கி ஜமீன்தாரையும் அவரது சகாக்களையும் வாயடைக்க வைக்கிறான். இதற்கு சல்லிகட்டில் பழுத்த அனுபவம் கொண்ட கிழவன் தரும் ஆலோசனைகளும் குறிப்புகளும் ஒத்துழைக்கின்றன.. இப்போது பார்வையாளர்களும் ஜமீனும் பிச்சியின் துணிச்சலான விளையாட்டை பார்த்து வியக்கின்றனர். இறுதியாக வருகிறது அவனது தந்தை அம்புலித்தேவனை கொன்ற காரி. கூரான் கொம்பும் மதர்த்த திமிலுமாக வாடிவாசலிலிருந்து துள்ளிகுதித்துவரும் காரியை பார்த்து பிச்சி தயாராகிறான்


 . துவங்குகிறது மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டை இதில் ஒரு கட்டத்தில் பிச்சி தோற்று விழ, இனி அப்பனைப் போல இவனும் தொலைந்தான் என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கும் வேளையில் சட்டென யாரும் எதிர்பாராத வேளையில் காரியின் கொம்புக்கு தப்பி, அதன் கொம்புக்கிடையில் கட்டப்பட்ட பரிசு முடிச்சை கையால் எடுத்து வாயில் கவ்வி வெற்றி பெறுகிறான் பிச்சி. அப்படியும் காளை அவனது தொடையை பதம் பார்த்து விட ரத்தம் கொட்டுகிறது. ஜமீன் பதட்டத்துடன் அங்கு வர அவரிடம் பிச்சி இந்தக் காளையை அடக்குவதற்கு நான் வரவில்லை. என் அப்பனின் இறுதி எண்ணத்தை பூர்த்திசெய்யும் ஒரு மகனாகவே இங்கு வந்தேன் எனக்கூறுவதுடன் நாவல் முற்று பெறுகிறது.


தமிழில் இதைவிட  சிறிய நாவல் எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது ஒருவேளை  வண்ண நிவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு நாவலாக வேண்டுமானால் இருக்க முடியும் என நினைக்கிறேன். இந்த நாவலின் சிறப்பே  கச்சிதமான மண் வாசம், குன்றாத அதன் எழுத்து நடைதான். ஒரு சொல் கூட கூடுதலாக இல்லாமல் நறுவிசாக செதுக்கினார் போல வாக்கிய அமைப்புகள் .பிரம்மாண்ட சல்லிக்கட்டு அரங்கை வெகு சுருக்கமான வார்த்தைகளில் நம் மனதுக்குள் சுழலவிடுகிறார். பிச்சி, மருதன் கிழவன், முருகு  ஜமீன்தார்,  மற்றும் அமபுலிதேவன் என ஐந்தே மனிதர்களும் பில்லை ,கொராலு, காரி என  பிரதான காளைகளும் தான் கதையை நகர்த்தும்  முக்கிய பாத்திரங்கள். கதை முழுக்க பெண் பாத்திரங்களே இல்லை. பெண் பாத்திரமே இல்லாமல் எழுதப்பட்ட ஒரே நாவல் என்றும் கூட வாடி வாசலை அடையாளப்படுத்த முடியும்.

ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் நாவலோடு பல விதங்களில் இந்நாவல் பொருத்தப்பாடுகொண்டிருப்பது மிக ஆச்சர்யமான ஒன்று. இரண்டுமே கடுகு எனத்தக்க அளவில் சிறியதும் வீரியத்தில் மிகுந்தும் காணப்படும் நாவல்.
கடலும் கிழவனும் கதை இதுதான். 85 வயதாகும் அந்த கிழ மீனவனுக்கு 85 நாட்களாக கடலில் மீனே சிக்கவில்லை. அந்த வெறியுடன் இன்று எப்படியும் மீனை பிடித்தே ஆகவேண்டும் என தூண்டிலுடன் கடலுக்கு செல்லும் சாண்டியாகோ கடலில் மூன்றுநாள் மீனுடன் நிகழ்த்தும் போராட்டமே கதை.

இரண்டுமே மனிதனுக்கும் மிருகத்துக்குமான போரை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஒன்று தொழில், இன்னொன்று விளையாட்டு
கடலும் கிழவனும் ராட்சத மீனுக்கும் மனிதனுக்கும் கடலில் நடக்கும் போர் என்றால் வாடிவாசல் காளைக்கும் மனிதனுக்கும் நிலத்தில் நடக்கும் போர்.  கடலும் கிழவனும் நாவலில்  நாயகன் கிழவன்(சாண்டியாகோ), துணைப்பாத்திரம் சிறுவன்.  வாடிவாசலில்  நாயகன் இளைஞன்(பிச்சி), துணைப்பாத்திரம் கிழவன்.

இரண்டிலுமே அனுபவம் முக்கியத்துவம் பெறுகிறது. கடலும் கிழவனும் நாவலின் நாயகன் சாண்டியாகோ.  முதுமையும் மீன் பிடிப்பதில் அவனுக்கிருக்கும் பழுத்த அனுபவமும் அதன்பாலான ஈகோவும் நாவலை வழி நடத்துகிறது.வாடிவாசலில் அந்த நாயக பாத்திரம் இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. ஒன்று இளைஞன், உடல் வலிமிக்க  நாயகன் பிச்சி. இரண்டாவது அனுபவம் வாய்ந்த கிழவன். இரண்டும் சேர்ந்துதான் பிச்சியை வெற்றிபெறச் செய்கிறது.

ஹெமிங்வேவின் தனிச்சிறப்பே தான் மெற்கொள்ளும் களத்தை முழுமையாக உள்வாங்கி அந்த இடத்துக்கே நம்மை அழைத்துசெல்லும் துல்லியமான விவரிப்பு பாணிதான். அது போர்க்களமாகட்டும் காளைச்சண்டையாகட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்பாகட்டும் நிகழ்விடத்தைப் பற்றிய துல்லியமான விவரிப்பு அவருடைய பாணி.
இதே விவரிப்பு பாணி தான் வாடிவாசலின் தனித்தன்மை . வழக்கமாக தமிழ் நாவலில் கதைத்தன்மையும் பாத்திரச்சிறப்புகளும் காட்சியமைப்புகளும்தான் தான் நாவலின் சிறப்புக்கு காரணமாக அமையும். மொழி என்பது இரண்டாம் நிலையில்தான். மொழி மற்றும் விவரணைக்கு சிறப்பாக சொல்லப்படும்   ஜே.ஜே.சிலகுறிப்புகள், புயலிலே ஒரு தோணி ஆகியவற்றில் கூட பாத்திரச்சித்தரிப்பு , காட்சியமைப்பு  கதையம்சம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆனால்   வாடிவாசலில் கதை என்ற அம்சமே இல்லை. நிகழ்வுதான். முழுக்க முழுக்க விவரணை உரையாடல் என மொழியால் மட்டுமே செதுக்கப்பட்ட ஒரே தமிழ் நாவல் வாடிவாசலாக மட்டுமே இருக்க முடியும்.  .

அதுபோல ஹெமிங்வேவின் கடலும் கிழவனில் ஒரு ராட்சத சுறாமீன் பிரதான பாத்திரமாக இருந்தாலும்  பின் நான்கைந்து சுறாக்களும்  வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது போல, வாடி வாசலிலும்  முதன்மை காளையான காரி யோடு மோதி ஜெயிப்பதற்கு முன்,  பில்லை, கொராலு ஆகிய காளைகளை இவன் எதிர்கொள்கிறான்.
ஹெமிங்வே வின் கடலும் கிழவனும் நாவல் 1951ம் ஆண்டு வெளியாகி 52ல் புலிட்சர் விருதும், 53ல் நோபல் பரிசும் பெற்று உலகப்புகழை எட்டியிருக்கிறது. இதற்கு முன்னோடியாக இருக்கும் நாவல் மோபிடிக். சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் திமிங்கல வேட்டை பற்றி எழுதப்பட்டுள்ளது..

செல்லப்பாவின் வாடிவாசல் 1959ல் பதிக்கப்பட்டு அவரது எழுத்து, பத்திரிக்கையுடன் இலவசமாக அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. இதற்கு முன்னோடி நாவலாக  கமலாம்பாள்  சரித்திரம் இருந்துள்ளது. சல்லிக்கட்டை பற்றி முழவதுமாக இல்லாவிட்டாலும், அந்நாவலுக்குள் ஒருபகுதி வருகிறது.

இவையெல்லாம் இரண்டிற்குமான பொருத்தப்பாடுகள் அவ்வளவே. . ஒருவகையில் ஆச்சர்யமூட்டக் கூடிய பொருத்தப்பாடுகள் .
ஒரு வேளை கடலும் கிழவனும்கூட . செல்லப்பாவுக்கு வாடிவாசலை எழுத உந்தித்தள்ளியிருக்ககூடும் . எப்படியிருந்தாலும் தமிழுக்கு வாடிவாசல் ஒரு பெரும் கொடை.
சல்லிக்கட்டுக்கு துளியும் தொடர்பற்ற ஒரு பிராமண வீட்டின் அனுபவத்தோடு வளர்ந்த சி.சு.செல்லப்பா  அவருக்கு அன்னியமான மறவர்குல பின்புலத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழக்காறு மொழியுடன் உரையாடலில் நயமும் இலக்கியமும் குழைத்து கொஞ்சமும் பிசிறடிக்காமல் மிக துல்லியமாக செதுக்கினார் போல் எழுதியிருப்பது, அவரது அசாத்திய எழுத்துவன்மைக்கு சான்று.
இயல்பில் புகைப்படக்கலையில் ஆர்வமிகுந்தவராக செல்லப்பா இருந்த காரணத்தாலோ என்னவோ, நாவலை முழுவதுமாக திரைப்படக்காட்சியாக நம்முன் நிகழ்த்துகிறார்.

காளையை பிச்சி அடக்கும் தருணங்களில் மொழியும் காட்சி புலமையும் இணைந்து கொள்கிறது. மாட்டுக்கும் பிச்சிக்கும் பின்னாலிருந்து காமிராவை மேலும் கீழுமாக சண்டைக்கு இணையான கோணத்தில் வைத்து காமிராவை திருப்பும் ஒரு இயக்குனரின் லாவாகம்  தேர்ந்த மொழியால் சாத்தியப்பட்டிருப்பது ஆச்சர்யமான நிகழ்வு.
கீழே வரும் ஒரு பாராவை படியுங்கள்

”காளையின் மடிந்த பின் கால்கள் பிச்சி நின்ற இடத்துக்கு நேராக இருந்தன. பாயப்போகிறவன் மாதிரி காலை எடுத்துவைத்தவன், தடாலென நெடுச்சாண்கிடையாக கீழே படுத்தான்.அவனது வலது கை காளையின் வலதுகால் பிடிக்கு வசமாக நெருங்கிவந்தது. கையை வீசி குளம்புக்கு மேலே அடிகணுக் காலைப்பிடித்து மறு கையை தரையில் பதித்து உந்தி எழுந்து காளையின் காலைப் பிடித்து இழுத்தான் 
ஒருவேளை வாடிவாசலை ஒரு இயக்குனர் திரைப்படமாக எடுக்க  முன் வருவாரானால் அவருக்கு  இருக்கும் மிகப்பெரிய சவாலே ஏற்கனவே எழுத்தில் செல்லப்பா சாத்தியப்படுத்தியிருக்கும் காட்சிகோணங்கள் தான்.
மேலும் பிச்சி காரியை முதன் முதலாக பார்க்கும் போது அதன் கொம்பில் தன் தந்தையின் ரத்தம் வழிவதைப் பார்க்கிறான். பல்லாண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்தபோது அவன் மூளையில் பதிந்த சம்பவம் கணத்தில் வந்து போகும் இக்காட்சிகள் திரைப்பட தொழில்நுட்பத்தில் இண்டர் கட் எனப்படும் இடைவெட்டு காட்சியாகும் 
.
இதன் வழியாக செல்லப்பாவுக்குள் அசாத்தியமான சினிமா ஈடுபாடும் இருந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவரோடு நன்கு பழகியவர்கள், அவரது சினிமா மீதான பார்வை குறித்து எழுதினால் அவரை புரிந்துகொள்ள மேலும் ஏதுவாக இருக்கும்

இப்படியான தமிழின் சிறந்த நாவலொன்றை குறித்து பேச வாய்ப்பை உண்டாக்கி தந்த வாசக சாலை நண்பர்களுக்கும் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் , நூலக பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி


 நன்றி:  பேசும் புதிய சக்தி  ஏப்ரல் 2017


புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...