April 26, 2017

பாடலாசிரியர் அண்ணாமலை - அஞ்சலி



-[ அஜயன் உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு

இல்லை அண்ணாமலை, முத்துக்குமார் எனக்கு  ரொம்ப க்ளோஸ் அவந்தான் எல்லா பாட்டும் எழுதுவான்.  வாக்கு குடுத்துட்டேன்,பைசாவே வாங்காம எழுதி தரேன்னு  வேற சொல்லியிருக்கான்.

அப்ப எனக்கும் பைசா வேணாம், அவன் நாலு பாட்டு எழுதட்டும். நான் ஒரே ஒரு பாட்டு எழுதறேன்.

அண்ணாமலை அவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம், தப்பா நெனச்சிக்காதீங்க...

மேற்படியான உரையாடல் எனக்கும் அண்ணமலைக்கும் சுமார் பத்து பதினைந்து தடவையாவது நடந்திருக்கும்விகடன் வாசலில் பொது நிகழ்ச்சிகளில், எனது நாதன் பதிப்பக வாசலில் என ஒவ்வொரு முறையும்  இறுதியில்
ஆமாம்... ஆமாம்... எனக்கும் தெரியும்,  இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாருங்க 
என கேட்பதோடு முடியும் .

காலம் இருவரையும் ஒருசேர ஒரு மாத இடைவெளியில் கவ்விக்கொண்டது பெரும் துயரம்
தமிழுக்கு தமிழ் திரைப்படத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு .

போட்டிகள் நிறைந்த பாடல் எழுதும் துறையில் மற்றவர்களை போல  முட்டி மோதாமல் தனக்கான பாதையில்   கிடைக்கும் பாடலில் முழு திறமையும் வெளிப்படுத்தி நிதானமாக நடந்து செல்லும் சுபாவம்தான் அண்ணாலையின் இயல்பு  .  பழகுவதற்கு தண்ணீரைவிட  சுலபமான மனிதர் . அத்தனை  இலகு, அத்தனை  எளிமை. அதிகரமில்லாத குழைவான அவரது உடலே அதற்கு சாட்சி. மளிகை கடையில்  சோப் பணியனுடன் அடுத்து என்ன வேண்டும் என ஆர்வமாக கேட்கும் சிறுவனைபோல  அவர் உடலில் அத்தனை  பணிவு.
 பத்தாண்டுகளாக தொடர்ந்து பார்த்து வந்ததில் யாரையும் தவறாகவோ, புண்படுத்தும் விதமாகவோ  அவர் பேசி பார்த்ததில்லை.





பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்  மவுண் ரோட் ஆனந்தவிகடன் அலுவலக வாசலில் வைத்துதான் யாரோ முதன் முதலாக   அறிமுகப்படுத்தினார்கள் .
 அவரைப் பார்ப்பதற்கு முன்பே அந்த பெயரை என் மனம் அறிந்திருந்தது.  ” யாரோ அண்ணாமலையாம்,  ’ஜீவி’யில் வேலைசெய்பவராம். அவர் தான் அந்த சீரியல் பாட்டு எழுதினாராம் ”  காற்றுவாக்கில் அவரைப்பற்றி நண்பன் ஒருவன் சொன்னது, முதல் சந்திப்பின் போது மனதில் ஸ்க்ரோலிங்காக ஓடியது.  ஏதோ ஒரு காரியமாக விகடன் அலுவலகம் சென்று விட்டு   வந்து கொண்டிருந்தபோது   டீக்கடை வாசலில் தான் யாரோ அறிமுகப்படுத்தினார்கள். இவர்தான் அண்ணாமலை, பாடல் ஆசிரியர். சீரியல்களுக்கெல்லாம்  பாட்டு எழுதிகிட்டு வர்றார். சினிமாவுலயும் ட்ரை பண்ணிகிட்ருக்கார் . ஒல்லியான தேகம் மழலைச் சிரிப்பு. கொட்டோவியம் குலுங்குவது போல உடலசைவு . காற்று போல இருக்கிறாரே என முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துப் போனது.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து  நாயகன் தொடர் நிமித்தம் வாரவாரம்  விகடன் அலுவலகம் (அப்போது அலுவலகம் கிறீம்ஸ் ரோடில் இருந்தது.)  செல்லும் போதெல்லாம் அண்ணாமலையை பார்க்க முடிந்தது.

 சாப்ளின்  தொடர் எழுதும்போதுதான் தேடி வந்து கட்டிபிடித்துக்கொண்டார் .  பிரமாதமா எழுத்திட்டீங்க அஜயன்  அந்த கைகளின் இறுக்கம் அவரைப்பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை உண்டாக்கியது .
 இலங்கையை பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை யின் குடும்பத்தினர் அவர் பிறப்பதற்கு முன்பே தமிழ் நாட்டுக்கு வந்து  விழுப்புரம் அருகே செட்டிலாகியிருந்திருக்கின்றனர்.  இயற்பெயர் சுரேசன் .  பச்சையப்பன் கல்லூரி மாணவரான அவர் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக   வைரமுத்துவோடு நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார்.  அவரைப்போல  பாடலாசிரியராக  ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்றாலும்  குடும்ப சூழல் காரண்மாக விகடனில் இணைந்து  பத்திரிக்கையாளராகி விட்டவர் .

நான் கூட அவரிடம் சினிமாவில் பாடல் எழுதுவதுதான் லட்சியம் என்றால்  வேலையை விட்டு முழுதாக களம் இறங்கலாமே என கேட்டபோது தான்  கிட்டத்தட்ட எட்டு லட்சத்திற்கு கடனாளியாக இருப்பதகாவும் முழுவதும் அடைக்கும் வரை, விகடன் வேலையை விடமுடியாது  என்றும் தன்னை சுற்றிப் பின்னிக்கிடக்கும்  மாய வலையைசொன்னார்அந்த நேரத்தில் எனக்கு அது பெரும் அதிர்ச்சி. ஆயிரம் ரூபாய் கடனிருந்தாலே பதட்டமாகி வாழ்க்கை பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடும்போது, லட்சக்கணக்கில் அவர் பின்னால் இருந்த கடன் சுமை என்னை அதிர வைத்துவிட்டது. இவ்வளவு கடன் சுமையுடன் எப்படி இவரால சிரிக்கவும் பேசவும் முடிகிறது, என ஆச்சர்யப்பட்டேன்.

ஒருநாள்  அதே போல, மதிய நேரத்தில்  சாப்பிட்டு முடிந்து அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டிருந்த போது, பின்பக்கமாக  வந்து தோளை தொட்டவர்,  ”தான் புதியதாக ஒரு  பாடல் எழுதிக்கொண்டிருப்பதாகவும் அதை கேட்டு எப்படியிருக்கிறது என சொல்லமுடியுமா” என்றும்  ஆசையுடன் கேட்டார்அவரே என் காதில் கெட்போனை  காதில் மாட்டிவிட்டு  வாக்மேனை தட்டிவிட்டார்அது வெறும் ட்யூன்தான், நல்ல குத்துப்பாட்டுக்கான இசையாக அது இருந்ததுஅதற்கு தான் எழுதியிருக்கும் வரிகளை பாடிக்காண்பித்தார் . ”என் உச்சி மண்டையில் சுர்ருங்குது”  என துவங்கும் அப்பாடல்  அவர் அபிநயத்துடன் பாடிக்காண்பிக்க   பாடலை நான் வெகுவாகப் பாராட்டினேன் .
பிற்பாடு அந்த பாடல் வேட்டைகாரன் படத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்று அவருக்கு மிகப்பெரிய புகழையும் அடையாளத்தையும் பெற்று தந்தது.

பிற்பாடு சந்திக்கும் போதெல்லாம்  கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற உரையாடல் தவிர்க்கமுடியாமல் வந்து போகும்.

விகடன் தொடர் முடிந்த பின் நான் சாலிக்கிராமம் காவேரி தெருவில் பதிப்பக வேலைகளுக்காக ஒரு சிறு அலுவலகம் துவங்கியிருந்தேன் . அண்ணாமலை கிட்டத்தட்ட வாரத்தில் இருமுறையாவது உதவியாளருடன் அங்கு வருவார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அலுவலகம் அருகிலிருந்த படியால்  அடிக்கடி அவர் கொடுக்கும் ட்யூனை   இங்குதான் டைப் செய்வார் . பல கவிஞர்கள் பாடல் எழுத  சிங்கப்பூர், பாங்காக், மலேசியா போன்ற இடங்களுக்கும்,சிலர் ஈ.சீ.ஆர்  ரிசார்ட்டுகளுக்கும், சிலர்  பூங்கா, கடற்கரை  என வெவ்வேறு இடங்களுக்குசெல்வதைப் பார்த்திருக்கிறேன், முத்துக்குமார் கூட  பாட்டு எழுத காரில் நீண்டதூர பயணம் செய்தபடி எழுதுவான், நானும் உடன் பயணித்துமிருக்கிறேன். அவன் சொல்ல, சொல்ல எழுதியுமிருக்கிறேன் . ஆனால் அண்ணாமாலை பத்துக்கு பத்து அடியில் மூணு கம்ப்யூட்டரும், ஜெராக்ஸ் மிஷினும் இருக்கும் அலுவலகத்தில் சாலையோர இரைச்சலுடன் ஆட்கள் நடமாட்டமும்  மிகுந்த அந்த சிறு அலுவலகத்தில் அமர்ந்து, காதில்  ஹெட்போனை  பொருத்தியபடி பாட்டுக் கேட்டுக்கொண்டே டைப் செய்வது, ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். .ஆனால் அப்படி எழுதிய பாடல்கள் வெற்றி பெற்று அவருக்கும் பெயரையும் புகழையும் உருவாக்கின.

வெறும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் பல பணிகளை மேற்கொண்டார் . விந்தன் அறக்கட்டளை  சார்பாக  ஆண்டுதோறும் விழா நடத்தி வந்தது. அந்த விழாவை நடத்தி தரும் பொறுப்பை முழுதாக அவரே ஏற்று நடத்தி வந்தார். அதற்காக   வருடம் ஒருமுறை மிக நீண்ட கட்டுரை ஒன்றை என் அலுவலகத்தில் வைத்தே எழுதுவார் .
பல சமயங்களில்  ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை தினங்களில் அழைப்பார் . ஒரு அவசரமான பணி உடனே எழுத வேண்டும், கொஞ்சம் வரமுடியுமாஎனக் கூப்பிடுவார்.
நானே  ஒருமுறை என்ன அண்ணாமலைலேப் டாப் வாங்கி வீட்டில் நிம்மதியாக டைப் செய்யலாமே. அட நீங்க வேற, வீட்ல இருந்தா அந்த பிரச்சனை, இந்த பிரச்சனைனு எல்லா பிரச்சனையும் மண்டையில ஓடிகிட்டு இருக்கும், இதுல பாட்டு எங்கருந்து வரும்  அதனாலதான் இங்க வரேன்.  உங்க அலுவலகம் தான் எனக்கு ஊட்டி, கொடைக்கானல் என்பார் .

ஒருநாள் அலுவலகம் வந்தவர்இன்விடேஷன்  நீட்டினார். குழந்தைக்கு  பர்ஸ்ட் ஆனிவர்சரி பர்த்டே வச்சிருக்கேன், அவசியம் வந்துடுங்க என்றார்அப்ப உங்களுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்ச  என கேட்க , இல்லீங்க பதினேழு வருஷம் ஆச்சு, இப்பதான் பாக்கியம் கிடைச்சுது என்றார்.

என்ன அஜயன் முத்துக்குமார் இப்படி பண்ணிட்டானேஎன  துக்கத்துடன் வந்தவர் அவனுக்கான அஞ்சலி கட்டுரை எழுதத்தான் வந்துருக்கேன் என்றார். கட்டுரை எழுதும் போது முத்துகுமாரின் குணங்களை வியந்து, புகழ்ந்து  என்னிடம் பேசியபடி, இப்படி போயிட்டானே என்றார்.

என் அலுவலகத்தின் உதவியாளரான ஜேம்ஸுக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும்  என்ன சார், இவ்ளோ பெரிய பாடலாசிரியர், இவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் என ஆச்சர்யப்படுவான்.

கடைசியாக பார்த்து ஒரு வாரம் இருக்கும் இச்சூழலில் தான் அவரது மரணசெய்தி என்னை அடித்து நொறுக்கியது.

முத்துமாரின் அதிர்ச்சியிலிருந்து முழுதாய் விலகிவருவத்ற்கு முன்பே இன்னொரு அதிர்ச்சி கொஞ்ச காலத்துக்கு முன் வாசன் .

 பாடல் எழுத வருபவர்கள் என்று மட்டுமல்ல எழுத்து சார்ந்து இத்துறைக்கு வருபவர்கள் எல்லோருமே மன நெருக்கடிக்கும் மன அழுத்ததுக்கும் ஆளாகுவது புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே தொடர்கிறது .

வெளிவரும் ஒவ்வொரு சினிமாக்களின் கடைக்காலிலும் ஒரு எழுத்தாளனின் அவலக்குரல்  புதைக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தில்லாமல் சினிமா இல்லை .  எழுத்திலிருந்து தான் உதிக்கிறது. அது பாடலாகட்டும் படமாகட்டும்.  ஆனால் அதே சமயம் ஒரு எழுத்தாளனுக்கு பாடலாசிரியனுக்கும் சினிமாவில் கிடைக்கும் கவுரவமும்  மதிப்பீடும் மிக மிக அவமனகரமான் விஷயம்

ஒரு நடிகருக்கோ அல்லது இதர தொழில்நுட்பகலைஞர்களுக்கோ கொடுப்பதுபோல உழைப்புக்கான கூலி எழுத்து சார்ந்தவர்களுக்கு மரியாதையாக உடனடியாக கொடுப்பதில்லை

இதில் பல விதி விலக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்  உண்டு

ஆனால் எண்பது சதவிதம்  பேர் அவனை அலைக்கழித்து அவமானப்படுத்தி  அவனாக பலமுறை கேட்டு வறுபுறுத்தியபிந்தான்  ஓரளவு இளகுகிறார்கள். பல சமயங்களில்  வறட்டு பிடிவாதம் காரணமாகவொ  தொடர்ந்த வாய்ப்பு காரணமாகவோ பணம் கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து மன அழுத்தமடைகிறார்கள்

போராட்ட காலத்தில் மட்டுமல்ல போராடி வளர்ந்து நிலையான இடத்தை பிடித்த பிறகும்  இதே நிலைதான்

படைப்புகளுக்காக உண்டாகும் மன நெருக்கடி போக இது  போன்ற சூழலில் நடக்கும் அவமானங்களினால் உண்டாகும் மன அழுத்தங்களும் சேர்ந்துகொள்வதே  எழுத்து சார்ந்த படைப்புத்துறையில் உள்ளவர்கள் அதிலிருந்து தப்பிக்க வழி தேடி  வேறு சில   பாதைகளில் அலைவதும் பிற்பாடு சடுதியில் ஒரு நாள்  மனைவி குழ்நதைகளை நிர்க்கதியாக்கிவிட்டு உலக வாழ்க்கைதுறப்பதற்கும் காரணம் 

அண்ணாமலையும் இப்படியான மன நெருக்கடிகளுக்கு பலியானவர்தான்.


No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...