November 4, 2016

மௌனன் யாத்ரீகா வின் கவிதை தொகுப்பு நெல்லில் கசியும் மூதாயின் பால் – முன்னுரை– அஜயன் பாலா.

   இயற்கையை கொண்டாடும் கவிதைகள்


மௌனன் யாத்ரீகா வின்   கவிதை தொகுப்பு
நெல்லில் கசியும் மூதாயின் பால்
முன்னுரைஅஜயன் பாலா.

  ” ற்கனவே அறியப்பட்ட கவிதைகளிலிருந்து தப்பிப்பதும், வார்த்தைகளால் தைக்கப்பட்ட புதிய ஆடையை உருவாக்குவதும் கவிஞனின் வேலை.இத்தொகுப்பு அதைச் செம்மையாக செய்துள்ளதாகக் கருதுகிறேன்”
******************************************************************************************
     விதையின் இன்பம் வேறெவற்றோடும் ஒப்பிட முடியாதது. அந்த இன்பத்தை வாசக மனதில் தோற்றுவிப்பது ஒவ்வொரு கவிஞனுக்கும் சவால்.
அது காட்சியிலா, பொருளிலா, மொழியிலா அல்லது மூன்றும் பிரித்தறியா வண்ணம் ஒன்றிலொன்று பின்னியிருக்கும்படியான செய்நுட்பத்திலா என்பதில் கவிதையின் சூட்சுமம் உட்பொதிந்து கிடக்கிறது
இந்த சவாலை கவிதை எழுத வரும் ஒவ்வொரு புதிய கவிஞனும் எதிர்கொள்கிறான்.
இன்பத்தை ஒளித்து வைப்பதின் விளையாட்டு, கவிதையின் தொழில்நுட்பமாகி பின் சாரத்தை அகற்றி உள்ளீடற்ற கவிதைகள் எழுதுவது வரை இன்றைய கவிஞன் எல்லா தந்திரங்களையும் கடந்துகொண்டிருக்கும் சூழலில். வெளியாகிறது இப்புத்தகம்.
மௌனன் யாத்ரீகா இத்தொகுப்பின் மூலம் தன்னைத் துண்டாக வெட்டிக்கொண்டு இன்றைய கவிதைப் போக்குகளிலிருந்து வேறு ஒரு புதிய பாணியை உருவாக்க எத்தனிக்கிறார்
வாசிப்போருக்கு இருபது வருடங்களுக்கு முந்தைய வண்ணதாசன் கவிதைகளின் எதார்த்த அழகியல் பாணி நினைவுக்கு வரலாம். ஆனாலும், இவை புதியவை. மழைக் காலத்து தும்பிபோல, இரவுக் காற்றில் தாயின் சேலைத் தலைப்பின் வாசம்போல எல்லாக் காலத்துக்கும் புதியவையாக இக்கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.
பிறந்த குழந்தையின் மேனியில் பரவிக் கிடக்கும் பனிக்குடத்தின் நீர்போல கவிதை முழுக்க ஓர் ஈரம் சுற்றிப் பரவுவதை வாசிக்கும்போது உணரமுடிகிறது.
முழுக்க ஊடகங்களால் வன்புணர்வுக்காட்பட்ட நம் அறிவுலகக் குப்பைக் கிடங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் விதமாக ஒரு ஜம்ப் கட்டில் புத்தகத்தைத் திறந்ததும் அந்த ஈரம் நம்மைப் பற்றிப் படர்வதை உணரமுடியும்
அந்த அளவிற்கு இக்கவிதைகள் நம் சூழலின் தேவையாகவும் மருந்தாகவும் இருப்பதுமே இக்கவிதைகளின் சிறப்பு.
பேருந்து, ரயில் என வெவ்வேறான பயணங்களில் கிளர்ச்சியுறும் இவரது கவிமனம் கண்ணுற்ற இடம்தோறும் கவிதைகளாக மொக்கவிழ்கின்றன.
இச்சை சார்ந்த அழகுணர்ச்சிகளிலிருந்து விலகி இயல்பான வாழ்வின், கண்ணுக்கு தெரிந்த அறிவுணர்ச்சிக்குள் நாம் இதுவரை ஆட்படாத ஓர் அழகினைக் காட்சிப் பொருளாக்கி அதை வார்த்தைளால் நமக்கு கோர்த்து பரவசப்படுத்துகின்றன இவரது கவிதைகள்.
முதல் கவிதையில், பேருந்தில் சக பயணியின் கையிலிருக்கும் குழந்தையின் கண்களை, சின்னத் திராட்சையைப்போல அவை மிதந்தலைந்ததாகக் கூறுவதில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு கவிதையிலும் தனது தனித்தன்மையை நிறுவிக்கொண்டே வருகிறார்.
விரல்களின் செம்மண் சாயத்தை வைத்து அவன் நேற்று பிடுங்கிய கடலைக் கொடியையும், அவன் நிலத்தையும் ஞாபகப்படுத்தும் இவரது சொல்முறை பெரிதும் சினிமாவின் ரிவர்ஸ் டெக்னிக் எனப்படும் பின்புணரும் காட்சி மொழியைக் கொண்டு உருவாக்கம் கொண்டிருப்பது சிறப்பு.
என்றாலும், கவிதைகளைக் காட்சி ஒன்று, காட்சி இரண்டு என வரிசைப்படுத்துவது இலக்கியத்திற்கான விசேட குணங்களிலிருந்து அன்னியப் படுத்துவதாகவும் இருக்கிறது.
பல இடங்களில் சங்கப் பாடல்களின் வர்ணனையை நமக்கு ஞாபகப்படுத்துகிறார் மௌனன். பச்சைக் கலர் ஜிங்குச்சான் என்னும் கவிதையில் பேருந்துக்குள் நுழைந்து பயணிகளோடு பயணிக்கும் வண்ணத்துப் பூச்சியை விவரிக்கும் தருணத்தில் அது வெளிப்படுகிறது.
அதேபோல கச்சிதமான தேர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் கவிதைகள் இவரது மொழி ஆளுமைக்குச் சான்று. இப்படி, சில சொற்களில் மனதில் சித்திரத்தை உருவாக்கி அதை வாழ்வனுபவத்தோடு பொருத்துவதில் இவரது தேர்ந்த கவிமொழி தெரிகிறது.
புற உலக வாழ்க்கையின் எந்தப் பிரச்சினையையும் இந்தக் கவிதைகள் பேசமறுக்கின்றன.
இன்றைய சூழலில் கிராமங்களின் அவல நிலை, சாதிய வன்முறைகள், விவசாய தற்கொலைகள் எதையும் இக்கவிதைகள் பேசவில்லை.
ஒருவேளை இன்னும் ஒருமுறை நாம் இந்தக் கவிதைகளை வாசிக்க விரும்புவதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் எச்சிலைபோல அவ்வளவு தூய்மையான, உயிரோட்டமான அனுபவத்தை உருவாக்க முயல்வதுதான் இக்கவிதைகளின் சிறப்பே.
முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபவத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனித்தன்மை.
திரைப்பட இயக்குனர் போல காட்சிகளின் துல்லியத்துக்குள் இவர் விழுகிற தருணங்கள் நமக்குள் மழைத்துளியாய் விழுந்து சிலிர்க்க வைக்கின்றன. தாகூருக்கு வாய்த்தது போல இயற்கையைக் கொண்டாடும் கவிதைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.
அப்பழுக்கற்ற, தூய்மையான காட்சியனுபவத்தை இயற்கையோடு சங்கமித்து உருவாக்கும்போது அக உலகில் அது உருவாக்கித்தரும் ஆன்மீக தருணங்கள் ஒப்பீடற்றவை. இந்தக் கவிதைகள் அதற்கு முயற்சிக்கின்றன.
மௌனன் யாத்ரீகா தொடர்ந்து இதே பாதையில் பயணிக்க வேண்டும். எல்லோரும் எழுதும் கவிதையாக இது இல்லாமல் இருக்கிறது. அதுவே இதன் தனித்தன்மை, அதுவே இதன் சிறப்பு. இன்னும் இதே பாதையில் பயணிக்கும்போது கண்டறியப்படாத வாழ்வின் அழகியலையும், பல உன்னத தருணங்களையும் உங்களால் மீட்டுத் தரமுடியும் என நம்புகிறேன்.

- அஜயன் பாலா
சென்னை -93
2016 - மார்ச் மாத பகல் பொழுது.

Top of Form

Bottom of Form


November 3, 2016

டெர்ஜு உஜாலா : இயற்கை Vs செயற்கை

டெர்சு உஜாலா :





         பெரு நகரங்களின் காலை நேர  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான்,
தொலைத்த இயற்கையைத்தான்...
இன்றைய யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான்.
நவீன மனிதன் துவக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான் . இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கையான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து செயற்கை எனும் மாய வலையை அவனே பின்னிக்கொண்டான்.
இல்லாத நோய்கள் அனைத்தும் அவனை சூழ்ந்துகொள்ள  இப்போது அந்த செயற்கை கூண்டிலிருந்து  இயற்கையை தேடி வெளியேற முயற்சிக்கிறான். இதுதான் இன்றைய  மனிதனின் அதி முக்கியமான பிரச்சனை.
இந்த பிரச்சனையை 1975லேயே உலகுக்கு தன் அற்புதமான திரைப்படம் மூலம் உணர்த்தியவர் அகிராகுரசேவா.
டெர்ஜு உஜாலா இதுதான் அவர் இயக்கிய அந்த அதிமுக்கியமான திரைப்படம்.
ரோஷமான், செவன் சாமுராய், போன்ற படங்களின் மூலம் உலகின் தலைசிறந்த இயக்குனர் என  பெருமதி பெற்றவர் .ஜப்பானை சேர்ந்த அகிராகுரசேவா. கிழக்கு, மேற்கு, இரு தத்துவங்களும்  இணைந்து ஏற்று கொண்ட பிதாமகன் .  
1943 ல் துவங்கி 1999 வரை 57 வருடங்கள் கொண்ட அவருடைய  இடைவிடாத கலைப்பயணத்தில்  பல உச்சங்களை அவரால் அடைய  முடிந்தது.
அப்படிப்பட்டவருக்கும் ஒரு முறை தடுமாற்றம்

1970ல் அவர் உருவாக்கிய டோடெச் கா டென் (DODES KA DEN )  எனும் திரைப்படம்  வணிக ரீதியாக படு தோல்வியுற்றது. இந்த தோல்வி அவரை பாதிக்க 30 முறை தன் ரேசரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது ஹரகிரி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்ட விஷயம்  பிற்பாடு குணமாகி மீண்டு வந்தவர். மீண்டும் கலையோடான தன் சமரை துவக்க முடிவு செய்தார்.  இம்முறை அவர் இயக்க தேர்ந்தெடுத்த படம் தான் டெர்ஜு உஜாலா .  ஒரு ரஷ்ய நிறுவனம் தானாக முன் வந்தது. ருஷ்யாவில் புகழ்பெற்ற ஒரு ராணுவ வீரனின் அனுபவத்தை மையமாக கொண்ட நாவலை படமாக்க முடிவு செய்து குரசேவாவை உதவியாளர்கள் மூலமாக அணுகியதன் காரணமாக   இப்படத்தை இயக்க ஒத்துக்கொண்டார்.
என்னதான் குரசேவா உலக சினிமா இயக்குனராக இருந்தாலும் அவர் தன் சொந்த மண்ணான ஜப்பானின் நிலப்படைப்பை விட்டு வெளியே சென்றதேயில்லை . துவக்கத்தில் யோசித்த குரசேவா பிற்பாடு இப்படைப்பை இயக்க ஒத்துக்கொண்டு களமிறங்கினார்.
டெர்ஜு உஜாலா
கதை:
 கேப்டன் அரசீனிவ் எனும் ராணுவ உயர் அதிகாரிக்கும் காட்டில் வசிக்கும் ஒரு நாடோடிக்குமான உறவுதான் கதை.
 மூன்று வருடங்களுக்கு முன் இறந்த நண்பனின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை, சைபீரிய காட்டில் கேப்டன் ஆர்சினிவ் தேடுவதிலிருந்து துவங்கும் கதை.... அப்படியே ப்ளாஷ் பேக்கில் முதன் முறையாக அந்த நண்பனை சந்தித்த காலக்கட்டத்தினுள் விரிகிறது.
நகரநிர்மாணத்திற்காக காட்டை அழிக்கும் முனைப்பிலிருக்கும் அரசாங்கம், அதற்காக ராணுவ  அதிகாரியான ஆர்சினிவ்வுடன் ஒரு படையை காட்டுக்குள் அனுப்புகிறது . மர்மங்களும் புதிர்களும் நிறைந்த காட்டில் ராணுவ வீரர்கள் திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டு பரிதவிக்கின்றனர் . அச்சமயம் அந்த வழியாக வருபவன்  காட்டுவாசியான டெர்ஜு உஜாலா ..வழி தவறி குழம்பிக்கிடந்த படையினருக்கு டெர்ஜு ஒரு வழிகாட்டியாக உதவிசெய்கிறான். அவனுடைய அழுக்கான தோற்றம்,கொச்சையான பேச்சு எதுவும் அந்த குழுவினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. துவக்கத்தில் கேப்டன் ஆர்சனிவுக்கும் டெர்சுவின் தோற்றமும் பேச்சும் அப்படியாகத்தானிருந்தது. ஆனால் காடு அவனுக்கு அத்துபடியாக இருந்தது, காட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரம் அர்த்தங்களை அவன் கண்டுபிடித்து  வைத்திருந்தான்.  பறவைகளின் ஒலிக்குறிப்புகள் மிருகங்களின் காலடித்தடங்கள் இவற்றிற்க்கெல்லாம்  வினோத சங்கேதங்களை அவன் அறிந்து வைத்திருந்தான்.  அவனது உள்ளுணர்வின் அதிசயத்தன்மை கண்டு படை வீரர்கள் பிரமிக்கின்றனர். வழியில் பாழ்பட்ட ஒரு குடிசையை சரிசெய்து அதில் உணவுக்கு தேவையான பொருட்களையும் வைத்துவிட்டு செல்கிறான், காரணம் தங்களுக்கு பின்னால் காட்டில் வரும் வழிபோக்கர்கள் இளைப்பாறுவதற்கும் பசியாற்றவும் அது உதவும் என அவன் கூறுமளவிற்கு அவனுடைய நுண்ணுணர்வும் மனித நேயமும் இருப்பதைக்கண்டு வீரர்கள் பிரமிக்கின்றனர்.
ஒருமுறை கேப்டன் ஆர்சினிவ்,டெர்ஜு உஜாலா இருவரும் ஆபத்தான பெரும் பனிப்புயலில் சிக்கிக்கொள்ள டெர்ஜு சடுதில் கையில் கிடைத்த கோரைகளை வைத்து  சிறு அரண் உருவாக்கி போராடுகிறான். புயலின் கடுமை உக்கிரமாக  ஒரு கட்டத்தில், கேப்டன்  உறைகுளிரில்  சாவை நெருங்கிச்செல்ல டெர்ஜு போராடி அவரை காப்பற்றி விடுகிறான். மறுநாள் அவர்களை தேடும் வீரர்கள் மயங்கிய நிலையில் இருக்கும் இருவரையும் காப்பாற்றி உயிர்ப்பிழைக்க வைக்கின்றனர். அதன்பிறகு ஒரு நானி பழங்குடி வீட்டில் தங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள,இப்போது டெர்ஜு கேப்டனிடம்  அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்கபோகிறோம், என கேட்க  மவுனமாக இருக்கும் கேப்டன் குரலில் உயிர் பயம் தொனிக்க, நகரத்திற்கு திரும்புகிறோம் என கூறுகிறான்.
தன் உயிரைக்காப்பாற்றிய  டெர்ஜுவையும்  கேப்டன் தங்களுடன் வருமாறு நகரத்திற்கு அழைக்க, டெர்ஜு மறுக்கிறான். தன்னுடைய வழக்காமன பயணத்தை காட்டில் தொடரப்போவதாக கூறி மறுநாள் ரயில்வே ட்ராக்கினூடே தனியாக காட்டுக்குள் மறைகிறான்.
இது நிகழ்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு கேப்டன் ஆர்சினிவுக்கு அரசாங்கம் மீண்டும் காட்டில், வேறு ஒரு திட்ட கள ஆய்வுக்காக படையினருடன் அனுப்பி வைக்கிறது. இது வேறு காட்டுபகுதியானாலும் கேப்டனுக்கு டெர்ஜுவின் ஞாபகம் வராமலில்லை . அந்த மனிதம் நிறைந்த நாடோடி காட்டுவாசி தன் கண்ணில் தென்பட மாட்டானா என ஏக்கம்கொள்கிறார். ஒரு வீரன் தான் அப்படிப்பட்ட ஒருவனை பார்த்ததாக கூற  கேப்டனுக்கு நம்பிக்கையில்லை . அவன் பார்த்ததாக சொன்ன இடத்துக்கு விரைந்து தேடலை துவக்குகிறார்.சட்டென அவர் கண்ணில் டெர்ஜு . உணர்ச்சி வசப்பட்டவராய் அவனை அழைக்க அவனும் திரும்ப இருவரும் அன்பு மிகுதியால் கட்டிபிடித்து உணர்ச்சிவயப்படுகின்றனர்.
கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் மீண்டும் டெர்ஜூ அவர்களை காட்டில் வழி நடத்தும் பணியை ஏற்கிறான். ஒரு ஆற்றை கடக்க வேண்டிய சூழல் நிர்பந்திக்க மற்றவர்களை குதிரையில் அனுப்பிவிட்டு  சிறிதளவு வீரர்களை,  சிறிய தெப்பத்தில் ஏற்றிக்கொண்டு டெர்ஜுவும் கேப்டனும் பயணிக்கின்றனர் .
திடுமென ஆற்றில் வெள்ளம் கரைபுரள  ஒரு பாறையில் மோதி தெப்பம் உடைய சடுதியில் பெரும் அருவி வேறு சமீபிக்க ஒருவர் மட்டுமே பிழைக்க முடிந்த நெருக்கடியில், மீண்டும் கேப்டனை காப்பற்றி ஆபத்தான சூழலில் தானும் பிழைத்துக்கொள்கிறார். தொடர்ந்த பயணத்தில் டெர்ஜுவின் வயதான தன்மைகாரணமாக கண்பார்வை மங்கிவிட்டதை உணர்ந்த கேப்டன் இம்முறை பயணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தன்னோடு நகரத்துக்கு அழைத்துச்செல்கிறார்.
டெர்ஜுவுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும் கேப்டன் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு அவரை நெகிழ்த்துகிறது.
காட்டுச்செடியாக அழுக்கு உடையுடன் திரிந்த டெர்ஜுவால் கான்க்ரீட் நகரத்துக்குள் வாழமுடியவில்லை . நகரத்தில் அவருடைய தோற்றம் வேடிக்கை பொருளாக, வாழ தகுதியற்றதாக கருதப்படுகிறது. கேப்டனின் வீடு அவருக்கு சிறையாக மாறுகிறது. காட்டில் தன்னிச்சையாக வளரும் மரத்தை போன்சாயாக வீட்டில் சுருக்கிவைத்திருக்கும் மனித மனம் அவருக்கு பதட்டத்தை உருவாக்கி விடுகிறது.  என்னதான் கேப்டன் தன்னோடு அன்பாக பழகினாலும் அவர் வீட்டாரால் டெர்ஜுவை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நாள் வீடு திரும்பும் கேப்டன் தன் அன்புக்குரிய காட்டுவாசி டெர்ஜூவை காணாமல் தேடுகிறார் . நகரத்து மனிதர்களின் செயற்கையான வாழ்க்கை பிடிக்காமல், டெர்ஜு காட்டுக்கே திரும்பிவிட்டதை அறிகிறார்.
சில காலம் கழித்து காட்டில் கண்டெடுக்கப்பட்ட பனி சடலம்  பற்றிய தகவல் கேப்டனுக்கு  வருகிறது. சடலத்தில் கேப்டனின் அழைப்பு அட்டை அதில் இருந்ததாக கூறப்படுகிறது . கேப்டன் அங்கு வந்து பார்த்தபின்தான்  அது கொலை என அறிகிறார். டெர்ஜுவை யாரோ தான் பரிசாக அவருக்கு வழங்கிய துப்பாக்கிக்காக, கொலைசெய்திருக்கக்கூடும் என  தெரிகிறபோது அவரை கொன்றது தான் மட்டுமல்ல, செயற்கையான நகரமும்தான்  என்பதாக உணர்கிறார்.
1971ல் தயாரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு 1975ல் ஐந்து வருட தயாரிப்புக்கு பின்னரே வெளியானது. குரசேவாவின் தயாரிப்பில் அதிக நாளை எடுத்துக்கொண்ட படம் இது . படப்பிடிப்பில் ஒரு கட்டத்தில் பனிக்காலம் காரணமாக தொடரமுடியாமல்  போய் மீண்டும் வந்த போது புற்கள் அவ்வளவாய் வளராமல் இருக்க, மீண்டும் ஆளுயரத்திற்கு கோரை புற்கள் வளர்வதற்க்காக ஒருவருடம் அவர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார். பலரும் அதைபோல புற்கள் நன்கு வளர்ந்த  வேறு இடத்தில் அல்லது செட் போட்டு படப்பிடிப்பை நடத்தலாம் எனக்கூற குரசேவா மறுத்துவிட்டார். ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் அதே போல புற்கள் வளர்ந்த பின்தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
1975ல் வெளியான இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்காரை வென்றது.
தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கு அகிராவின் இந்த படம் ஒவ்வொரு இயக்குனருக்கும் பாடம்  .
கலையின் மீதும் மனிதத்தின் மீதும் தீராத காதல் கொண்டவர்களை  காலம் மேலும் மேலுமான உயரத்திற்கு அழைத்து செல்லும் என்பதற்கு, அகிராவின் வாழ்க்கையும் டெர்ஜு உஜாலாவும் சிறந்த பாடம்.
ஆனால் அவருக்கோ மகத்தான படைப்பு, மனம் அடங்கா நெருப்பாய் தகித்துக்கொண்டிருக்கும் நிலை.
                                                                          - நன்றி : பல் சுவை காவியம்  நவம்பர்  22016

October 21, 2016

விகடனும் நானும்

விகடன் 90. நானும் விகடனும்



விகடன் பொன்விழா ஆண்டையொட்டி சிறுகதைபோட்டியை பிரம்மாண்டமாக அறிவித்தார்கள். அப்போது செங்கல்பட்டில் முருகேசன் என்ற நண்பர் வாசகர்வட்ட கதைகளில் மாலன் பாலகுமாரன் சுப்ரமண்யராஜூ ஆகியோரோடு அவரது கதையும் வந்திருக்கிறது. அவரதான் அப்போதைக்கு காட்பாதர் அதைப்படி இதைப்படி என எடுத்துக்கொடுப்பார்..அவர் தான் பதட்டத்தோடு விகடன் போட்டி அறிவிப்பை காண்பித்து இதில கலந்துகொள் முதல் பரிசு கிடைத்தால் ஏஸ் சர்வீசில் பாப்புலர் ஆகலாம் என பிர்கா போட்டார். கூடவே உன் டைப் சீரிஸ் இலக்கியம் செட் ஆகாது கொஞ்சம் மூற்போக்காக முடிக்கவேண்டும் என அறிவுறுத்த அப்போதே இது நமக்கு வராது சார் என மறுத்துவிட்டேன். ஆனாலும் கிராத்து சிறுவன் நோய்வாய்பட்ட அம்மா மதிய உணவை வாங்கிவரும்போது பைத்தியம் தட்டிவிட்டது ரேஞ்சுக்கு ஓரு கதை எழுதி வைத்துக்கொண்டேன் அனுப்பவில்லை. ஆனாலும் அன்று துவங்கி விகடன் படிக்க ஆரம்பித்தேன். விகடனை விட குமுதம் அப்போது அறிவுபூர்வமான துணுக்குகள் அரசு கேள்வி பதில்கள் என அசத்தும். பிற்பாடு சென்னையில் வந்து போலீஸ் செய்தி போன்ற பல்ப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு கொலை கட்டுரை வர்ணித்து எழுதும் போது கூட விகடனில் என் நடையை படித்துவிட்டு வேலைக்கு கூப்பிடுவார்கள் போய் விடக்கூடாது என நினைத்திருந்தேன். 
90
களின் இறுதி பகுதியில் ஆசிரியகுழுவில் உண்டான சில அதிரடி மாற்றங்கள் காரணமாக விகடன் ஈர்க்க துவங்கியது. எளிமையான மளிதர்களின் வாழ்க்கை சித்திரங்கள்.. வசீகரமான எழுத்துநடை வித்யாசமான பேட்டிகள் புதுமையான புகைப்படங்கள் என கலந்து கட்டியது..ரமேஷ் வைத்யா, சி.முருகேஷ்பாபு பாஸ்கர் சக்தி. க சீ சிவக்குமார் பிற்பாடு அருள் எழிலன் என பலரும் விகடனை வசீகரிக்க வைத்தனர். இவர்களில் அருள் எழிலன் செய்திகள் எளிய மனிதர்களை பறறிய வாழ்க்கை சித்திரங்கள் விகடனை மரியாதையுடன் கவனிக்க வைத்தன. இவர்களுக்கெல்லாம் முலவராக இருந்து விகடனின் தோற்றத்தை தலைகீழாக மாற்றியபெருமை அதன் அப்போதைய ஆசிரியர்களான ரா கண்ணன் மற்றும் அசோகன் ஆகியோரையே சாரும். 
குறிப்பாக ரா கண்ணன் முழு பொறுப்புக்கு வந்தபின் பல புதுமையான விகடன் வழக்கில் இல்லாத விஷயங்கள் இடம் பெற்றன
நவீன இலக்கியம் உலக சினிமா என அதன் எல்லைகள் விரிந்தன. தமிழ் மொழி சார்ந்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
என் முதல் புத்தகம் பை சைக்கிள் தீவ்ஸ் வந்தபோது அந்நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய விகடன் ஊழியர் பாஸ்கர் சக்தி புத்தகம் கொடுங்கள் விகடனில் செய்திவரவைக்கிறேன் என்றார் ஆனால் எனக்கோ நம்பிக்கை இல்லை. விகடனில் இப்போது கண்ணன் என்பவர் எடிட்டோரியலில் இருக்கிறார் அவர் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் எனக்கூறினார் அது போலவே அடுத்த இதழிலேயே புத்தகம் பற்றி செய்தியும் வந்தது. அது நிமித்தம் நேராக அலுவலகம் சென்று கண்ணனை சந்தித்து நன்றியும் சொன்னேன். ஓரு பத்ரிக்கையாளர் என்பதை தாண்டிய ஓரு ரசிகனாக துடிப்புடன் புத்தகம் குறித்து பாராட்டினார் நான் நன்றி சொன்னபோது இப்படி ஓரு புத்தகம் எழுதியதற்கு நாங்கள்தான் நன்றிசொல்லவேண்டும் என்றார். பின் விகடன் பற்றியும் சணீப மாற்றங்கள் பற்றியும் தெரிவித்தேன் தொடர்ந்து விகடன் தரம் பற்றி சந்திக்கும் போது எடுத்து சொல்வேன். ஆனாலும் அந்த விகடனிலேயே நான் ஓரு தொடர் எழுதுவேன் என கனவிலும் நினைத்து பார்க்கலில்லை.. என் வாழ்க்கையை முழுமையாக புரட்டி போட்ட அந்த தொடர் நான் எழுத நேர்ந்ததற்குபின் மிகப்பெரிய மன போராட்டம்.
அப்போது பள்ளிக்கூடம் படத்தில் இணை இயக்குனராக பணி செய்து படம் ஓரளவுக்கு வெற்றியும் எனக்கு ஓரு நல்ல அடையாளமும் உருவாகியிருந்த காலம்.
இதைவிட்டால் படம் இயக்க வேறு அருமையான சூழல் அமையாது.. அதற்காக முதல் படத்துக்கான கதை எழுதி அதற்கான திரைக்கதை பணிக்காக கொடைக்கனலில் நண்பரது ரிஸார்டிற்கு உதவியாளர்களுடன் சென்றேன் அந்த ரிஸாட்டின் உரிமையாளர் வேறு யாருமல்ல தேசியவிருதுபெற்ற நடிகர் பாபி சிம்ஹா தான். நண்பர் மீரா கதிரவன் மூலம் அறிமுகம். நான் கொடைக்கானல் போகிறேன் என தெரிந்தவுடன் நட்புகரம் நீட்டியவர் 
அவருடைய ரிஸார்டில்5நாள் தங்கி ஓரளவு கையிருபபு கரைந்ததும் நண்பர் ஓருவர் அழைப்பின் பேரில் உடுமலை பேட்டை அமராவதி டேம் அருகிலிருந்த அவர் வீட்டில் அமர்ந்து திரைக்கதைக்கு க்ளைமாக்ஸ் யோசித்துக்கொண்டிருந்தபோது. .அந்த அழைப்பு.. விகடன் அலுவலகத்திலிருந்து..
நண்பர் அருள் எழிலன் பேசினார்
நண்பா விகடனில் புகழ் பெற்ற தலைவர்கள் பற்றி ஓரு தொடர் சேகுவேரா விலிருந்து துவக்கறோம் டைட்டில் நாயகன் கண்ணன் சார் நீங்க எழுதினா நல்லாஇருக்கும்னு பிரியப்படுறார்
இது அரசியல் தொடர்.. நான் எப்படி.?
உங்க மார்லன் பிராண்டோ படிச்சிருக்கார் நீங்க எழுதினா நல்லா வரும்னு பிரியப்பட்றார்
அது ஓரு புக்லருந்து எழுதினது சொந்த சரக்கு எதுவுமில்ல .. வேற நம்க்கு உலக சினிமா அது இதுன்னா ஓகே அரசியல் எழுதி அனுபவம் இல்ல பாஸ். சட்டென லைனில கண்ணனே வந்தார் பாஸ் உக்களால முடியும் நீங்கதான் எழுதறீங்க.. பிராண்டோ படிச்சேன் அதுக்கப்புறம்தான் முடிவு செஞ்சேன் உஙகளால இந்த தொடரை எழுதமுடியும் டைமில்ல ஆகஸ்ட் 15 துவக்கறோம் இப்பமுடிவு செஞ்சாதான் எல்லாம் நடக்கும் . திங்க கிழமை பர்ஸ்ட் சேப்டர் தரணும்
அவர் ஓரு பக்கம் மள மளவென பேச நானோ குழப்பத்தில் பாஸ் கொஞ்சம் பத்து நிமிஷம் டைம் கொடுங்க சொல்றேன் என பர்மிஷன் வாங்கிக்கொண்டு அமராவதி கரையில் அமர்ந்நேன்..
எதிரே அமராவதி.. அணையிலிரருந்து பெருகிசுழித்து ஓடும் வெள்ளம்
இந்த திரைக்கதை நிச்சயம். ஜெயிக்கும் அதற்கு டைவர்ஷன் இருக்ககூடாது.. குறைந்தது 6 மாசமாவது ஏறி இறங்கனும். தனுஷ்க்கு செட் ஆகும்.. 

(
நேற்றைய பதிவின் தொடர்ச்சி..)
ரா. கண்ணன் அழைப்பை தட்டமுடியவில்லை. அதே சமயம் இது என் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் இதற்கு முன் லவ்டுடேயில் பணிபுரிந்தபின் இரண்டுவருட தீவிரமுயற்சியில் விக்ரம் சூர்யா இளையராஜா என பலரிடமும் கதை சொல்லி ஓகே வாகி அடுத்தகட்ட நகர்வில் உண்டான சிக்கலால் தள்ளிப்போய் வெறுத்துபோனபின்தான் பைசைக்கிள் தீவ்ஸ் எழுதி எழுத்தாளனாகி திவிர இலக்கியவாதியாக மாறி மன அரிப்பை தீர்த்துக்கொண்டோம் ..இது இரண்டாம் முறை மீண்டும் எழுத்தின்பக்கம் போனால் இயக்கம் தள்ளிபோகும்.. அதே சமயம் விகடன் போன்ற வாய்ப்பையும் தள்ளிவிட விருப்பமில்லை.
என்னை நம்பி உதவி இயக்குனராகும் கனவுடன் அப்போது என்னுடன் வந்த சில உதவியாளரடம் இப்படி ஓரு வாய்ப்பு வந்திருக்கிறது என குழப்பத்துடன் சொல்ல நான் எதிர்பார்க்காத விதமாக அவர்கள் உற்சாகடடுத்தினர். செல்வம் அமுத சுரபி இருவரும் சார் சினிமாவை விட விகடன் வாய்ப்பு பெரிய விஷயம் சார் எத்தனையோ பேர் ஏங்கிக்கிட்ருக்காங்க உங்களுக்கு வாய்ப்பு தானாவருது விட்றாதீங்க எனக்கூற தங்களைப்பற்றி கவலைப்படாமல் என்னைப்பற்றிய அக்கறையுடனான அவர்கள் வார்த்தைதான் என் மனதை மாற்றியது.
வாரம் ஓரு தலைவர் 13 வாரம் தான சார் சட்டுனு போயிடும். அதைவச்சே நீங்க ப்ரொட்யுசர ஈசியா மீட் பண்ணலாம் கெத்தா இருக்கும் என உற்சாகபடுத்த நானும் குழப்பம் விலகி முடிவுக்கு வந்தேன் எழிலனுக்கு போன் செய்து கண்ணனிடம் சொல்லசொல்லி சொன்னது போல திங்களன்று கட்டுரையுடன் வருவதாக உறுதியுடன் கூறினேன்.
இந்த முடிவை நான் எடுப்பதற்கு பின்னிருந்தள்ளிய இன்னோரு விஷயம் இந்த சமுகத்தின் மீது எனக்கிருந்த அளவற்ற காதல். கடுகளவேனும் என் கை நீரை சமுகத்தின் இதயத்துக்குள் இடம்மாற்றகிடைத்த ஓரு அரிய சந்தர்ப்பம்.
எனக்குள் விரிந்துகிடந்த மானுடம் அளப்பரிய வானத்திலிருந்து சிற்றளவு இன்னொருவருக்கு விண்டுகொடுக்க ஓரு வாய்ப்பு.உற்சாகம் பற்றிக்கொள்ள கையாடு அப்போதே புறப்பட்டு சென்னைக்கு மறு நாள் வந்து சேர்ந்தோம் .
வெறும் 13 வாரம் என துவங்கிய அத்தொடர் பிற்பாடு இரண்டுவருடங்கள் என் வாழ்க்கையை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கவகல்ஸை.
அருள் எழிலன் சில நூல்களை பரிந்துரைத்தது போக சில ஆங்கிலநூல்களலயும் வாங்கி அசுரவேகத்தில் படித்து எழுத துவங்கினேன். மணிக்கு 100 பக்கம் என்பது எனது ஆவரேஜ் வேகம் 150ஆக மாறியது.
சேகுவேரா இறுதிகாட்சி எழுதிக்கொண்டிருந்தபோது கண்ணீர்பொலபொலவெனகொட்டி பேப்பரைநனைத்து விட்டது..
நான் அழுவதை பார்த்து என் தாயாருக்கு அதிர்ச்சி கண்ணை துடைத்துக்கொண்டு வெளிபே வந்தேன் மாடியில் நீல வானம் .. வாழ்க்கையின் சிறந்த தருணமாக உணர்ந்தேன்.. சினிமாவைகாட்டிலும் எழுத்தும் சமூகமூம் உயர்ந்தது
நாம் செய்வது உன்னத பணி என்பதை முழுமையாக உணர்ந்தேன்.
ஓரு வாரத்திற்காக எழுதிய சேகுவேரா பக்க மிகுதியால் இரண்டு வாரமாக பிரிக்கப்பட்டது.. கண்ணன் எளிமையாக எழுத உதவிசெம்தார்..
முதல்வாரத்திற்கு கிடைத்தவரவேற்பு நான்கு வாரமாக மாறி அடுத்ததாக சார்லி சாப்ளின்எட்டாக மாறி பெரியார் அமபேத்கார் 13 வ்ரங்களாக விரியத்துவங்கியது.
நாயகன் தொடரின் முழுமையான வெற்றி பெரியாரும் அம்பேத்காரும்தான்.
பல பிராமணகுடும்பங்களின் உயர் சாதி வீடுகளுக்குள் அவர்களை நுழையவைத்ததும்அவர்களை வாசிக்கவைத்ததும் அத்தொடரின் மகத்தான சாதனை. சமுக மாற்றத்தில் அத்தொடருக்கும் சிறுபங்கிருப்பதை
இந்த சாதனையில் நான் ஓரு கருவியே..நான் அத்தொடரை எழுத காரணமாக இருந்த பதிப்பாளர் சீனிவாசன் ஆசிரியர். ரா .கண்ணன் மற்றும் நிருபர் அருள் எழிலன் மற்றும் பிழைதிருத்துவோர் வடிலமைப்பாளர்கள் விகடனின் ஒவ்வொரு ஊழியருக்கும் பங்கிருக்கிறது.. அனைவருக்கும் என் நன்றி.
ஓருவேளை இத்தொடரை எழுத மறுத்து அடுத்த சில மாதங்களில் இயக்குனராகி படமும் வெற்றி பெற்று நான் ஓரு நட்சத்திர இயக்குனராகவும் ஆகியிருக்கலாம்.
ஆனால இந்த மன நிறைவான வாழ்க்கை வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே..
ஓரு மனிதனின் வாழ்க்கையை அவன் மட்டுமே தீர்மானிக்க முடிந்தால் அது உண்மையில் போலியான உணர்ச்சிகளை கொண்டதாக இருக்கும் . அதே வாம்க்கை சமூகத்தால் தீர்மானிக்க படும் போது அது கொடுந்தணலில் வெந்துருகுவதானதாக இருந்தாலும் தேனாய் தித்திக்கும்..
அந்த இன்பம் எல்லையற்ற மனித நேயத்தால் மட்டுமே சாத்தியமாகும்

என்னை போல பலருக்கும் அந்த வாழ்க்கையை பரிசளித்து வரும் தமிழகத்தின் மனசாட்சியான விகடனுக்கு 100ம் ஆண்டு வாழ்த்துக்கள்

October 11, 2016

காலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984)


 இல்மாஸ் குணே (1937-1984)
சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது .. நெஞ்சி புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மி பெரு மூச்சு விடுவது  எப்போது  தெரியுமா?

அவன் படைப்பு விருது பெறும் அறிவிப்பை கேட்கும் போதுதான் அதுவும் உலகின் தலை சிறந்த விருதான கான் விருது கிடைகிறதென்றால் அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை

அந்த அறிவிப்பு ஒரு இயக்குனரின் காதுகளை அடையும் போது ஒருவேளை அப்போது அவர் தன்  குழந்தையுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருக்கலாம் அல்லது மனைவியியுடன் அமர்ந்து ஒரு மொக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக்கொண்டி ருக்கலாம் .அல்லது படப்பிடிப்பில் சரியாக நடிக்கத்தெரியாத நடிகனோடு மல்லுக்கட்டலாம் அல்லது ஒரு அழகான நடிகையுடன் விடுதியில் அமர்ந்து பாலஸ்தீன இஸ்ரேல் ப்ரசனை பற்றி பேசிக்கொண்டிருக்கலாம் .

ஆனால் விருது அறிவிப்பு வரும் போது சிறையில் இருந்தால்........?.

 நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை அங்கிருக்கும் சிலரோடு மகிழ்ச்சியாகவோ வேதனையாகவோ பகிர்ந்துகொண்டு எப்படி அந்த பரிசை யார் வாங்க அனுப்பலாம் என யோசிப்போம் .ஆனால் சிறைக்கதவை உடைத்துக்கோண்டு தப்பித்து வெளியேறி  தனது நாட்டிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு சென்று அந்த கான் விருதை பெறுகிறார் என்றால் அது எப்பேர்பட்ட சாகஸம்


.அப்படி ஒரு அசாத்தியாமன காரியத்தை செய்தவர்தான் இல்மாஸ்  குணே. உலகின் தலைசிறந்த இயக்குனர்களூள் ஒருவராக போற்றப்படுபவர்  
.. சிறைக்குள் இருக்கும் இளம் குற்றவளீகளை பற்றிய yol  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துக்கொண்டவர் .

துருக்கியின் குர்த் இனத்தை சார்ந்த சாதாரண பஞ்சு மில தொழிலாளிகளின் மகனாக பிறந்தவர் இல்மாஸ்  குணே.

 அவரது வறுமை சூழந்த வாழ்க்கை பின்னாளில் அவருக்கு உறுதியான படைப்பு கட்டுமானத்தை உருவாக்கி தந்து சிற்ந்த கலைஞ்னாக பரிணமிக்க வகை செய்த்து. சட்டமும் பொருளாதாரமும் படித்து பட்டம் பெற்றபின் யில்மாஸை சினிமா கவர்ந்திழுத்து கொண்டது. 

அக்காலத்தில் துருக்கி சினிமா பல இளம் துருக்கியர்களை உருவாக்கீகொண்டிருந்தது. அதுவரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட  நாடகீயமான குடும்பக்கதைகளை மட்டுமே பார்த்து வந்த துருக்கி சமூகம் முதல் முறையாக சினிமா எனும் கலையின் முழுமையான அனுபவத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது . குறிப்பிடத்தக்க நல்ல இயக்குனர்கள் கவனம் பெற துவங்கிய காலம் அது.. அதில் ஒருவர் ஆதிப் இல்மாஸ்  ,

பல துருக்கிய இளைஞர்களை போல அக்காலத்தில் சினிமாவால் ஈர்க்கப்ட்ட இல்மாஸ்  இயக்குனர் ஆதிஃப் யில்மாசுடன் உதவி இயக்குனராக சேர்ந்துகொண்டார்.  பயிற்ச்சிகாலத்தில்   திரைக்கதையில் அவர்காட்டிய செழுமையான பங்களிப்பு அவரை நடிகராக முன்னே கொண்டு வந்த்து . ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து துருக்கியின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

வெறுமனே நடிகராக இருப்பதை மட்டும் விரும்பாத இல்மாஸின் படைப்புலகம் அவரை இலக்கியத்தின் பாலும்  உந்தித்தள்ளியது. மார்க்சியம் வசீகரித்தது.அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான அவரது முதல் நாவல் கம்யூனிஸ்ட் 1961 ல்வெளியானது. வெளியான அதே வேகத்தில் போலீஸ் அவரது வீட்டுக்கு வந்து சிறையிலடைத்தது. கிட்டதட்ட 18 மாதங்கள் சிறைவாசம். இனி இல்மாஸ்  அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக இருப்பார் இதுவே முதலும் கடைசியுமான சிறை வாசம் என அரசும் மற்றவர்களும் நினைத்த்னர். ஆனால் சிறை அவருக்கு  அதிக்ராத்தின் மீதான் கோபத்தையும் சுதந்திரத்தின் மீதான தாகத்தையும் அதிகப்படுத்தியிருந்த்து என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

 நடிப்போடு நிற்காமல் தன் கருத்துக்களையும் கற்பனைகளையும் திரைப்படத்தின் மூலம்  வெளிப்படுத்தவேண்டும் என முடிவு செய்தார். இயக்குனராக மாறினார் .1966ல் அவரது  முதல் திரைப்ப்டம் At aurat sila வெளியானது .


1968ல் சொந்தமாக திரைப்படகம்பெனி ஒன்றையும் துவக்கிய இல்மாஸ்  அத்ற்கு guney filmclick  என பெயர் வைத்துக்கொண்டார். அக்கம்பெனிமூலம் அடுத்தடுத்து  umut( jhope)1970,agit(elegy)1972, aci(pain)1971, the hopeless1971 எனும் திரைப்ப்டங்களை தயாரித்தார். இப்படங்கள் அனைத்தும் அதன் தலைப்புகள் நமக்கு உனர்த்துவதைபோல துருக்கி மக்களின் உள்ளத்தை பிரதிபலித்தன
இளைஞர்கள் பலர் இல்மாஸின் திரைப்படங்களுக்கு தீவிர ரசிகர்களாகியினர். 

அரசாங்கத்துக்கு எதிரான கொந்தளிப்புகள் அதிகமாவதை தொடர்ந்து . ..இல்மாஸ்  மீண்டும் 1972ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். ஆனால் அதுவரை அடுத்தடுத்த தன் திரைப்படங்களுக்கு கதை எழுத ஓய்வுகிடைக்கமல் அல்லாடிக்கொண்டிருந்த இல்மாஸ் குணேவுக்கு அந்த சிறைநாட்கள் பெரும் உதவியாக இருந்தன. . 

 துருக்கி அரசு சிறைக்கு கொண்டுசென்றபோது the miserable  எனும் திரைப்படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பாதியில் நின்ற அத்திரைப்படத்தை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் என்பவர் தொடர்ந்து இயக்கி படத்தை முடித்து வெளியிட்டார்.

தொடர்ந்து செரீப் அவர் சிறையில் எழுதிய அனைத்து திரைக்கதைகளையும் ஏறக்குறைய 12 ஆண்டுகள் இயக்கி வெளியிட்டு தன் ஆசானுக்கு பெருமை சேர்த்தார்.


1974ல் மனித உரிமைகளுக்கான் அமைப்பான அம்னெஸ்டி இண்டர் நேஷனல் இவ்விவகாரத்தில் தலையிட்ட காரணத்தால் இல்மாஸ் குணே விடுத்லை செய்யப்பட்டார். ஆனால் அந்த வருடமே குணே மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒரு நீதிபதியை இரவு நேர மதுவிடுதியில் சுட்டுகொன்றதாக அவர்மேல் சுமத்தபட்ட வழக்கில் கிட்டத்தட்ட 19 வருட சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

இக்காலத்தில் அவர் திட்டமிட்டிருந்த் the herd 1978,the enemy 1979 இரண்டு திரைக்கதைகளையும் அவரது இன்னொரு உதவியாளரான zeki okten இயக்கி வெளியிட்டார் . இதில் தி எனிமி திரைப்படம் 1980ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்ப்ட விழாவில் சிறப்பு பரிசை பெற்றது .

1980ல் குணே சிறையிலிருக்கும்போது மீண்டும் அவரது திரைக்கதை ஒன்றை அவரது உதவியாளர் செரீஃப் கோரன் களத்தில் நின்று இயக்கியிருந்தார் yol  (the road) எனும் அப்படம் தான் 1982பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்ப்ட விழாவில் பங்கேற்றது .

Yol படத்தின் திரைக்கதை துருக்கி சிறயிலிருந்து வெளியேறும் மூன்று குர்திஷ் இனத்தவரை பற்றியது . மூன்றும் வெவ்வேறு கதைகள்
முதல் கதை  நாயகன் செயீத் அலி ஊருக்கு திரும்புகிறபோது அவன் மனைவி செரீப் செஷர் காமத்தொழில் செய்பவளாக அவனது குடும்பத்தாரல் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு அவனிடம் ஒப்படைக்கபடுகிறாள் .

ஊரும் குடும்பத்தாரும் சேர்ந்து அவளுக்கு தண்டனையாக அவள் கண்வன் கையாலே அவளைக்கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கின்றனர்
இருவரும் பனிப்பாலைவனத்தில் செல்கிறபோது அவன் மனைவி விபத்தில் சிக்கிக்கொள்ள அவன் அவளை காப்பாற்ற போராடுகிறான். இறுதியில் மனைவி இறந்து போகிறாள்.. இது ஒருவகையில் குடும்பத்தாரின் நிர்பந்தத்திலிருக்கும் மனைவியை  அவன் கையால் கொன்ற பாவம் கண்வனை  அண்டாமல் தன் மனைவி தன்னை காப்பற்றிவிட்டதாக அவன் மகிழ்ந்தாலும்  இறுதியில் அவனது மனசாட்சி மீண்டும் அவனை சிறைக்கு செல்லும்படி இம்சிப்பதுன் கதை முடிகிறது

இரண்டாவது கதையின் நாயகன் மெஹ்மத் சாலிஹ்   மைத்துனரோடு சேர்ந்து  போலீசை சுட்டுகொன்ற வழக்கில் தேட்ப்படும் குற்றவாளீயாகிறான்.
அவனது குடுபத்தார் இச்செயலால் அவனை வெறுக்கின்றனர் . ஒருபக்கம் போலீஸ் இன்னொருபக்கம்  மனைவியின் குடுபத்தார் இவர்களுகிடையில் தடுமாறும் நாயகன் மெஹ்மத் தன் மனைவியிடம் உண்மைகளை சொல்லி இருவரும் இந்த ஊரைவிட்டு ஓடிபோய் வெளியூரில் பிழைக்க திட்டமிடுகின்றனர். ரயிலில் தப்பிக்கும் இருவரும் நீண்ட நாட்களாக அழுத்தி வைத்திருந்த காமத்தை தீர்த்துக்கொள்ள  கழிவறையில் ஒன்றினைகின்றனர்.

  நீண்ட நேரமாகியும் வெளிவராத காரணத்தால் சக பயணிகள் கோபத்தில் கொந்தளிக்க சில ரயில் அதிகாரிகள் வந்து அவர்களை காப்பாற்றி  அடுத்து வரும் ஸ்டேஷனில் இருவரையும் ஒப்படைக்கும் பொருட்டு தனியாக அமரவைக்க படுகின்றனர்.ஆனால் அவனது மனைவியின் குடும்பத்திலிருந்து அவர்களை விரட்டி வரும் இளைஞன் ஒருவன் தன் கையில் மறைத்து வைத்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொலை செய்வதுடன் மெஹ்மத்தின் கதை முடிகிறது .

மூன்றாவது தன் கிராமத்துக்கு திரும்பும் ஓமரின் கதை .ஓமரின் கிராமம் எல்லைப்பகுதியில் இருப்பதால் ராணுவத்துக்கு தெரியாமல் சில கைதிகள் தப்பிச்செல்ல உதவுகிறான் . ஓமரின் அண்ன் கடத்தல் தொழில் செய்து வந்தவன் . வேறு வழியில்லாமல் அதே தொழிலையே செய்ய நேரும் ஓமர் தனது அண்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தையும் பரம்பரை வழக்கப்படி தனதாக்கிக்கொள்கிறான்

கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்துக்கான் விருதை முன்கூட்டி அறிவிக்கப்பட விழாவில் விருதை பெற வேண்டி சிறையிலிருந்த சில அதிகாரிகளின் துணையோடு தப்பித்து பிரான்சுக்கு வந்து விழாவில் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டார் இல்மாஸ்  
.
அழுக்கு அரசன் என விமர்சகரகளால் செல்லமாக கருதப்பட்ட ல்மாசின் வாழ்க்கை ஆச்சரயப்படும் வகையில் உலக சினிமாவின் இன்னொரு ஆளுமையான் இத்தாலியின் பியரோ பசோலினியோடு பல வகைகளில் ஒத்திருப்பது ஒரு ஆச்சர்யமான் பொருத்தப்பாடு
இருவருமே அதிகாரத்தை படைப்புகளின் மூலம் கடுமையாக எதிர்த்தவர்கள்
சிறைத்தண்டனைகளுக்கு அஞ்சாதவர்கள் . பலமுறை ஆட்சியாளர்களின் கைதுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். கம்யூனிஸ்டுகள் 

இருவருமே படைப்பாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள்.  திரைப்படங்களுக்கு முன்பாகவே நாவல்கள் எழுதியவர்கள் . கவிஞர்கள். கலகக்காரர்கள்
சிறையிலிருந்து தப்பித்த காரணத்தால் துருக்கி அரசாங்கம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை  அறிவித்தது  அதனால் அதன்பிறகு  பிரான்சில் தஞ்சமடைந்த இல்மாஸ் குணே  அடுத்த ஆண்டே பிரெஞ்சு அரசாங்கத்துக்காக the wall (1983) எனும் படத்தை இயக்கியிருந்தார்

. சிறையிலிருந்து தப்பிக்கும் பிஞ்சு குற்றவாளிகளை பற்றிய திரைக்கதை இது.
,இத்திரைப்படம் வெளியாகிய அடுத்தவருடமே புற்று நோய் காரணமாக பாரீசில் 1984ம் ஆண்டு தன்  வாழ்க்கை திரைக்கதைக்கு இறுதிகாட்சியை அவராக  எழுதிக்கொண்டார்.

நன்றி : பல்சுவை காவியம் இதழ் 



புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...