January 30, 2016

டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் கவிதை தொடர்

1.
செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு
காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.

முந்தின இரவு 
குறி சொல்பவளின் வீட்டில்
அவளது செருப்பு தொலைந்திருந்தது.

வாசலில் இருந்த பாட்டிமார் இருவர்
டிங்கோ ஒரு அப்பாவி
அவன் மேல் வீண் பழி வேணாம்
என புலம்பிக்கொண்டிருந்தனர்

டிங்கோ வின் அம்மா
பல வண்ண காலணிகளை
எங்கள் முன் கடை பரப்பினாள்

பச்சை நீலம் சிவப்பு
மஞ்சள் ஊதா கருப்பு
குதிகால் உயர்ந்தது
பின்பக்கம் வார்வைத்தது
மற்றும்
ஏழை சிறுமிகளின்
தேய்ந்த ரப்பர் செருப்புகள்

அல்லாமல்
முழுதும் செருபுகளால்  நிரம்பிய
அறையொன்றையும்
திறந்து காண்பித்தாள்

டிங்கோவின் தங்கை
மரத்தூணின் மறைவிலிருந்து
எங்களுக்கு குரங்கு காட்டினாள்

பாட்டிகளின் சாபம் பின் தொடர
ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்

தெருவில் டிங்கோ
ஐஸ் க்ரீம்  வண்டிக்கருகே
நின்றுகொண்டிருந்தான்-அவன்
அருகிலிருந்த குருட்டு
பெண்னின் கால்களில்  -என்
காதலியின் செருப்பு

நானும் காதலியும்  
எதுவும் பேசாமல்
அவர்களை
கடந்து வந்தோம்


2,
இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில்  பார்த்தேன்

கைகளில் ஒரு ஜோடி செருப்பு
மிகவும் பதட்டமாக இருந்தான்
தலையில் சீனர்கள் அணியும்
வட்ட குல்லாய் இருந்தது

வண்டியில் நகர்ந்து கொண்டே
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்

டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்

ஒரு சிலை போல 

January 27, 2016

வித்தை - கவிதை




குயவர்கள் மீன் பிடிக்கிறார்கள்
நான் திருட்டு சொக்காயை அணிவதில்
மும்மரமாக இருந்தேன்
குயவர்கள் தேர்க்காலுக்கு சப்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்
நான் குளத்தில் தொப் பெனகுதி
த் துக்கொண்டிருந்தேன்
நம்பிக்கையாளர்கள் அறுவடைக்காலத்தில்
விதைத்துவிட்டு ஆடியை நோக்கி
காத்திருகின்றனர் நானோ
சிவ கார்த்திகேயனை போஸ்டரில்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
தன் சுழற்சியில் எல்லாம் கலைய
தேமே வென விழிக்கிறது
வித்தை

January 20, 2016

எண்பதுகளின் ’நாயகன் ” மணிரத்னம்





ஒரு படத்தில் சிறந்த இயக்கத்தின் கூறுகளை எப்படியாக வரையறுப்பது  என்பது விமர்சன உலகின் சிக்கலான புதிர்?
இந்த குழப்பத்துக்காகத்தான் பல சமயங்களில்  சிறந்த படம் எடுப்பவர்களையே சிறந்த இயக்குனர்களாகவும்  திரைப்பட விழாக்களில் அறிவித்து விருதுகளை தந்து விடுவர்கள்.
உண்மையில் சிறந்த படம் என்பதும் சிறந்த இயக்கம் இரண்டும் வேறு வேறு
அப்படியானால் சிறந்த இயக்குனர் என்பவர் யார் அவரது பணி என்ன ?
இந்த கேள்விகளின் பதிலாகத்தான் பிரான்சில் இயக்குனரின் வேலையை ரியலைசேஷன் , (realization  மிஸான் சேன் (mise en scene )என இரண்டாக பிரித்துக்கொண்டார்கள் .
நடிப்பு  மற்றும் காட்சியமைப்பை உருவாக்குவது  ரியலைசேஷன் பணி . சினிமாவுக்கு உயிர் கொடுப்பவர்கள் இவர்கள்தான். .அதே சமயம்  கதைக்கேற்ற காட்சிமொழியை தீர்மானித்து காமிராவிற்கு முன்பிருக்கும் உடை அரங்கம் ஒளியமைப்பு பொன்ற தொழில் நுட்ப வகைமைகளை ஒருங்கிணைத்து  சினிமா அனுபவமாக  மாற்றுவது மிஸான் சேன் – பணி சுருக்கமாக சொன்னால் சினிமாவுக்கு உருவம் கொடுக்கும் வேலை

உயிர் ப்ளஸ் உருவம் என இந்த இருவேறு திறமைகள் ஒன்றிணைந்ததுதான் சினிமாவில் இயக்குனர் எனும் படைப்பு பணி. பொதுவாக இயக்குனர்கள் தஙகளது இயல்பின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றில் தூக்கலாக பிரகாசிப்பார்கள் .
பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்கள் சினிமாவாக செதுக்கும் மிஸான் சேனில் அபரிதமான வல்லுனர்கள். கதையாடலைக்காட்டிலும் காட்சி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள்
இவர்களில் பாலுமகேந்திரா மகேந்திரன் போன்றோர் சத்யஜித்ராயின் வழியான ஐரோப்பிய காட்சி மொழியின் வகையினர். பாரதிராஜாவின் மொழி மண் வாசனை கொண்ட தனித்துவமானது.  தன்னியல்பானது. பெரும்பாலும் பாத்திரத்தின் மன ஓட்டத்தை அடிப்படையாக கொண்டது. இதனால்  படத்தொகுப்பின் பங்கு அதிக இடம்பிடித்துவிடுகிறது
இவை இரண்டுமற்ற அமெரிக்க மிகை கட்டுமானமும் ஐரோப்பிய கவித்துவ மொழியும் இணைந்த புதிய காட்சி மொழி  மணிரத்னத்தினுடையது.

மற்ற மூன்று இயக்குனர்களும் எதார்த்த சினிமாவின் கூறுகளான்  eye level எனப்படும்  கண்களால் பார்க்கும் அனுபவத்தையொட்டி காமிரா கோணங்களை தீர்மானித்த போது  எதார்த்தத்தை மீறி அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்   விதிகளை உடைத்துக்கொண்ட காமிரா கோணங்கள்  மூலம் தனக்கென புதிய பாணியை வகுத்துக்கொண்டவர் மணிரத்னம். எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிள். எக்ஸ்ட்ரீம் க்ளோசப்புகள், மிகை ஒளியூட்டல், நுணுக்கமான் அரங்க அமைப்பு ,  வெட்டப்பட்ட துண்டு வார்த்தைகளுடான  வசனம்.   கீழ் ஸ்தாயி பாசாங்கான வசன உச்சரிப்பு ஆகியவற்றுடன் கைகோர்த்து தனக்கான புதிய பாணி(STYLE) யை அவர் கண்டெடுத்தார். இந்த தனித்த பாணிதான்  இந்திய அளவில் அவர் மீதான  வசீகரத்தை  கட்டமைத்து தந்தது. .
இந்த பாணியை அவர் உடனே அடைந்துவிடவில்லை  தொடர்ந்து  தீவிர பயிற்சியின் மூலம்   நான்கு படங்களுக்கு பிறகு ஐந்தாவது படமான மவுனராகத்தில் தான் கண்டடைந்தார். அதே போல வணிகரீதியாக வரிசையாக நான்கு தோல்வி பட்ங்களுக்கு பிறகு ஐந்தாவது ஒரே பட வெற்றியின் மூலம் மிகப்பெரிய இயக்குனராக அறியப்பட்டவர் இந்திய சினிமாவில் மணிரத்தினம் ஒருவர்  மட்டுமே
வாழ்க்கையை மிகவும் தூர நின்று வேடிக்கை பார்ப்பவை இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள். அதனாலேயே அவருடைய திரைப்படங்கள் உண்மையை காட்டிலும் அழகை அபரிதமாக கொண்டாடுகின்றன. .அந்த அழகியலும் கூட  இயல்பை புறக்கணித்த அல்லது இயற்கையின் மேல் கற்பனாதிக்கம் செலுத்துக்கூடியவை.. இதனாலேயே காட்சியமைப்பிலும் உரையாடலிலும் பாசாங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய் அதுவே அவரது திரைக்கதை பணியாகவும் பரிணமித்தது. அவரது இந்த மிகை அழகியல் காரணமாக இயல்பாகவே அவரது பாத்திரங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து துண்டுபட்டவர்களாக காணப்படுகின்ற்னர்
நகரம் சார்ந்த அவரது படத்தின் நாயகர்கள் துணிச்சலானவர்கள்... பொது இடத்தில் காதலியை மாட்டவிடும் விதமாக அவளது  அப்பாவை பெயர் சொல்லி கூப்பிட்டு அசத்துவார்கள்., (அக்னி நட்சத்திரம்) பட்டமளிப்பு விழாவில் வயதான் பெண் துணைவேந்தரிடம் கறுப்பு கவுன் அணிந்து கொண்டே  சிகரட் புகையை அவர் முகத்தில் ஊதி ஐ லவ் யூசொல்பவர்கள் (இத்யத்தை திருடாதே) அதே போல நாயகிகளும் வயது வித்தியாசம் இல்லாமல் ஓடிப்போலாமா என பெரிசுகளை கூப்பிடுவார்கள் (இதயத்தை திருடாதே). இப்படி ஒரு நம்ப முடியாத் வாழ்க்கையின் சந்தோஷத்தை சில அதிர்ச்சிகளின் மூலம் திரையில் காண்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவரது படங்களின் இளமை ஒருகையில் வயதானவர்களை கேலி செய்வதாக எண்பதுகளின் படங்களில் இருந்தது . (பிற்பாடு 90 களில் தேச பக்தி அரசியல் படங்களில் அது காணாமால் போனது)  இன்னும் எத்தனை நாளைக்கு ஒழுக்கம் அறம் பற்றியே சினிமாவில் வகுப்பெடுப்பீர்கள் என்ற மறைமுக கேள்வி அவரது படங்கள் அனைத்திலும் காணப்பட்டது. அவரது பாத்திரங்களின் அதீத செயல்பாடுகள் 25 வருடங்களாக இன்றும் கூட  தமிழர்களை ஆச்சர்யபடுத்துகின்ற்ன . ரோஜா படத்தை இன்று பார்க்கும் ஒரு சென்னை யோ யோ பாய்க்கு கூட அம்மாவின்  முன் அனாயசமாக சிகரட் பற்ற வைக்கும் அரவிந்த் சாமி ஆச்சர்யபடுத்துபவராகவே இருப்பார்.
உணரு ,பகல் நிலவு நாய்கன் ஆகிய  திரைப்படங்கள் தவிர அவரது படங்களில் சராசரி மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த்ன . நாயகன் ஒரு திரைப்படம் தவிர விளிம்பு நிலை மனிதர்கள் அவரது படங்களில் அனுமதிக்கப்படவில்லை.  எளிய மனிதர்களுக்கு வசப்படாத ஒரு கனவு வாழ்க்கையை அவர் தன் சினிமாவில் காண்பித்துக்கொண்டிருந்தார். வெறும் நகர மனிதர்களில் அதிலும் 30 சதவித உயர் வகுப்பு மனிதர்களின் வாழ்க்கையை அவர் ஒட்டுமொத்த தமிழ்கத்துக்கும் தன்  படங்களின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது  நாம் கவனிக்க வேண்டியது.
ஆனாலும் தமிழ் மக்கள் அவர் படங்களை மிகவும்  ரசித்தார்கள் கொண்டாடினார்கள் .அவர் காண்பித்த புதுமைகளில்  மயங்கினார்கள்  பாரதிராஜாவுக்கு பிறகு வணிக ரீதியாக அதிகம் பேரால் வியந்தோதப்ப்ட்ட  தமிழ் இயக்குனர் அவர். இந்த முரண் அவருக்கு சாத்தியமானதற்கு காரணம் அவர் தன் படங்களை தன் அறிவிற்கு உண்மையாக அணுகினார் 
அவரிடமிருந்த  வசீகரமான  கதையாடல் கனவுத்தன்மையான் காட்சிகள் ஆகியவை அவரது வெற்றிக்கு பெரிதும் உதவின  அவை உயர்ந்த ரசனையின் வெளிப்படாக இருந்தன. அவருக்கு முன் தமிழ் சினிமாக்களில் நடிகர்களின் முகங்களே பிராதானம் அவர்களின் அசைவுகளே காமிராவின் அசைவுகளை தீர்மானிக்கும் . ஆனால் மணிரத்னம்  நடிகர்களை பார்வையாளனுக்கு  தன் பாத்திரங்களை நேரடியாக பார்க்க அனுமதிக்கவில்லை. மிகை வெளிச்சத்தினூடே அல்லது பாதி வெளிச்சத்தினூடே தன் பாத்திரங்களை  பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தினார்.  அது பார்வையாளனை வசீகரித்தது. பாத்திரங்களை   தாழ்ந்த குரலில் புரிந்தும் புரியாமலுமாக பேச வைத்தார்   பார்வையாளனை அது பரவசப்படுத்தியது  அவருக்கென்ற தனித்த பாணியை முழுமையாக உள்வாங்கி வெளியான ம்வுன்ராகம் தன் அவரது இந்த பாணியின் முதல் படம்
   முந்தைய படங்களில் அவரிடம் நிலக்காட்சி தொடர்பான ஒரு முயற்சி இருந்தது.  வேற்று மொழிகளில் வெளியான அவரது முதல் இரண்டு படங்களான பல்லவி அனு பல்லவி,  உணரு ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால்  அடுத்த இரண்டு தமிழ் படங்களான பகல் நிலவு திரைப்படத்திலும் இதய கோயில் திரைப்படத்திலும் சில பாடல்களில் அவர் பிரம்மாண்ட நிலக்காட்சிகளை உருவாக்க முயன்றிருப்பார் . ஆனால் அப்படங்கள்  பெரிய மரங்களின் இடையே ஓடும் ஆற்றுவெளி நிலப்பரப்புகளையும்   நிழல் கோபுரங்களின் வெளிச்ச வாசல்களையும் காண்பிப்பதை மட்டுமே அவருக்கு அனுமதித்தன இதற்கு காரணம் அதன் மிக சாதாரணமான கதைக்களன்கள்.  ரோமியோ ஜூலியட்டின் கதை வடிவத்தை வேறு மாதிரியாக சொன்ன பகல் நிலவில் சத்யராஜின் வித்யாசமான தோற்றம் தவிர வேறு சொல்லிக்கொள்கிறார் போல் இல்லை ஆனாலும் இந்த படங்களில் தான் இளையாரஜா வின் மிகசிறந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றன. பகல் நிலவின் பூமாலையே , வாராயோ வான் மதி, வைதேகி ராமன் , மற்றும் இதய கோயிலின் அனைத்து பாட்ல்களும் இன்று வரை இளையராஜாவின்  மோஸ்ட் வாண்ட்ட் ஆல்பங்கள்.
இந்த இரு படங்களுக்கு பிறகு எதார்த்த பாணி நிலக்காட்சி அழகியல் தன்னுடையதல்ல என்பதை முழுமையாக உணர்ந்த போது அவரை போன்ற எதார்த்தத்தை வெறுக்கும் பி சி ஸ்ரீராம் எனும் காமிரா கலைஞரும் கைகோர்த்திருந்தார்.
மவுன ராகம் தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களுக்குள் வகைப்படுத்தக்கூடியது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்த மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே விற்கும் மவுன ராகத்திற்கும் நிறைய்ய ஒற்றுமைகள் கதை அமைப்பு  பாத்திர படைப்பு ஆகியவற்றில் காண்ப்பட்டாலும் சினிமாவாக இரண்டும் வெவ்வேறு அற்புதங்கள்
சினிமாவில் பின்புல அரங்க அமைப்பு  தயாரிப்பு வேலைகள் ஒருங்கிணைப்பவரை கலை இயக்குனர் என தமிழ் சினிமாவில் அழைப்பார்கள் . இது நாடகத்திலிருந்து உருவான பதம் . ஆனால் அந்த கலை என்ற வார்த்தை  அதன் அர்த்த்த்தோடு முழுமையாக உயிர்பெற்றது தமிழ் சினிமாவில் மவுனராகம் படத்திலிலிருந்துதான். அதற்கு முன்பு வரை பிரம்மாண்ட செட்டு போடும் கார்பெண்டர் தொழிலாக மட்டுமே இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் தோட்டா தரணியின் மூலமாக மவுனராகத்தில்  உயிர்பெற்று நாயகன் மூலமாக பிரம்மாண்டமாக வலுப்பெற்றது.
தமிழ் சினிமா வரலாற்றில் பதினாறு வயதினிலே  எதார்த்த  சினிமாவின் திருப்புமுனை படம் என்றால் தொழில் நுட்பத்தில் திருப்புமுனை உண்டாக்கிய  படம் மவுன ராகம். பிற்பாடு திரைப்ப்ட கல்லூரி மாண்வர்கள் வெளி வருவத்ற்கும். ஷ்ங்கர் போன்ற தொழில் நுட்ப பிரம்மாண்டங்கள் உருவாகி இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கவும் காரண்மாக் அமைந்த்து.
கலை மட்டுமல்லாமல் உடையும் இப் படத்தில் மிக முக்கிய பங்காற்றியது கார்த்திக்கின் பேகி பேண்டும் மோகனின் சின்ன காலர் சட்டைகளும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம. இவற்றோடு பாத்திரங்களின் முக பாவங்கள் வார்த்தைகள் கடந்த அல்லது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உள்ளுணர்வை நமக்குள் சுலபமாக கட்த்தின (80 துகளின் படங்களில் இது போன்ற உள்ளுணர்வில் அதிர்வை கட்த்தும் க்ளோசப்புகள் அதிகமிருந்த்ன )..
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக  படத்தின் அனைத்து கூறுகளையும் ஒன்றிணைக்கும் இளையராஜாவின் இசை மேற்கத்திய செவ்வியல் இசையின் ஒரு சாதனை என்று கூட சொல்லலாம்
இதனையடுத்து வெளியான நாயகன் மிகபெரிய கமர்ஷியல் வெற்றியை பெறாவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியாக சினிமா துறையில் இந்தியா முழுக்க மிகபெரிய பாதிப்பை உண்டாக்கிய திரைப்படம்  நாயகன் இப்போதும் இந்திய இயக்குனர்களுக்கு கைகள் மீறிய அற்புதம் .  இந்தியாவின் மிகச்சிறந்த பத்து படங்கள என இந்தியாவின் எந்த மொழி இயக்குனர் பட்டியல் போட்டாலும் அதில் தவிர்க்க முடியாமல் இடம்பெறும் படம் நாயகன். துண்டு துண்டான வெவ்வேறு கால இடைவெளியான திரைக்கதை வடிவம் படத்தின்  புதுத்தன்மைக்கு வழி உருவாக்கியது. ஒவ்வொரு கால மாற்றங்களையும்  படைப்பில் துல்லியமாக பிரதிபலிக்க இயக்குனர் எத்தனிக்க முயல அதுவே  படத்துக்கு ஒரு அசாதரணமான  கலைத்தன்மையை உருவாக்கி கொடுத்தது.
ஒவ்வொரு காலமாற்றத்திற்கும் இயக்குனர் மேற்கொண்ட படைப்பூக்கம் நிறைந்த தொழில் நுட்ப கூறுகள் அனைவரையும் வியக்க வைத்த்து
குறிப்பாக் தோட்டாதரணியின் கலை நேர்த்தி தயாரிப்பு வடிவமைப்பு அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது  இவ்வளவு விஸ்தாரனமான முனைப்புடன் கட்டமைவுடன் பின் புலங்களுடன் நாயகனுக்கு முன்பும் சரி பின்பும் சரி இன்னொரு ப்டம் வரவில்லை
இப்படியான நாயகனின்  மிகச்சிறந்த தன்மைக்கு வலுவான காரணங்கள் நான் முன் சொன்ன இயக்குனரின் மிக முக்கிய இருபணிகளான ரியலைசேஷன் மற்றும் மிஸான் சென். இந்த  இருபணிகளும் ஆக சிறப்பாக ஒன்றை ஒன்று இறுக்கமாக கட்டித்தழுவிய நிலையில் உருவாக்கம் பெற்றதுதான் படைப்பாக்க் ரீதியாக மகத்தான வெற்றியை அவருக்கு உருவாக்கி தந்தன.
படத்தின் மிகச்சிறந்த் அம்சம் எது திரைக்கதையா  வசனமா ஒளிப்பதிவா, பட்த்தொகுப்பா இசையா ஒலி அமைப்பா நடிப்பா கலை இயக்கமா உடையா ஒப்ப்னையா எது என அனைவரையும் திண்ற வைக்க கூடிய படைப்பாக அது வெளியாகியிருந்த்து
மேலும் படத்தில் இடம்பெற்ற வலுவான சில காட்சி அமைப்புகள் அசாத்தியமான ஒரு உயரத்தை பார்வையாளனுக்கு உருவாக்கி தந்த்து
முத்லாவதாக கமல் விப்ச்சார விடுதியில் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் கவித்துவமான காட்சி அமைப்பு இரண்டாவது மகள் கார்த்திகா ஜனகராஜை அடிக்கும் போது கமல் தன் வாழ்க்கைக்கான தர்க்கத்தை பேசும் காட்சியில் கமலின் தேர்ந்த உடல் பாவம் வசன உச்சரிப்பு . மூன்றாவது நாசரை தேடி வந்து மகளையும் பேரனையும் பார்த்து கமல் தடுமாறும் காட்சி. நான்கு   பேரன் தாத்தாவிடம் நீங்க நல்லவரா கெட்டவ்ரா என  கேட்கும் திரைக்கதையின் அக விசாரணை . நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்ல என்ற நாயகனின் கருத்தே படத்தின் கருத்தாகிவிடும் நாயக வழிபாட்டிலிருந்து இயக்குனர் விலகி தன் படைப்பு நேர்மையை காப்பாற்றிக்கொள்ளும் இடம் இது
மேற் சொன்ன நான்கு தருணங்களும் இல்லாவிட்டால் இப்படம் காட்பாதர் திரைப்படத்தின்  தழுவல் என சாதரணமாக் புறந்தள்ளிவிட்டு நகரமுடியும் 
ஆனால் மேற் சொன்ன நான்கு காட்சிகளும் திரைக்கதைக்கு ஒரு தகுதியையும் அழகையும் காவியத் தன்மையையும் உருவாக்கி இந்தியாவின் மதிப்பு மிக்க திரைப்படமாக மாற்றிவிடுகின்ற்ன
நாயகனுக்கு பிறகு அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே  ஆகிய இரு படங்கள் அவருக்கென் இளைஞர்களிடம்  உருவாகியிருந்த வணிக சந்தையை விஸ்தரித்துக்கொடுத்தன
அக்னி நட்சத்திரத்திரம் எனும் த்லைப்புகேற்ப கோபக்கார நாயகனை  லோ ஆங்கிளில் தலைக்கு பின்னால் சூரியன் தகிக்க க்ளோசப்பில் காண்பிப்பதில் துவங்கி ப்டம் முழுக்க க்ளொசப்பில் கவித்துவ காட்சிகள் . குறிப்பாக நாயகி நீரோவ்ஷா ஒரு பாட்ல் காட்சியில் கடல் அலைகளின் முன்  கூலிங்கிளாஸ் மற்றும் கன்னத்தில் ஒட்டிய மணல் துகளுடன் புரண்டு படுக்கும் ஹை ஸ்பீட் ஷாட் சினிமா அழகியலுக்கு புதிய விளக்கம் என்றே சொல்லாம் .ராஜா ராஜாதிராஜா பாடலுக்கு   கார்த்தி அண்ட் கோ நடமாடிக்கொண்டே ரயில் பெட்டிகளை தாண்டும் லோ ஆங்கிள் ஷாட்டிற்கு பட்டி தொட்டி தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.  பிரபுவும் கார்த்திக்கும் மோதிக்கொள்ள நெருங்கும் காட்சிகளில் பாத்திரங்களுக்கு ஈடாக  தலைக்கு பின்னால் வெளிச்ச நெருப்பை கொட்டி காமிரா கோணங்களும் பார்வையாளனை  மிகபெரிய அனுபவத்தில் ஆழ்த்தி அதிரவைத்த்ன
பாலு மகேந்திராவுக்கு பிறகு ஒளிப்பதிவுக்காக தமிழர்களை  கைதட்ட வைத்த பெருமை  பி சி ஸ்ரீராம் அவர்களுக்கு இப்பட்த்தில் கிட்டியது.  அதே சம்யம் இதே மிகை வெளிச்சம்  டிப்யூஷன் பில்டரின் அதீத பயன்பாடு  பார்வையாளர்களுக்கு  அடுத்தடுத்த படங்களில் எரிச்சலூட்டியதும் உண்மை. இருட்டில் படமெடுப்ப்வர்   டார்ச் லைட்டை உடன் கொண்டு போ என அனைவரும் சொல்லத்துவங்கியதும் இப்படத்திலிருந்துதான்.
.எரிக் செகலின் லவ் ஸ்டோரி யில் வரும் சாகப்போகும் நாயகியின் சாயலை அதிகம்  கொண்டிருந்த்து இதயத்தை திருடாவில் வரும்  அஞ்சலியின் துரு துரு.  அதே போல ஊட்டியில் ஒரு வீட்டின் கதவை திறந்த்தும் பனி புகை பாம்பை போல ஊடுருவுவது போன்ற விஷூவல் மேஜிக்குகள் பார்வயாளர்களை ரசிக்க வைத்த்ன.
இந்த இரண்டு ப்டங்களும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு  செல்வாக்கை குவித்தது . அக்காலத்தின் இளைஞர்களின் ஐகானாக  மணிரத்னம் அவதார மெடுத்தார்.  வணிக ரீதியாக பெரு மதிப்பீடும் அவருக்கு உருவாகியது மணி ரத்னத்தின் அடுத்தபடம்  என்ன என்பதை அறிந்து கொள்ள தமிழ் நாடே காத்திருந்த்து.
அஞ்சலி  படம் பொறித்த டீஷர்ட்டுகள் அச்சடிப்பதாக இருந்தால் முறையாக அனுமதி வாங்கி பணம் கட்டியபிறகே  பயன்படுத்த முடியும் என அறிவித்தது. ஜி வி. ப்ட  நிறுவனம் .இப்படியாக பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அஞ்சலி ஒரு தோல்விபடமாக அமைந்த போது திரையுலகில் பெரும் மவுனம்
தனிப்பட்ட முறையில் ஒரு   பார்வையாளனாக மணிரத்னத்தின் திரைப்படங்களில் என்னை மிகவும் பாதித்த திரைப்படம் அஞ்சலிதான். மகளின் பாசத்துக்காக  ஏங்கும் தாயின் உள்ளத்தை துல்லியமாக பிரதிபலித்த படம் அது. மன நிலை சரியில்லாத குழ்ந்தையிடம் அம்மா என்ற வார்த்தைக்காக ஏங்கும் தாயின் பரிதவிப்பு அவர் படங்களில் வெறெங்கும் நிகழாத அதிசயம் படத்தின் மையம் குழ்நதைக்ளுக்கிடையிலான உணர்வு பூர்வமான் உலகம். ஆனால் அது அவர்களின் கொண்டாட்டத்தை கமர்ஷியலுக்காக் முன்னிருத்த அதுவே அப்படத்தின் பலகீனமாகிப்போனது.
மேலும் அனைவரும் பரிதாபத்துடன்  ஏக்கத்துடன் பார்க்கவேண்டிய அஞ்சலி பாப்பாவை நிழலுருவமாக  புகைமூட்ட்த்துடன்  தலைவிரி கோலமாக பார்க்க நேர்ந்த போது குழந்தைக்ளே அஞ்சலியை கொண்டாட பயந்து விலகினர்.
உண்மையில் உலக இயக்குனராக அறியப்பட அனைத்து  தகுதிகளும் கொண்டிருந்தார். சீன இயக்குனர் ஷாங்யீமுக்கு இணையாக அவரிடம் மிஸான் சேனீல் மேதமை இருந்த்து . ஆனால் ரியலைசேஷனில் தனக்கிருந்த போதாமையை அவர் உணரவில்லை.
காட் பாதரை இயக்கிய பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லா ஒரு பேட்டியில் அவருடைய  தொடர் வெற்றிக்கு காரணம் கேட்கப்பட்டபொது அவர் சொன்ன பதில்  நான் எனது படங்களுக்கான கதைகளை நானே யோசிப்பதில்லை .அப்படி உருவாக்கினால் அது பொய்யாகத்தான் இருக்கும் .அதனால் அசலான் கதைகளை ஏற்கனவே எழுதப்பட்ட நாவ்ல்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறேன்.  .அதில் உணர்ச்சிகளும்  பின்புலங்களும் எல்லாம் இயல்பாக இருப்பதால் நான் என் தனித்தன்மைக்கு பெரிதாக் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை  என்றார்.

(இக்கட்டுரை 80 பதுகளில் வெளியான ப்டங்களை பற்றி மட்டுமே முன் வைத்து எழுதப்பட்டதால் அவருடைய 90 களின் அரசியல், சமூக, காதல் படங்களின் பின்னால் செல்ல முடியாமல் தயங்கி இங்கேயே முற்று பெறுகிறது.. ) 
- -.

December 18, 2015

மலைவீட்டின் பாதை




மலைவீட்டின் பாதை

நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.

சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத் தலையில் உரச் சாக்கினைக் கவிழ்ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம்
தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.

இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச் செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனுக்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான்.
வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிகவும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உபசரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும்பாண்மையான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.
உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, புதுயுகம்  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) காசி எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத்தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.
     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது. புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை. தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.
ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.
சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.
கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது.
மலைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.
இதுதான் சேதுவின் வீடா?




படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.
ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.
பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.
ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.
கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.
குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.
சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.
ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.
கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.
சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.
ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.
     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.
     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.
     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.
     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.
அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 
இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.
மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.
உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.
     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?
அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.
இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.
அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

August 12, 2015

ஜூடித் டென்ச் : எட்டு நிமிட அதிசயம்

டாம் க்ரூசின் மிஷன் இம்பாஸிபில் தேசத்தின் ரவுடியை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ஜூடித் டென்ச்சின் (கீழே புகைப்படம்)முகம் மனதில் வந்து போனது . ஜேம்ஸ் பாண்ட் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த முகம் பரிச்சய்ப்பட்டிருக்கும் . ஜேம்ஸ் பாண்டுக்கே பாஸ் . அதிகார தோரணையை பார்வையிலேயே காண்பிக்கும் ஷேக்ஸ்பியர் பாணியின் மிகச்சிறந்த நடிகை .. முதன் முதலாக ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்தில்தான் இவரது நடிப்பை கண்டு வியந்தேன் எலிசபத் ராணியாக வெறும் எட்டே நிமிடத்தில்தான் திரையில் தோன்றுவார் . சிறந்த துணை நடிகைக்கான அந்த வருடத்தின் ஆஸ்கார் மற்றும் பாப்டா விருது பெற்றார். திரையில் வெறும் எட்டே நிமிடத்தில் . தோன்றிய காட்சிக்காக இப்படியான் உயரிய மதிப்பை பெற்ற்வர் இவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் . அதிலும் கூட முக்கியமான ஒரு ஷாட் .. மகாராணீயாக அவர் நாடக கொட்டகை விட்டு வெளியே வருவார் படை பரிவாரத்துடன் அவருக்கான் வாகனம் தயராக இருக்கும் வாகனத்துக்கும் இவருக்கும் இடையில் சிறு சகதி .. மகராணி என்ன செய்யப்போகிறாரோ என சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நடுங்கியபடி பார்த்திருக்க சட்டென இரு பக்கமும் குடைபோல கவிழ்ந்த பாவாடையை இரு கைகளாலும் சட்டென தூக்கி பிடித்து ஒரே தவ்வு தவ்வி வாகனத்தில் ஏறுவார் . தியேட்டரே அந்த ஒரு காட்சியில் சிரிப்பலையால் அதிரும். இது எழுதுவதற்கோ வாசிப்பிற்கோ சாத்ராணமாய் தோன்றும் இடம் ஆனால் நடிப்பிற்கு மிகவும் சிரமமான காட்சி . ஒரு மகாராணி அனாயசமாக சிறுபெண் போல் தாவி குதிப்பத்ற்கு பின் உள்ள வினயத்தை நன்கு உள்வாங்கி தோரணை குலையாமல் வெளிப்படுத்துவதில் நடிப்பு சார்ந்த பல தொழிநுட்ப சிக்கல்கள் உண்டு .சுற்றியிருப்பவர்களின் மரியாதையும் விலகக்கூடாது அதே சமயத்தில் கோபத்தையும் வெளிப்படுத்த கூடாது அதே சமயம் வண்டியிலும் ஏற வேண்டும் இது பாத்திரத்தின் உளவியல் ..காட்சிப்படி அதில் ஒரு ரசிகர்களின் கைதட்டலுக்கான் தேவையையும் நடிகையாக அவர் திருப்திபடுத்த வேண்டும் .. இதில் இயக்குனருக்கான பணி பாதி இருந்தாலும் அதை முழுமையாக நடித்து கொடுக்க ஒரு தெர்ந்த நடிகையால மட்டுமே முடியும் .. எட்டே நிமிடமானாலும் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது இந்த மிகச்சிற்ந்த நடிப்பின் பொருட்டுதான் ...இந்த மிகச்சிறந்த நடிகை20 வயதில் நடிக்க வந்தார் பாரட்டும் பரிசும் முதல் படத்துக்கே கிடைத்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை பிற்பாடு 50 வயதுக்கு பின் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. திறமைக்கு வயது தடையல்ல என இன்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் 80 வய்தான ஜூடித் டென்ச்சுக்கு இந்த முகநூல் மூலம் சிறு கைகுலுக்கல் செய்வதில் வயது/ பால் கடந்து பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்

May 3, 2015

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

                                                     

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு தமிழக அரசு இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார்.

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே  வாழ்ந்து காட்டியவர் .

2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு. பரிதி இளம் வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சி முத்து எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியரோடு இதழாளர் திரு பெரியார் சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

இந்நூலை உருவாக்க் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள வருடா வருடம் சீரிய தொண்டாற்றி வரும் ஊடகம் மற்றும் இதழியல் பணியாளர்களில் ஒருவருக்கு அவர் பெயரில் ஒரு விருதை வழங்க உத்தேசித்துள்ளோம் .

அதன் படி அவரது முதல் நினைவு நாளாக எதிர்வரும் மே 12ம் தேதியன்று டிஸ்கவரி புக் பேலசில் ( முனுசாமி சாலை, கே கே நகர் சென்னை-78 ) மாலை 5.30  மணிக்கு நடைபெற விருக்கும் விழாவில் மேற்கொண்ட துறைகளில் சீரிய பணியாற்றிய இளைஞர் ஒருவரை  உங்களது பரிந்துரைகளின் பேரில் பரிசீலித்து விருதுக் குழுவின் மூலம் இறுதி முடிவு செய்ய இருக்கிறோம்.

கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு , சமூக முன்னேற்றம், பெண்ணியம் , பெரியார் தொண்டு,  இந்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஊடகத்துறை ( திரைப்படம் , தொலைக்காட்சி, பத்திரிக்கை , எழுத்து  குறும்படம் ஆவணப்படம்)  சார்ந்த ஆண் அல்லது பெண் யாரேனும் ஒருவரை  இந்த விருதுக்காக பரிந்துரை செய்யலாம்

ஒருவரே எத்தனை நபரையும் பரிந்துரை செய்யலாம்.

ஆனால் ஒருவரை ஒருமுறை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குரிய நபர்களின் தெளிவான புகைப்படம் அவர்களது துறையில் ஆற்றிய தொண்டுகளைக் குறித்த செய்திகள் அல்லது புகைப்படங்கள் காணொளித் துணுக்குகள் ஆகியற்றின் இணைப்புடன் ஒரு பக்க கடிதம் மூலம் தெரிவிக்கலாம் .

பரிந்துரைகளை  இணைய முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பரிந்துரைக்க வேண்டிய இறுதி நாள் :   10 05  2015 மாலை 6 மணி
                  இப்படிக்கு
                                                     பெரியார் சாக்ரடீஸ் விருதுக் குழு

நாதன் பதிப்பகம், 16/10,பாஸ்கர் தெரு, நேரு நகர் தசரதபுரம்,சென்னை 93, 044-45542637.

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...