February 28, 2017

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள் -தமயந்தியின் ” கொன்றோம் அரசி” சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரை

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள்



2010-ல் ஹைதரபாத் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் தெலுங்கு இலக்கிய உலகின் .காத்திரமான பெண்ணிய சிந்தனையாளரும் சிறுகதை எழுத்தாளருமான வோல்காவோடு கொஞ்ச நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டியது.  பெண்ணின்  முகம், கண், காது, மூக்கு, மார்பு, கூந்தல், யோனி, மற்றும் தொடை என  ஒவ்வொரு பாகத்தின் பெயரிலும் ஒரு கதை எழுதி ஒரு சிறுகதைத் தொகுப்பு வரப்போவதாகc சொன்னார். அப்படி வந்தால் அது உண்டாக்கும் அதிர்வை குறித்து யோசித்தேன்.  ஐந்து வருடமாகிவிட்டது அந்த தொகுப்பு வந்துவிட்டதா இல்லையா தெரியவில்லை. ஆனால் தமயந்தியின் இந்த தொகுப்பை வாசிக்கும்போது அந்த அதிர்வை உணரமுடிகிறது.

மொத்தம் ஏழு வீடுகளைக்கொண்ட தொகுப்பு இது . ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் தன சிறுகதைகளின் வழி  நமக்கு திறந்து காட்டுகிறார் தமயந்தி . வரிகளுக்கப்பால் தெரிவது எல்லாம் வேதனையும் துயரும் கொப்பளிக்கும் கண்கள். உடன்  ஆற்றாமை கோபம் ,காதல் அழுகை காமம்.  என பெண்களின் பல்வேறு உச்ச தருணங்கள்.   ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் போதும் பெரும் அதிர்விலிருந்து விடுபட முடியாமல் நம்நெஞ்சை பிசைந்துவிடுகிறது. . இந்த ஏழு வீடுகளில் ஏதோ ஒன்று நம்முடையதகாவும் இருக்கிறது என்பது தான் இத்தொகுப்பின்சிறப்பு .

இவை பெண்களின் கதைகள் மட்டும் அல்ல ஆண்களின் கதைகள். ஆண்கள் படித்து உணரவேண்டிய கதைகள் சில கதைகள் ஆண்களின் முகத்தை அறையக்கூடும் முகத்தில் எச்சிலை உமிழக்கூடும்  முன்னர் தாய் தங்கை சகோதரி மனைவி சக தோழிக்கு செய்த துரோகங்களை நினைவுறுத்தகூடும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தக்கூடும் அவ்வகையில் இக்கதைகள் சமூகத்தில் சிறந்த சுத்திகரிப்பை நிகழ்த்துகின்றன .\அது போல பெண்ணியம் என்பது ஆண்களின் மீதான வெறுப்பை கட்டமைப்பது என்பதை கடந்து பெண்ணின் பாடுகளை வலிகளை சொல்லி  தந்தையை காதலனை  கைப்பற்றி அவர்களுக்கு தங்கள் ப்ரசனையை சொல்லி புரியவைப்பதகவும் .சில கதைகள் அமைந்திருப்பது தொகுப்பின் சிறப்பு .


மங்காக்கா கங்கம்மா ,வசந்தி, வத்சலாவின் தோழி  என வெவ்வெறு பாத்திரங்களில் வந்தாலும் எல்லாமே ஒரே முகம்தான். .அவர்களது உள்ளுணர்வும் வெடிச்சிரிப்பும்  வெடுக்கென துள்ளி எழுந்தாடும் ஆங்காரமும் ஒன்றேபோலத்தான். திணற திணற நம் முகத்தில் ரத்தசேற்றை வீசுகிறார்கள்.சக்தியின் பிரம்மாண்ட பிம்பத்தின் முன் ஆணை சிறுபுள்ளியாக உணரவைத்து ஒடுங்கி நிற்க வைக்கிறார்கள்.

அவள் அப்படித்தான் மஞ்சு போல தன்னை அளவெடுக்கும் ஆணின் தந்திரங்களை மன  ஓட்டத்தை குறுக்கு கேள்வியால் அதிரவைக்கும்போதும் (.மிச்சம் ) கட்டிலில் மூத்திரப்பை சுமக்கும் வயதில் காதலை மீட்டெடுத்து கட்டி தழுவும்போதும் (தடயம்). துரோகம் செய்துவிட்டு வந்தது மட்டுமல்லாமல் அம்மாவிடம் வெட்கமில்லாமல் சிக்கன் கேட்டு ஆண்மையை நிரூபிக்கும் தந்தையை புரட்டி எடுக்கும்போதும் (செருப்பு) பாத்திரங்கள்  கதை என்னும் சட்டகத்தை மீறி நம்மை வியக்க வைக்கின்றன.

 எதையாவது சொல்லிவிடவேண்டும் என்ற நிர்பந்தங்களை அதுவாக அறுத்துக்கொள்வது இக்கதைகளின் சிறப்பு.. ஒவ்வொரு கதையிலும் வெளிபூச்சில் உணர்வலசலாக ஒரு கதையும் மையப்ர்சனையாக இன்னொரு கதையும் நமக்குள் இறங்குகின்ற்ன . இரண்டு கதைகளையும் முடிச்சிடும் புள்ளிகளும் இயல்பாக இருப்பதும் தமயந்தியின் விசேஷகுணங்கள். செருப்பு கதையில் செருப்புதான்  மேலோட்டமான கதை நகர்த்தும் பொருளாக இருப்பினும்  அம்மாவையே அடக்கியாளும் மங்காக்காவின் ஆளுமைத்திறனும்  ஆண் எனும் ஒற்றை அதிகாரகட்டுக்குள் உடைந்து நொறுங்கும் பெண் சித்திரங்களடங்கிய குடும்பமும்  இன்னொரு கதை.

அதுபோல மிச்சம் கதையில்  மாத சுழற்சி சரியான நேரத்தில் வராமல் போவதால் ஒரு பெண் எதிர்கொள்ளும் ப்ரசனைகள் பற்றிய கதையில் அலுவலக அரசியலும் பெணணையே பெண்ணுக்கெதிராக பயன்படுத்தும் ஆணிய அரசியலும் நமக்குள் கதையாக ஊடுருவி கடக்கிறது..தமயந்தியின் கதை சொல்லலில் ஒரு அனாயசம் அலட்சியம் ஒற்றை வரி உரையாடல்கள் வழி நகரும் கதைகளில் ஆங்காங்கு நிகழும் மின்னல் அதிர்வுகள் தமயந்தியின் தனித்தன்மை.

”வாழ்க்கையில என்ன நடந்தாலும் முருங்கக்காய் தோலை சவச்சிட்டு சாவணும் என்ன ருசி “ (கொன்றோம் அரசி )
இப்படி ஒரு பேச்ச் நம்ம அந்த ஆண்டவன் பேச வச்சிட்டாரு இல்லை எப்படி ?
.உன் புருஷன் நலமா ?
உன் பொண்டாட்டி எப்படி நீயும் நானும் கேட்கறா மாதிரி (தடயம்)

இப்படியாக ஒவ்வொரு கதையிலும் உரையாடல்கள் அசத்துகின்ற்ன
வெறும் பெண்னியத்தோடு நில்லாமல் தமயந்தியின் கதைகள் தீவிரமான அரசியலையும் பேசுகின்றன. சமூக மறு கட்டமைபில் அம்பெத்காருக்கு பிறகான செயல்பாடுகள் குறித்தும்  விவாதம் எழுப்புகின்றன. காலம் முழுக்க மனித மலம் சுமந்து சமூகத்தின் ஆரோக்கியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் மகன்கள்  படித்து பட்டம்பெற்று வேலைக்குவரும்போது எதிர்கொள்ளும் வலிகளும் வேதனைகளும் சொல்லப்படுகின்றன. கொன்றோம் அரசியை சம கால அரசியல் கதை . இக்கதை யார் யாரை மையப்படுத்துகிறது என்பது வெளிப்படை. . கதைக்குள் ஊடாடும் அதி புனைவு ஆசிரியருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்திருந்த போதும் திரும்ப திரும்ப மரணத்தை பற்றியே அலைவதை தவிர்த்து இன்னும் பல சுவாரசியமான பக்கங்களுக்குள் நகர்ந்திருக்கலாம் .

தொகுப்பில் இரண்டு கதைகள் ஆணை மையப்படுத்தியவை அல்லது ஆண்களின் அக உலகம் சார்ந்தவை . ஒன்று பி பி ஸ்ரீனிவாசும் ரோஜா மலரே ராஜகுமாரியும் , இன்னொன்று பீப் பிரியாணி ..இரண்டில் பீப் பிரியாணி .குறிப்பிடத்த்ககுந்த சமகால அரசியலை மையப்படுத்திய கதை. .என்னதான் பொதுவெளியில் கட்டிப்பிடித்து காதலிபோல நண்பர்கள் தழுவிக்கொண்டாலும்  குடி அமர்வுகளீல் சாதிய உணர்வு வெளிப்படுவதும் தன் சாதிபெருமையை  ஒரு ஆதிக்க சாதியன்  பேசி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் மேல் வன்முறையை காண்பிப்பதும்  ஆண்களின் உலகில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. புற உலகில் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற பலரும் இது போன்ற குடி அமர்வுகளில் தங்களின் கோரப்பற்களை காட்டுவதை கண்டு பலமுறை அதிர்ச்சியடைந்திருக்கிறேன் . பீப் பிரியாணி கதை இந்த அக உலகை துல்லியமாக சித்தரிக்கிறது.

கவிதை மற்றும் நாவல் களங்களில் அதிகம் செயல்படும் அளவிற்கு பெண் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதைகளில் புழங்கி வருகின்றனர்  .அதிலும் பெண்களின் வலிகளை அரசியலை பேசும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் மிகக்குறைவு
.
எழுத்துத் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஓய்வில்லாமல் இயங்கி வருவதுடன்  எண்ணிகை அளவில் தரமான பல நல்ல கதைகள் எழுதியவர் என பார்த்தால் சூடாமணி அம்பைக்கு பிறகு தமயந்தி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்.
இது வரை எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த +கதைகள்  மொத்த தொகுப்பாக தமயந்தி கொண்டு வரவேண்டும் .

இதை நூலாக்கம் செய்வதில் முனைப்பு காட்டி பதிப்பித்து தரும் தமிழின் ஆகச் சிறந்த கவிஞராக அறியப்படும் கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கும் . தற்காலத்தில் நல்ல சிறுக்தையெழுத்தாளனாக வளர்ந்து வரும் அன்பு தம்பி அகரமுதல்வனுக்கும் என் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்  
                                                      அஜயன் பாலா
04/02/2017


February 15, 2017

செம்மொழி சிற்பிகள் -எல்லீஸ்

எல்லீஸ் 


பிறப்பு: 1796

திருக்குறளுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியவர்.  வெளிநாட்டவர். கால்டுவெல் பாதிரிக்கு முன்பாக திராவிடமொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்பது குறித்து ஆய்வு குறிப்புகளை தந்துள்ளவர்.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்


இங்கிலாந்து நாட்டைசேர்ந்த எல்லீஸ் அவர்கள் சென்னை நிலவரி வாரியத்தின் செயலராக பணிபுரிய சென்னை வந்தவர் எட்டு ஆண்டுகள் அவர் அக்காரியத்தில் சிறப்பினை அடைந்தபைன் சென்னைகலக்டாராக பத்வி உயர்த்தப்பட்டு பத்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இக்காலங்களில் தமிழ் மொழியின் செம்மை அவரைகவர்ந்த காரணத்தால் சாமிநாதபிள்ளை, இராமச்சந்திர கவிராயர் ஆகியோரிடம் ஏட்டு சுவடிகளில் தமிழினை கற்றார். தொடர்ந்து அவருக்குள் ஊறிய ஆர்வம் காரணமாக  பழந்தமிழ் இலக்கண நூல்களையும் இலக்கியங்களையும் தேடிப்பிடித்து கற்க துவங்கினார். தொடர்ந்து தன்னைப்போல வெளிநாட்டவர் பலரும்  தமிழ் கற்கவேண்டும் என அவாவுற்று அதற்கான கல்விச் சங்கம் ஒன்றை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டார். தனக்கு முன் இப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டவரான வீராமாமுனிவரது தமிழ்ப்பற்றையும் தமிழ்பணிகளை பற்றியும்ம் கேள்வியுற்று அவர்மேல் பெரும் அனபுகொண்டார்.அவரது வாழ்க்கை வரலாற்ரை எழுத வந்த முத்துசாமி பிள்ளைக்கு வேண்டிய உதவிகள் செய்து ஊக்குவித்தார் 

திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களுக்கு பண்டைத்தமிழ் நூல்களை மேற்கோள்காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்றை எழுதியுள்ளார். மட்டுமல்லாமல் அவ்வுரைகளுக்கு பழந்தமிழ் இல்லக்கியத்திலிருந்தே அவர் மேற்கோள்காட்டியிருந்தவிதம் இவரது தமிழ்பற்றுக்கு சான்றாக விளங்குகிறது . தமிழை பாடமாக கல்லூரிகளில் வைக்கவேண்டும் என ஆட்சியாளர்களிடம் போராடினார். 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.இவர் தமிழ்செய்யுளும் இயற்றியுள்ளார்.அவற்றுள் நமச்சிவாயபாட்டு ஒன்றே நமக்கு கிடைத்துள்ளது.

பின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பற்றி கேள்விப்பட்டு
அந்நகரைக்காணசென்றார். தமிழுக்கு தொண்டுசெய்ட்ய்ஹ அவ்வீதிகளை நெஞ்சுருக வலம் வந்தார். பின் இராமாநாதபுரம் எனும் மூதூரைகாணசென்றார். அங்கு தாயுமானவர் சாமாதியில் கண்ணீர்மலகிநின்றார். அன்று நண்பகலில் தன் இருப்பிடம் வந்த அவர் உணவில் இருந்த நஞ்சுகாரணமாக மருத்துவர் அருகிலில்லாமல் துடித்து இறந்தார்.

சென்னையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏலமிடப்பட்டன. அனைத்து பொருட்களையும் வாங்க் ஆள்வந்த்னர். ஆனால் அவர் எழுதிய தமிழ் செய்யுள்கள் மற்றும் குறிப்புகளை வாங்க எவரும் வரவில்லை. நெடுநாட்கள் அவைகுப்பையாக அங்கேயே ஒருமூலையில் கிடந்ததாக பிற்பாடு தெரியவந்துள்ளன
                                                                   மறைவு: 1879




.

முன்னுரை எனும்போதும் உனக்கு நன்றி விஷால் ராஜா சிறுகதைகள்

எனும்போதும்  உனக்கு நன்றி  விஷால் ராஜா சிறுகதைகள் 

இலக்கியம் என்பது கதையல்ல , மொழி மட்டுமே கூட அல்ல . மொழியின் துணையோடு காலத்தின் தேடல் மற்றும் பதிவு.  . காலத்தின் பிரதிநிதிகளாக மொழிக்கு  ஒரு சிறுகதையாளன் தேவைப்படுகிறான்  அதற்கு ஒப்புக்கொடுப்பவனே இலக்கியவாதியாக அறியப்படுவான். விஷால் ராஜாவின் கதைகள் சிறுகதை எனும் எல்லையை கடந்தவை. வாழ்க்கையின் வினோதங்களும் புதிர்களும் அவரது கதைகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன. அதிகாரத்தால் நசுக்குண்ட இதயம் அவருடையது. இந்த இதயம் பிரபஞ்சம் எனும் கூண்டுக்குள் சிக்கி தப்பிக்க அங்குமிங்கும் வழி தேடி கதைகள் முழுக்க அலைகிறது.   நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க காதலிடமும் காதலிடமிருந்து தப்பிக்க நெருக்கடிகளிடமும் சிக்கிக்கொள்வதால் இந்த கதைகளின் வழியாக அவர் கரையேறிக்கொள்கிறார்.
2010 க்கு பிறகு சிறுகதை எழுத வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முதல் ஐந்துக்குள் வந்து விடக்கூடிய தகுதி வாய்ந்த  தொகுப்பு இது .
விஷால் ராஜாவுக்கு கச்சிதமான மொழி கைகொடுக்கிறது அவரது நுண்ணிய மனம் கதையின் சட்டகத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. இப்படியான தருணங்களின் மூலம் இக்கதைகள் படைப்பிலக்கியமாக எந்த பரிந்துரையும் அவசியப்படாமல்  அதுவாகவே தன் பீடத்தில் அமரவும் செய்கிறது.
இச் சிறுகதைகளை புத்தகமாக்க முயற்சி எடுத்து வரும் கார்த்திக் புகழேந்திக்கும் அவரது பதிப்பகத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

அஜயன் பாலா,

ajayanbala@gmail.com

February 11, 2017

ஆர்.கே.சண்முகம் செட்டியார் செம்மொழி சிற்பிகள்

ஆர்.கே.சண்முகம் செட்டியார்
செம்மொழி சிற்பிகள்


பிறப்பு: 17-10-1892

தமிழிசை வளர்த்த செம்மல் என அறிஞர்களால் பாரட்டப்படுபவர். தமிழிசைக்காக முதன் முதலில் சங்கம் தோற்றுவித்தவரும் இவரே.அரசாங்கம் தமிழில் நடக்கவேண்டும் , சட்டசபையில் நாம் தமிழில் பேசவேண்டும்,பொருளாதாரத்தை தமிழில் ஆராயவேண்டும், விஞ்ஞானத்தை தமிழில் கற்கவேண்டும்  என வாழ்நாள் இறுதிவரை தமிழுக்காக குரல் கொடுத்தவர்.

இராமசாமி கந்தசாமி சண்முகம் செட்டியார்.

கோயம்பத்தூரில் பிறந்தவர். தந்தை கந்தசாமிசெட்டியார். தாயார் ரெங்கம்மாள் . கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்விகற்ற சண்முகம் அவர்கள் பின் சென்னை கிருத்துவக்கல்லூரியில் பட்டபடிப்புடன்  சட்டமும் பயின்றார். வழக்கறிஞராக சிலகாலம் பயிற்சி எடுத்துக்கொண்ட சண்முகம் அவர்கல் பின் கோவைக்கு வந்து துணி வியாபாரத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.

கோவை நகராண்மைக் கழக உறுப்பினராக பதவிவகித்த சண்முகம் அவர்கள் பின் நகராண்மை  துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சட்டசபையிலும் போட்டியிட்டு உறுப்பினராக  வென்றார். 1923ல் இந்திய சட்டசபையின் உறுப்பினாராக உயர்நிலை எய்திய சண்முகம் அவர்களின்  பொருளாதார அறிவைக்கண்டு வியந்து  இந்திய அரசு இவரை  பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.. கொச்சி திவானாக சிலகாலம் இவர் பணியமர்த்தப்பட்டபோது இவரது பணியைகண்டு அங்குள்ள ஒரு சாலைக்கு இவரது பெயரையே அம் மக்கள் சூட்டிமகிழ்ந்தனர். பின் ஜவகர்லால் நேரு பிரதமராக பதவியேற்ற போது சண்முகம் அவர்களை நிதிஅமைச்சராக நேரு பதவியேற்க வைத்தார். பிற்பாடு அண்ணாமலை பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி அப்பபதவிக்கு பெருமை  உண்டாக்கினார்.

இவ்வளவு உயர் பதவிகளை அடைந்த சண்முகத்திற்கு தமிழுணர்வை தூண்டியது யார் தெரியுமா? .. ஒரு அந்நியர். ஜி,யூ .போப் அவர்கள்.

 ஒருபயணத்தின்போது போப் அவர்கள் எழுதிய திருவாசக உரையைக்கண்டு வியந்து  கண்ணீருகி சண்முகம் அவர்கள் அதன் பின்னே தமிழின் பால் ஆர்வம் உந்தப்பெற்று ஒரு ஆசிரியர் துணையுடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முழுமையாக  கற்கத் துவங்கினார். சிக நாட்களிலேயே தமிழில் புலமையும் பெற்று சிலப்பதிகாரம் மற்றும் குறிஞ்சிப்பாட்டுஆகியவற்றுக்கு உரை எழுதி பதிப்பித்தார்.

தொடர்ந்து தமிழிசை மேல் ஆர்வம் மேலிட தமிழிசைக்கா சங்கம் ஒன்றையும் துவக்கினார். தமிழின் பண் குறித்து ஆய்வை மேற்கொண்டு அதற்காக தனிப்பட்ட குழு ஒன்றையும் உருவாக்கினார்.

                                                       மறைவு: 5-5-1953






புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...