April 25, 2016

ஜீன்ஸ் அணிந்த பறவைகள் - சிறுகதை

நினைவில் தொலைந்த ஞாபகமொன்று பறவையாகி வானத்தினூடே சிறகசைக்காமல் தாழ்ந்து வந்து தெருக்கோடி மரத்திலமர்ந்து மெல்ல தரையிறங்கி தத்தித் தத்திச் சட்டென ஒரு பெண்ணாக மாறி ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் சகிதம், தன்னை நோக்கி நடந்துவருவதாக அவளை அந்தக் கூட்டத்தினூடே நடைபாதையில் கண்டமாத்திரம் அறிந்துணர்ந்தான்.

ஞாபகங்களை சிறகிடுக்களில் ஒளித்து வைத்தவாறு வெளியினூடாக காலங்களை கடந்துவரும் தன்மை பறவைகளுக்கு மட்டுமே உண்டு என் எண்ணம் கொண்டிருப்பவன்.

பிரபஞ்சத்தின் தொலைந்துபோன அனைத்து ஞாபங்களும் ஒரு பறவையின் அசைவற்றுக் கிடக்கும் அதன் கருவிழியில் உறைந்து கிடப்பதாகவும் தேவை கிளைக்கிறபோது தனக்கிஷ்டப்பட்ட காலங்களில் இஷ்டப்பட்ட ரூபம் தரித்து மனிதர்களை சஞ்சலமுறச் செய்கின்றன. என்பதாகவும் தனக்குத்தானே கற்பனை செய்து கொள்வான். இல்லாவிடடால் ஒரு அதிசயம் போல திடுமென அவளை அங்கே காணநேர்ந்த நிகழ்வு சாத்தியமற்றதென்பதே அவன் தீர்மானம்.

ஒருவேளை தான் கனவில் கண்டபடி (இரவுகளில்) தன் பூர்த்தியடையாத கவிதைகளை பொறுக்கி எடுத்துச் செல்லும் பெண் இவளாக இருப்பாளோ; தன்னை தேடியும் விதமாகத்தான் இங்கே வந்து பின் தன்னை இவன்தான் என அடையாளம் காண முடியாமல் தத்தளிக்கிறாளோ! சட்டென தன்னுள் ஒரு பதட்டம் கூட சற்றுமுன் கடந்து சென்ற அவளின் திசைநோக்கி திரும்பினான்.

கூட்டத்தினூடே அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளைக் கூக்குரலிட்டு அழைத்து பேச முடிவுசெய்து வேகமாக பின் சென்றவன் வழக்கமாக தன்னை பார்க்கும் அந்த போலீசார் இருவரையும் எதிர்கண்டதும் தன் முடிவை மாற்றிக்கொண்டபடி மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து நின்று கிரில் கம்பிகளில் சாய்ந்து கொண்டான்.

அது ஒரு கடற்கரைச் சாலையின் நடைபாதை தினமும் சாயங்காலங்களில் கவிதை எழுதும் நிமித்தமாக அவன் அங்கே வருவது வழக்கம்.

மரபும் நுட்பமும் மிகைந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் கட்டிடங்களைக் கொண்ட அந்த கடற்கரைச் சாலையின் கட்டிடங்களுக்குக் கீழே நடைபாதையின் பாதுகாப்பு கிரில் கம்பிகளில் சாய்ந்தபடி, மாலைநேர கடற்கரை வாசிகளைக் காணவும் பர்முடாஸ் செய்து கொள்ளவும், குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் பலூன் வியாபாரிகளின் முகச் சுருக்கங்களையும், உடன் அவர்களது இடுங்கிய கண்களுக்கப்பால் தெரியும் போர்வை போர்த்தியபடி மறையும் கடவுளரின் நிழலுருவம் குறித்தும் தானறிந்த ஒரே காரியமான கவிதையின் மூலமாக ஆய்வு செய்யும் பொருட்டாக மாலை நேரங்களில் தினமும் அவன் இங்கே வருவது வழக்கம்.

நடைபாதை வியாபாரிகளின் கூச்சல்களுக்கும் கடலலைகளின் பேரிரைச்சல்களுக்குமிடையே அவன் அங்கே கவிதை எழுத முயற்சி செய்வதுண்டு. இதுவரை அவன் எழுதியதனைத்தும் பூர்த்தியடையாத கவிதைகள். அவன் அங்கே கசக்கி எறியும் அந்தக் கவிதைத் துண்டுகளை யாரோ எடுத்துச் செல்வதாக நினைத்துக் கொள்வான். அந்தப் பெண் சிண்ட்ரல்லாபோல் தன் கொடுமைக்கார சித்திக்கு பயந்து ட்ரங்கு பெட்டியில் இவனது கசங்கிய அந்தக் கவிதைத் துண்டுகளை ஒளித்து வைத்திருப்பதாக ஒரு நாள் கனவில் கண்டான்.

அப்படிப்பட்ட பெண்ணை தான் எப்போதேனும் நேரில் சந்திக்க வாய்ப்பு நேருமானன் தான் மிக மோசமானவனாக தன்னை அவளுக்கு அடையாளம் காட்டிக் கொள்ள நேரிடும் என் தன்னைக் குறித்து மிக நன்கு அறிந்தவனாக தனக்குள்ளே பெருமிதமும் பூரிப்பும் பொங்க சித்துக் கொண்டான்.

இப்படியாக அவன் ஒரு மாலை வேளையில் ஆவிடத்தே வழக்கம் போல் நின்று கொண்டிருந்ததுபோது ஒரு முறை இரண்டு போலீசார் அவனருகே வந்தனர். அங்கிருக்கும் சில வியாபாரிகளின் வேலையாகத் தானிருக்கும் என்பதை ஊகித்தறிந்து கொண்டான்.

ஒரு வியாபாரியாக அல்லாமல் தினசரி அவன் இந்த இடத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கொள்வதில் ஒரு சிலருக்கு இவன் மேல் கோபமிருந்தது. சிறிய டப்பிகளில் ஆண்மைக்குறைவு லேகியம் விற்கும் வயதான கிழவரொருவர் எப்போதும் மாலைவேளைகளில் காலதாமதமாக வந்து, இவன் இங்கே நிற்பதால் முகம் சுணக்கமுற்று சக வியாபாரிகளிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு.

இவனது தோரணைகளை விபரீதமாக கண்டதாலோ அல்லது மிகையான பாவனைகளின் காரணமாகவோ யாரும் இவனிடம் பேச நெருங்கியதில்லை. தங்களிடமிருந்த இவன் மீதான வன்மத்தைத் தீர்க்க நெடுநாளாக காத்திருந்த வியாபாரிகளிதான் கடைசியாக போலிசாரை அணுகியிருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டான்.

நல்லவேளையாக சிறுவயதிலிருந்தே இவன் பள்ளிக்கூடக் காலங்களில் சைக்கிளில் எதிர்ப்படும் போலீசாருக்கு முகமன் கூறுவதை வழ்க்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த பழக்கத்தின் காரணமாக இந்தப் போலீசார் இருவரையும் தேனீர் கடையில் முன்னெப்போதோ பார்த்தபோது முகமன் கூறியிருந்தான். அது இப்போது வசதியாக இருந்தது. இவனைக் கண்டதுமே அவர்களது முகத்தில் தெரிந்த ஒருவித ஏமாற்றத்தை வைத்தி இவன் இதனை ஊகித்தறிந்து கொண்டான்.

தினசரி இங்கே நீ என்ன செய்கிறாய்? எதற்காக வருகிறாய்?
கவிதை எழுதுகிறேன் அல்லது எழுதுவதற்காக முயற்சி செய்கிறேன்.


இந்த பதிலைக் கேட்டதுமே தங்களது தொப்பிகளில் காற்றில் பறந்து செல்வதை போல அவர்கள் திடுக்கிட்டனர். ஒரு கவிதை எழுதுபவன் முன் தாங்கள் எப்படியான தோரணையை மேற்கொள்வதெனத் தெரியாமல் ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் மீண்டும் தங்களை போலீசாக்கிக் கொண்ட அவர்கள் அவன் கையில் வைத்திருந்த கவிதைத் தாள்களைப் பிடுங்கி அதனை திருப்பித் திருப்பி பார்த்தவாறே ஜேப்பியில் நுழைத்துக்கொண்டு, இனி இங்க வந்து கவிதை எழுதாதே இது வியாபாரிகளுக்கு மிகவும் தொந்தரவளிக்கிறது என எச்சரித்தனர். தெரிந்த முகமாக இருப்பதால் உன்னை எச்சரிப்பதோடு நிற்கிறோம் என்று கூறிய போலிசாரிடம் இவன். கவிதை எழுதாமல் வெறுமனே நான் வந்துபோக அனுமதியுண்டா எனக் கேட்க, அதற்கு ஒருவரும் தடைசொல்ல முடியாது. ஆனால் கவிதையை நீ எங்கு சென்று எழுதினாலும் நாங்கள் அங்கு வருவோம் என்று கையில் கொண்டு வந்திருந்த இரும்பு விலங்கைக் காட்டி எச்சரித்து கவிதைகள் வியாபாரிகளையும் அரசு உத்தியோகஸ்தர்களையும் மிகவும் தொந்தரவு செய்கின்றன எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தனர். மெய்மையற்றுப் போன அவர்களது இருப்புதான் இதற்கு காரணம், சுதந்திரமான மனவெளியில் சங்குபோல கவிதை தானே முகிழ்வதையாராலும் தடுத்து நிறுத்த முடியாது என் அவர்களிடம் சொல்ல நினைத்து பின் தனக்குத்தானே அவன் தலையசைத்துக் கொண்டான். அதன் பிறகும் மாலைநேரங்களில் தொடர்ந்து வரும் இவன் போலீசாரை ஏமாற்றும் விதமாக எவருக்கும் தெரியாமல் தன் மனதுள் கவிதைகளை இயற்றி இருவரும் பாராத சமயங்களில் அதனை ஒரு பேப்பரில் கிறுக்கி கீழே எறிந்துவிடுவன். அவன் கீழே எறியும் அவனது பூர்த்தியடையாத கவிதைத் துண்டுகளை ஒரு போதும் அவன் மறுநாள் பார்த்ததில்லை.   

இப்படியாக அவன் கவிதைகளை அன்றும் ரகசியமாக மனதுள் தைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் திடுமென அவளின் முகத்தைக் கண்டு பேரதிசயம் கண்ணுற்றவனாக தடுமாறிப் போனான்.

இரவில் சரியும் எரிநட்சத்திரத்தின் வேகத்தோடும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் இளம்பெண் வீதிக்கு வரும்போது காணப்படும் பதட்டத்தோடும் அவசரமாக அவள் வந்து கொண்டிருந்தாள். சட்டென அவனால் அவள் குறித்த ஞாபங்களை தன்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. பதட்டதில் அவளது பெயர்கூட தொலைந்து போனதை எண்ணி வேதனை மிகுந்தாலும் தன்னைக் கண்டதும் உயிர்ப்புறும் அவளது கருவிழியில் ஒளிமிகுந்து தன்னை அவளோடு பழகிய காலவெளிகளுக்கு மீண்டுமொருமுறை அழைத்துச் செல்லும் என்றும் தானும் அவளிடம் மறந்து போய் விட்டதை வெளிக்காட்டாமல் பாவனைகள் செய்து அந்தச்சுவடுகளை மீட்டுகொள்லாமல் என்றும் தன் அதிமேதாவித் தனமான கர்வத்தோடு காத்திருந்தவனுக்கு அவள் கண்டும் காணாதவளைப் போல் நகர்ந்து சென்றது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. உதாசீனம் கொடியது, விஷத்தைக் காட்டிலும் பன்மடங்கு வேலை செய்யக்கூடியது, நிலநடுக்கத்தைப் போல பேரழிவுகளை உள்ளடக்கியது என்பதை அவன் அந்த நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டான். யார் அவள், எதற்காக இங்கு அவள் வரவேண்டும் எதன் பொருட்டு அவள் தன்னை உதாசீனப்படுத்த வேண்டும் அவளைக் கண்டதும் சரம் சரமாக தன் உயிரில் எதனால் தீப்பற்றி எரிய வேண்டும் என பலவிதமாக தன்னுள் கேள்விகளை எழுப்பிக் கொண்டவன் தன்னுள்ளிருந்த அவளது பெயரைக்கூட அகழ்ந்தெடுக்கயியலாத தன் நிலைக்காக மிகவும் விசனம் கொண்டான்.


நான்கு பரிச்சயமான அவளது கருவிழிகளும் விசித்திரமான அவளது கூந்தலின் நறுமனம் சட்டென தன்னுள் வெகுநாட்களாக பழகியிருந்த அவளது உணர்வின் மிச்சமாக தங்களை அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இன்னமும் அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஒளிரும் அவளது விழிகளுக்கப்பால் ஈசல் ஓராயிரம் படபடக்கும் ஈரமான ரகசியஸ்தலங்களில் தனது இருப்பை கண்டுகொண்டவன் அந்த நினைவு அணுக்களின் மூலக்கூறுகளில் ஏதோ ஒரு புள்ளி இப்போது முழுவதுமாக தன் வசத்தில் சுண்டி இழுப்பதை உணர்ந்தான். அதன் வெளிப்பாடுதான் அவனுள் ஏற்படும் இதனை பதட்டமும் படபடப்பும்.

ஆடைகளைப் படபடக்கச் செய்யும் கடற்கரையின் மாலைக்காற்றும், கார் ஜன்னல்கள் வழியே வேகமாய் உதறிச் செல்லும் சிந்தஸைஸரின் மிச்சங்களும், சற்று முன்னரே பூத்துவிட்ட கடற்கரை சாலையின் வரிசையான மஞ்சள் விளக்குகளும், சிறுவர்களின் காரணமற்ற கூக்குரக்களுக்கு பின்புலமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இவை எதுவுமே நிகழாதவாறு இவன் மட்டும் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வெகுநேரமாகுயும் அவள் வராத காரணத்தால் மீண்டும் பறவையாகி பறந்து சென்றிருப்பாளோ என எண்ணிக்கொண்டான். வேவு பார்த்துக்கொண்டிருந்த போலீசார் இருவரும் தேனீர் அருந்தச் சென்றிருந்ததால் இவன் மெல்ல அவள் சென்ற திசை நோக்கி வீதியின் முடிவு வரை நடந்து சென்றன். அவன் எதிர்பார்த்தது போல அங்கே சில பறவைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன். என்ன ஆச்சரியம் இவன் அவற்றினூடாக நடந்து சென்றபோது ஒரு பறவையும் அசையவில்லை. நினைவில் மறைந்த பிறகு எல்லா பெண்களும் பறவைகளாகத்தான் மாறிவிடுகின்றனர். திடீரென தியேட்டர் வாசலில் முற்றிலும் அந்நியமானதொரு நபருடன் எதிர்ப்படுகின்றனர். அல்லது தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகத் தோன்றி உலக நியதிகள் குறித்து விசனம் கொள்கின்றனர்.

இவன் அந்த பறவைகளின் அருகே நின்று ஒரு நிமிடம் எல்லா பறவைகளையும் கூர்ந்து கவனித்தான். இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் அவளிருக்க வேண்டும். அவள் பெயர் ஞாபகத்திலிருந்தால் இங்கே அழைத்து பறவைகளினூடே அடையாளம் கண்டு பிடிக்கலம்.

சோர்வுற்றவனாக அவன் மீண்டும் தன் பழைய இடம் நோக்கி திரும்ப எத்தனித்தபோது சூழல் இருட்டிலிருந்தது. சற்று மறைவாக காணப்பட்ட இடமொன்றில் வேசிகளும் பிச்சைகாரர்களும் ஒன்றாகக் கூடி எதையோ தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். (யாரோ ஒரு உயர்ந்த நபரிடம் தங்களுக்கான கட்டளைகளைச் செவி மடுத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் திருடர்களும் ஒருவரும் அறியாதவாறு தங்களை முக்காடிட்டு மறைத்தபடி உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர்) சற்று விலகி நின்று கொண்டிருந்த ஒரு தடிமனான வேசியிடம் ஒரு குடும்பத்துப் பெண்மணி தன் குறைகளைக் கூறி அழுது கொண்டிருந்தாள். வாயில் வெற்றிலை மென்றுகொண்டிருந்த வேசி அவ்வழியாக சென்ற இவனை அழைத்து பால்யத்தில் நீ தவறவிட்ட காதலன் இவனா பார்த்து சொல் என அந்த குடும்பப் பெண்மணியிடம் கேட்க, அவள் கலங்கிய விழிகளுடன் இவனைப் பார்த்து பின் மறுதலித்தவளாக மீண்டும் வேசி முன் தலைகுனிந்தாள். வழியில் ஒருவன் இவனிடம் அந்த இடத்தின் பெயரை கேட்க அப்போது தான் அவனுக்கு தனக்கே அந்த இடத்தின் பெயர் மறந்துபோனது தெரியவந்தது. ஒரு கதைக்காக தான் அடையாளங்களற்று படைக்கப்படிருப்பது ஒரு மின்னலைப் போல அவனுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. அதில் தீவிர கவனம் குவிப்பது பவம் என்பது போல அதிலிருந்து விடுபட்டவனாக வெறுமனே அந்த இடத்தின் பெயரைக் குறித்து யோசித்தான் எதுவுமில்லாமல் தனியாக வரும் ஒருவரிடம் பேசுவதன் மூலம் இந்த இடம்குறித்த தனது ஞாபகங்களை மீட்டுக்கொள்ளலாம். என்று நம்பியவன் அந்தத் தனியாளுக்காகக் காத்திருந்தான். நடைபாதையில் கண்ணாடிகளை சுவர்களாகக் கொண்ட ஒரு கேக் கடைமுன் தனது பிம்பங்களோடு கேக்குகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இவன் எதிர்பார்த்த தன்மையுடன் காணப்படவே அவனிடம் சென்று நட்புறவு கொண்டவனாக இந்த இடம்குறித்து ஞாபகங்களைச் சேகரிக்க முயல, அவனோ தனக்கே வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டான். இரண்டு நாட்களாக பசியோடிருப்பதாகவும் வீடு திரும்ப முடியாத தன் சோகத்தையும் சொன்ன அவன் கேக்குகள் உள்ளே போனதும் இவனுக்குத் தேவையான ஞாபங்களனைத்தும் தானாக வெளிப்படும் என உறுதியளித்தான். ஆனால் அதற்கு அவசியமற்றுப் போனது இருவரும் கேக்குகளை பிய்த்து உண்டவாறு கடையிலிருந்து வெளிப்பட்ட போது அவன் எதிர்பார்த்தது போல அவள் திரும்பி வருவதை இவன் பார்த்துவிட்டான்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சட்டென அவள் முன் ஓடிச்சென்று இவன் குறுக்காக நிற்க, அவளோ எதிர்பாராத இந்த நிகழ்வினால் அதிச்சியுற்றவளாக திகைத்து நின்றாள். இவன் சாய்ந்து கொண்டிருந்த அதே காரில் கம்பிகளில் இப்போது அந்த சிறுவன் சாய்ந்து கொண்டிருக்க இவன் அவனிடம் சற்றுமுன் அவள் தன்னை கடந்து சென்றபோது தன்னுள் நிகழ்ந்த பதட்டங்களையும் தொடர்ந்த நிகழ்வுகளைக் கூறி அவளிடம் மிச்சமிருக்கும் தனது ஞாபகங்களைத் தந்து தன் மனப்பிரயாசையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டு நின்றன்.

ஒரு நிமிடம் நிதானமாக அவனது விழிகளை உற்று நோக்கிய அவள் பின் தலைகுனிந்தவாறு இவன் கூறியதைப்போல இரவுகளில் வந்து இவனது கவிதைகளை பொறுக்கிச் செல்பவள் தான்தான் என்றும், பூர்வஜென்மத்தில் தொலைத்த தன் காதலன் தனக்கு அனுப்பும் ரகசிய செய்திகளாக அவற்றைச் சேகரித்து வருவதாகவும் கூறிய அவள் தனது ஜீன்ஸ் பேண்டிலிருந்து இரண்டொரு கவிதைத் துண்டுகளை வெளியில் எடுத்தாள். கடைசியில், இது தான் எதிர்பார்த்தது தான் என்றெண்ணியவன் உற்சாகமிகுதியால் கூக்குரலிட்டான். சிண்ட்ரல்லா போல நீ ஒரு ஏழைச்சிறுமி என்றல்லவா கற்பனை செய்திருந்தேன் என அவளிடம் அவன் உரக்கக் கூறிய போது அவனது குரலின் கர்வம் சர்ப்பத்தின் வாலைப் போலச் சுழன்றது. 
அவள் அதுகுறித்து சற்றும் கவலைப்படாதவளாக கவிஞர்களின் இயல்பு குறித்து முன்பே அறிந்தவளாய் இந்தக் கவிதைகள் எழுதுகிரவனை தான் முகவும் நேசிப்பதாகவும் ஆனால் அது இவன்தான் என்பதற்கு ஆதாரமாக தன்முன் ஒரே ஒரு கவிதை எழிதினால் போதும் என்று கூர, உடனே இவன் சற்று தூரத்தில் கேக்கை சாப்பிட்டபடி நின்ற சிறுவனிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக கையசைத்தபடி, தான் எப்போதும் தயாராக வைத்திருக்கும் காகிதத் துண்டுகளை எடுத்து கவிதை எழுதத் துவங்க, சற்று தூரத்தில் இதற்கெனவே நின்றிருந்தாற்போல் அந்த இரண்டு போலீசாரும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவன் அவர்களையும் அவர்களது கையில் கனமாக தொங்கும் இரும்புக் கைவிலங்களையும் பார்த்து அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாதவனாக தன் கவிதைக்கான கடைசி வரியை எதிரே நிற்கும் இவளது விழிகளில் வாசித்தபடி நின்று கொண்டிருந்தான். பின் அவளுக்காக வெகுநேரம் காத்திருந்த பறவைகளை அங்கிருந்த வியாபாரிகளின் விரட்டிக் கொண்டிருந்தனர்.

நன்றி  குமுதம் தீராநதி 

 

April 21, 2016

விமர்சனம் -கவிப்பித்தனின் ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்புகவிப்பித்தன்

 ஊர்ப்பிடாரி சிறுகதை தொகுப்பு  - 




எழுத்து வாழ்வை சமூகத்தை பிரதிபலிக்கும் அரியதொரு ஊட்கம் .
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் . காலங்கள்  மேகங்களை போல கடந்து கொண்டிருக்கின்றன. எல்லா காலத்துக்கும் சாட்சியாக பூமியை போல நிலைத்திருப்பது  நல்ல எழுத்துக்கள் மட்டுமே . காலம் சில எழுத்துக்களை கல்வெட்டுக்களாக மாற்றிவிடுகிறது. அவையே இலக்கியமாகவும் நிலைபெற்று காலம் காலமாக மனிதர்களுக்கு அம்மொழி சார்ந்த வரலாற்றை கலாச்சாரத்தை பண்பாட்டை கைமாற்றி தரும் காரியத்தை செய்கின்றன. அதே போல மொழியால செய்யப்படும்.  எல்லா படைப்புகளும் இலக்கியமாகிவிடுவதில்லை . வெண்பாக்களானாலும் .. விருத்தங்களானாலும் ஆசிரியப்பாக்களானாலும் காவியமானலும் காப்பியங்களானாலும்  அது தான் எடுத்துக்கொண்ட வடிவத்தின் முழுமை கொள்ளும்  விததால் மட்டுமே இலக்கியம் எனும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றன. பின் அவை பாடுபொருள் நிமித்தமும்  காலத்தை கையகபடுத்திய வித்த்தாலும் கற்பனை செறிவாலும் தரவேறுபாட்டை கொள்கின்றன. இதைத்தான்  தொல்காப்பியமும் நன்னூல் களும் நமக்கு பயிற்றுவித்து வந்துள்ளன்
இந்த சூத்திரங்கள் மரபிலக்கியத்தோடு முடிந்துவிட்டன.. ஆனால் மேற்கு வரவான புதுக்கவிதை சிறுகதை நாவல் போன்ற புதிய வடிவங்களுக்கு என்ன இலக்கணம் என்று யாரும் வரையறுக்கவில்லை . காலத்தின் சிறந்த சிறுகதைகளும் கவிதைகளும் நாவல்களும் அதற்கான வடிவம்குறித்து நமக்குள் திட்டமான ஒரு பிரக்ஞயை உருவாக்கி தந்திருக்கின்றன.
ஒரு வாசகனாக சிறுகதை மூலம் நான் பெறுவது ஒரு அக தரிசனம் . படைபெனும் சிறுதுளை வழியாக நான் அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குகிற போது பெரும்  விசாலத்தை அகம் எதிர்கொள்கிறது. புதுமைப்பித்த்னின் கதைகளை வாசிக்கிற போது என் கால்கள் சட்டென உயரமாகி ஆகாயத்திலிருந்து மக்களை அவர்களது காரணமற்ற அபத்த்மான வாழ்வை அவதானிக்க முடிகிறது . கு.பா. ராவிடம் கண்ணுக்கு புலப்படாத பெண்களின் அக உலகத்தை ஜூம் இன் செய்து பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மவுனியை படிக்கும்போது  உடலுக்கும் வெளிக்குமான சமன்பாட்டை உணரமுடிகிறது இவைகளின் மூலமாக நான் வாழ்வின் பன்முகத்தை புரிந்து இயற்கை என்மீது வித்திருக்கும் விலங்குத்ன்மையை உடைத்து முழுமை பெற்றவனாக மாறுகிறேன்
இலக்கியத்தின் வேறெந்த வடிவத்தைகாட்டிலும் சிறுகதை படைப்பாளிக்கு சவாலான வடிவமாகத்தானிருக்கிறது . நாவல் மற்றும் கவிதைகளில் ஒரு படைப்பாளி  தவிர்க்கவே முடியாமல் வாழ்வனுபங்களை இறக்கிவைக்க அல்லது புலம்ப நேரிடுகிறபோது ....தான் அல்லாத த்ன்மையை நோக்கி செல்லவைப்ப்பது சிறுகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது . அதே சமயத்தில் அது கவர்ச்சி மிகுந்த வடிவமாகவும் எனக்கு படுகிறது . ஒரு வாளை ப்போல கச்சிதமான அத்ன் வடிவம் என்னை சதா ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது . என்னை போல எல்லா சிறுகதை எழுத்தாளர்களுக்கும் இருக்குமா என த்தெரியாது ஆனால் தன் அடவுகளை நேசித்த்படி ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கத்க் கலைஞனைப்போல நான் கதைகள் எழுதும்போது அத்ன் வடிவத்தின் மீது காதல் கொள்ளதுவங்குக்கிறேன் . இந்த காதல் வெளிப்படையானது அல்ல .. கடைசிவரை உணர்த்தாமலே போக்க்கூடிய வெளிக்க்டாத காதல் ஒரு ஆசிரியருக்கு மாணவி மேல் காதல் வரும்போது அதை வெளிப்படுத்துவது எப்படி விதிகளுக்கு புறம்ம்னாதோ அதுமாத்ரியான் காத்லை நான் கதைகளீன் வடிவங்கள் மீது கொள்கிறேன்
சிறுகதைகள் இவ்வாறாகத்தான் என்னை வளர்த்து வந்திருக்கின்றன . மட்டுமல்லாத தமிழிச்சூழலையும் வளர்த்து வந்து சாகா வரம்பெற்ற இலக்கியங்களாகவும் சிறுகதைகளின் இலக்கணங்களாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.
இந்த வரிசையிலிருந்துதான்  நான் கதைகளை மதிப்பீடு செய்கிறேன் கடந்த ஆண்டில் ஒருநாள் வேலூர் தமு எக ச சார்பாக  நட்த்தப்ப்ட்ட கவிப்பித்த்னின் முந்தைய முதல் சிறுகதை தொகுப்பான் இடுக்கி விம்ர்சன கூட்ட்த்தில் பங்கேற்றிருந்தேன்..
அத்ற்காக அவரது கதைகளை  முடித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்ப்டாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்த்து. இதை அக்கூட்ட்த்திலும் வெளிப்படுத்தியிருந்தேன். அழ்கியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்த்னின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம் ம்க்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது.
இக்காரணங்களால் இந்த அவரது இரண்டாவது தொகுப்பிற்கான முன்னுரைக்காக கவிப்பித்தன் தொலைபேசியில் அழைத்த போதும்  உடனடியாக சம்மதித்தேன் . வாசித்த்வுடன் சட்டென மனதில் பட்ட்து இதுதான் முந்தைய தொகுப்பிலிருந்த தீவிரத்த்ன்மை இத்தொகுப்பிலும் குறையாமல் எழுதியிருக்க்கீறார்.
குறிப்பாக ஊர்ப்பிடாரி கதை நவீன கதைத்ன்மைக்கான கூறுகளுடன் சிறப்பாக வடிவம் பெற்றிருக்கிறது . ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக எனும் சொலவடை பரவலாக வட மாவட்ட கிராமங்களில் பெண்கள் புறம்பு  பேசும்போது  பயன்படுத்துவார்கள் . இதர கதைகள் அனைத்தும் அனுபவத்திலிருந்து வெளிப்படுகிறபோது இக்கதை அவரது அதீத கற்பனையில் உருபெற்றிருப்பதால் சட்டென ஒரு ஈர்ப்பையும் சுவாரசியத்தையும் தன்னுள் தக்கவைத்துக்கொள்கிறது.
இக்கதை கற்பனையின் உச்சம் என்றால் அனுபவத்தின் உச்சமாக உருவாக்கம் கொண்டிருக்கும் கதை சிப்பாய் கணேசன். கிராமத்து பேச்சு மொழியின் கெச்சைத்த்ன்மையொடு அவர்களது மனோபாவத்துடன் மிக நெருக்கமாக அவர்கள் உலகத்தில் மண் திண்ணையில் அமரவைத்து நம் முன் காட்சிபடுத்தி மனதை பாரமாக்கிவிடுகிறார்..இக்கதையில் சிறுவனின் அக உல்க சித்திரிப்பு சிதையாமல் அதேசம்யம்  பெரியமனிதர்களின் அசிங்கங்களையும் வாசகர்கள் உணரும் விதமாக  கவிப்பித்தன் கோடிட்டு காட்டும் இடங்களில் நல்ல சிறுகதையாளராக அங்கீகாரம் பெறுகிறார்.
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் அவனது அப்பா கணேசன்... தான் வாங்கிவந்த பிராந்திபாட்டலில் கொஞ்சம் எடுத்து  சிறுவனின் அம்மாவுக்கு  கொடுக்க ஆரம்பத்தில் வேணாம் வேணாம் என மறுத்துக்கொண்டே அவசரமாய் வாங்கிகுடித்துவிட்டு கணவனை அவள் இறுக்கி முத்தமிடும் காட்சியில் நம் மனம் பாத்திரங்களின் உலகத்தோடு ஒன்றி சங்கமித்துவிடுகிறது.
எனக்கும் மிகவும் பிடித்த தொகுப்பின் மூன்றாவது கதை சிலுவைச்சுழி
இக்கதையின் நாயகன் ஒரு சிறுவன் . கிறித்துவ கோயிலின் திருவிழா முடிந்த மறுநாள்  காலையில்  அங்கு சென்று எங்காவது காசுகிடைக்குமா என தேடும் அவனது  பாதையில் விரியும் இக்கதை ஒரு வகையில் நீதி போத்னைக்கதையாக தெரிந்தாலும் இறுதிக்காட்சியில் அது நம்மை நெகிழவைத்து பெரும் அனுபவத்துக்குள் அமிழ்த்திவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை
மேற்சொன்ன மூன்று கதைகள் மூலம் இத்தொகுப்பு  ஒரு சிறந்த சிறுகதைதொகுப்புக்கான் மதிப்பை பெறுகிறது .
மற்றும் திருட்டு இலுப்பை ,பாப்பராப்பூச்சி . ஐஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம் முட்களில் பூக்கும் மலர்கள்: போன்ற கதைகளும், இத்தொகுப்பில் குறிப்பிட்த்த்குந்த கதைகளாக இடம்பெற்றிருக்கின்றன . இக்கதைகள் எளீமையான மனிதர்களையும் அவர்களது  அறியப்ப்டாத துயரங்களையும்  வெக்கை மிகுந்த அவர்களது வாழ்க்கைகையையும் நமக்கு காட்டுவதில் முழு வெற்றியை பெறுகின்றன  . ஆனாலும் அதேசமயத்தில் இவையனைத்தும்  இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக இருக்கிற போது இன்றைய நடைமுறை கிராம ,வாழ்க்கையின் அவலங்களிலிருந்து கவிப்பித்தன் தப்பித்து ஒரு வசதியான இட்த்திலிருந்து கிராம வாழ்க்கையை அவதானிக்கிறாரோ என்றும் ஐயம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை . நூறுநாள் வேலைத்திட்டம் இலவச தொலைக்காட்சி கிரைண்டர் மிக்சிக்கள் மூலம் கிராமக்கள் வருங்காலத்தில் சந்திக்க போகும் பெரும் ஆபத்துக்கள் குறித்த சிந்த்னையை இன்றைய கிராமத்து கதைகள கோரி நிற்கின்றன .மேற்சொன்னவை அனைத்தும் கிட்ட்த்ட்ட ஒரு மயக்க ஊசிபோல  கிராமத்து மக்களை போலி உற்சாகத்துக்கு அழைத்து செல்வதாக இருக்கின்றன .. நகரமக்களின் திடீர் வசதி பெருக்கத்திற்கு விலையாகவும்  விளைநிலங்களை பிடுங்கி வருவதற்கு மாற்றாகவும்தான் இந்த சலுகைகள் என்பதை நாம் உணர்த்த வேண்டிய கட்டாயம் இன்று எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கிறது.
இனிவரும் கதைகளில் கவிப்பித்தன் இதனையும் கணக்கிலெடுக்க வேண்டும் என விரும்புகிறேன் மற்றபடி  ராஜேந்திரசோழன் ,  ஜி. முருகன்  அழ்கிய பெரியவன் , க்ண்மணி குணசேகரன் , காலபைரவன் போன்ற வடமாவட்ட எழுத்தாளர்களின் கிராமத்து கால்களின் தட்த்தையொட்டி கவிப்பித்த்ன தன் கதைகள் மூலம் இலக்கிய உலகில் தன் த்ட்த்தையும் இத்தொகுப்பின் மூலம் அழுந்த  பதியவைக்கிறார் என்பதில் எள்ள்ளவும் ஐயமில்லை
தொடர்ந்து அவர்  த்னது கதைகளை முன்னெடுத்து செல்லும்பாதையில் வரும் காலத்தில் ஆகச்சிறந்த கதைசொல்லியாக வளரவும என் வாழ்த்துக்களை கூறுகிறேன்

கவிப்பித்தன் எழுதியிருக்கும் ஊர்ப்பிடாரி தொகுப்பின் அனைத்து கதைகளையும் ஒரு சேர வாசித்து முடிக்கிறபோது  சக படைப்பாளியாக அவருக்கு நான் சொல்ல விரும்புவதாக பட்ட்து இந்த வடிவம்குறித்த சிறு மெனக்கெடல்தான். உண்மையில் நான் வாசித்த முந்தைய தொகுப்பிலும் சரி இந்த தொகுப்பிலும் அவரது கதைகள் மீது வாழ்வனுபவங்கள்மீது ஒரு கள்ளத்த்னமான பொறாமையே உண்டாகும் அள்வீற்கு ஈர்ப்பை வசீகரத்தை உண்டாக்கி விடுகிறார். வட மாவட்டம் சார்ந்த சிறுகதைகள் எனும்போது ராஜேந்திர சோழன் அழகிய பெரியவன் ஜி முருகன்  காலபைரவன் கண்மணி குண சேகரன் சு. தமிழ்ச்செல்வி ஆகிய படைப்பாளிகள் கண்முன் வரிசைகட்டி நிற்கினறனர். அவர்கள் வரிசையில் தன் அழுத்த்மான கதைகள் முன் கவிப்பித்தன் இந்த பத்தாண்டுகளின் துவக்க படைப்பாளியாக வந்து நிற்கிறார்.

மேற் சொன்ன படைப்பாளிகளின் வரிசையை அவர்கள் அழுத்தமாக உண்டாக்கி விட்டுப்போன த்ட்த்தை கவிப்பித்தன் கடக்க வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சிப்பாய் கணேசன் ஊர்ப்பிடாரி மற்றும் முந்தைய தொகுப்பில் உள்ள  சில சிறுகதைகளை வைத்து பார்க்கும் போது அவருக்கு அதற்கான முழு தகுத்கியும் உள்ளதை என்னால் உணரமுடிகிறது 
அஜயன் பாலா

April 20, 2016

வ.சுப. மாணிக்கனார்

செம்மொழி செம்மல்கள்
வ.சுப. மாணிக்கனார்
.
இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு
அவரது தமிழ் பணிக்கு  என் சிறுவணக்கம் 

திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களையும் நுணுகி ஆய்ந்து அவற்றின் சாரத்திலிருந்து தமிழர்களுக்கான அறத்தையும் அவர்களது வாழ்வையும் கண்டெடுத்து  நூல்களாக மாற்றிதந்த சீரிய ஆய்வாளர் வ.சுப மாணிக்கனார்.



புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்த அண்ணாமலை எனும் இயற்பெயர் கொண்ட மாணிக்கனாரின் தந்தை சுப்பையாசெட்டியார்,தாயார் தெய்வயானை. பிறப்பு 09-04-1917..மாணிக்கனாரின் சிறுவயதிலேயே தாயும் தந்தையும்  இயற்கை எய்திவிட துயுருற தனித்து நின்ற தளிராம் மாணிக்கனாரை அவரது பாட்டியார் மீனாட்சி அவர்களின்  அன்புள்ளம் அரவணைத்துக்கொண்டது.


மேலைச்சிவபுரியில் திரு. நடேச அய்யரிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்,நல்வழி, நன்னெறி,மற்றும் மூதுரை போன்ற நீதி நூல்களை கற்றார்.பள்ளி படிப்பு முடிந்ததும் வயிற்று படிப்புக்காக பிழைப்பு தேடி பர்மாவுக்கு கப்பல் ஏறினார். .அங்கு வட்டிகடையில் சிறு கணக்கராக சிலவருடங்கள் பணீயாற்றிவந்தார். பணிநிமித்த்மாக  சிறு பொய் சொல்ல நேரிட்டபோது மனம் இசைவு கொள்ள மறுத்து கப்பலேறி  தாய்மண் திரும்பினார்.ஊரில் இச்செய்தி அறிந்தவர்கள் அவரை பொய் சொல்லா மாணிக்கம் என அழைக்க அதுவேதழைக்கவும் துவங்கியது.

 தமிழார்வம்   மீண்டும் மாணிக்கனாரை அழைக்க அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து பயிலதுவங்கினார்.பயிலும் காலத்தில் இவரது தமிழ் ஆர்வத்தையும் ஆய்வு திறனையும் கண்டு வியந்த பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அண்ணமலைபல்கலைக்கழகத்திலேயே அவருக்கு விரிவுரையாளர் பணியும் வாங்கிதந்தார். தமிழாசிரியப்பணி என்பது மாணாக்கருக்கு கற்றுதருவதோடு நிற்பதல்ல அது ஒரு தொண்டுபணி என எண்ணம் கொண்ட மாணிக்கனார் இரவுபகலாக தன் எழுத்துபணிக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்

தொல்காப்பியம் ,திருக்குறள் ஆகிய இரண்டையும் கண்களாக கொண்டுவாழ்ந்தவர். தொல்காப்பியக்கடல், திருக்குறட் நெறி, சங்க நெறி, வள்ளுவம் ,கம்ப நெறி, காப்பிய பார்வை,தமிழ் காதல் மற்றும் இலக்கியச்ச்சாறு போன்ற ஆய்வு நூல்களை தமிழர் பண்பாட்டு கண்ணோட்டத்தோடு எழுதி வெளியிட்டார். மட்டுமல்லாமல் நாடகங்கள் கவிதை தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கில நூல்கள் என இவர் எழுதிய நூல்கள் மட்டும் மொத்தம் இருபத்திரண்டு.

இவரது தமிழ்ப்பணிகாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக
துணைவேந்தர் இருக்கை  இவரைத் தேடி பெருமைபடுத்தியது. . இன்றும்
சிறந்த துணைவேந்தருக்கான் முன்மாதிரியாக அவரைகுறிப்பிடுவது ஒன்றே அவர் இலக்கணமாய் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று.

"தமிழ் வழி கல்வி இயக்கம்" என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார் 

செம்மல், முதுபெரும் புலவர்,மற்றும் பெருந்தமிழ்க்காவாலர் ஆகியவை இவரது தமிழ் சேவைக்கு சூட்டப்ட்ட நற் பட்டங்கள் .

தமிழக அரசு இவருக்கு வள்ளுவர் விருது அறிவித்து அவரது உழைப்பை தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிதது.


மறைவு: 24-4 -1989 

April 11, 2016

இலக்கியவீதி அன்னம் விருது

இலக்கிய வீதி அமைப்பின் அன்ன்ம் விருது இந்த  எப்ரல் மாதம்( 12ம தேதி ) வழங்க என்னை தேர்வு செய்து கவுரவித்துள்ளது. மயிலை பாரதிய வித்யாபவனில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் அந்நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் அந்த கணத்தில் உடனிருக்கும் படி நளிர் மனம் நல்கி பேரன்புடன் அழைக்கிறேன்

April 6, 2016

அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் (1928- 2016)

 
பத்து வருடங்களுக்கு முன்  பி சி ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதற்கு  முன் சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு காட்சியில்  தலை காட்டி வசனம் பேசியிருந்தாலும். முழு கதாபாத்திரம் என்ற அளவில் எனக்கு இதுவே முதல் படம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில்  அது குறித்து தினத்தந்தி வெள்ளித்திரையில் ஒரு செய்தி வெளியானது.அதில் நடிகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது.   

அன்று மாலையே ஒரு அழைப்பு

தம்பி  நான் பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசறேன்

எனக்கு சட்டென ஒரு வரலாறு என்னோடு  கலப்பது போல் ஒரு பெருமை  எத்தனை முறை அவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம்

சொல்லுங்க சார் !

தம்பி நீங்க வானம் வசப்படும்  படத்துல நடிச்சிருக்கிங்கறத பேப்பர்ல படிச்சேன் புது பேரா இருக்கு  உங்களை பத்தி விவரம் சொல்ல முடியுமா, உங்க ஊர் வயசு இதுக்கு முன்னாடி எதாவது படத்துல நடிச்சிருக்கீங்கன்ற விவரம்லாம் எனக்கு சொன்னீங்கன்னா சௌகரியமா இருக்கும்
அன்று மாலையே அவரை  வீட்டில்  சந்தித்து புகைப்படத்துடன் தகவல்களை கொடுத்தேன் .

என்னை போல ஒவ்வொரு வாரமும்  பல புதுமுகங்கள் வந்து கொண்டே யிருப்பார்கள் இப்படி அவர்கள் ஒவ்வொருவரிடமும் தொடர்பு கொண்டு பேசி தகவல்கள் சேகரித்து அதை சரி  பார்த்து ஒழுங்கு செய்து பாதுகாப்பது என்பது அத்தனை  சாதாரண வேலையல்ல . பேனுக்கு பேன் பார்க்கும்  சிக்கு பிடித்த காரியம்.  இதற்கு ஒரு ஜென் பவுத்தனுக்கான நிதானமும் சமூகத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு குறித்த  மிகப்பெரிய அக்கறையும் அவசியம்

அச்சமயம் அவருக்கு எப்படியும் 80 வயது இருக்கும். அறுபது வயதிலெயே ஆடி அடங்கியாகிவிட்டது என வீட்டில் உட்கார்ந்து விட்டத்தை பார்க்கும் இந்த காலத்தில் இந்த வயதில் தொடர்ந்து அவர் தகவல்களை திரட்டுவதும் விடாமல் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்வதும் ஆச்சர்யபடத்தக்க விஷயம் .

ஆங்கில படங்கள் பற்றிய விவரங்களைக்கொண்ட புகழ் பெற்ற வலைத்தளம் IMDP. இதில் தினசரி தகவல்களை சேகரிக்கவும் பகுக்கவும் தொகுக்கவும்  அச்சக்கோர்க்கவும் உலகம் முழுக்க பல  நூறு ஊழியர்கள் நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக  24×7 பணி புரிந்து வருகின்றனர். 

ஆனால் இப்படிபட்ட பிரம்மண்டமான நிறுவன்ம் செய்யும் காரியத்தை ஒரே ஒரு ஆள் அதுவும் கம்யூட்டர் உபயோகத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தன் வாழ்நாளையே அர்ப்பணித்து தமிழ் சினிமாவுக்காக செய்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட  காரியம்  அவரை இந்த சமுகம் தலையில் வைத்தல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்

ஆவணப்படுத்துவதும் தகவலை சேகரிப்பதும் சமூகத்துக்கு அத்தனை அவசியமா என பலரும் கேட்கலாம் . வரலாறு ஆவணப்டுத்துதலிலிருந்துதான்  உருவாக்கப்படுகிறது.

உலக சினிமா வரலாற்றை எழுதும் போது அதன் ஒவ்வொரு மாற்றங்களையும் நுணுகி ஆய்ந்தறிந்து எழுதிய காலத்தில் எனக்கு தேவைப்பட்ட ஆதாரபூர்வமான தகவல்களுக்கு ஆங்கிலத்தில் பல நூல்கள் கிடைத்தன . 

 அதே தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆசைப்பட்ட போது எனக்கு போதிய தரவுகளுக்கான நூல்களே கிடைக்கவில்லை  . அறந்தை நாராயணன் எழுதிய தமிழ் சினிமாவின் கதை தாண்டி வேறு நூல்களே இல்லை . 

1917  நடராஜ முதலியாரின் கீசக வதம் முதல் படம் என அனைவருக்கும் தெரியுமே தவிர அக்காலத்தில் வந்த இத்ர தமிழ் மவுனப்படங்களின் வரலாறு இன்று வரை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் துர்ப்பாகிய அவல நிலை
பி கே ஞானசாகரம் என்பவர் தன் மகன் மணி எனும் ஆறுவயது சிறுவனை பள்ளீயில் சேர்க்க அழைத்து சென்றிருக்கிறார். 

தலைமை ஆசிரியருக்கு மணி என்ற பெயர் பிடிக்கவில்லை அன்ந்த கிருஷ்ணன் என புது பெயரை சூட்டினார் . அனந்தகிருஷணன் ஆன்ந்தன் ஆனார்.

 பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார் ஆனந்தன். உடன் சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். 

 பின் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் சேர்ந்து பட்ட படிப்பை தொடர்ந்தாலும் அங்கு உடன் படித்த ஒய் .ஜி பார்த்த சாரதியுடன் இணைந்து  நாட்கங்கள் போடத் துவங்கினார் ஆனாலும் காமிராவின் மீதான மோகம்தான் அவரை அதிகம் அலைக்கழித்த்து. பாக்ஸ் கேமிராவில் தனது யுக்தியால் இரட்டைவேடப்படம் எடுத்தார். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை அவருக்கு முறைப்படி இன்னும் நேர்த்தியாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

 அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தார். அவரது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் வெறும் ஆனந்தனாக இருந்தவர் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார். பின் ஒருநாள் நாடோடி மன்ன்ன் அலுவலகத்தில் ஆர் எம் வியை சந்திக்க போக அன்று முதல் மக்கள் தொடர்பு பணியும் அவருக்கு வந்து சேர்ந்த்து


 வெறும் பத்ரிக்கையாளனாக இல்லாமல் போலீஸ்காரன் மகள் (1962) பொம்மை (1964) ஊமை விழிகள் (1986) சுகமான சுமைகள் (1992) ஆசை (1995) இந்தியன் (1996)  ஆகிய படங்களில் சிறியதும் பெரியதாகவும் நடிக்கவும் செய்தார். இதில் கடைசி இரு படங்கள்  கத்தரியில் காணாமல் போனாலும் டைட்டில்களில் நன்றி என அவர் பெய்ரை தாங்கியே வெளியாகின

தொடர்ந்து 70 ஆண்டுகள் அவர் இடைவிடாமல் அனைத்து படங்கள் குறித்தும் சேர்த்து வைத்த தகவல்கள் சாதனை செய்த தமிழ் சினிமா எனும் பெயரில் நூலாக வெளிவந்து பொக்கிஷமாக நமக்கு பயன்படுகிறது. அரசாங்கம் இத்ற்காக பத்துலட்ச ரூபாய் செலவு செய்து தன் குற்றவுணர்ச்சிக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த அவரது பணிக்காக கண்டிப்பாக ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவபடுத்தலாம் . 

அப்போது தான் வருங்காலத்தில் ஆவணபடுத்துதல் பணியின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவரும் 

நன்றி : புத்தகம் பேசுது, ஏப்ரல் 2016

April 1, 2016

ஒவ்வொரு முறையும்


ஒவ்வொரு முறையும் தோற்கிறேன் 
ஒவ்வொரு முறையும் காயங்கள் 
ஒவ்வொரு முறையும் எழுகிறேன்
 ஒவ்வொருமுறையும் காதல்.
ஒவ்வொரு முறையும் துரோகம் 
.ஒவ்வொரு முறையும் களிப்பு 
ஒவ்வொருமுறையும் அவமானம்
 ஒவ்வொரு முறையும் வீழ்ச்சி 
ஒவ்வொருமுறையும் சாகசம் 
நானொரு பாலட் நடனக்காரன்
 வித்தைகள் கற்றவன் 
என் வித்தைகள் வெற்றிக்கானவை அல்ல
-
 அவை விழுதலுக்கும் எழுதலுக்குமிடையிலான சூத்திரம்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...