April 24, 2015

தமிழ் ஆலமரம் – ஜெயகாந்தன்





(கடந்த ஏப்ரல் 21 ம் தேதியன்று பனுவல் அரங்கத்தில் நடைபெற்ற ஜெகாந்தன் புகழஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை – திருத்தப்பட்டது)






                 உலக வரலாற்றின் போக்கினை திசை திருப்பிய ஒரு சில மகத்தான புத்தகங்களுள்  மார்க்ஸின் மூலதனத்துக்கும் அடுத்தபடியாக போற்றப்படும் புத்தகம் சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதிய உயிரினங்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் எனும்  நூல்.
இருபதாம் நூற்றாண்டின்  உயிரியல்   கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கிய அந்நூlல் ஆதாம் ஏவாள் கதைகளை மறுத்து கடவுளின் இருப்பையே கேள்விக்குரியதாக்கியது.
ஆனால் அப்படிப்பட்ட நூலை எழுதியவரே   மத நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவராக பயந்து வாழ்ந்தார். கடைசி வரை அவர் தன்னை ஒரு நாத்திகன் என அறிவித்துக்கொள்ள பயந்தார். . இன்னும் சொல்லப்போனால் கார்ல் மார்க்ஸ் அவர்கள் தன் மூலதனம் நூலுக்கு அவரைத்தான் முன்னுரை எழுதி தருமாறு கேட்டுக்கொண்டார் அப்போது அதற்கு அவசரமாக மறுப்பு தெரிவித்து ஏற்கனவே மதரீதியாக பல எதிர்ப்புகளை  நானும் என் குடும்பமும் சந்தித்து வருகிறோம் . இப்போதைக்கு இந்த புத்தகத்தின் முன்னுரை மூலம் மத சம்பந்தபட்ட ப்ரச்னைகளுக்குள் மேலும் தான் சிக்க விரும்பவில்லை மன்னித்து விடுங்கள் என எழுதியிருக்கிறார்..
டார்வின் கதையே இப்படியெனும் போது ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் இறுதிக்காலத்தில்  ஹர ஹர சங்கர எழுதியதைக்குறித்தோ எனக்கு சாதிகள் மீது நம்பிக்கை இருக்கிறது என ரவி சுப்ரமணியன் எடுத்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் கொடுத்திருப்பதையோ நாம் பெரிதாக எடுத்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம்  மனிதன் என்பவனே முரண்பாடுகளின் மூட்டை தான்
குறைகளுடன் கூடிய மனிதனே முழுமையானவன் ஆகிறான்
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் மதிப்பீடு செய்யும் போது ஆப்பிளின் அழுகிய பாகங்களை கத்தியால் நறுக்கிவிடுவது போல  அவனது முரண்களை வெட்டி த்தள்ளிவிடவேண்டும். கையில் என்னமிஞ்சுகிறதோ அதுதான் அவன்

வாழ்க்கை முழுக்க ஒரே கருத்தை நம்பினால் அவன் எழுத்தாளன் இல்லை.அவன் அந்த கருத்தின் அடிமை .
காலம் தோறும் தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களுக்கேற்ப அவன் மாற வேண்டிய நிர்பந்தங்கள் அவனுக்குள் நிகழ்கிறது. அதன் தர்க்கங்கள் அவன் மட்டுமே அறிந்தவை .
ஒருவனது கருத்தை வேண்டுமானால் அவன் தீர்மானிக்கலாம்
பொது வாழ்வின் அரசியல் முகத்தை அவனுக்கு நேரும் சாதக பாதக அமசங்களும் மான அவமானங்களுமே தீர்மானிக்கின்றன.
பொதுவாழ்வில் அவரைப்பற்றி அறிந்த நாம் அவர் தனி வாழ்வில் என்ன மாதிரியான மனப் பிரச்னைகளை எதிர்கொண்டார்  அவருடைய கோபம் என்ன? அவமானங்கள் என்ன? தோல்விகள் என்ன? வருத்தங்கள் என்ன? கண்ணீர் என்ன? என்பது பற்றியெல்லாம் தேடப்போனால் ஒருவேளை இந்த முரண்களுக்கெல்லாம் விடை கிடைக்கலாம்.

கம்யூனிஸ்டாக இருந்து காங்கிரஸ்காரனாக மாறுவதும்
நாத்திகத்துக்காக இதிகாசங்களை படிக்க போய் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதும்  எழுத்தாளன் திட்டமிட்டு நிகழ்த்துவதல்ல
ஒரு முறை அவரது தர்க்க முரண்கள் குறித்த கேள்விக்கு ஜெயகாந்தன் பதில் சொல்லும்போது
ஆமாம் அப்போது அப்படி நினைத்தேன் அப்படி எழுதினேன் .. இப்போது இப்படி நினைக்கிறேன் இப்படியாக எழுதுகிறேன்.
நான் யாரையும் போய் சட்டையை பிடித்து இழுத்து நான் சொல்வதை போல நட என உத்தரவிட்டதில்லை .. அப்படி நடக்கச்சொல்லி வற்புறுத்தியதும் இல்லை நான் நானாக இருக்கிறேன் நீங்கள் நீங்களாக இருங்கள்
என தன் நிலையை உறுதியாக தெரிவித்தார்.
இதுதான் ஜெயகாந்தன் . அவர் கடவுள் அல்ல அவரும் சாதாரண மனிதர்தான் . ஆனால் அவரைபற்றி பேசும்போது பலர் அவரை கடவுளாக ஆக்கிவிட்டார்கள் . அவருக்கிருந்த ப்ரச்னையே அவரை கடவுளாக பார்க்கும் அவரது நெருங்கிய வட்டம்தான். .

அந்த வட்டம் அவருக்கு தேவையாக இருந்தது.
அவர்கள் தான் அவரது திமிரின் ஊற்று ..
அந்த திமிர்தான் அவரது படைப்புகளின் ஊற்று

இதனால் அவர் தான் ஒரு எழுத்து கடவுள் என்பதை முழுமையாக நம்பினார்.விமர்சனங்களை அவர் ஏற்கமுடியாமல் போனதற்கும் இதுவே  காரணம்.

மனித வாழ்க்கை எப்படி அற்புதமானது .. அதை நாம் எப்படி அற்ப காரணங்களுகாக வீணாக்குகிறோம் என்பதை எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்

எழுத்து கொடுத்த திமிரில் எல்லா அதிகாரங்களையும் எதிர்த்து நின்றவர்
எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என பெயர் பெற்றவர்
இரும்பு வளையும் ஜெயகாந்தன் வளையமாட்டான் எனும் சொல்லுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் .

இந்த தனித்த குணம்தான் ஜெயகாந்தன்.

அப்படிப்பட்ட நம்மை விட்டுசென்ற ஒரு மகத்தான் எழுத்தாளனை குறித்த நினைவுகூறல் நிமித்தமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டம் பெருமை மிக்கது.

இந்த பெருமை மிக்க காரியத்தை நிகழ்த்தும் பனுவல் அரங்கத்திற்க்கு ஒரு எழுத்தாளனாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

அதே சமயம் என்னையும் பெருமக்களோடு சக எழுத்தாளனாக பேச அழைத்தமைக்கு என் பணிவும் வணக்கங்களும்.

இங்கு வந்திருக்கும் அய்யா நெடுமாறன் அவர்களும், பேராசிரியர் வீ அரசு  தோழர் சிகரம்  செந்தில் நாதன்   அவர்களும் என்னிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் . அவர்கள் மட்டுமே கூட இக்கூட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் .,
என்றாலும் என் தலைமுறை சார்பாகவும் இக்கால எழுத்து சார் சூழலின் பிரதிநிதித்துவமாகவும் நான் பேசுவது சரியென்றே உணருகிறேன்
ஜெயகாந்தன் என்ற பெயர் என் கல்லூரி காலத்தில் மிகவும் என்னை கோபப்படுத்தியது.

அதற்கு இரண்டு காரணங்கள்

இலங்கைத் தமிழர் ப்ரசனை கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் கல்லூரி மாணவர்களான நாங்கள் தீவிர போராட்ட களத்தில் இருந்தபோது அவர் ஐ பி கே எப் புக்கு ஆதரவாக சோ வுடன் இணைந்து ஊர் ஊராக கூட்டம் போடு பேசியபடி கடைசியில் எங்கள் ஊரான செங்கல்பட்டுக்கும் வந்திருந்தார்.
இது ஒரு காரணம்  

அதற்கும் முன்னதாக இன்னொரு காரணம் ஒரு பெண் தொடர்பானது . உண்மையில் அந்த பெண் அந்த கேள்வியை கேட்காவிட்டால் இன்று நான் எழுத்தாளனாகவே இருந்திருக்க முடியாது

கல்லூரியில் அப்போது என் தோழியாக இருந்த பெண் . அவளோடு நான் பேச வெகுநாட்கள் முயற்சித்து கடைசியில் ஒரு  சனிக்கிழ்மை மதியம் அவள் எனக்கு பேச சம்மதித்து காத்திருந்தாள். மிகவும் பதட்டமான அந்த சந்திப்பில் அவள் கேட்ட முதல் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டேன்., ஜெயகாந்தன் கதைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அவருடைய கதைகளில் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்.  எனக்கு இந்த கேள்வி கொஞ்சம் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. கல்லூரி இலக்கிய போட்டிகளில் நான் அடிக்கடி கலந்து கொண்டதால அவள் அந்த கேள்வியை கேட்டிருக்கவேண்டும். ஆனால் அப்போது பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் புகழ்பெற்ற சமயம் . சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர் ,ராஜேஷ்குமார் இவர்களை மட்டுமே படித்து வைத்திருந்த எனக்கு ஜெயகாந்தன் பெயர் அறிமுகமாயிருந்ததே தவிர எதையும் வாசிக்க நேரவில்லை. என் அம்மா மட்டும் அடிக்கடி அவரது புத்தகங்களை வாசிப்பதை பார்த்திருக்கிறேன். மேலும் அக்காலத்தில் ஊடகங்களில் அவர் பரபரப்புகள் முடிந்து சுஜாதா பால்குமாரன் பற்றிய பேச்சே அதிகமாக இருந்த நேரம்.

அதன் காரணமாகவொ என்னவோ நான் ஜெயகாந்த்னை படிப்பதற்கான சூழல் நேரவில்லை. அதன் பிறகு  அந்த சந்திப்பு முழுமையாக தொடரவில்லை. முதல் கேள்விக்கே ஒழுங்காக பதில் சொல்லாமல் பேச்சை மென்று முழுங்கிவிட்டதால் அந்த நட்பூ வலுவானதாக அமையவில்லை.
ஜெயகாந்தன் என்ற பெயரை யாராவது சொன்னால் நெடுநாட்களுக்கு அந்த பெண் என்னிடம் கேட்டதும் அவளுக்காக நான் கல்லூரியில் வகுப்புக்கே செல்லாமல் காத்திருந்த காலங்களுமே ஞாபகத்துக்கு வரும்
அதன் பிறகு ஜெயகாந்தனை நான் நூலகங்களில் தேடப்போக கூடவே ஜானகிராமன் புதுமைப்பித்தன் செல்லப்பா மவுனி மற்றும் சுந்தர்ராமாசாமி வண்ணதாசன் வண்ண நிலவன் என புதிய உல்கமே திறக்க துவங்கியது. பிற்பாடு இதுவே என் வாழ்க்கையின் திசையை தீர்மானித்து எழுத்தாளனாகும் கனவை எனக்குள் விதைத்து,

ஒருவகையில் இன்று  எழுத்தாளன் என்ற பெயர் எனக்குள் ஒட்டிக்கொண்டிருக்குமானாள் அதற்கு ஜே கே எனும் ஆளுமையும் ஒரு முழு முதற்காரணம. அவ்வகையில் இகூட்டத்தை அந்த மிகப்பெரிய ஆளுமைக்கு நான் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக பயன்படுத்த விழைகிறேன்.
துவக்க காலத்தில் அவருடைய சிறுகதைகள் எனக்கு ஈர்க்கவில்லை. நான் மட்டுமல்ல என் சார்ந்த இன்றைய தலைமுறைகள் பலருக்கு ஒரு புதுமைப்பித்தன் குபாரா போல ஜே கே வின் சிறுகதைகளில் வசீகரமில்லை என்பதே உண்மை.

ஆனால் என்னை மிகவும் ஈர்த்த புத்த்கம் ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள்  தொடர்ந்து அவருடைய இஅல்க்கியவாதியின் சினிமா அனுபவங்கள் நூலையும் வாசித்தேன்.

தமிழக வரலாற்றை முழுமையாக ஒருவன் புரிந்துகொள்ள வேண்டுமானால் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஜே கே அவர்களின் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் இரண்டையும் வாசித்தால்தான் அவனுடைய புரிதல் முழுமையடையும் . அந்த அளவிற்கு ஜே.கே அந்த புத்த்கத்தில் என் அரசியல் புரித்லைவளர்த்தெடுத்தார்.

தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் அவர் பேசிய பேச்சுக்களின் உரைகள் ஆகியவற்றை வாசிக்க வாசிக்க அந்த பிரம்மாண ஆளுமை என்னை வசீகரித்துக்கொண்டேயிருந்தது. பிற்பாடு அவர் ஆசிரியராக பணி புரிந்த ஞான ரதம் சிற்றிதழ் தொகுப்பு வாசிக்க கிடைத்தபின்  அதில் வந்த பல கடிதங்கள் அவரது நாவல்களை விமர்சித்து எழுதப்பட்டிருக்க அத்ன் பின் தொடர்ந்து அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் கங்கை எங்கே போகிறாள் என தொடர்ந்து வாசிக்க துவங்கினேன் . அவரது சிறுகதைகள் என்னை இப்போது ஈர்க்க துவங்கின .

துவக்கத்தில் என்னை வசீகரிக்காத அதே ஜெயகாந்தன் பின் துரத்திசென்று படிக்குமளவிற்கு வசீகரிக்க துவங்கினார்.  இப்போது பார்க்கும் போது அவர் கடந்தநூற்றாண்டு தமிழ் கலாச்சார வரலாற்றை தாங்கிகொண்டு நிற்கும் பிரம்மாணட துணாக  தெரிகிறார்.

ஒரு எழுத்தாளன் இருப்பு என்னது எத்தனை உயர்நத்து என தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக்கட்டியவர்.

அவர் அளவுக்கு தன் மானத்துடன் வாழ்ந்த எழுத்தாளன் தமிழ் நாட்டில் எவரும் இல்லை என உரத்து சொல்ல முடியும்.

அதே போல அவர் அளவுக்கு  வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து தன் போக்கில் சுதந்திரமாக வாழ்ந்தவர் எவரும் இல்லை.

பணம் கொழித்துகிடக்கும் அம்பானிகள் கூட அவரைபோல அத்தனை ரசித்து வாழ்ந்திட முடியாது .

அவரது வாழ்க்கை பூரணமான வெற்றி என்பதற்கு இதுவே சான்று
மறைந்த சின்னகுத்தூசி அய்யா அவர்களை  அவர் அப்போது வசித்த திருவல்லிகேணி மேன்ஷன் அறையில் ஒரு கட்டுரைக்காக சந்திக்க நேர்ந்த்து.. அவரோடு முதல் சந்திப்பாக இருந்த காரணத்தால் புது எழுத்தாளர்கள் பற்றி பேச்சு துவங்கி சட்டென இப்பல்லாம் எவனையாவது எழுத்தாளர்னு சொல்லமுடியுமா என சொல்லி ஜெயகாந்தனை பற்றி பேசத் துவங்கினார்.

அப் போது ஜெயகாந்தன் பழகிய பயணம் செய்த அனுபவங்களை விலாவரியாக கூறிக்கொண்டிருந்தார். கிட்டதட்ட மூன்று மணிநேரம்  ஒரு பெரு மழை போல அவரோடு சந்தித்த தருணங்கள் பயணம் துவங்க காரணம் என ஒவ்வொரு நொடியையும் தன் ஞாபகத்திலிருந்து எங்கே இறங்கினார்கள் எங்கே குளித்தார்கள் எப்படி சாப்பிட்டார்கள் .. அவர் எப்படி பாடினார் யார் யாரிடம் எப்படி பேசினார் என விலாவாரியாக் கூறினார் . ஒரு காதலன் தன் காதலியைகூட அப்படி வர்ணிக்க மாட்டான். நான் கூட இவர் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கிறாரோ என அப்போது நினைத்தேன் . ஆனால் பிற்பாடு அதே போன்ற அனுபவத்தை பலரும் சொல்லகேட்டேன் . 

தற்போது தமிழ் இந்து வில் அது குறித்து அவரது ரசிகர் ஒருவர் அதே போல ஒரு தொடரையே எழுதியதை வாரா வாராம் படிக்கிற போது அன்று மேன்ஷன் அறையில் அவர்  சொல்லியது தான் என் ஞாபகத்துக்கு வருகிறது.இதை போன்ற ஒரு வசீகரம் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் கிடையாது.

புதுமைப்பித்தனை சொல்வார்கள் ஆனால் வாழ்க்கை முழுக்க நொந்து நூலானவர் . வெறும் கறுப்பு ஹாஸ்யம் அவருடைய வாழ்க்கை  அடுத்து ரசிக மணி டிகேசி யை குறிப்பிடுவார்கள். ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தன் போல தன்னை சுற்றியிருப்பவர்களை காந்தமாக சுற்றி சுழலச்செய்திருப்பாரா என்பது சந்தேகமே.

அதே போல ஜெயகாந்தன் என்ற படைப்பாளீயின் தாக்கம் பற்றி நினைக்கும் போது இருபதாம் நூற்றாண்டை தாங்கி நிற்கும் விழுதுகள் பல நிறைந்த பிரம்மாண்ட ஆல்மரம் என்ற படிமமே வருகிறது
அவரது  பின்னால் தொங்கும் பிடறி மயிர்கள் மயிர்கள் அல்ல ஆலம் விழுதுகள். ஒரு ஐம்பது வருட தமிழ் கலாச்சார நினைவோட்டமே அந்த முடிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற போது அங்கிருந்த பல உதவி இயக்குனர்களையும் ஓவிய கலைஞர்களையும் சந்தித்து அளவளாவினேன்
அவர்கள் அனைவருமே தங்களது சமூகத்தில் சிந்தனை மரபே இல்லை வரலாறு குறித்த பிரக்ஞை இல்லை.. இலக்கியம் குறித்த ஓர்மை இல்லை என வருத்தப்பட்டனர்.

அவர்களோடு ஒப்பிடும் போது தமிழ்ர்கள் அனைவரும் இன்று பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்தாலும் ஒருஒரு நெடிய சிந்த்னை மரபின் தொடர்ச்சியாகவே தெரிகின்றனர்.

பாரதிக்கு பிறகான தமிழ் இலக்கிய மரபு  பாரதி தாசன் வழியிலான மரபிலக்கியமாகவும், வாரா மணிக்கொடி நவீன இலக்கியமாகவும்  இரண்டு விதமாக பிரிந்து இயங்க துவங்கிய போது முன்றாவது பிரிவாக பொதுவுடமை சார் இலக்கிய மரபாக ஜீவா, தமிழ் ஒளி ,விந்தன் என ஜெயகாந்தன் மரபாக பிரிந்து செழித்து வளர்ந்தது.

ஜெயகாந்தனின் புகழுக்கு காரணம் என்ன என்பதை ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால்  எளியமக்கள் மீதான் கரிசனம்
நேரு உருவாக்கிய ஐந்தாண்டு திட்டங்களின் காரணமாக் வேளான் சமூகம் தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கிய  காலத்தில் பல கிராமங்கள் நகரத்தை நோக்கி ஒன்றுசேர நகரத்தில் வேலைக்காரிகள் ரிக்‌ஷாக்கார்ர்கள் லட்டிட்தொழிலாளார்கள் ,

 உழைப்பாளிகள் பார வண்டி சுமப்பவர்கள் என புதிய உயிரினக்கள் தோன்றலாயினர் . சென்னை நகரமுமிது போன்ற உயிரின்ங்களை அதிகமாக உற்பத்தி செய்ய துவங்கியது .இவர்கள் மனிதர்களாக்வே மதிக்கப்படாத ஒரு காலத்தில் ஜெயாகந்தன் எழுத்து அவர்களை நாயகானகாகவும் நாயகையாகவுமாக்கி அவர்களது ப்ரச்னைகளை பாடுகளை பேசி இந்த சமூகத்க்தை சிந்திக்க வைத்த்து .

ஜெயகாந்தனது சிறுகதைகளின் சிறப்பு என்றால் இதுதான்

இன்று பார்க்க போனால் அவரது கதைகள் ஒற்றை பரிணாமத்தில் மட்டுமே இருப்பதாக இலக்கிய விமர்சங்கள் குறை கூறக்கூடும் \
ஆனால் இந்த ஒட்டு ,ஒத்த சமூகத்தின் மனப்போக்கை திசை திருப்பும் பணியை அவர் தன் சிறுகதைகள் மூலம் மேற்கொண்ட காரணத்தால் அவர் இலக்கியபணீ என்பதைகாட்டிலும் மக்கள் பணியாகவும் சமூகபணியாகவும் தன் கதை எழுதும் பணியை தோளில் ஏற்றிக்கொண்டார் .

இன்று தான் திருநங்கைகளின்  மேல் கொஞ்சமாவது கரிசனம்  கொள்கிது இந்த சமூகம் . ஆனால் அவர் அப்போதெ பவுனு என்ற கதையின் மூலம் தன் கரிசனத்தை  வெளிப்படுத்தினார். தற்கு அப்போது எதிர்ப்புகள் கிளம்பியபோது நான் கறுப்புத்துணிக்குள் வைரத்தை வைத்திருக்கிறேன் பலருக்கு வெறும் கறுப்புதுணி மட்டும் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனகூறினார்.

அவர் போல எதிர்ப்பை சந்தித்த எழுத்து எவருடைய்தும் இல்லை
ரிஷி மூலம் நாவல் வெளியான போது அதை வெளியிட்ட வார இதழ் இனி இது போன்ற கதைகள் வராது என வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட்தாக வரலாறுகள் கூறுகின்றன.

அக்னி பிரவேசம் என்ற கதை ஆயிரம் ப்ரச்னைகளை கொண்ட்து \
இன்று ஒருபெண்ணிய நோக்கில் பார்க்க போனால் அது ஆணாதிக்க கதையாக கூற அதில் பல கூறுகள் உண்டு.

குற்றம் செய்த ஒருவனை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் குற்த்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை பற்றிய அந்த கதை ஒருவகையில் பார்க்கப் போனால் ஒருதலை பட்சமானது. வெறும் காமுகன் என்ற ஒற்றைச்சொல்லோடு சந்தர்ப்பத்தை குற்றவாளியாக்கிவிட்டு ஜெயகாந்தன் பெண்னின் வீட்டுக்கு வந்த அவளது அம்மாவையும் அவர்களது அண்டைவிட்டையும் குற்றபடுத்துகிறார்.

உண்மையில் கதையின் நாயகி பாதிக்கப்பட்ட பெண்னான கங்காவின் அம்மாதான் . அவள்தான் மகளை குளிப்பாட்டி அக்னி பிரவேசம் செய்கிரார்
ஆனால் இக்கதையின் தொடர்ச்சியாக அவர் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில். அதே மகளான கங்கா அன்று மட்டும் நீ கூச்சல் போடாவிட்டால் இன்று என் வாழ்க்கை பிரசனையே இல்லாமல் போயிருக்கும் எனக்கூறி அந்த தாயை களங்கபடுத்துகிறார்.

ஒருவேளை அக்கதை நான் சொல்வது போல குற்றவாளியின் பக்கமாக திரும்பி அவனுக்கு பிற்பாடுதான் தெரியவருகிறது தன்னால் மழை இரவில் உறவுக்குட்படுத்தப்பட்ட பெண்  எப்போதோ பிரிந்து போன தன் தம்பியின் பெண் என தெரிய வந்து அவன் பைத்தியமாகி திரிந்து சாவது போல முடித்திருக்கலாம்.

ஆனால் இப்படியாக முடித்திருந்தால் இக்கதை இவ்வளவு பேசப்பட்டு இவ்வளவு வாசிக்கப்பட்டிருக்குமா தெரியவில்லை
கதை கோரும் எந்த முடிவுகளையும் முன் வைத்து அவர் கதைகளை நகர்த்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் எதற்கும் அடங்காத அவரது திமிர் கதைகளின் வரையறைக்கும் அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
அதனால்தான் பல கதைகள் தன்போக்கில் சென்று தனாக கதையை தீர்மானித்துக்கொள்வதாக அமைந்திருக்கின்றன.

அக்கதைகள் இலக்கிய மதீப்பிட்டை காட்டிலும் சமூகத்தில் புரையோடிக்கிடந்த பல அழுக்குகளை அடித்து துவைப்பதில் காரணமும் கவனமும்  கொண்டிருந்தன.அதனாலேயே அக்கதைகளில் பெரும் அதிர்ச்சியூட்டும் வெடி மருந்துகள் திணிக்கப்பட்டிருந்த்ன
ஒவ்வொரு வாரமும் அக்காலத்தில் அவரது கதைகளை  படித்த தமிழன் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினான்.

ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருந்து இவ்வளவுதூரம் ஒரு சமூகத்தை தன் வசப்படுத்திய பெருமை இந்திய மொழிகளில் வேறு யாருக்குமே இல்லை என்பது உறுதி. 

இந்திய எழுத்தாளர்களில் தங்களது கதைகள் மூலம் அழியாப்புகழைபெற்ற பிரேம் சந்த , யூ ஆர் அனந்த மூர்த்தி பஷீர், மற்றும் மகாஸ்வேதா தேவி ஆகியோருக்கு இணையாக வைத்து போற்றப்படவேண்டியவர் .  . ஜெயகாந்தனுக்கும் இவர்கள் நால்வருக்குமான ஒற்றுமை  அனைவருமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக எழுதி புகழ்பெற்றவர்கள
ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தனைபோல ஒரு சிங்கத்தை போன்ற துணைச்சலான வாழ்வையும் சமூகத்தின் இத்தகைய பெருமதியையும் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே .

பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு அவன் இறந்தபின் மட்டுமே கிடைக்க்கூடிய அத்தனை பரிவாரங்களும் பரிவட்டங்களும் வாழும் போதெ பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் .
ஜெயகாந்தன் என்ற எழுத்தாளன் தமிழகத்தின் அனைத்து எழுத்தாளருக்கும் ஒரு சிவப்பு கம்பளத்தை உருவாக்கி கொடுத்தார். 

ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என தெரியவில்லை எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதான் ஒரு மாய தோற்றத்தை சித்திரமாக வரையத்துவங்கினால் அந்த சித்திரம் முடியும் போது அது காட்டும் உருவம் ஜெயகாந்தன் என்ற மகத்தான் மனிதரின் உருவமாக மட்டுமே இருக்க முடியும் .

ஜெயகாந்தன் என்ற பெயரை நான் வியக்க காரணம் எல்லாம் மனதிற்கு பட்ட்தை பட்டவர்த்த்னமாக உடைத்துசொல்லும் அந்த தைரியம்

இத்தனைக்கும் நான் பெரியாரை என் உயிரினும் மேலாக மதிப்பவன்.
திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நான் போற்றும் மகத்தான மனிதர்.

அன்றைய சூழலில் தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்திற்கு அளவே இல்லை ,

 அவரையே ஒரு கூட்டத்தில் அவரது கருத்தை மறுத்து பேசி ஒரு எழுத்தாளனின் கட்டற்ற கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய பெருமை ஜெயகாந்தனுக்கு உண்டு. அவர் பேசியதில் நமக்கு மாற்று கருத்து இருக்கலாம் . . இன்னும் சொல்லப்போனால் மாற்று கருத்தாளர்களை ஜெய்காந்தன் கூட மதிப்பாரா தெரியாது ஆனால் பெரியார் மதிக்க கூடியவர்.
ஆனாலும்  ஒரு எழுத்தாளனாக தன் கருத்தை நிலையூன்றச்செய்ததில் ஜெயகாந்தன் தனித்துவமிக்கராக மிளிர்ந்தார்.


அதே போல அண்ணாவின் மறைவின் போது கண்ணதாசனின் வறுபுறுத்தலுக்கிணங்க அஞ்சலிகூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சு  தமிழகத்தின்  குறிப்பிடத்தக்க மேடைபேச்சுக்களில் ஒன்றாக இன்றும் கூறப்படுகிறது. 

இப்படியெல்லாம் ஜெயகாந்தன் மறுத்து பேசிவிட்டதால் பெரியாரும் அண்ணாவும் சிறுமைப்பட்டதாக அர்த்தமில்லை.

அது அவர்கள் மேல் வெறுப்பை கொண்டவர்களுக்கு வேண்டுமானல் திருப்தியுறச்செய்யலாம் . 

ஆனால் நான் அப்படியாக பார்க்கவில்லை
ஒரு எழுத்தாளனின் கலைஞனின் மனோதர்மத்தையே அதில் பார்க்கிறேன் .

ஒருவர் இறந்துவிட்டதால் அதற்காக நேற்றுவரை நான் அவர்கள் மீது கொண்ட அபிப்ராயத்தை  ஒரே இரவில் மாற்றிக்கொள்ள முடியாது எனக்கூறும் அவரது மனோதர்மம் தான் இதில் நாம் வியக்கதக்க அம்சம்
மனித சமூகமே அண்டிபிழைப்பதிலும் இச்சி பிழைப்பதிலும் ஓடிக்கொண்டிருக்கும்போது பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையும் கருத்துசுதந்திரமும் முழுமையாக பயன்படுத்திய ஒரு எழுத்தாளனின் துணிச்சலாகத்தான் அதைக்கண்டு வியக்கிறேன் .

இத்தனைக்கும் அண்ணாவின் மரணத்துக்கு கூடிய கூட்டம் கின்னஸ் சாத்னை . வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

அப்படியான சூழ்லில் அவரைக்குறித்து மறுத்துபேச ஜெயகாந்தனுக்கிருந்த துணிச்சல்தான் இன்று எழுத்தாளர்கள் அனைவரும் கருத்திலேற்கவேண்டியது 

ஈவு இரக்கமே இல்லாமால் கருத்துகளுக்காகவே வாழ்ந்த துணிச்சல் மிக்க இமயம் ஒத்த மகத்தான எழுத்தாளன் என ஜெயகாந்தனை நினைத்து இறுமாந்து வியக்க தோன்றுகிறது.

இப்படிபட்ட மகத்தான் எழுத்தாளனுக்கு செய்யப்படும் மரியாதை வெறும் இது போன்ற கூட்டங்கள் மட்டுமே அல்ல. மாறாக அவருக்கு இந்த மாநிலமே வியக்கும் மகத்தான் ஒரு சிலை நிறுவுவதல் வேண்டும்.

இந்த சமூகத்தில் இப்படி ஒரு எழுத்தாளன் இருந்தான் வாழ்ந்தான் இறந்தான் என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அந்த சிலை இருக்கவேண்டும்
சென்னையில் அடிமைபட்டுத்திய பல ஆங்கிலேயர்களின் சிலை இருக்கிறது
அந்த சிலைகள் எல்லாம் நாம் இன்னமும் அவர்களின் அடிமை என்பதை உணர்த்துகிறதே தவிர அதனால் ஒரு காரியமும் இல்லை.

அதில் ஏதாவது ஒன்றை தூக்கிவிட்டு அந்த இட்த்தில் ஜெயகாந்தனுக்கோர்  சிலை வைப்பதால் தமிழகத்தின் நிலை உயருமே தவிர தாழ்ந்துவிடாது

இந்த சமூகத்துக்கு சிவற்றை இப்படித்தான் உணர்த்த வேண்டியதாக இருக்கிறது காரணம் இது சுரணை கெட்ட சமூகம்.

எழுத்தார்களையும் கலைஞர்களையும் மதிக்க தெரியாத சமூகம்
அப்படி மதிக்க படவேண்டுமானால் அவன் சினிமாக்காரனாக இருக்கவேண்டும் என எதிர் பார்க்கும் சமூகம்.

 ஜெயகாந்தன் மறைவுக்கு சென்ற போது  பெசண்ட நகர் மயானத்திற்கு வந்திருந்தவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே.

காலம் முழுக்க அவரது தன்னிச்சையான கருத்துக்கு இந்த சமூகம் கொடுத்த பரிசு இந்த நூறு பேர் மட்டுமே.

காலத்தின் புகழ்பெற்ற  எழுத்தாளனுக்கு சமூகம் கொடுக்கும் பரிசு 100 பேர்

நல்ல வேளையாக எழுத்தாளனுக்கு அவர் எழுதியது போல சமூகம் என்பது 4 பேராக இல்லாமல் 100 பேராக இருப்பது வரை மகிழச்சிதான் .





No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...