December 21, 2009

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் - அஜயன் பாலா


பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு வயலட் நிற வெளிச்சம் பரவிக்கிடக்க மற்ற பகுதிகள் இருளில் மண்டிக்கிடந்தது. எங்களுடைய விளையட்டிற்க்கு உறுதுணையாக பெரிய பெரிய பல்லிகளும் எங்களை கேலி செய்யும் பாவனையில் அசையாமல் எங்களையே உற்றுப்பார்க்கும் கரப்பான் பூசிகள் சிலவும் அங்கே இருந்தன. வெளிச்சம் மெல்ல விரிய ஆரம்பித்தபோது எங்களைவிட பல மடங்கு உயரமாக வளர்ந்த நாணல் புதரினூடே நாங்கள் ஒடியாடி எங்களை துரத்தும் பெரியபல்லிகளுக்கு வருத்தமேற்படவைத்தோம். அப்போதெல்லாம் நாங்கள் இது போல் இரண்டாகப் பிரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் காரணமாக தண்ணீரை சொல்ல வேண்டும்.

வழக்கம்போல் அன்றும் பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அளவற்ற சந்தோஷத்துடன் விளையாடிக்கொண்டிருந்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. எங்கிருந்ததோ வந்த தேயிலைச் செடியின் வாசம் எங்களுக்குள் புதிய விளையாட்டொன்றை கண்ட்டெத்தது. கள்ளன்,போலிஸ் என இரண்டு குழுக்களாக எங்களை பிரித்து கொண்டோம். அதில் முதல் முறையில் நாங்கள் கள்ளனாக விளையாடியபோது போலிஸான அவர்கள் எங்களைச் சுலபமாகவே பிடித்துவிட்டனர்.

இப்போது அவர்கள் கள்ளனாக மாறி நாங்கள் போலீஸாக அவர்களைத் துரத்தினோம். நாணல் புதர்களை கடந்து அவர்கள் ஒடிக்கொண்டிருந்தபோதே இந்த விளையாட்டை நிறுத்தும் விதமாக இரண்டொரு பாம்புகள் வேகமாகக் குறிக்கிட்டதை நாங்கள் பொருட்ப்படுத்தவில்லை. அவர்கள் மேலும் வேகமாக ஒடினர். நாங்களும் அவர்களை விட்டாமல் துரத்திக் கொண்டிருந்தோம். இம்முறை சிறு ஒடையை எக்கிச் சென்று மறுபுறத்தில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்த அவர்கள் ’’நாங்கள் இங்கே.....’’என அழைப்பு விடுத்தனர். அவர்கள் எத்ற்க்காக இப்படிக்கூச்சலிட வேண்டும் . ஒடையைத் தாண்டுவது ஒன்றும் பெரிய காரியமல்லவே என நினனத்தபடி நாங்கள் ஒடையை தாண்டமுயற்சித்தோம். எங்களின் கால் பட்ட மறுநொடியில் ஒடை சற்று அகலமாக விரிய ஆரம்பித்தது. குழந்தைகளான நாங்கள் சற்று பதடததுடன் எங்களின் பிஞ்சுப் பாதங்களை பின்னுக்கிழுத்து கொண்டோம்.

எதிரே இம்முறை சற்று கூப்பிடு தொலைவில் மறுகரையில் வரிசையாக நின்றிருந்த அவர்கள் எஙகளை கேலிசெய்யும் பொருட்டு மீண்டும் ”நாங்கள் இங்கே, நாங்கள் இங்கே....... எனக்கூச்சலிட்டனர்.

மீண்டும் நாங்கள்,சற்றே அகலமான அந்த ஒடை நீரீல் கால்வைத்தபோது ஒடை விருட்டென வேகமாய் விரிந்துவெள்ள பிராகமெடுத்து பெரும் நதியாக ஒடத்துவங்கியது.

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான எங்களுக்கு பலத்த ஆச்சர்யமமும் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது.சற்றுமுன் நாங்கள் நின்றிருந்த இடம் இருட்டாகி நதி மட்டும் சலச்சலத்து கொண்டிருந்த்து.

அவர்கள் கூக்குரல் மட்டுமே எங்கோ தொலைவில் கேட்டது.”நாங்கள் இங்கே , நாங்கள் இங்கே...”என அவர்கள விடுத்த குரல் மிக மெல்லிதாகக் கேட்டது.

எங்களுக்கு இப்போது முதல்முறையாக பயம் ஏற்ப்பட்டது. விளையாட்டை மறந்து இனி அவர்களை பார்க்கமுடியுமா எனும் அச்சம் எங்களைத் தொற்றிக் கொண்டது. பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடும் பொருட்டு வெகுநேரம் யோசித்த பின் மீண்டும் அந்த நதியில் கால் வைத்தபோது நதியின் சலசலப்பு நின்று சற்று அமைதியாக சூழல் உறைந்திருந்தது. எங்களது காலில் பெரும் அலைகள் வந்து தீண்டியபோதுத்தான் நதி கடலாக மாறிவிட்டிருந்தததை உணர்ந்தோம். வெகு துரத்தில் நட்சசத்திரங்கள் மின்னிக்கொண்டிடுந்தன.இபோது அவர்களின் கூக்குரல் கேட்கவில்லை.பயம்மூட்டும் அந்தகாரம் பிரம்மாண்டமாக எஙகள் முன் விரித்தது.

எங்களை நோக்கி வரும் அலைகளின் சப்தம் எங்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்தது. எங்கள் முகத்தில் வீசும் குளிர்ந்த காற்றினூடே பிசுபிசுப்பான அவர்களின் ரத்த வாடையையும் எங்களால் உணர முடிந்தபோது மிகவும் துயரத்திற்குள்ளானோம். பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எஙகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய முடியும். மேலும் எங்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்ததே எங்கள் ஜட்டியிலிருக்கும் பூக்கள்தான். எங்கள் கால்கள் கடலில் இறங்கினால் ஜட்டியில்லிருக்கும் பூக்கள் ஈரமாகிவிடுமோ என்கிற அச்சம் தான் நாங்கள் கடலில் இறங்காது போனதற்கு காரணம் என்று கூறினர்.

பிற்பாடு அவர்கள் பல்வேறு கடல்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு துண்டுகளாகச் சிதறிபோய்விட்டார்கள் என்பதையும் கேள்விபட்டு வருத்தப்படுக் கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்.பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எங்களுக்கு தொலைந்துபோன அவர்களைவிட எங்கள் ஜட்டிகளில் இருக்கும் பூக்களின் மீதுதானே அதிகப் பிரியம்.
புது எழுத்து ..2003



பின் குறிப்பு ;

எனது மயில்வாகனன் மற்றும் கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற இக்கதையை ஒரே வேகத்தில் 1995ல் ஒரு இரவு நேரத்தில் எழுதி முடித்தேன். அப்போது என் அறை பழவந்தாங்கலில் இருந்தது.வீட்டிற்குள் நுழைந்தபோது அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே கவிஞரும் நண்பருமான யூமாவாசுகி அறியில் அமர்ந்து தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில்தான் யூமாவாசூகியின் அறையும் இருந்தது. இருவருடைய அறையின் கதவுகளும், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தானாக பூட்டை இளக்கி கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. சிலசமயங்களில் அவர் என் அறையிலும் நான் அவரது அறையிலும் அமர்ந்து எழுதுவது வழக்கம் .அது போலத்தான் அன்று நான் வீட்டினுள் நுழைந்தபோது யூமாவாசூகி தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். சட்டென என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த நானும் ஒரு பேப்பரை எடுத்து எழுதத்துவங்கினேன் .
அப்போது நான் வேலை செய்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கை அலுவலகத்துக்கு அன்றுகாலை வந்த சிலகடிதங்களும் செய்திகளும் என்னை பெருமளவு அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இக்கதை உருவாக்கம் பெற அந்த கடிதங்களே காரணம் .மேலும் அன்று யூமாவாசுகியிடம் இருந்த தீவிரமான படைப்பு மவுனமும் இப்படைப்பு எழுத முக்கியமானதொரு காரணியாக என்னுள் செயல்ப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் என் நன்றியை பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அத்ன் பிறகு 2000ல் இக்கதை குமுதம்.காம் துவக்கப்பட்டபோது அதன் முதல்கதையாகவும் 2003ல் புது எழுத்து இதழிலும் பின் 2004ல் என் சிறுகதைத்தொகுப்பின் மூலமாகவும் இக்கதை வெளியானபோது நண்பர்கள் பலர் தங்களுக்கு பிடித்த கதையாக பல்வேறு காரணத்திற்கு சொல்வர்.ஆனால் ஒரு சிலர்மட்டுமே அதனுள் இருந்த சில வலிதரும் உண்மைகளை புரிந்துகொண்டனர். இச்சூழல்;உக்கும் அக்கதை பொருந்தும் என்ற நினைப்பில் இக்கதையை உங்களுக்கு மீண்டும் என் ப்ளாக் வழி பகிர்ந்துகொள்வதில் எனக்கு கசப்பு நிறைந்த மனஎழுச்சியை எய்துகிறேன்.

அஜயன் பாலா
21-12-2009

December 13, 2009

ரோஷாமான்: சினிமாவின் நுழைவாயில்

உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 18



குலை வெளிவந்த கையோடு வாழை இறந்துபடுவது போல இயற்கையின் சில நியதிகள் பலசமயங்களில் நம் முதுகில் குத்துவதாக இருக்கிறது. நல்ல சிறுகதை எழுதுகிறவர்கள் நாற்பதாவது வயது வரும் போது அவர்களாகவே படுத்துக்கொண்டு கண்னை மூடி நிம்மதியாய் மண்ணில் புதைந்து விடவேண்டும் என்பதும் அப்படி ஒரு விதி. இந்தவிதிக்கு உட்பட்டு இறந்த பல எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜப்பானை சேர்ந்த Ryūnosuke Akutagawa ரியோன்ஸுகே அகுட்கவா

ஜப்பானிய சிறுகதை உலகின் தந்தையான இவர் எழுதிய இரண்டு சிறுகதைகள்தான் ரோஷமான் எனும் மா காவியம் உருப்பெற அடிப்படை காரணம். அதில் ஒன்றுதான் 1914ல் அகுட்கவாவினால் எழுதப்பட்ட ’இன் எ குரோவ் ” எனும் சிறுகதை. இதுகுறித்து பின்னாளில் ஒரு பேட்டி ஒன்றின்போது பதிலளித்த குரசேவா..அகுட்குவாவின் இக்கதை மனித மனங்களை கீறி கீறி ஆராய்ந்து கொண்டே செல்கிறது.அது நமக்கு வெளிப்படுத்தும் ப்யங்கரத்தை என் பார்வையாளனுக்கு சொல்ல நினைத்தேன் ரோஷமான் எனக்குள் பெரும் மனஅவசத்தை உண்டாக்கியதற்கும் இதுவே மூலகாரணம் .எனகூறியிருந்தார்.

அப்படிப்பட்ட இக்கதையை இவருக்கு முதன் முதலாக எடுத்துச்சொல்லி அதற்கான திரைக்கதையுடன் முதலில் குரசேவாவிடம் கொண்டுவந்தவர். Shinobu Hashimoto ”ஷினோபு கஷி மொட்டோ” .இவர் குரசேவாவின் நண்பர். அவரோடு இகிரு, இடியட் போன்ற படங்களில் இணை திரைக்கதையாளனாக பங்கு வகித்தவர்.அவர் தந்த திரைக்கதை குரசேவாவுக்குள் மெல்ல ஒரு சலனத்தை உண்டாக்கிகொண்டிருந்தது. அடுத்தபடம் என்ன என்ன என நச்சரித்த தயாரிப்பாளரிடம் இதுதான் கதை என கூறி அனுமதியும் பெற்றுவிட்டார்.

.பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைகளனாக கொண்ட இக்கதை ஒரு சாமுராய் வீரன், அவனது மனைவி. ஒரு வழிப்பறித்திருடன் மற்றும் ஒரு மரவெட்டி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் உடன் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை எனும் இரண்டு சம்பவங்களையும் பின்னணியாக க்க்கொண்டு கதை கட்டமைக்கப்ப்பட்டிருந்தது. கதைக்குள் ஆழம் பூடகத்தன்மை ,நாடகீயம் என அனைத்தும் இருந்தாலும் திரைக்கதையாக குரசேவாவுக்குள் இது முழுதிருப்தி அளிக்கவில்லை.

கதைக்குள் இருக்கும் மர்மத்தை காட்சி ரூபமாக உணர்த்த இன்னும் ஏதாவது சேர்த்தால்தான் திரைக்கதையில் கூடுதல் ஆழமும் பரிணாமமும் கிட்டும் என்பதை உணர்ந்தார். அத்ன்பிறகு இருவரும் இதற்கான இணைகதையை தேடிய போதுதான் அவர்களுக்கு கிடைத்தது மற்றொரு சிறுகதை .அந்த கதையின் தலைப்புதான் ரோஷமான்.. ரோஷமான் என்றால் கோட்டை வாயில் பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலில் மழைக்கு ஒதுங்கும் மூன்றுபேர் தங்களுக்குள் சமீபத்தில் நடந்த, தாங்கள் சாட்சிகளாக பங்கேற்ற ஒரு கொலைவழக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனூடே பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலும் அதன்மீது பொழிந்து வழியும் பேய் மழையும் இதர இரு பாத்திரங்களாக ஆசிரியரால் வருணிக்கப்பட்ட்டிருந்தன.

இந்த கோட்டையும் மழையும் கதையின் உட்பொருளை உணர்த்துவதாக இருக்க இதனை முதல்கதையாகவும் அகுட்கவாவின் முதல்கதை இன் எ குரோவ் கதையை ப்ளாஷ் பேக்கிலும் வைத்து இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க துவங்க குரோசவா எனும் இயக்குனரின் கனவில் பிரம்மாண்டமாக விரியத்துவங்கியது ரோஷமான்.

திரைப்படம் பேய் மழையிலிருந்து துவங்குகிறது.ரோஷாமான் எனும் பிரம்மாண்டமான நுழைவாயிலில் மழை கொட்டுகிறது.அதன் இண்ண்டு இடுக்குகளில் மழை சீறிபாய்கிறது. நுழைவாயிலை ஒட்டிய மண்டபத்தில் நானகைந்து குடியானவர்கள் தஞ்சம் புகுந்து பேசிக்கொள்கின்றனர். அப்போது இருவர் தாங்கள் நேரில்கண்ட விசாரணையை வியப்புடன் இன்னொருவனுக்கு சொல்ல துவங்குக்கின்றனர்.. விசாரணைக்கூடம் காண்பிக்கப்படுகிறது. வழிப்பறிதிருடன் ஒருவன், கொல்லப்பட்ட சாமுராய், சாமுராய் வீரனின் மனைவி , வழிப்போக்கனாக இவை அனைத்தையும் கண்ட மரவெட்டி ஆகியோரின் சாட்சியங்களின் வழி அவரவர் கொலையை பற்றி விவரிக்கின்றனர். இதில் கொலையுண்ட சாமுராய் வீரனின் சாட்சியம் ஆவி உருவில் அவனது மனைவியின் வாயிலாக காண்பிக்கபடுகிறது . ஒரு சம்பவத்துக்கு ஒரு உண்மைதான் இருக்க முடியும் ஆனால் இங்கோ அவரவர் கொலையை அவரவர் கோணத்தில் விவரிக்கின்றனர் . நால்வர் சொலவதும் நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.ஆனால் ஒருவர் சொல்வதற்கு முற்றிலும் த்லைகீழான உண்மையாகவும் இருக்கிறது. இறுதியில் யார் சொல்வது உண்மை என கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமல் படமும் முடிகிறது. ரோஷ்மான எனும் பிரம்மாண்ட கட்டிடமும் மழையும் அனைத்திற்கும் சாட்சிகளாக நட்ந்த சம்பவங்களை கேட்டும் கேளாமல் நின்றுகொண்டிருக்கிறது.

அதுவரை ஜப்பானிய சினிமாவில் இல்லாத உள்ளழுத்தமும் பூடகமும் வெளிப்பாடாற்ற தன்மையுமாக அகிராகுரோசாவா இப்படத்தை இயக்கிருந்தார். இதனாலேயே ஜப்பனிய திரைப்பட உலகம் இத்திரைப்படத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்தே நிராகரித்து வந்தது. தயாரிப்பாளர்கள் கதையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை என குறைகூறினர். அகிராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் கூட திரைக்கதையின் பலம் குறித்து போதிய புரிதல் இல்லாமல் படப்பிடிப்பிலிருந்தே விலகிக்கொண்டனர்.இப்படி பலராலும் ரோஷமான் வெறுக்கப்பட்டதற்கு காரணம் படத்தில் திட்டமான ஒருவரிக்கதையில்லை. கதை பார்வையாளனின் யோசனைக்கு தள்ளப்படுகிறது. இதற்குமுன் இப்படியான திரைக்கதைகள் அவர்களது அனுபவ உலகத்தில் இல்லாததால்தான் இதெல்லாம் ஒரு கதையா என சுண்டு விரலால் அத்னை ஒதுக்கிதள்ளினர்.

ஆனால் குரசேவா திட்டமாக இத்திரைக்கதைய்யை நம்பினார்.கதையின் ரகசியம்தான் திரைக்கதையின் வெற்றி அது பார்வையாளனுக்கு தெளிவாக கூற வேண்டிய அவசியமில்லை காட்சிகளின் மூலம் அவனது ஆழ்மனத்தில் உணர்த்தினால் போதுமானது என குர சேவா நம்பினார்.இதனாலேயே படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான் நுழை வாயிலுக்காக குரசேவா மிகவும் மெனக்கெட்டார்.தனது கற்பனையை விட அது பிரம்மண்டமானதாக இருக்கவேண்டும் என விரும்பினார்.

பல புத்த கோவில்களுக்கு சென்று இறுதியில் ஒன்றை தேர்வு செய்தார்.புராதன நகரமான கியோட்டோவின் வடக்கு மூலையிலிருந்த நுழைவாயில் அவரை மிகவும் கிளர்ச்சியுறசெய்தது.பின் அது போன்ற ஒன்றை நிர்மாணிக்கும் படி தன் கலை இயக்குனர்களுக்கு அவர் கட்டளையிட அது அத்னையும் விட பிரம்மாண்டமானாதாக அமைந்து காட்சிக்குள் ஒரு புதிர்த்தன்மையை இயல்பாக வடித்து தந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து திரைப்படம் 1950ல் வெளியானபோது ஜப்பனில் பலரும் கடுமையாக எதிர்த்தனர். ஜப்பானியர்கள் தத்துவங்களை காட்டிலும், வாழ்க்கையையும் உறவுகளையுமே அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் புரியாத இத்திரைப்ப்டம் குரசேவாவுக்கு மேற்கு நாடுகளின் கலாச்சாராத்தின் மீதான் ஈடுபாட்டையே காண்பிக்கிறது . என பொறிந்துதள்ளினர். ஆனால் படத்தை பார்த்த ஒரு இத்தாலிய ஆசிரியர் ஒருவர் இப்படத்தை இத்தாலியின் வெனிஸ் திரைப்ப்டவிழாவுக்கு பரிந்துரை செய்தார்.ஆனால் ஜப்பான் அரசாங்கமோ குரசேவாவை விட எங்களின் இயக்குனரான ஓசு தான் எங்கள் வாழ்க்கைய்யை திறம்ப்ட சொல்கிறார் அவரது படத்தை வேண்டுமானால் அனுப்புகிறோம் என முரண்டு பிடித்தது.
இப்படியாக பல ப்ரச்னைகளை கடந்து இப்ப்டம் இறுதியாக போட்டியில் கலந்து கொள்ள,இறுதியில் விழாவின் சிறந்த படத்துக்கான தங்க சிங்கம் விருது இப்படத்துக்க வழங்கப்பட்டது. அன்று அரங்கில் எழுந்த பலத்த கைதட்டலுடன் மேடையில் உயர்ந்தது குரசேவா எனும் பெயர் மட்டுமல்ல போரினால் உருக்குலைந்த ஜப்பானியர்களின் மனோதிடமும் உறுதியும் தன்னம்பிக்கையும் தான். அதே போல ரோஷ்மானுக்கு பிறகுதான் உலக அரங்கில் ஜப்பான் சினிமாவுக்கு முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது.
தொடர்ந்து அமெரிக்காவிலும் இன்னும் பல படவிழாக்களில்லும் கலந்து கொண்டு இத்திரைப்ப்டம் பரிசுகளை அள்ளிக்குவித்துக்கொண்டே இருக்க குரசேவா உலகின் த்லை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் அறியப்பட்டார்.

ரோஷ்மான் திரைப்ப்டத்திற்கு கிடைத்த பெருமைகளுக்கு அத்ன் திரைக்கதை மட்டுமே காரணமல்ல. மாறாக அதன் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சப்த ஒருங்கிணைப்பும் கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக முக்கிய காரணிகளாகும்.குறிப்பாக ஒளிப்பதிவில் ரசம் பூசப்பட்ட கண்னாடிமூலம் வெளிச்சத்தை நடிகர்களின் முகங்களில் பிரதிபலைக்கச்செய்யும் உத்தி முத்ன முதலாக இப்படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல சூரியனை நேரடியாக காமிராமூலம் படம்பிடிதத்தும் இப்படத்தில்தான் முதல் முறை.


படத்தில் வழிப்பறி திருடனாக நடித்த மிஃபுனே குரசேவாவின் நிரந்தர நாயகானாக தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு முறை படப்பிடிப்பினூடே குரசேவா குழுவினருடன் மார்டின் மற்றும் ஓசா ஜான்சன் ஆகியோர் இயக்கிய ஆப்ரிக்கா எனும் படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒருகாட்சியில் சிங்கம் ஒன்று நடந்து போக உடனே மிபுனே என கத்தினார் குரசேவா .மிபுனே குரசேவாவை திரும்பிபார்க்க அதோ திரையில் நடக்கும் சிங்கத்தை பார்.நம் படத்தில் நீ இது போலதான் நடக்க வேண்டும் என உத்தரவிட மிபுனேவுக்கு அந்த நிமிடமே மூக்கின் கீழ் மீசை சிலுப்பிக்கொண்டு உருவெடுக்க துவங்கியது. ப்டத்தில் மிபுனேவின் உடலில்கட்டுதெறிக்கும் அசாத்திய முறுக்குக்கெல்லாம் பின்னணியாக குரசேவாவின் இந்த கட்டளைதான் இயங்கியது. ஒரு நடிகனுக்குள் இயக்குனர் எவ்வளவு ஆழமாய் ஊடுருவ முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

நன்றி: புத்தகம் பேசுது ..டிசம்பர் மாத இதழ்

December 4, 2009

சிறுகதை : ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்;





ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள் ஊஞ்சல்கட்டிக்கொண்டது. பண்டிகைக்காலஙகளுக்கென்றே முளைக்கும் விசேஷ றெக்கை இப்போதே துளிர்விட்டது போல கண்ணாடியை எடுத்து ஜன்னலருகே கொண்டுவந்து வைத்து தன் முகத்தை பார்த்தாள். கன்னத்தில் மினுக்கம் கூடி சிமிட்டியது. கண்ணாடியில் தனக்கு தானே ஒழுங்கு காட்டிக்கொண்டாள். பின் காதல்ஜோடிகள் கைகோர்த்தபடி சினிமாக்களில் ஆடுவது போல கண்னாடியை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு ஆடியபடி கட்டிலில் வந்து விழுந்தாள். படுத்தவாக்கிலேயே கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவளுக்கு முன்பை விட இப்போது தன் அழகு கூடியிருப்பது போல பட்டது. வீட்டில் யாரும் இல்லாத அந்த பொழுது அவளுக்குள் ஒரு கிதாரை மீட்டியது. மனசில் காரணமே இல்லாமல் ஒரு குதூகலம். இதே போல வீட்டில் யாரும் இல்லாத போது சிறு வயதில் வழக்கமாக அவள் செய்யும் காரியங்களில் ஒன்று இப்போது ஞாபகத்துக்கு வந்தது. பீரோவில் ஒளித்து வைத்திருக்கும் அம்மாவின் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு ஜன்னல் வழியாக அம்மா வருகிறாளா என எட்டி பார்ப்பதும் பின் அவள் வருவது தெரிந்ததும் ஓடிப்போய் உதட்டை துடைத்துக்கொள்வதுமான அந்த காட்சி அவள் மனதில் தோன்றி மறைந்தது. தனக்கு தானே சிரித்துக்கொண்டாள்.

முதன் முதலாக கிறிஸ்டியின் கல்யாணத்தின் போதுதான் அம்மாவே இவளது உதட்டுக்கு லிப்ஸ்டிக்கை போட்டுவிட்டாள். அன்று மனதில் விதவிதமான கற்பனைகள் தன் மனது முழுக்க திளை த்ததுவும் இவளுக்கு ஞாபகத்தில் வந்தது. மனது முழுக்க அப்படி ஒரு ரம்மியம். சட்டென ஒரே நாளில் அழகு மிளிரும் தேவதைக்களை தனக்கு கூடிவந்துவிட்டது போல அங்குமிங்குமாக காரணமின்றி திரிந்தாள். கொலுசு சத்தம் வேறு அவளது அத்தனை உற்சாகத்துகுக்கும் அந்த கொலுசுசத்தமும் ஒருகாரணம் என்பதை அறியாமல் அதனை ரசித்தபடியே அங்குமிங்குமாக கூட்டத்துனூடே திரிந்தாள். வீட்டில்... வாசல்பந்தலில் சர்ச்சில்... வரவேற்பு நடந்த கம்யூனிட்டி ஹாலில் என பலவிதமான காட்சிகள் பன்னீர்வாசத்துடன் அவளது நினைவுக்குள் தளும்பின. முதன்முதலாக நிறைய்ய ஆண்களை அவள் நெருக்கமாக பார்த்ததும் அப்போதுதான். அதற்குமுன் ஞாயிற்று கிழமை வகுப்புகளின் போது சர்ச்சில் ஆண்களை பார்ப்பதற்கும் இதற்கும் நிறைய்ய வித்தியாசம். அங்கு பெரும்பாலும் கண்ணியவான்களாக இருந்தார்கள். ஆனால் கல்யாணத்தின் போதோ அம்மாவின் எதிரேயே தன் கையை பிடிக்க பலர் முயன்றதும் அவர்களின் கைகளில் சிக்காமல் விலகி விலகி போனதும் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியும் சில வயதான முரட்டுகைகள் தன்மணிக்கட்டைதிருகியதும் அம்மாவிடம் அடுத்து இவளுக்கும் இங்கயே மாப்புளை பாத்துடவேண்டியதுதானே என கேட்டதும் இவளை படபடக்கவைத்தன. அப்போது அவள் ஏழாம் வகுப்பில்லிருந்து எட்டாம் வகுப்புக்குதாவிக் கொண்டிருந்த கோடைக்காலம்.

இப்போது சரியாக இரண்டு வருடம் ஆகப்போகிறது. இதோ நாளை கிறிஸ்டி வரப்போகிறாள் அவள் வந்ததுமே இந்த அறையை ஆக்ரமித்துக்கொண்டுவிடுவாள். அதன் பிறகு அவள் ஊருக்கு திரும்புவது வரை இந்த அறைக்குள் ரோஸ்லின் நுழையவே முடியாது. கதவை சாத்திக்கொண்டு புருஷனுடன் அப்படி என்னதான் குழைவாளோ. நினைக்கும்போதே வேட்டியும் பனியனுமாக மார்பில் செயின் புரள மயிர் அடர்ந்த ஜோசப்பின் தோற்றம் வந்து போனது. ஜோசப் அறையை விட்டு வெளியே வரமாட்டன், அவளும் வெளியவே வரவிடமாட்டாள். அடிக்கடி வளையல் குலுங்க அவசர அவசரமாக அறைக்குள் நுழைவதும் பின் வெளியே வருவதுமாக ஏதோ ஹெட்மாஸ்டரின் அறைக்குள் டீச்சர்ஸ் ஓடுவது போல அவள் பரபரப்பாக காட்டிக்கொள்வாள். அடிக்கடி சிரிப்புசத்தம் வேறு. ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் வெளியே வரும் ஜோசப்பின் செண்ட் வாசனை நாய்க்குட்டியாக வீட்டை சுற்றிவரும் .. அப்புறம் கிறிஸ்டி அவ்வளவு லேசில் பட்டுபுடவையை வேறு கழட்டமாட்டாள். சரக்சரக் சத்தம்தான். கல்யாணம் ஆகி இந்த இரண்டு வருடத்தில் புருஷனும் பொண்டாட்டியுமாக இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சமயங்களில் வந்து போயிருப்பார்கள்.

சட்டென ரோஸ்லின் கையிலிருந்த கண்ணாடியை சற்று கீழிறக்கி தன் மார்பை பார்த்தாள். இன்று சற்று கூடுதலாக மேடுதட்டியிருப்பது போல பட்டது. சிறியதுதான் ஆனாலும் வகுப்பில் தோழிகள் தன்னோடு நெருங்கி அமர்வதற்கும் வழியில் பலர் தன்னை உற்றுபார்ப்பதற்கும் அதுதான் காரணம் என்பதை நன்கு அறிந்திருந்தாள். தன் வலக்கையை அங்குகொண்டுபோய் இடப்பக்க மார்பை விரல்களால் மெதுவாக வருடினாள். உடல் முழுக்க அதன் அதிர்வுகளை மீட்டல்களை **** கிறீஸ்டிக்கு சுத்த மோசம் தட்டையாக இருக்கும் கல்யாணத்துக்கு முன் அம்மாவும் மாத்திரையாக கொடுத்துபார்த்தாள். எத்தனை முட்டைகள் சாப்பிட்டும் ஒரு மாற்றமும் இல்லை. மீண்டும் ஒருமுறை தன் மார்பை பார்த்துக்கொண்டாள் மனம் குதூகலித்தது.


இப்போது சுவற்றில் மாட்டிவிட்டு போன கண்ணாடியை எடுத்துக்கொண்டு மீண்டும் தோட்டத்து பக்கமாக போனாள்.. ஒருமுறை தன் உடலை முன்னும் பின்னுமாக கண்ணாடியை வைத்துபார்த்தாள். பீரோஅறைக்கு திரும்பி கண்ணாடியை ஆணியில் மாட்டி வைத்தவள் திரும்பி கட்டிலை பார்த்தாள். இப்போது அங்கு ஜோசப் பின் உருவம் தெரிந்தது. ஜோசப் பனியனுக்கு அப்பால் சிலிர்புக்கும் முடியுடன் அவளை பார்த்து புன்னகைத்தான் அவளை அருகில் வருமாறு இருகரம் நீட்டி தன் காந்த சிரிப்புடன் அழைத்தான். அவள் வரமாட்டேன் என்பவளாக அப்படியே சுவற்றில் சாய்கிறாள். பின் அவனாகவே எழுந்து அருகில்வந்து அவளது கையை பற்றி இழுக்கிறான்.சட்டென அக்காள் அங்கே வருகிறாள். தன் கற்பனையினூடாகக்கூட இப்படி பாதியில் கிறிஸ்டி வந்துவிட்டதை எண்ணி சிரித்தவளாக கட்டிலில் விழுந்தாள். கால்கள் இரண்டையும் ஆட்டியபடி கவிழ்ந்து படுத்தவள் பெட்ஷீட்டை கடித்தபடி விழித்து பார்த்தாள். ஜோசப் படுத்திருக்கும் காட்சி மீண்டும் மனதில் ….கைகளை அவன் மார்பின் மேல் படரவிட்டாள்.. விரல்களில் இரண்டுமட்டும் பானியனுக்கு மேலேயே நிற்க மற்ற விரல்கள் அவனது மார்பு சூட்டை ரோமங்களினூடே உணர்ந்தன.. மனதில் ஒருவித உற்சாகம் கொப்பளித்து வழிந்தது. சட்டென உடலில் வெம்மை பூக்க உள்மனம் ஒரு பயத்தில் நடுங்கியது. கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். வேறு யாராவது ஒரு ஆணை நினைத்துபார்க்காலாம் என தோன்றியது. எதிரே காலண்டரில் ஜீஸஸ் சிரித்துக்கொண்டிருந்தார். ஜீன்ஸும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு ஜீஸஸ் தன் அருகில் வருவதைபோல யோசித்து பார்த்தாள். ஜீஸஸ் போல கண்கள் ஓளிரும் கண்களுடன் வசீகரமான முகத்துடனும் ஆண்கள் ஏன் இருப்பதில்லை என யோசித்தாள். ஜீஸஸ் கதநாயகனாக நடித்தால் யாரை ஹீரோயினாக போடலாம் ....யோசித்தவரை..யாருமே அவள் மனதுக்கு பொருந்திவரவில்லை. ஒருவேளை இப்போது அப்படி ஜீஸஸ் தன் எதிரில் வந்தால் என்ன கேட்கலாம் என யோசித்தாள். ஒரு நல்ல காதலனை ஜோசப் போல மார்பு முழுக்க முடிகள் அடர்ந்த காதலனை கேட்கலாம். மீண்டும் ஜோசப்பின் முகம் அவளது எண்ணத்தை கலைக்க சட்டென கண்களை மூடி வேண்டாம் என தலையசைத்தாள். வேறு யாராவது ஒரு ஆண் என மனப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்காளாக புரட்டி வந்தவளுக்கு சட்டென வந்தது ஒரு உருவம். எப்போதும் போல டவுசர் அணிந்துகொண்டு... சூசை மனசு திக்கென்றது. உள்ளம் திடுமென குழியாகிப்பொனதுபோல ஒரு சோகம் அவளது இதயத்தை கவ்வத் துவங்கியது. சூசை முன்பு இரண்டு முறை லெட்டர் கொடுக்க வந்த போதும் அவள் அதனை வாங்காது வேகமாக வந்துவிட்டாள். ஒரு முறை அவளும் சரஸ்வதியும் ட்யூஷன் விட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு வரும் போது. இரண்டாவது முறை சரஸ்வதி வீட்டு மாடியில் தனியாக இருக்கும் போது. முதல்முறை சரஸ்வதிகூட வாங்கச்சொல்லி வறுபுறுத்தினாள். படித்துவிட்டு கிழித்துவிடலாம். அல்லது திருப்பி கொடுத்துவிடலாம் என ஐடியா கொடுத்தாள். ஆனால் ரோஸ்லினுக்கு தைரியம் வரவில்லை. மட்டுமல்லாமல் எப்போதும் அரைடவுசர் அணிந்தபடி சதா கால்பந்து மைதானத்தில் திரியும் சூசையின் மேல் அவளுக்கு பிடித்தமே இல்லை. ஒருநாளாவது இந்த அரை டவுசர் இல்லாமல் ஒரு பேண்ட் ஷர்ட் அணிந்து அவன் வருவான் என பலமுறை எதிர்பார்த்தாள். சொல்லிவைத்தார் போல் எப்போதும் அந்த ஒரே நிற டவுசரையும் விளாயாட்டின் போது உடுத்தும் டீசர்ட்டையுமே அணிந்தபடி கோட்ரஸ் தெருக்களில் உலாத்தினான் சூசை. சூசைக்கு ரோஸ்லின் மேல் மையல்வரக் காரணம் பால்ய நட்பு.

சிறுவயதில் சூசையும் ரோஸ்லினும் சர்ச்சில் கோயர் பாடகர்கள் . சரஸ்வதியும் ஒரேவகுப்பானதால் சனிக்கிழமை மதிய நேரங்களில் அனைவரும் ஒன்று கூடி சரஸ்வதி வீட்டில் பாடல்களை பாடுவது வழக்கம். சரஸ்வதி வீட்டில் ஒருமுறை கொலுவைத்தபோதுதான் மூவரும் இதுபோல சினிமா பாடல்களை மாறிமாறி பாடதுவங்கினர். சரஸ்வதியின் அம்மா ஒரு பாட்டுபைத்தியமாக இருந்ததால் இது சாத்தியமானது. அப்போது அவர்கள் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். அப்போது மூவரும் ஒன்றாக சரோஜா டீச்சரிடம் டியூஷன் படித்தனர். சரோஜா டீச்சர் வீட்டுக்கு கோட்ரஸ் பின்னால் சர்ச்சுக்கு போகும் வழியில் இருக்கும் ரயில்வேகிராஸிங் கடந்து அதன்பிறகு வரும் ஏரிக்கரை மேல் நடந்து செல்லவேண்டும். இடையில் இருக்கும் வயல்வெளியியில் அப்போதே வீடுகள் வந்துவிட்டதால் ஆள்நடமாட்டம் இருக்கும். மாலை போகும் போது பிரச்னையில்லை. திரும்பும் போது வழியில் ஏரிக்கரையிலிருந்து வயல்வெளியில் வீடுகள் இருக்கும் இடம் வரை கொஞ்ச தொலைவு இருட்டாக இருக்கும். அந்த இடம் வெறும் வரப்பும் புல்லாகத்தான் இருக்கும். மூவரும் ஒன்றாக சென்று வந்ததால் பிரச்னை இல்லை. ஒருநாள் சரஸ்வதிக்கு உடம்பு சரியில்லை. ரோஸ்லினும் சூசையும் மட்டும்தான். இரவு ட்யூஷன் முடிந்து ஏரிக்கரைவழியாக இருவரும் வந்துகொண்டிருந்தபோது ரோஸ்லீன் திடீரென அழ ஆர்ம்பித்தாள். சூசை என்ன ஏது என கேட்க இருட்டுல என்னை நீ கட்டிபிடிச்சி கெடுத்துட மாட்டயில்ல என அழுதுகொண்டே கேட்க சூசைக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. ஆனால் அவள் தன்னை கண்டு பயப்படுகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. சரி அப்ப நீ முதல்ல போ நான் பின்னாடி வர்றேன் என கூறி சூசை நின்றுகொண்டான். ரோஸ்லினுக்கோ பயம். நீ வா..ஆனா பக்கத்துல வராத..கொஞ்சம் தள்ளி நடந்து வரணும் என கூறீனாள். சூசை தலையசைத்தவனாக ஒதுங்கி அவளுக்கு பின்னால் நடந்துவந்தான். வெளிச்சமான இடத்துக்கு வந்தபின் ரோஸ்லின் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடிப்போனாள். அதன்பிறகு என்ன காரணத்தாலோ அவள் ட்யூஷன் வரவில்லை. அவர்களிடமிருந்த சிறுவயது நட்பு மெல்ல விரிசலடைந்து ஒரு கட்டத்தில் ரோஸ்லின் பெரிய பெண் ஆனதிலிருந்து முழுவதுமாய் காணாமல் போனது. சூசை அதன் பிறகு அடிக்கடி பேச வந்தபோது கூட ரோஸ்லின் விலகி விலகி போனாள். எட்டாம் வகுப்புக்கு பிறகு அவள் பெண்கள் பள்ளிக்கு போய் சேர்ந்துவிட அதன்பிறகு இருவருக்குமான நட்பு சுத்தமாய் அறுந்து போனது.

எப்போதாவது கோட்ரஸில் மைதானம் வழியாக அவள் அம்மாவோடு அல்லது தனியாக நடந்து வரும்போதெல்லாம் சூசை வழக்கமாக அணியும் டவுசர் உடையில் யாரூடைய சைக்கிள் மீதோ அமர்ந்திருப்பான். கைகளில் கால்பந்து உருண்டுகொண்டிருக்கும். இவளை பார்த்தும் சட்டென அமைதியாகி அவள் வீட்டுபடியெறுவதுவரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தான்.

கடைசியாக ரோஸ்லின் அவனை பார்த்தது சரஸ்வதிவீட்டின் மாடியில். அன்று சரஸ்வதியின் கடைசி தம்பிக்கு பிறந்தநாள். மொட்டை மாடியில் லைட் எல்லாம் அலங்கரித்திருந்தனர். அங்கேயும் சூசை அரைடவுசர் போட்டபடி வந்திருந்தான். கிடார் வாசிக்கும் போது இவளை அடிக்கடிபார்த்தான் . குழந்தைகள் எல்லாம் கைதட்டி ரசித்தன. மெழுகுவர்த்தி அணைத்தபோது கூட பர்த்டே பாட்டை சூசைதான் பாடினான். உடன் அனைவரும் பாடினார்கள். ரோஸ்லின் மட்டும் அமைதியாகவே நின்றுகொண்டிருந்தாள் கேக் தட்டை எடுத்துக்கொண்டு வந்து சூசை நீட்டியபோது ரோஸ்லின் அதனை மறுத்து திரும்பிக்கொண்டாள்.

அவமானம் தாங்காமல் அப்போது உடனே கீழே அவசரமாக இறங்கி போனவன்தான். இன்றுவரை அவனை பார்க்கவில்லை. இறங்கிபோகும்போது கண்களில் வழிந்த நீரை சூசை பனியனால் துடைப்பதைக்கூட ரோஸ்லின் பார்த்தாள். அதன்பிறகு கூட அவள் அந்த கேக்கை தொடவில்லை. இன்னொரு கேக்கை சரஸ்வதி கொண்டுவந்தபோதும் வாங்க மறுத்துவிட்டாள். ஆனால் அன்று அங்கு கூடியிருந்த பலருக்கும் அங்கு நடந்த இந்த விவகாரமே தெரியாது. ஜேக்கப் மற்றும் பிலோமினா சுந்தர் ஆகியோர் மாறிமாறி பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். மொத்த கூட்டமும் அவர்களை சுற்றியே இருந்தன. இப்போது அவள் அவன் வைத்துவிட்டு போன கேக்கை பார்த்தாள் கறுப்பு எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. மெல்ல விரல்களால் எறும்புகளை தட்டிவிட்டாள் அவை மீண்டும் கேக்கில் ஏறிக்கொண்டிருந்தன. இரவு முழுக்க அந்த கேக் ..மொட்டைமாடி விளிம்புசுவற்றில் அப்படியே கிடந்தது. மறுநாள் சூசை இறந்தசெய்தி கோட்ரசையே கதிகலக்கியது. ரோஸ்லினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிர்ச்சிதான் இருந்ததே தவிர துக்கமோ அழுகையோ ஏற்படவில்லை. உன்னை அவன் எப்படில்லாம் லவ் பண்ணினான் ஏண்டி அவன் செத்தது உனக்கு அதிர்ச்சியா இல்லை என இரண்டுநாள் கழித்து பள்ளி விட்டு வரும்போது சரஸ்வதி கேட்டாள். ரோஸ்லின் எதுவும் பேசவில்லை அமைதியாக நடந்துகொண்டிருந்தாள். அதன் பிறகு சிலநாட்கள் பேசாமல் இருந்த சரஸ்வதி கொஞ்ச நாள் கழித்து அவளாகவே வந்து மீண்டும் ஒட்டிக்கொண்டாள். இரண்டு மாதங்களில் சூசையை கோட்ரஸ் முழுவதுமாக மறந்தும் போனது. ரோஸ்லினும் அதைவிட வேகமாக மறந்தாள். எப்போதாவது சரஸ்வதிவீட்டைகடக்கும்போதுமட்டும் மாடியை பார்ப்பாள். நொடி நேரம்தான் அத்தோடுசரி.

இந்த சூழலில்தான் வீட்டில் யாரும் இல்லாத அன்று கட்டிலில்கிடந்த அவளுக்கு வெகுநாள்கழித்து சூசையின் முகம் ஞாபகம் வந்தது. அதுவும் அவள் மனசை அலைக்கழித்த அக்காள் கணவன் ஜோசப் இருந்த இடத்தில் வேறுயாரை நினைத்துபார்க்கலாம் என யோசிக்கும் போது சூசை ஞாபகம் வந்தது. இப்போதும் சூசை தன் டவுசர் அணிந்தபடிதான் இருந்தான். ஆனால் ரோஸ்லினுக்கு இப்போது அவன் அழகாக இருப்பது போல தோன்றியது. இரண்டு பக்கமும் கூட்ஸ் வேகன்கள் அடைந்திருக்க சூசையோடு ஒன்றாக ரயில்வே ட்ராக்கில் நடந்து செல்வது போல ரோஸ்லின் நினைத்து பார்த்தாள். ஓரிடத்தில் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக நினைத்துக்கொண்டாள். தொடர்ந்து வெகுநேரம் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சூசையை கட்டியணைத்து முத்தமிடுவதாக நினைத்தும் பார்த்தாள். பின் அவனோடு முழுவதுமாக அவள் சங்கமித்துக்கொண்டிருந்த சமயத்தில் வாசலில் கதவுதட்டும் ஓசையும், தொடர்ந்து கதவை திறக்கசொல்லும் அம்மாவின் குரலும் கேட்டபடி இருந்தது.

நன்றி: சிக்கி முக்கி.காம் Pls visit http://www.chikkymukky.com /


புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...