May 6, 2017

அணில் அகன்ற முன்றில் - மா அரங்கநாதன் அஞ்சலி :



                                      -அஜயன் பாலா
1
எனது துவக்க கால சென்னை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை மா. அரங்கநாதன் அவர்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க தனித்துவமான சிறுகதை எழுத்தாளர் .தமிழர் மரபு தொன்மம் பண்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்தவர். அவர் நடத்தி வந்த முன்றில் சிறு பத்ரிக்கை நவீன இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பு.
அவரது மறைவு செய்தி முகநூல் வழியாக அறிய வந்தபோது ரயிலில் மகராஷ்ட்டிரா மாநிலத்தின்   சோலப்பூரை கடந்துகொண்டிருந்தேன்.  கல்லூரி வாழ்க்கை முடிந்து வாழ்க்கை குறித்த மிகபெரிய கேள்வியுடன் நகரம் எனும் பிரம்மாண்டத்தின் முன் பலஹீனமாய் நான் நின்றுகொண்டிருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவர் மா. அரங்கநாதன்  சென்னையில் வாழ்க்கையை துவக்கிய முதல் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட  தினமும் மாலை பொழுதுகளில் அவரை சந்தித்து கவிதை இலக்கியம் சினிமா என பலவற்றையும் குறித்து உரையாடி வளர்ந்திருக்கிறேன் .அவர் அப்போதுதான் தன் மாநகராட்சி பணியிலிருந்து ஓய்வு பெற்று முழு இலக்கியவாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தார். நானோ அப்போதுதான் வாழ்வின் துவக்க காலத்திலிருந்தேன்..தலையின் நரை போல பழுத்த அனுபவம் அவரிடமிருந்தது . எங்களது உரையாடல் வழி அந்த அனுபவத்தை நான் சிறுவனாக அவரிடமிருந்து திருடிக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனக்குமான உறவின் ஆரம்ப புள்ளியை தேடி  கடந்த காலங்களில்  மனம் பயணிக்க துவங்கியது. .


2
அப்போது நான் செங்கல்பட்டில் வசித்துக்கொண்டிருந்தேன். என் திருக்கழுக்குன்றம் இலக்கிய நண்பர்கள் மூலமாக தீவிர வாசிப்புக்கு தயாராகியிருந்தேன். என் அறிவுப்புலம் முழுக்க பட்டாம்பூச்சிகள் லட்சகணக்கில் சிறகடித்துக்கொண்டிருந்த காலம்.   .சாலையில் நடக்கும் போது எதிர்படும் மனிதர்கள் அனைவரையும் விட  ஒருபடி உயர்ந்தவனாக ஒரு கர்வம் . அவர்களுக்கு தெரியாத நகுலன் புதுமைப்பித்தன் தி,ஜானகிராமன்  அவர்களுக்கு தெரியாத ஜே ஜே . ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனக்குத்தெரியும்  என்பது போன்ற கர்வம். அப்படியான காலத்தில்தான்  .தேரோடும் வீதி படித்துவிட்டு திருவனந்தபுரம் போய் நீல பத்மனாபனை அவரது மின் வாரிய அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் . .உரையாடலின் நடுவே  முன்றில் எனும் பத்ரிக்கையை காட்டி  மா. அரங்கநாதன் பேரை முதன் முதலாக சொல்லி சென்னையிலிருந்து வருகிறது என்று கூறி அதன் ஒரு பிரதியையும் கையில் கொடுத்தார் .பக்கம் தானே  முடிந்தால் அவரை சந்தியுங்கள் என்றும் அறிவுறுத்தினார். சிவப்பு நிற அட்டையில் கோணல் மாணலாக முன்றில் என வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது.
3
இரண்டு மாதம் கழித்து எதேச்சையாக எங்கள் குடியிருப்பின் வளாகத்தில் எங்கள் வீட்டின் எதிர்வீட்டுக்கு  புதிதாக குடிவந்த ஒரு இளைஞன் அதே சிவப்பு நிற அட்டையுடனான முன்றில்  சிறு பத்ரிக்கையை வைத்துக்கொண்டு வாசிக்க எனக்கோ அதிர்ச்சி ,அவசரமாக நான் வீட்டினுள் சென்று நீல பத்மநாபன் கொடுத்த முன்றீலைத் தேடினேன். என் பிரதி வீட்டில் இருந்தது. அதுவரை இந்த செங்கல்பட்டிலேயே நாம் ஒருவர்தான் அறிவாளி என்ற  மிதப்பில் இருந்த என் நிலைப்பில்  முதன்முறையாய் மண். எத்தனையோ தெருக்கள்  எத்த்னையோ வீடுகள் கொண்ட செங்கல்பட்டில்  சரியாக என் காம்பவுண்டுக்குள் என் வீட்டின் எதிரேயே ஒரு அறிவுஜீவியா. என்னால் இந்த அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.  நானும் அவனுக்கு போட்டியாக கையிலிருந்த முன்றில் புத்த்கத்தை எடுத்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன்.  கையோடு அவன் இந்த முன்றிலை பார்த்து அதிர்ச்சியடைய போகும் கணத்தை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்த்படி . ஆனால் அவன் அதை பார்த்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றதும் எனக்கு இன்னொரு அதிர்ச்சி .
பிற்பாடு அடுத்த சில நாட்களீல், பேசி பழக ஆரம்பித்தபிறகு  பேர் வாசு என்றார். அந்த பெயர பிற்பாடு அகநாழிகை  பொன் வாசுதேவன் என்றானது அப்போது அவன் சென்னையில் படித்துக்கொண்டிருந்த காரணத்தால் இலக்கிய உல்கம் அவனுக்கு பரிச்சயம்  அடிக்கடி தான் பார்த்த எழுத்த்காளர்களை பற்றி சொல்வான். ஒருநாள் அவந்தான் முன்றில் சிறுபத்ரிக்கை மூன்று நாள் இலக்கிய கருத்தரங்கு நடத்த போகிறார்கள் அங்கு சென்றால் பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசலாம் எனக்கூறினான். மூன்று நாள் சென்னையில் போய்வர செலவாகுமே என யோசித்த போது அதில் வாலண்டியராக பணிசெய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருகிறார்கள் .அவர்களுக்கான கூட்டம் மாம்பலத்தில் நடக்கிறது. வா இருவரும் அதில் சேர்ந்துவிட்டால் மூன்றுநாளும் அங்கேயே அவர்களுடன் தங்கிக்கொள்ளல்லாம், என்றான் .
4,
பத்து பேர் வந்த கூட்டத்தை அரங்கநாதன் மகன் மகாதேவன்( இப்போது நீதியரசராக பொறுப்பிலிருப்பவர். ) உடன் ராம்ஜி என்ற நண்பர் ( இப்போது என்ன செய்கிறார் என தெரியவில்லை . தீவிரமான இலக்கிய ஆர்வலர் கவிதை எழுதுபுவர்) இருவரும் நிகழ்ச்சி  நடக்கும்போது வாலண்டியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என பேசினர். ஏறக்குறைய தமிழின் முக்கிய எழுத்த்காளர்கள அனைவருமே பங்கேற்கபோகும் செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஒரு வித சாகச உணர்வையும் கொடுத்து. நிகழ்ச்சியின் போது  தேநீர் உபசரிக்கும் பணி எனக்கு வழங்கப் ப்ட்டது. கூடுதலாக எழுத்தாளர்களை விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் காதி பவனுக்கு ஆட்டோவில் அழைத்து வரும் பணியும் இரவில் எழுத்தாளர்கள் தங்கியிருக்கும் ஐகஃப் விடுதியில் அவர்களுக்கான உணவு இத்யாதிகளை கவனிக்கும் உப பொறுப்பும்
முன்றில் முகாமில் எழுத்தாளர்களை நேரில் சந்தித்தும் அவர்களுக்கு தேநீர்  உபசாரனை செய்ததிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி  பிற்கால வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான பலர் எனக்கு அங்குதான் அறிமுகமானார்கள் அதுவரை எழுத்தாளர்கள் என்றாலே கடவுளுக்கு அடுத்த நிலையில் அவர்களை உயர்த்தி வைத்திருந்த என் பிம்பங்களூம் அங்கு சரிந்து நொறுங்கின. அனைவரும் எல்லா உணர்ச்சிகலுக்கும் கட்டுப்பட்ட சாதாரண மனிதர்கள் தான். என்பதையும் உணர்ந்துகொண்டேன்
முகாம் வாசலில் ஒருமுறை சைக்கிளில் வெள்ளை வேட்டி சட்டை சகிதம் நின்றுகொண்டிருந்தவரை காட்டி யாரோ இவர்தான் மா அரங்கநாதன்  என்றார்கள் . அவ்வளவுதான்.
5
அதன். பிறகு அடுதத மாதமே சென்னைக்கு அதிலும் அரங்கநாதன் குடியிருந்த பழவந்தாங்கலில்  அதே கல்லூரி வீதியில் அறைவாசியாகும் சந்தர்ப்பத்தை  காலம் எனக்கு நல்கியது ஒரு ஆச்சரயமான ஜியோமிதி தான்.  சென்னை  மீனம்பாக்கம் எதிரே  டிசி எம் டயோட்டா கமபெனியில்  சேல்ஸ்மேன் வேலை. அநத வேலையில் சக பணியாளனான பாஸ்கர்தான் தன் அறையில் தங்கிக்கொள்ள அழைப்புவிடுக்க  அப்படியாகத்தான் பழவந்தாங்கல் வாழ்க்கை எனக்கு சித்தித்தது.   ஒரு ஞாயிற்று கிழ்மை அரங்கநாதனை வீட்டில் சந்திக்க போகலாம் என திட்டமிட்டிருந்த போதுதான் வாசு முன்றில் புத்தகக் கடை தி நகரில் ரங்கநாதன் தெருவில் சாந்தி கம்ப்ளக்சில் துவக்கியிருக்கிறார்கள்  நேரடியாக அங்கு போகலாம் என்றாதோடு கையோடு கூட்டிசென்றன்.
இப்படியாக ரங்கநாதன் தெருவில் ஒரு மா அரங்கநாதனை அக நாழிகை வாசுதேவன்  மூலம் ஒரு பகல் பொழுதில் சந்தித்தேன்
கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது அரங்கநாதனுக்கு  நான் நீல பத்மனாபனை சென்று சந்தித்தது குறித்து ஆச்சர்யம் மகிழ்ச்சி அப்படியா பரவாயில்லையே தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே என தட்டிக்கொடுத்தார்.   அதன்பிறகு  நேரம் கிடைக்கு  போதெல்லாம் சென்று சந்திப்பேன். வெகு சுலபமாக ஓரிரு சந்திப்புகளில் நெருங்கிவிட்டோம் . இலக்கியத்தின் மீதான எனது ஆர்வம் தொடர்ந்து அவரை நோக்கி  பல கேள்விகளை கேட்க வைக்க அதுபோல அவரும் சளைக்காமல்  பதில் சொல் வார். அப்படி சொல்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம்
வயது வித்யாசம் இல்லாமல் சிகரட் பிடிக்க சொல்வார் .அப்போது அவர் சார்மினார் சிக்ரட் பிடிப்பார் . செயின் ஸ்மொக்கர் போல பிடித்துக்கொண்டிருந்தார். 50 வயதுக்கு பிறகுதான் சிகரட் பிடிக்கும் பழக்கம் தொற்றியது ஆனால் விட முடியவில்லை என்பார்
சிகரட் பிடிக்க வாகாக கடைக்கு வெளியில் வந்தால் குட்டி மொட்டை மாடி அதன் சுவர் பக்கம் வந்து . அங்கிருந்து கீழே பார்த்தால் ரங்கநாதன் தெருவின் ஜனத்திரள் அடர்த்தியாக தெரியும் . ஒரு பக்கம் கடைக்கு ஆளே வராத முன்றில் புத்தகக் கடை  இன்னொருபக்கம் தமிழ் நாட்டின் மிக முக்கிய வணீக மையமும் அதிகமாய் மக்கள் கடக்கும் வீதி .  .  இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களும்  பார்வைக்கு எதிரேயே வைத்து பார்த்துக்கொண்டு சிகர்ட் பிடிப்பது  அப்போது எனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான  சுவாரசியமான பொழுது போக்கு .
ஒரு முறை என் கையில் ஒரு கட்டுரையில்  சிறந்த ஆங்கில நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றை வைத்து இனி அவ்வளவுதான் இதை மட்டும்தான் தேடி படிக்க போகிறேன் எனக்கூற அவர் அதை கண்டித்தார். அது குறுக்கு வழி குறுக்கு வழியில போறவன் ஒருநாளும் உருப்பட்டதா சரித்திரமில்ல என கிண்டலாக கண்டித்தோடு வாசிப்பு என்பது ஏற்கனவே ஒருவனுடைய ரசனை தொடர்ந்து செல்வது அல்ல உன் அனுபவத்தின் வழியாக நீயாக தேடி கண்டடைவதுதான். அதுதான் உன் உடம்பில் உப்பாக கலக்கும் என அறிவுறுத்தினார்.  மேலும் நாவல்களை போலவே நான் பிக்‌ஷன் படி அதுதான் உனக்கு பல விஷய்ங்களை கற்றுதரும் என அறிவுறுத்தினார்.
அன்றே வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த பட்டியலை நான் கிழித்து குப்பையில் போட்டேன். பிற்பாடு என் தேடலில் நான் கண்டடைந்தது பிரபலமாகத புத்தகங்கள். அப்படியாகத்தான் ரோமன் எனும் பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலை கன்னிமாராவில் கண்டெடுத்தேன் பிற்பாடு நான்  விகடனில் நாயகன் தொடர் எழுத அந்த பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றில் கற்ற எழுத்து சார்ந்த தொழில் நுட்பங்களே வெகு ஜன வாசகர்களிடம் கொண்டு செல்ல பெரிதும் உதவின. தி நகர்  .  எலூர் லெண்டிங் லைப்ரரியில் மால்கம் எக்ஸ் பயோகிராபி ,  சாப்ளின் ஆட்டொ  பயோகிராபி ,  வான்காவின் வாழ்க்கை வரலாறான லஸ்ட் பார் லைஃப் என  பெரும்பாலான நான் பிக்‌ஷன் நூல்களை தேடி பிடித்து படிக்க துவங்கினேன் இவை யனைத்துமே இன்று என் வாழ்க்கையின் உயரத்திற்கு வழி வகுத்துள்ளன பிற்பாடு  சாப்ளின்  வான்கா பற்றி எழுத  இவையே எனக்கு உந்து சக்தியாக அமைந்தன..

6
பிற்பாடு தளபதி போலீஸ் செய்தி என வெவ்வேறு பத்ரிக்கைகளில் வேலை மாறிய போதும்என்  தினசரி மாலைப்பொழுதுபோக்கு  முன்றில் புத்தகடையாகதான் இருந்தது.  தினசரி கடை முடிந்தவுடன் அவரும் நானும் வெளியே வந்து மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி பழவந்தாங்களில் இறங்கி வீட்டிற்கு நடந்து ஒரு புள்ளியில் நான் என் வீட்டிற்கு பிரிந்து செல்வேன்.வழி முழுக்கவும் பேசிக்கொண்டே செல்வோம்
சிறிது நாட்களீல் அதே சாந்தி காம்ப்ளக்ஸ் மூன்றாவது  தளத்தில் முன்றில் கடை எதிரேயே கோபிகிருஷ்ணன் , சஃபி, லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடத்திய ஆத்மன் மன நல ஆலோசனை மையம் ஒன்றும் துவக்க் ப்பட்டது.. தினசரி பத்து எழுத்தாளராவ்து அங்கு பார்க்க முடியும். கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா, நாகார்ஜுனன், பன்னீர்செல்வம் ,சி.மோகன் ருத்ரன் ஆகியோருடன் பல ஆரம்ப எழுத்தாளர்களும் அங்கு மாலை , கூட ஆரம்பித்தனர் .ஒரு நாள் தாடி வைத்த இளைஞரை அரங்கநாதன் அறிமுகம் செய்தார் அவர்தான் யூமாவாசுகி. இவரும் நம்ம ஊர் பழவந்தாங்கல்தான் அறை எடுத்திருக்கிறார் என்றார். அப்போது அவரது முதல் கவிதை தொகுப்பு வெளியாகி அதன் முன்னுரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அங்கு தினசரி வருபவர்களில் கோணங்கி மிகவும் பிடித்துபோனார் .ஒருநாள் கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் இருவரும் முன்றில் கடையில் சந்தித்து அப்படியே என்னுடன் பழவந்தாங்கல் வந்து என் அறையில் வந்து தங்கினர். நான் எழுதிவைத்த கதைகளை எல்லாம் படித்துவிட்டு உற்சாகப்படுத்தினர். பின் அப்படியே யூமாவசுகி அறைக்கு போய் பேசிக்கொண்டிருந்தோம்.  பின் அங்கிருந்து மா அரங்கநாதன்  வீட்டிற்கு போய் அவரது வீட்டின் மொட்டை மாடியில் இலக்கியவாதிகளுகென ஒதுககப்ப்ட்ட பிரத்யோக அறையில் இரவு தங்கினோம்
அந்த் அறை அரங்கநாதன் மகன் மகாதேவன் அலுவலகமாகவும் இலக்கியவதிகளுக்கன தங்கும் விடுதியாகவும் இருந்தது. அங்கு தங்கி தான் என் வாழ்வின் முதல் கட்டுரை எழுதினேன் . இலக்கியச்சிந்த்னை மாதாந்திர கதை தேர்வு செய்யும் பணீயை மேற்கொண்டிருந்த நான் அஅந்த் அறையிலேயே கொடுக்கப்ட்ட அந்த மாத இழகள் அனைத்தையும் படித்து சிறந்த ஏஸ் சங்கரநாராயணனின் கவாஸ்கர் கதையை தேர்வு செய்து ஏன் அதை தேர்வு செய்தேன் என கட்டுரையும் ஆந்த அறையில் எழுதினேன் . ஒரு எழுத்தாளனை பிரசவித்த் அறை அது. பிற்பாடு யூமா அங்கு சிலகாலம் தங்கியிருந்தார்.


7
அரங்கநாதனின் விசேஷ குணம் அவரது மௌனம்
அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென மௌனமாகி சிறிது நேரம்  அண்ணாந்து பார்ப்பார்.  உண்மையிலேயே மவுனமா இல்லை நடிக்கிறாரா என்று கூட எண்ணத்தோன்றும்  அப்படி ஒரு பாவம் அது . அந்த மவுனம் கலைய குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும் . அந்த இரண்டு நிமிடத்திய நிச்சலனம் நமக்குள் ஊடுருவி பெரும் அனுபவத்துள் ஆழ்த்திவிடும்.
 தன் சிற்றிதழுக்கு முன்றில் எனும் பெயர் காரணம் குறித்து கேட்கும் போது

காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே
என்ற குறுந்தொகை பாடலைகூறி   அதில் வரும் அணீலாடும் முன்றில் என்பது அக்காலத்து  தமிழ்ர்வீட்டின் முற்றம் .  சதுர வடிவில் ஒரு வெளி அந்த வெளியில் முன்றில் வந்து ஆடுவதில் இடையீடாக உண்டாக்கும் அமைதியையும் அகாயவெளியில் அது உண்டாக்கும் காட்சியினூடான  ஒரு மாயத்தோற்றத்தையும் விளக்கி ஒரு கணம் அந்த பேரனுபவத்துள் நம்மை அழைத்துசென்றுவிடுவார் .
அவரது எல்லா சிறுகதைகளிலும் இந்த மவுனத்தின் வழியான ஒரு வெளியை உணர முடியும். இதை அவர் அமைதி என குறிப்பிடுவார் . கதையின் முடிவில் ஒரு அமைதி வேண்டும் எதையும் சொல்லக்கூடாது ., வாசக்னாக அதை உள் வாங்க இடம் கொடுக்க வேண்டும் என்பார்
அரங்கநாதனுக்கு சிறுகதையில் போர்ஹே பிடிக்கும் அடிக்கடி போர்ஹேவின் கதை ஏதாவது ஒன்றை கூறுவார் . அதிகமாக எழுத தேவையில்லை குறைவாக எழுதினாலே போதுமானது என்பார். எப்பேர்பட்ட எழுத்தாளனையும் அவன் இவன் என தான் செல்லமாக கூப்பிடுவார் உனக்கு ஜே ,டி. சாலிங்க்ரை தெரியுமா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கான்  உலகமே அவனை சாகறவரை கொண்டாடுச்சி என்பார் .
நான் அவரோடு பழகிய நாட்களில் அவரது பஃறுளியாற்று மாந்தர்கள் நாவல் எழுதியிருந்தார். நாவலின் அச்சு பிரதியை என்னிடம் படிக்க தந்தார். படித்துவிட்டு சில திருத்தங்களை சொன்ன போது . இன்னும் நீ ஒழுங்கா படிக்கவே ஆரம்பிக்கல உங்கிட்ட கொடுத்தம்பாரு என திட்டினார்
என்னை பலர் முன்னிலையில் உரிமையுடன் கிண்டலடிப்பார் அந்த நாட்களில் ரயில் மற்றும் பேருந்து பயணக்களில் படிக்க வசதியாக இருக்கும்படி  எப்போதும் என் கையில் ஏதாவது ஒரு புத்த்கம் இருக்கும்  பெரும்பாலும் அது ஆங்கில புத்த்கங்களாகத்தான் இருக்கும் . முன்றில் கடைக்குள் நான் உள்ளே நுழையும் போது யாராவது  அருகே அமர்ந்திருந்தால்  என்னை காண்பித்து பாத்தீங்களா சரியா போச்சா என சொல்லி அந்த நண்பருடன் சிரிப்பார் . பிறகுதான் அவர் அவர்களிடம் என்னை பற்றி கூறி போட்ருக்க ட்ரஸுக்கு மேச்சா புக் ஒன்னூ கையில வச்சிகிட்டு வருவான் பாருங்க என கூறியிருப்பார். நானும் கையில் புத்தகத்துடன் நுழைய அவரிடம் காட்டி சிரிப்பார். சொன்னா மாதிரியே வந்துட்டான் பாருங்க என கூறி மகிழ்வார். அவர் என்மீது எடுத்துக்கொண்ட அந்த உரிமை பிடித்திருந்தது.
சினிமா பாரடைஸோ வில் வரும்  ஆப்ரெட்டருக்கும் சிறுவனுக்குமான உறவைப்போன்றது அது .நானும்விடாமல் அவரை வெறுபேற்றும் விதமாக கேள்விகள் கேட்பேன்.
மா அரங்கநாதனோடு தனிப்பட்ட முறையில் உறையாடிவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நவீன இலக்கியத்தை விடம் தமிழ் பண்பாடு தொன்மம் வரலாறு ஆகியவற்றில் தீவிரமான  ஈடுபாடுகொண்டவர். குமரிக்கண்டம் கபாடபுரம் ஆகிவற்றைகுறித்தும் தமிழர்கள் மூத்தகுடிகள் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையும் தீவிர ஆரய்ச்சிமனமும் இருந்துவந்துள்ளது.
பிறகு நான் திரைப்ப்டத்துறையில் சேர்ந்தபின் அவரை அடிக்கடி  சந்திப்பது குறைந்துவிட்டதென்றாலும் எப்போதாவது சென்று பார்ப்பேன்  ஹாலிவுட் படங்கள் பற்றி சொல்வார்  சென்னையில் முதன் முதலாக வேலைகிடைத்து பேச்சிலராக வந்து தங்க ஆரம்பித்த நாட்களில் தான் ஓடி ஓடிபார்த்த ஹாலிவுட் படங்களையும்  அந்த அனுபவத்தையும் அடிக்கடி கூறுவார். அப்போது வந்த ஹாலிவுட்  சினிமா  பத்ரிக்கைகளை எல்லாம் அவர் சேகரித்து வைத்திருந்தார். ஜேம்ஸ் டீனோட ரிபல் வித் அவுட் காஸ் பாத்ருக்கியா .. மூனே படத்துல சூப்பர்ஸ்டாராகி உச்சத்துல இருக்கும்போதே செத்துபோனான் 
அதே முன்றில் கடையில்தான் எனக்கு பிரமிளும் அறிமுகம் அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்த பிரமிளும் அரங்கநாதனும் சண்டை வந்து இருவரும் கட்டுரைகளில் தாக்கிக்கொண்டது எனக்கு பெரும் அதிர்ச்சி . இருவருக்கிடையிலும் நான் மாட்டிக்கொண்டு  கடைசியில் பிரமிளால் வெறுக்கப்ப்ட்டதை பற்றி பிரமிள் பற்றிய கட்டுரையில் விளக்க்மாக எழுதியிருக்கிறேன்
என் முதல் சிறுகதை தாண்டவராயன் எழுதி முடித்துவிட்டு அவரிடம் கொடுத்தபோது வழக்கமாக கிண்டலடித்து வெறுபேற்றுவார் என நினைத்தேன். ஆனால் அவர் வெகுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு . இந்த கதையை நான் ஒரு முறை எழுதி பாக்கனும்னு தொணுது அதுதான் இந்த கதையோட வெற்றி . தொடர்ந்து எழுது என ஆசீர்வதித்தார். அவரது ஆசி வீண் போகவில்லை அவர் சொன்னது போலவே குறைவான படைபுகளையே  எழுதவே விரும்புகிறேன் 
பிற்பாடு பாண்டிச்சேரியில் அவர் சென்றபின் நானும் வாசுவும் ஒருமுறை நேரில் பார்த்து அக நாழைகைக்காக ஒரு பேட்டி எடுத்தோம் அக நாழிகை வராமல் போனதால் பேட்டியும் அச்சாகவில்லை
அச்சமயத்தில் நான் எழுத்தளனாக் ஒரு அடையாளம் பெற்றிருந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. காணாமபோயிடுவேன்லா நெனச்சிடுந்தேன் பொழைச்சிகிட்டியே என பெருமிததோடு புன்ன்கைத்தார்
ஒரு தந்தையின் புன்னகை அது
மறக்க முடியாத மவுனத்துடன் அந்த புன்னகையும் இன்று சேர்ந்துகொண்டது

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் 

thanks : amrudha  magazine may 2017

May 4, 2017

தி கிட் (1921) சார்லி சாப்ளின் சிறுவர் சினிமா

  குழந்தை கதை கூறல் 2



1
ஒரு அம்மா ஆஸ்பத்திரியிலருந்து கைக்குழந்தையோட வெளிய வர்றாங்க  அவங்களுக்கு எஙக போறதுன்னு தெரியலை. அந்த குழந்தையோட அப்பாவுக்கோ இன்னொரு கலயாணம் ஆயிடுச்சி. இனி இந்த குழந்தைய வெச்சிருந்தா நமக்கு அவமானம்னு அந்த அம்மா நெனக்கிறாங்க. அப்ப வழியில ஒரு ஜீப் நிக்குது.. அது பணக்கார வண்டி அவங்க மனசு கேக்கலை ஆனாலும் வேற வழி தெரியலை .  பணக்கார வீட்டுல வளரட்டும்னு  தன்னோட  குழந்தைய அந்த வண்டி பின்னாடி சீட்டுல போட்டுட்டு திரும்பி பாக்காம  போயிடறாங்க .  
2
ஆனா நடக்கறதோ வேற. அந்த வழியா வர்ற ரெண்டு திருடங்க வண்டி அனாதையா நிக்குறதை பார்த்து வண்டியை திருடிக்கிட்டு  ஓட்டிகிட்டு போறாங்க . அவங்களுக்கு குழந்தை இருக்குறது தெரியலை. . வண்டியை ஓரு இடத்துல நிறுத்தனப்பறம்தான்  குழந்தை அழுவுற  சத்தம் கேக்குது .அப்படியே குழந்தைய எடுத்து ஒரு குப்பை தொட்டியில போட்டுட்டு வண்டியை மட்டும் அம்போன்னு விட்டுட்டு போயிடறாங்க.
3.
.அப்பதான் ஒரு அழுக்கு டிரெஸ்சோட ஒரு கண்னாடி ரிப்பேர் பண்றவர் அங்க வர்றாரு. அவரு வேற யாருமில்லை நம்ம சார்லி சாப்ளின்தான்.அவரே ஒரு அனாதை அவருக்குன்னு யாருமில்லை. அதனால இன்னொரு அனாதையா அந்த குழந்தை மாறிடகூடாதுன்னு அந்த குழந்தைய கையோட எடுத்துக்கிட்டு அவரு வீட்டுக்கு வந்துடறாரு.
 4
சிறு அறை அதில் கொஞ்சம் பொருட்கள் இவ்வளவுதான் சாப்ளின் வீடு  ஆனாலும் குழந்தைய நல்லா வளக்கிறாரு .. நல்லா துறுதுறுன்னு குழந்தை வளறுது. குழந்தைக்கு அஞ்சு வயசாவுது. குழந்தையா இருந்தவன் இப்ப குட்டிபையனாயிட்டான். வெளியில அடிக்கடி அடிதடி தகராறு. யாரையாவது  அடிச்சுட்டு ஒன்னும் தெரியாம வீட்டுக்க்கு வந்து ஒளிஞ்சுக்குவான் .வீட்டுமுன்னாடி அடிவாங்குன பையன் அவங்க அப்பாவோட வந்து நிப்பான்.  அப்புறம் சாப்ளினும் பையனுக்காக அவங்க அப்பா கூட சாப்ளின் சண்டைக்கு போவாரு
5
அந்த குட்டிபயனுக்கு வேலையே காலையில எழுந்ததும் அப்பா கிட்ட இன்னைக்கு எந்த தெருன்னு கேப்பான் . சாப்ளினும் அவனுக்கு ஒரு தெருவை சொல்வார் . அவன் வீட்டை விட்டு வெளிய வந்து அஞ்சாறு கல்லுங்களை கையில எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவான். அப்பா சென்ன தெருவுல எந்த வீட்டுல கண்னாடி பளபளன்னு இருக்குதோ அந்த கண்னாடியை குறிபாத்து கல்லால அடிச்சுட்டு ஓடியாந்துடுவான் ,வீட்டுகாரங்க வெளியில வந்து பாத்துட்டு அய்யய்யோ கண்னாடி போச்சே ன்னு வருத்தப்படுவாங்க .அந்த நேரம் பாத்து சாப்ளின் கண்னாடி ரிப்பேர் காரனா அங்க போவார் . சரியான நேரத்துல வந்தன்னு சொல்லி புது கண்ணாடிய மாட்ட சொல்வாங்க .. இவரும் மாட்டிட்டு காசு வாங்கிட்டு வருவார் . இப்படிதான் தினசரி அவங்க சம்பாதிச்சு பொழுதை ஒட்டினாங்க
6
ஒருநாள் ஒரு போலீசுக்கு இது தெரிஞ்சுது. நம்ம குட்டிபையன் ஒரு வீட்டு கண்ணடியை கல்லால அடிக்கபோறதை பாத்து  கையும் களவுமா புடிக்கிறாரு. ஆனா நம்ம குட்டிபயன்  அவர் கையில மாட்டினாத்தான . ஓரெ ஓட்டமா ஓடியாரான். குட்டிபயனை பிடிக்க போலீசும் துரத்தராரு. ஆனாலும் பையனை பிடிக்க முடியலை.. பையனுக்கு ஒண்ணுன்னா சாப்ளின் துடிச்சிடுவாரு. அவனுக்காக ஒரு ரவுடிக்கிட்ட சண்டைய போடறாரு. அதே மாதிரி சாப்ளினுக்கு உடம்பு சரியில்லன்னா குட்டிபையனே  அவருக்கு ரொட்டியெல்லாம் சுட்டுத் தரான் . வெண்ணி வச்சு குடுக்கறான் இப்படி அந்த குட்டிபையனும் சாப்ளினும் ஒருத்தருக்கொருத்தர் பாசத்தோட மகிழ்ச்சியா சந்தோஷமா வாழறாங்க
7
இதுக்கிடையில அந்த குழந்தையோட  அம்மா இப்ப பெரிய சினிமா நடிகை பணக்கார பொண்னா  ஆயிடறாங்க. ஆனாலும் அவங்களால நிம்மதியா இருக்க முடியலை.  குழந்தைய தேடறாங்க. குழந்தைய  கண்டுபிடிச்சித் தரச் சொல்லி போலீஸ்ல கம்ப்ளைண்ட் தர்றாங்க.குட்டி பையனை போலீஸ் தேடுது .பேப்பர்ல அறிவிப்பு கொடுக்கறாங்ககுட்டிபையனுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாம போயிடறது.வீட்டுக்கு வந்து சிகிச்சை பாக்கற  டாக்டருக்கு குட்டி பையன் சாப்ளினோட பையன் இல்லைன்னு தெரிஞ்சு போலிசுக்கு சொல்லிடறாரு.
இதனால அரசு அதிகாரிங்க சாப்ளீன் வீட்டுக்கு தேடி வர்றாங்க . யார் இந்த பையன் . இவனுக்கு நீ அப்பா இல்லையே. பின்ன எங்கிருந்து திருடுனன்னு மிரட்டறாங்க. குட்டிபையனை கொடு நாங்க கூட்டிட்டு போறோம்னு கேக்கறாங்க. சாப்ளின் அவங்க கூட சண்டை போடறாரு பையனை கொடுக்க மாட்டேங்கிறரு. ஆனா போலீஸ் சாப்ளீன்கிட்ட இருந்து  குழ்ந்தைய பிடுங்கறங்க . பையன் அப்பா அப்பான்னு அழறான். போலீஸ் கிட்டருந்து பையனை காப்பாத்த சாப்ளின் போராடாறாரு .முடியலை. போலீஸ் வேன்ல ஏத்திகிட்டு அவங்க குழந்தையோட போக சாப்ளின் பின்னாலயே துரத்துகிட்டு ஓடுறாரு. லாரியிலருந்து பையன் அப்பா அப்பான்னு கைநீட்டி அழறான்
8
பையனோட அம்மாவான அந்த  நடிகைக்கு போலீஸ் தகவல் சொல்றாங்க  அந்த நடிகையும் ஸ்டேஷனுக்கு வந்து பையனை பாக்குறாங்க. இவந்தன் என் பையன்னு கட்டி புடிச்சு  அழறாங்க . பையனை தன்னோட பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறாங்க. சாப்ளின் திரும்பவும் அனாதை ஆயிடறாரு. வீட்டுல தனியா இருக்குற சாப்ளினை தேடி ஒரு போலீஸ் வேன் வருது. போலீஸ் சாப்ளின்கிட்ட பேசறாங்க. சாப்ளீனை வேன்ல ஏத்தி  ஒரு பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க . அங்க சாப்ளின் கதவை திறந்தா குட்டிபையன் ஓடியாந்து சாப்ளினை கட்டிபுடிச்சுக்கிறான் . சாப்ளினும் அதுக்கப்புறம் அவங்களோடயே நடிகையோட பணக்கார வீட்ல சந்தோஷமா வாழறாரு.

கதை உங்களுக்கு புடிச்சுதா

இன்னொரு கதை அப்புறமா சொல்றேன்   

May 3, 2017

சிறுவர் சினிமா- தி சில்ட்ரன் ஆப் ஹெவன் ..குழந்தைகளுக்கான கதைச்சுருக்கம்




தி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. ஈரான் 
சொர்க்கத்தின் குழந்தைகள் -  
 அஜயன் பாலா 


ஈரானில் ஒரு ஏழைகுடும்பம் அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் . அவன்   பெயர் அலி. ஒருநாள் உருளைகிழங்கு வாங்க மார்க்கட்டுக்கு போகுறான். அப்ப கையோட ரிப்பேர்செய்ய தங்கை சாரா வோட ஷூவையும் கையில எடுத்து போறான். வழியில ஒரு கடையில  இவன் தங்கச்சி ஷூவை ஒரு குப்பை பொறுக்கிறவர் எடுத்துக்கிட்டு போயிடறார். ஆனா இவனுக்கு தெரியாது வெளிய வந்து பாத்தா தங்கச்சி ஷூ காணோம் அப்புறம் அங்க தேடி தேடி பார்க்கிறான் ஷூஇல்லை. அலி பயத்துடன் வீடுதிரும்புறான் இனி இன்னொரு புது ஷூவை வாங்க முடியாது.காரணம் அவங்க குடுக்ம்பம்  அவ்வளவு ஏழை. ஆறுமாசம் வீட்டு வாடகைபணமே பாக்கி. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை.தோட்ட வேலைக்கு போற அப்பாவுக்கு சரியாக வேலையும் கிடைக்கலை. இந்த நேரத்தில்  ஷூவை தொலைத்த கதை வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அதனால் வீட்டுக்குவந்ததும் ரகசியமாக தங்கை சாராவுக்கு மட்டும் விஷயத்தை சொல்கிறான். 


1.
1.











சாரா ஒரு குட்டிபெண். ஆனாலும் அறிவு அதிகம். அண்ணன் தன்னோட ஷூ வை தொலைச்சிட்டது  அவளுக்கு அதிர்ச்சி. அழுகையாக வருகிறது அண்ணனை கோபமாக பார்க்கிறாள். அலி தங்கையிடம் கெஞ்சுவதைபோல பார்க்கிறான். அழறான் .அப்பாவிடம் சொல்லாதே என சைகைசெய்கிறான். சாராவால் அதை  தாங்கிக்கொள்ள முடியவில்லை . ஆனாலும் இதை இப்போது வீட்டில் சொன்னால் அண்ணனுக்கு அடிவிழும்... அதனால் அண்ணனிடம் நான் இனி எப்படி ஸ்கூலுக்கு போவேன் என நோட்டிலேயே எழுதி கேட்கிறாள். அவன் நான் சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறேன் அதுவரை நீ என் ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல். நீ பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போது  வழியில் நான் உன்னிடம் வாங்கிக்கொள்கிறேன்.  என பதிலுக்கு நோட்டில் எழுதி காண்பிக்கிறான். சாராவும் அதற்கு ஒத்துக்கொள்கிறாள் .



ஈரானில் பெண்குழந்தைகளுக்கு காலையிலும் ஆண்குழந்தைகளுக்கு மாலையிலும் வகுப்புகள் நடக்கும் .அதனால காலையில் சாரா அண்ணன் ஷூவை போட்டுக்கொண்டு ஓடுகிறாள். மதியம் அவள் திரும்பும் வழியில் ஒரு கழிவு நீர்சந்தில் புத்தக பையுடன் அலி காத்திருக்கிறான். பள்ளிவிட்டதும் சாரா ஓடிவர அவள் கால்களிடமிருந்து அவசரமாக தன் காலுக்கு ஷூவை மாற்றிக்கொண்டு அலி ஓடுகிறான்.


4.
ஒவ்வொருநாளும் அலி  லேட்டாக பள்ளிக்கு அவசரமாக ஓடிவருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் .அவனை எச்சரிக்கிறார். இப்போது அலிக்கு ப்ரசனை ..தங்கையிடம் பள்ளிவிட்டதும் சீக்கிரம் ஓடிவருமாறு கூறுகிறான். மறுநாள்  சாரா அண்ணனுக்காக  சீக்கிரமாக ஓடிவரும்போது ஷூ தவறி சாலையின்  நடுவில் ஓடும் கால்வாய் நீரில் விழுந்துவிடுகிறது. பதட்டத்துடன்  சாரா  நீரை துரத்தியபடி ஷூவை எடுக்க ஓடுகிறாள்.
இதுக்கு நடுவில  தங்கைக்காக காத்திருக்கும் அலி நேரமாவதால்  தங்கையின் மேல் கோபத்தில் இருக்கிறான். கடைசியில் சாரா போராடி அதனை எடுத்துக்கொண்டு அண்ணனை நோக்கி அவசரமாக ஓடிவருகிறாள். அவளை திட்டியபடி அவசரமாக ஷூவை மாற்றிக்கொண்டு அலி பள்ளிக்கு ஓடுகிறான்.ஆனால் இன்றும் அலி லேட்டாக வருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் இனி உன் அப்பாவை அழைத்துவா அப்போதுதான் மீண்டும் சேர்ப்பேன் என கூறிவிடுகிறார்.ஆனால் அலியின் ஆசிரியர் அவன் நன்றாக படிக்கும் மாணவன் என எடுத்துக்கூறி அவனை காப்பாற்றுகிறார்.


5
என்னதான் லேட்டாக வந்தாலும் அலி தேர்வில் முதன் மதிப்பெண் வாங்குகிறான்.இதனால் அவனுக்கு பேனா பரிசாக கிடைக்க அத்னை தங்கைக்கு பரிசளிக்கிறான். ஒருநாள் சார வகுப்பில் இன்னொரு பெண்காலில் தன் ஷூ இருப்பதை பார்த்துவிடுகிறாள்.பள்ளிவிட்டதும் அண்ணனும் தங்கையும்  அந்த குட்டி பெண்ணை பின் தொடர்து செல்கின்றனர். அப்போது அந்த குட்டிபெண் குடும்பம் தங்களைவிட மிகவும் ஏழை என்பதை அறிகின்றனர். இதனால் அவளிடம் ஷூவை திருப்பிக்கேட்கும் திட்டத்தை கைவிடுகின்றனர்.
6
இதனைடையே ஒருநாள் அலிதந்தையுடன் நகரத்துக்குசெல்கிறான். தோட்டாவெலைகேட்டு அப்பா ஒவ்வொரு வீடாக படியேறுவதை பார்க்கிறான்.பணத்துக்காக அவர் படும் சிரமங்களை உணர்கிறான்.ஷூ ப்ரசனைதீர இனி என்னதான் வழி என அவன் யோசிக்கிறபோதுதான் பள்ளியில் அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வருகிறது .
7
அது அனைத்து பள்ளிகளுக்கான ஓட்டபந்தய  போட்டி..அவனது மகிழ்ச்சிக்கு காரணம் அதில் மூன்றாவது பரிசு ஆம் மூன்றாவதுபரிசாக  ஷூ அறிவிக்கப்பட்டிருக்கிறது அலி மகிழ்ச்சியுடன் போட்டியில் கலந்துகொண்டு அந்த மூன்றாவது பரிசான ஷூவை பெற்று தங்கைக்கு கொடுக்கவேண்டும் என நினைக்கிறான்.. போட்டிகான நாளும் வந்தது.
ஆயிரக்கண்க்கில் மாணவர்கள் அந்த மராத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்கின்றனர்.போட்டி துவங்குகிறது. எப்படியாவது மூன்றாவது பரிசு வாங்கிவிடவேண்டும் என ஓடிய அலி யாரும் எதிர்பாராவிதமாக முதல்மாணவனாக ஓடிவந்து முதல்பரிசை பெறுகிறான். கைதட்டல் ஆராவாரம். கேமாரக்கள் அவனை மொய்க்கின்றன.
8
அனைவரும் அலியை பாராட்டுறாங்க .. நடுவர்கள் அவனை சுற்றி கைகுலுக்க கூடுறாங்க .ஆனால் அலியொ தனக்கு மூணாம பரிசு கிடைக்காமல் போய்விட்டதே ன்னு கவலைப்படுறான் முதல் பரிசு  கோப்பை அவனுக்கு கொடுக்குறாங்க  .அவனை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர் தலைநிமிரசொல்கிறார்  ஆனால் ஷூகிடைகாத சோகத்தில் அலியின் கண்கள் கலங்கி அழறான் .

மறுநாள் அவன் அப்பா இருவருக்கும்  புது ஷூ வாங்கி வருகிறார்.  அலியும்.. சாராவும் மீண்டும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குசெல்கின்றனர்.

நன்றி  தினமணிக்கதிர்




புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...