May 31, 2021

- லெர்மண்டோவ் - நம் காலத்து நாயகன் - மூன்றவது கட்டுரை -தஸ்தயெவெஸ்கி 200

 26 வயதில் இறந்து போன  ருஷ்ய இலக்கியத்தின் வால் நட்சத்திரம்  





புஷ்கின் மரணத்தையொட்டி லெர்மண்டோவ் எழுதிய  DEATH OF A POET  கவிதை பற்றியும் அது ஜார் ஆட்சியால் உடனே தடைசெய்யப்பட்டு  விசாணைக்குப்பின் லெர்மண்டொவ்  சிறைபிடிக்கப்பட்டதையும் கடந்த பதிவான புஷ்கின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்

இந்த தஸ்தாயெவெஸ்கி 200 வரிசையில்  லெர்மண்டோவ்  பற்ரி எழுத எந்த முகாந்திரமும் இல்லை .காரணம் தஸ்தாயெவெஸ்கி நான் வாசித்த்வரையில் LERMENTOV  பற்றி எந்த குறிப்புகளும் எழுதவில்லை . தஸ்தாயேவெஸ்கியை விட லெர்மண்டோவ் ஏழு வயது மூத்தவர்.  . லெர்மண்டோவ்  27 வயதில் இறக்கும் போது தஸ்தாயெவெஸ்கீக்கு வயது 20 மட்டுமே . அதுவரை அவர் எந்த படைப்பையும் எழுதியிருக்கவும் இல்லை .

ஆனாலும் லெர்மண்டோவ் பற்றி எழுதமல் என்னால தாண்டிப்போகவும் முடியவில்லை முதலாவது காரணம்  இருவருமே புனித பீட்டர்ஸ் பர்க் நகரவாசிகள் இன்னொரு காரணம் லெர்மண்டோவின்  உலகப்புகழ்பெற்ற நாவல்  நம் காலத்து நாயகன்

அதுவரை நான் வாசித்த எந்த நாவலும் அப்படி ஒரு அனுபவத்தை தரவில்லை .  வழக்கமாக  ருஷ்ய நாவல்கள்  என்றாலே அது ஆன்மாவை நேரடியாக ஊடுருவி .அதை புனிதப்படுத்தும்   வேலையை செய்ய ஆரம்பித்துவிடும் . நாமும் அபப்டியே நெக்குருகி வாசிப்பில் மூழ்கி கரைந்து போவோம் ,ஆனால்  நம் காலத்து நாயகன் அப்படிச் செய்ய்வில்லை .அது ஒரு ஈவிரக்கமற்ற  ஒரு 26 வயது இளைஞனைப் பற்றிய கதை அவன் பல பெண்களை எப்படியெல்லம் தன்னிடம் காதலில் விழவைத்து  பின் அவர்களை எப்படி அவமானப்படுதி உதறித் தள்ளிவிட்டு  இன்னொரு பெண்ணை நோக்கி செல்கிறான் என்பதும்  தொடர்ந்து இப்படி அறமற்று    எந்த முறைமையும் இலலாமல்  தான் தோன்றியாக ஒருவன் வாழ்கிறான் என்பதும் கதை ..

அதே சமயம் அதன் மொழியும் கதை நகர்த்தும் பாங்கும்  எந்த உலக இலக்கியத்துக்கும் சளைக்காத விதத்தில் எழுதப்பட்டிருந்தது .

உண்மையில் லெர்மண்டோவ் அந்த நாவலில் எழுதியது அக்காலத்து ஜார்மனன்ரின் ஆட்சியில் எந்த  லட்சியங்களற்று திரிந்த கேளிக்கையில் உழலும் ருஷ்ய மக்களைப் பர்றியது ‘

 இலக்கியம் என்பது வெறும் அழகியலும் உன்னதமான ஒரு மன நிலையை  சிருஷ்டிப்பது  மட்டுமல்ல அது நம்மை சுற்றியிருக்கும் எதார்த்த உலகத்தையும் நம் அருவருப்புகளையு,ம் நம் முன் காட்டுவது. என்பதை அந்நாவல் நமக்கு தெளிவாக் உணர்த்துவதே அதன் சிறப்பு

.இதர பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களைபோல அதன் நாயகன் சுயத்தை ஊதிப்பெருக்குபவன் அல்ல,.  அவன் சுயத்தை அழித்துக்கொள்பவன். அவன் ஏன் அப்படி பலரும் வெறுக்கும் வண்ணம் நடந்துகொள்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை . ஒரு வெறுமை அவனை இப்படியெல்லாம் செய்ய வைக்கிரது

எனது அனுமானத்தில் தஸ்தாயெவெஸ்கி டால்ஸ்டாய் இருவருக்குமே இந்த  நாவல் பிடித்திருக்காது . தஸ்தாயெவெஸ்கியவாது ரஸ்கோல்நிகொவ் எனும் எதிர் நாயகனை முன்னிறுத்தி கதைகள் எழுதியிருக்கிறார் .ஆனால் டால்ஸ்டாய் கதபாத்திரங்களோ குற்றம் செய்தமைக்காக தங்களை நெருப்பில்  உருக்க்கிக்கொண்டு உன்னதத்தை தேடும்  பாத்திரஙகள் அவர் கதைகளில் குற்றவாளிகள் கடும் தண்டனை அடைவார்கள் அல்லது அடைய வைத்துவிடுவார்.

இப்படியான ஒரு நாவல் உலக இலக்கியத்தில் அதற்கு முன் வந்ததுண்டா தெரிய வில்லை  பிற்பாடு இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆல்பர் காம்யூ வால் எழுதப்ப்ட்ட  அன்னியன்  நாவலில் வரும் மெர்சோ போல பிச்சோரின் மதம் கட்டமைக்கும் அனைத்து ஒழுக்க விதிகளிலிருந்து தப்பிக்க நினைப்பவன் .

இப்படியான தனித்தன்மை மிகுந்த இந்த நாவலை  லெர்மண்டோவ் எழுதிய போது அவருக்கு வயது வெறும் 26  என்பது ஆச்சரயம்

1816ல் மாஸ்கோவில் ராணுவ குடும்பத்தில் பிறந்த கையோடு  லெர்மண்டோவின் தாயர் இறநதுவிட  தந்தையிடமிருந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு வந்த பணக்கார பாட்டி ஆர்செனயேஸ்  லெர்மண்டொவுக்கு ராஜ வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தார். தாய் இல்லாத குறை தெரியாமல் இருக்க வீட்டிலேயே நகரின் மிகச்சிறந்த மேதைகளையெல்லாம்  தன் அரண்மனைக்கு வரவழைத்து பிரெஞ்சு ஜெர்மன் உள்ளிட்டமொழிகளையும் ஓவியம் உள்ளிட்ட கலைகளையும் பயிற்றுவிக்க் ஆவண செய்தார் .


தொடர்ந்து 1830 மாஸ்கோ பல்கலைகழகத்தில்; தத்துவம் பயின்றார் .கூடவே ருஷ்ய வரலாறும் இலக்கியமும் அவருக்கு வசப்பட்டது  உடன்  கவிபுனையும் ஆற்றல் தன்னியல்பில் அவருக்குள் வளரத்துவங்கியது. .கட்டுப்பாடற்ற அவரது சுதந்திர மனநிலை  பலருடைய  பகைமைக்கும் வழிசெய்தது   பகடி எனும் பேரில் எவரையும் சொற்களால் கீறிவிட்டு அவர்கள் மனக்குமுறலை பற்றி கவலைகொள்ளாத  அவரது மனோபவமே அதறகு காரணம்  (இறுதியில் அதுவே அவரது உயிரையும் பறிக்க அது வழியும் உண்டாக்கியது)  ,.1832ல் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு பீட்ட்ர்ஸ்பர்க் நகரம் திரும்பினார் .

1834ல் பட்டப்படிப்பு முடித்த கையோடு பாட்டியின் பரிந்துரையில்  ராணுவத்தில் பயிற்சி எடூத்துக்கொள்ள உடன்  உயர் பதவிகளும் தேடி வந்தது . இடைப்பட்ட காலத்தில் 300க்கும்  அதிக்மான கவிதைகளும் சில நாடகங்களும் எழுதினார்.  

.ராணுவத்தில் அவரது அசாத்திய  துணிச்சல் காரணமாக களத்தில் துடிப்பு மிக்க வீரர் என்ற பெயரும் பெற்றார்  உயர் மட்டக்குழுவில் லெர்மண்டோவின் பெயர் அதிகம் அடிபடத்துவங்கியது.  மன்னருக்கு நெருக்கமானவர்கள் கூடும்  விழாக்களில் புதிய நாணயம் போல பிரகாசித்தார். அனைவரது கண்களையும் ஈர்த்தார். . , குறுகிய காலத்தில்  பீட்டர்ஸ்பெர்க் நகரின் புதிய வால் நட்சத்திரமாக வளைய வந்தார் .கூடவே நகரின் உயர்குடிப்பெணகளும் அவர் வலைக்குள் விழுந்தனர்...   கவிதையும் அதிகமாக எழுததுவங்கினார்  அவரது துணிச்சலான அரசியல் கருத்துக்கள் அவருக்குமுக்கியத்துவம் கொடுத்தன. புஷ்கின் அவருக்கு கவிதையில் ஆதர்சமானார் .

தன் ஆதர்ச கவிஞன் புஷ்கினைக் கண்டு தான் எழுதிய கவிதைகளை வாசித்து காண்பிக்க எதிர் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான்  அந்த செய்தி இடிபோல் அவரத்தக்கியது

புஷகின் டூயலில் இறந்த செய்தியும் அதுவும் ஒரு பிரெஞ்சு அதிகாரியின் துப்பாக்கியால் சுடப்ப்ட்டு இறந்த  தகவலையும்  கேள்விப்பட்டு அவரது சடலம் கொண்டுவரபட்ட தேவாலயம் நோக்கி ஓடினார்.  சவ்ப்பெட்டியில் சடலமாக கிடந்த புஷ்கிணைக் கண்டதும் மனம் குமுறி குலைந்தார் .  அந்த மரணத்தில்  ஜார் நிக்கோலஸ் மன்னரின் நிழல் படிந்திருப்பதை உணர்ந்தார் பிரெஞ்சு வீரனால் சாகடிக்கப்ப்ட்ட ருஷ்யக்கவியின் மரணம் எதிர்கால ருஷ்யாவுக்கான சவால் என்பதை உணர்ந்தார் . சட்டென வார்த்தைகள் கரைபுரள   கண்ணில் நீர் தளும்ப கையோடு கிடைத்த தாளில்  டெத் ஆப் எ பொயட் எனும் கவிதையை  எழுதி நண்பர்களுக்கு கொடுக்க அது சடுதியில் பிரதி எடுக்கப்பட்டு  பீட்டர்ஸ் பர்க் நகரத்தில் பலர் கைக்குகை மாறத்துவங்கியது ( கீழே கவிதை மொழிபெயர்ப்பு இணைக்கப்ப்ட்டுள்ளது )

 புஷ்கின் மரணம்  உண்டாக்கிய  தாக்குதல் ஒரு பக்கமும் லெர்மண்டோவின்  புரட்சிக் கவிதை உண்டாககிய எழுச்சி இன்னொரு பக்குமுமாக  பீட்டர்ஸ் பெர்க் நகரமே கொந்தளித்தது

தகவல் ஜார் மன்னர் நிக்கோலசுக்கு தெரிய வந்தது . லெர்மண்டோவ் எழுதிய கவிதையின் கடைசி 16 வரிகள்  புஷ்கின் கொலைக்கு கார்னம் அவர்களது ஆட்சியே  என்பதாக் எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு கடும் கோபத்தை வர வழைக்க் உடனே  அரசு அந்த கவிதையை  தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது. மீறி அக் கவிதையை வைத்திருப்பவர்கள் சிறை பிடிக்க்ப்படுவார்கள் என அறிவித்த தோடு  மட்டுமலலமல் உடனே லெர்மண்ட்டோவை சிறை பிடித்து காக்கசஸ்  மலைப்பகுதிக்கு நாடுகடத்தி தண்ட்னை கொடுத்தனர்

அந்த ஒரே கவிதை லெர்மண்டோவை  புஷ்கின் வாரிசாக அனைவரையும் பேச வைத்தது

காக்கஸஸ் மலைப்பகுதியில் சுற்றிதிரிந்த த்ண்டனைக் காலத்தில் பல கவிதைகள் எழுதவும் வாசிக்கவும் பயன்படுத்திக்கொண்டார் . பாட்டி அர்சென்யேஸ் கொடுத்த அழுத்தம் காரண்மாக தண்டனையிலிருந்து  விடுவிக்கப்ப்ட்டு  மீண்டும் பீட்டர்ஸ் பெர்க் நகரம் வந்தார் . வந்த கையோடு நம் காலத்து நாயகன் நாவலை முழுமையாக  எழுதி முடித்தார்

இதனிடையே  நகரின் பிரதான உயர்குல அழகிகள் இருவரது விருந்துகளில் அடிக்கடி கலந்த்கொண்டார் . அங்கு வரும் இதர ஆண்களோடு அடிக்கடி பகை  உரசியது. .குறிப்பாக அங்கு வரும் பிரெஞ்ச் தூதரக ஆதிகாரிகளிடம் அடிக்கடி மோதல் உருவாகி டூயலுக்கு அழைப்பதும் அரசின் கோவத்துக்கு ஆளாகி ,மீண்டும் தணடனை .பெறுவதும் தொடர்ந்தது

1841 ஜூலை 25 ல் அவருடைய  26ம் வயதில் நண்பர் மாட்ரியானோவின் உடை குறித்து   பலர் முன்னிலையில் கேலி பேச அவர் உடனே டூயலுக்கு அழைக்க உடனே லெர்மண்டோவும் அதை ஏற்றுக் கொண்டார் ,’இரண்டு நாள் கழித்து மாஷூக் மலைப்பகுதியில் இருவரும்  குறிப்பிட்ட நேரத்தில் துப்பககிகளுடன்  எதிரெதிர் நின்றனர் லெர்மணடோவின் குறி தப்பி காற்றில் குண்டு பறக்க மாத்ரியோனோவின் குண்டு லெர்மண்டீவின் நெஞ்சில் துளைத்து 26 வயதுல் அவரை சாகாவரம் பெற்ற


எழுத்தா:ளனாக்கி உயிரை பறித்துக்கொண்டது

புஷ்கின் மறைவுக்கு லெரமண்டொவ் எழுதிய  டெத் ஆப் எ பொயட் கவிதை நண்பர்  எழுத்தாளர் அசதா மொழிபெயர்ப்பில் கீழே இணைக்கப்பட்டுள்ளது . ஒருவகையில் இந்த கவிதை அவருக்கும் கூட பொருந்தக்கூடியதகவே இருக்கிறது  

அஜயன் பாலா ‘

31-05-2021

 

 

 

கவிஞனின் மரணம்

லெர்மன்தேவ்

தமிழில் – அசதா

 

கவிஞன் மரணித்துவிட்டான்.

-நற்புகழுக்கு அடிமையவன்-

அவன் வீழ்ந்தான், அவதூறுகளால்.

பழிவாங்கும் வேட்கையில்

நெஞ்சு நிமிர்த்திச் சென்றான்,

பெருமையில் நிமிர்ந்த தனது தலை கவிழ அவன் வீழ்ந்தான்.

சிறிய அவமதிப்புகளையும் தாங்குவதில்லை

கவிஞனின் நெஞ்சு.

எப்போதும்போல் மூடர்கள் கூட்டத்துக்கு எதிராய்

அவன் எழுந்தான், கொலையுண்டான்.

அவன் கொல்லப்பட்டான்,

இப்போது அழுவதால்,

எதற்கும் உதவா வெற்றான கூட்டுப் புகழஞ்சலிகளால்,

முணுமுணுக்கப்படும் உணர்ச்சிமிகு சமாதானங்களால் என்ன பயன்?

 

விதி தனது தீர்ப்பை எழுதிவிட்டது.

அவனது சுதந்திரமான நெஞ்சுரமிக்கப் பரிசை

வெறுத்து ஒதுக்கியது நீங்கள்தானே?

உங்களது கேளிக்கைக்காக

அணையவிருந்த நெருப்பை

ஊதிப் பெருக்கியதும் நீங்கள்தானே?

 

நன்று, இப்போது மகிழுங்கள்…

அந்தக் கடைசிச் சித்திரவதையை அவனால் தாங்கமுடியவில்லை:

அவனது மேதமையின் அற்புத ஒளி அணைந்தது,

அவனது வெற்றியின் மலர்க்கிரீடம் வாடிவதங்கியது.

 

ஈவிரக்கமின்றி அந்தக் கொலைகாரன்

அவன் உயிரைப் பறித்தான்.

சண்டையிடும் வாய்ப்பே அவனுக்கு வழங்கப்படவில்லை.

அவனது வெற்று இதயம் சீராகத் துடித்தது.

சிறு நடுக்கமும் இல்லாது கையில் இறுகப் பற்றிய துப்பாக்கி.

ஆச்சரியம் ஒன்றுமில்லை,

நல்வாய்ப்பையும் வசதியையும் தேடி

அவனது சக நாடோடிகளைப் போலவே

வெகு தொலைவேயிருந்து விதி அவனை

நம்மிடம் அனுப்பி வைத்திருந்தது.

 

கர்வத்துடன் அவன் கேலி செய்தான், ஏளனம் புரிந்தான்,

அவனது நிலத்தின் மொழியில் அதன் சங்கேதச் சொற்களில்.

எங்களது கௌரவத்தையும் அவன் விட்டுவைக்கவில்லை.

அந்தக் கேடுமிக்க கணத்தில்

“யாருக்கெதிராய் நாம் கை நீட்டியிருக்கிறோம்” என்பதையும்

அவன் உணரவில்லை.

 

அவன் கொல்லப்பட்டான்,

பெயர் தெரியாத ஆனால் மகிழ்வுமிக்க,

கடும் பொறாமைக்குப் பலியான

அந்தக் கவிஞனைப்போல

அவனும் கல்லறைக்குள் அடக்கப்பட்டான்.

அவனை இவன் அவ்வளவு அற்புதமாகப் பாடினான்,

அவனைப்போலவே வலுவான கரத்தால் அடித்து வீழ்த்தப்பட்டான்.

 

சுதந்திர மனதையும் தீவிர மனவெழுச்சியையும்

பொறாமைகொண்டு ஒடுக்கும்

இந்தக் கூட்டத்துக்குள் வர

அந்த அற்புத நட்பின் அமைதியிலிருந்து

ஏன் அவன் விலகினான்?

ஒன்றுக்கும் உதவாத அவதூறாளர்களுக்கு

ஏன் அவன் ஒத்தாசைபுரிந்தான்?

சகமனிதரை எப்போதும் சரியாக எடைபோடும் அவன்

அவர்களது வெற்று வார்த்தைகளையும்

போலி அன்பையும் எப்படி நம்பினான்?

 

அவனது மலர்க்கிரீடத்தை அகற்றிய அவர்கள்

இலைகளால் மறைக்கப்பட்ட முள்முடி ஒன்றை

தலையில் வைத்தனர்.

மறைந்திருந்த முட்கள் குரூரமானவை

அவை அவனது அழகிய புருவங்களில் இறங்கின.

கேலிப் பேச்சுகளாலும் எள்ளி நகையாடல்களாலும்

அவனது இறுதிக் கணங்கள் விஷமூட்டப்பட்டன.

பழியுணர்வு நாவை வறட்ட,

ஈடேறாத நம்பிக்கைகளால் ரகசியமாய் மனம் வெறுத்து

அவன் மரித்தான்.

 

அற்புதப் பாடல்கள் ஓய்ந்தன,

மீண்டும் அவை ஒலிக்கப்போவதில்லை.

அவன் தஞ்சமடைந்த இடம் சிறியது, துயரார்ந்தது,

அவனது உதடுகள் என்றென்றைக்குமாய் மூடப்பட்டன.

 

_______

 

நீங்கள் குரோதமெனும் தந்தைக்குப்

பிறந்த  ஆணவக்காரப் பிள்ளைகள்.

செல்வ விளையாட்டில் வீழ்ந்த வம்சங்களின்

சிதிலங்களை அடிமைப்படுத்துதல் எனும் கால்களால் நசுக்குபவர்கள்.  

நீங்கள் சிம்மாசனங்களை மொய்க்கும் பேராசைக்காரர்கள்,

சுதந்திரம், மேதமை, நற்பெயர் ஆகியவற்றைக் கொன்றொழிப்பவர்கள்.

சட்டத்தின் நிழலில் நீங்கள் மறைந்துகொள்கிறீர்கள்.

உண்மையும் நீதியும் உங்கள் முன் மௌனமாகிவிடுகின்றன.

 

ஊழலின் நண்பர்களே, நீதி கடவுளிடமிருந்தும் வரும்.

நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பயங்கரமான நீதிபதி அவர்.

தங்கக் காசுகளின் ஒலிக்கு அவர் மயங்குவதில்லை.

நீங்கள் நினைக்கப்போவதென்ன, செய்யப்போவதென்ன

என்பதை அவர் அறிவார்.

அப்போது நீங்கள் பொய்களிடம் சரணடைவீர்கள்:

அவையும் உங்களைக் காப்பாற்றாது.

ஈய்ந்த உங்களது ரத்தம்

கவிஞனின் புனித ரத்தத்தைக் கழுவிச் சுத்தமாக்காது.

 

 

1837

 

 

 

  .

 

எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன் : இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை


இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை


அடூரின்  படங்களிலேயே ஆக்ச்சிறந்த படம்  எலிப்பத்தாயம் தான் .   கச்சிதமான திரைக்கதை ,துல்லியமான  காட்சி பதிவு, செறிவான படத்தொகுப்பு எல்லாம் ஒருமை கூடியபடம்  என்றால்  அது எலிப்பத்தயாத்தில்  மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது . நான் முன்பு அவரது முதல் படமாம சுயம் வரம் படத்தில் சொன்ன காட்சிமொழி  விமரசனம் என்ன என்பதை இரண்டு படங்களையும் ஒரு சேர பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்
 அது போன்ற எந்த குறைபாடும் இல்லாத முழுமையான கலைப் படைப்பு என்றால்  அது எலிப் பத்தாயம் தான் . ஒருவகையில் இந்த கதை அவருடைய சொந்தக் கதையாக  வாழ்வில் அனுபவித்த கதையாக இருந்ததாலோ என்னவோ  உருவகங்களில் அத்தனை கச்சிதம் .  எந்த தப்பித்தலு ம்  இல்லாமல் படைப்பாக  அவரிடம் காட்சிகளில் ஒரு தன்னியல்பு  ஆகியவை எலிப்பத்தாயத்தின் வெற்றி .
 இதனால் தான் வெறும்  ஒரு  பெரிய வீட்டையும்  ஒரு எலிப்பொறியையும்  நான்கைந்து பாத்திரங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு அவரால்  கட்டுக்கோப்பான ஒரு படைப்பை செதுக்கியிருக்க முடிந்தது
இந்த படம் மருமக்கதாய குடும்ப வழிமுறை எனும் கேரளாவில் நாயர் சமூகத்தில் வழிவழியாக பின்பற்றும் தயவழி சொத்துரிமை முறையை பின்புலமாக கொண்டது . இதுகுறித்து கூடுதலாக அறிய கீழே ஒரு தகவலை இணைத்திருக்கிறேன்
வல்லியதறவாடு வீட்டில்  ஒரு அண்ணனும் மூன்று  தங்கைகளும் வசிக்கின்றனர்  . பழம் பெருமைக்கு மிச்சமிருக்கும்  சில குத்து விளக்கும்  சில பாரம்பர்ய பண்டு பாத்திரங்களும் தவிர வீட்டில்  எதுவுமில்லை . அண்ணனோ  வேலைக்கு போகாமல்  வீட்டில் ஈசிசேரில் தினசரி பேப்பர் படிக்கும் மகா உலோபி . அவன் பெயர் உண்ணி.  மூத்தவள்  எப்படியோ  கல்யாணம் செய்துகொண்டு போக மீதம் இரண்டு பெண்கள் . இரண்டாவது பெண் ராஜம்மா ( சாரதா) கல்யாண வயதைக் கடந்து விட்டவள் .  வீட்டின் சமையல் முதல் கூழையன் அண்ணனுக்கு பணிவிடை வரை  அவள் தான் எல்லாம் . . எங்கே அவளுக்கு  திருமணம் செய்தால் சொத்தை இழக்கவேண்டி வருமோ என உண்ணிக்கு அச்சம் . அத்னால்  கல்யாணம் செய்யாமலே அவளை கொத்தடிமையாக வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான் . ராஜம்மாவும் அண்ணனை எதிர்க்க திராணியில்லாமல் வீடு எனும் கூண்டில் அடைபட்ட எலியாக வாழ்பவள்.
மூன்றாமவள் ஸ்ரீதேவி . வசீகர்மானவள் கனவுலகவாசி . கல்லூரிபடிப்பில் தோற்றுப்போய் டுடோரியல் படிக்கச்செல்பவள்  
கூழையன் உண்னிக்கு எலியை கண்டால் பயம்  ஒவ்வொரு நாளும் எலிப்பொறியில் எலியை பிடிப்பதும்  அதைக்கொண்டு போய்  விட்டிலுள்ள குளத்தில் சாகடிப்பதும் அக்கா தங்கைகளின்  வேலை .
காமிரா வீட்டிற்குள்  வரும் வித்தியசாமன சில நபர்களை ஒவ்வொருவராக காண்பித்து கதையை  நமக்குள் கடத்துகிறது
ராஜம்மாவை மனைவியை சமீபத்தில் இழந்த ஆணுக்கு இரண்டாவதாக  பெண்கேட்டு வருகிறான் உறவினன்  ஒருவன் . சமையல் கட்டில் நின்றபடி ஆவலுடன் காத்திருக்கும் ராஜம்மாவின் முகம் அண்ணனின் பதிலைகேட்டு  இருளடைகிறது . அவள் முகத்தின் படரும் துயருன் இசை மிச்சமிருக்கும் இளமையையும்  கொல்லப்படுவதை நாம் உணரமுடிகிறது
தொடர்ந்து அரபு நாட்டிலிருந்து திரும்பி வரும் இன்னொரு உறவினன் . இரண்டு பெண்களும்   கூலிங்கிளாசும் பாரின் டிஷர்ட்டுமாய் வரும் அவனைக்கண்டு வியக்கின்றனர். அவனுக்கோ இளையவள் ஸ்ரீதேவியின் அழகு மேல் மையல் . கையோடு கொண்டு வந்த வெளிநாட்டு மணப்பூச்சு ஒன்றை பரிசளிக்கிறான். அவளும் அதை வாங்கிக்கொண்டு இதயத்தால் சிரிக்கிறாள் . இந்தசமயத்தில் பெருச்சாளியாய் குறுக்கே வருகிறான் உண்ணி. பெண்கள் அவனை காபி சாப்பிட்டு போகச்சொல்ல அண்ணன் அவனை நோட்டம் விடுகிறான் . வெளிநாட்டு வேலை எப்படி இருக்கிறது என கேட்டுவிட்டு பின் இங்க கோட்டு சூட்டு பொட்டு திரியிறவன்ல்லாம் அங்க கீழ்த்தரமான வேலை செஞ்சி நக்கி பிழைக்கிறானுங்க போலருக்கே என உண்ணி விஷ ஊசி ஏற்ற அவமானத்தால் கூனி விடுகிறான் அவன் . பின்  காபிகூட குடிக்காமல் அங்கிருந்து போய்விடுகிறான் . இப்படி த்ங்கைக்கு வரும் வரன்கள் அனைத்தையும் சொத்து தன் கட்டுப்பாட்டிலிருந்து போக்க்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான்
அதே சமயம் அவன்மிகப்பெரிய கோழையும் கூட  நள்ளிரவில் வீட்டுத்தோட்டத்தில் தேங்காய் பறிக்க வரும் திருடனை விரட்டும் துணிச்சல் கூட இல்லாமல்  சகோதரிகளின் கூச்சலை பொருட்படுத்தாமல் போர்வையை இறுக்க மூடி படுத்துக்கொள்கிறான் .
மூத்த சகோதரியின் பையன் ஒருநாள் தங்களுக்கு சேரவேண்டிய பங்கைக்கேட்டு வர   வீட்டுக்கு வருகிறான் . அவனிடம் பங்கெல்லாம் தரமுடியாது வேண்டுமானால்  வீட்டில் வந்து  தங்க்கிக்கொள்ளுங்கள் என உண்ணு சலுகை தருகிறான் .
அதுமுதல் மூத்த சகோதரியும் மகனுடன் வீட்டில் தங்குகிறாள் எப்படியும்  சொத்தில் தன் பங்கை வாங்கிக்கொண்டு போயாக்வேண்டும் என்பதில் அவளும் உறுதியாக இருக்கிறாள்
இன்னிலையில்  கடைக்குட்டி ஸ்ரீதேவி ஒருநாள் காணவில்லை . யாருடனோ ஓடிப்போய்விட்டாள் .  ராஜம்மா உண்னியிடம் பதட்டத்துடன் தங்கையை தேடுமாறு அல்லது போலீசில் சொல்லுமாறு கேட்க உண்ணி ஈவு இரக்கமில்லாமல் அசையாமல் வீட்டிலேயே இருக்கிறான் .
ஒருவகையில் அவனுக்கு சொத்து அவன் கைவிட்டு போகவில்லை என்பதில் குரூர மகீழ்ச்சி
இறுதியில் ஒருநாள் ராஜம்மாவுக்கு கவலையும் நோயும் கூடிப்போக காப்பாற்ற வழியிலலாமல் இறக்கும் தருணம் . குல வழக்கப்படி கைவிடப்பட்டு உயிருக்கு போராடும் அவள் உடலை தூக்கிச்செல்ல ஊரார் வருகின்றனர்
எலியை பொறியில் தூக்கிச்செல்லும் அதே வழியில் ராஜம்மாவும் பரிதாபகரமாக ஆட்களால் கட்டிலோடு தூக்கிச்செலப்படுகிறாள். கடைசியில்  கருணைக்கொலையும்  செய்யப்படுகிறாள்
மூத்தவளும் வெறுத்துப்போய் மகனோடு  வீட்டுக்குப்போய்விட அண்ணன் உண்ணிமட்டும் பூட்டிய வீட்டுக்குள்  தனியாக இருக்கிறான் . தனிமை பயம் அனைத்தும் சேர்ந்து அவனுக்குள் மனப்பிறழ்வை உண்டாக்கிவிட  ஒருநாள் அவனது நிலை காணும் ஊரார்  வீட்டுக்குள் அதிரடியாக கதவை உடைத்து அவனை வெளியே எடுக்கின்றனர்
பின் அவனையும் ராஜம்மாவை கொண்டு செல்வது போல குளத்துக்கு தூக்கிச்செல்வது போல குண்டு கட்டாக தூக்கிச்செல்கின்றனர்
இறுதிக்காட்சியில் குளத்தில் மூழ்கடிக்க்கப்பட்ட உயிருடன் எழுந்து  வெளியே வந்து கையெடுத்து கும்பிடுவதுடன் படம் முடிகிறது
 மணமாகத மூன்று சகோதரிகளின் கதை பெர்க்மனின்  cries and visbers   ஞாபகப்படுத்துகிறது. ஒரு வேளை அடூர் அந்த படத்தின் பாதிப்பில் கூட இந்த திரைக்கதையை யோசித்திருக்கக்கூடும் .
படத்தில் தனிசிறப்பு காமிரா கோணங்கள் . கேரள தரவாடு வீடு பல படங்களில்  கையாளப்பட்டிருந்தலௌம் இந்த படத்தில்  மிகச்செறிவான் கட்டமைவில் ப்டத்தின் உள்ளடக்கத்துக்கு ஒட்க்ஹ்துழைக்கும் விதமாக படம்பிடிக்கப்ப்ட்டிருக்கின்றன. குல மரபும் பார்ம்பரயமும்  வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மை தொடர்ந்து வருகின்றன. கதவுக்கு பின்னால்  வாசலுக்கு பின்னால் பெண்கள் தயங்கி நிற்கும் காட்சிகளில் அவை ஆணாதிக்கத்தின் குறியீடுகளாய் மாறிவிடுகின்றன.
எலியை பிடிக்கும் வேட்டையில்  உடையும் குத்து விளக்குகள்  உபயோகமற்ற பழைய பாத்திரங்கள்  பரம்பரய்த்தின்  வீழ்ச்சியை குறியீடுகளாக உணர்த்துகின்றன
எலியை கொல்ல பொறியிடன்  ஸ்ரீதேவி குளத்தை நோக்கி தோட்டத்தின் வழி எடுத்துச்செல்லும் காட்சியில் காமிராவின் அசைவும் எம் பி சீனிவாசனின் பின்னணி இசையும் தான் இந்த படத்தை உலகத்த்ரமிக்க படமாக உயர்த்துகின்றன.
பிற்பாடு அதே இசை  அதே காமிர கோணம் ராஜம்மாவின் உடலும் உண்னியின் உடலும் தூக்கிச்செல்லப்படும்போது  உருவகம் வழி கவித்துவம் கதை சொல்ல இரண்டும் சினிமாவில் உச்ச நிலை எட்டுகிறது
அடூரின் படங்களின் ஒட்டுமொத்த  காட்சிகளிலேயே இதுவே சிறந்த ஒன்றும் ஆகும்
அடூர் இந்தியாவில் மிகச்சிறந்த ஐந்து  இயக்குனர்களில் ஒருவராக இந்த ஒரு படத்தைக்கொண்டே மதிப்பிடவும் முடியும்







இதுவும் நிலவுடமையின் வீழ்ச்சியை சொல்லும் படம் என்றாலும் இது மருமக்கதாயம் எனும் குல வழிபாட்டை பற்ரி அறிந்தால் மட்டுமே இப் படத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்  
இந்த மருமக்கதாய வழிமுறை பற்றி தமிழ் விக்கிபீடியா  இப்படி  கூறுகிறது.
அதாவது கேரள நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்த மூத்த ஆண் மட்டுமே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம்பூதிரி பெண்களை 'வேலி' என்னும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் இரண்டாவது ஆண் முதல் மற்ற ஆண்கள் நாயர் சமுதாய பெண்களுடன் 'சம்பந்தம்' என்னும் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் இருந்த வழக்கம் இந்திய சுதந்திர காலம் வரை கேரளத்தில் நீடித்தது.
ஆங்கிலேய அரசு இந்த வழக்கத்தை சட்டப்பூர்வமாக மாற்றித் திருத்தியமைத்து. இதனால் நம்பூதிரி ஆண்கள் வருகை தந்து செல்லும் நாயர் சமுதாயப் பெண்களுடைய குழந்தைகளின் தந்தை குறித்த சந்தேகம் எழுந்த நிலை காரணமாகவும் நாயர் சமுதாயத்தில் நிலவிய 'பல கணவர் முறை' (Polyandry) காரணமாகவும் மருமக்க தாய முறையைப் பின்பற்றும் குடும்பங்கள் கேரளத்தில் உருவாகின.
 இந்த குடும்பங்கள் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டன. ஒரு தாயுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக்குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களைக் குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.[2] அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ விற்கவோ முடியாது.[3] மருமக்க தாய முறையைக் கடைபிடித்தன் மூலம் குடும்பச் சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம்விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி நாயர் சமுதாய பெண்கள் அதிக செல்வாக்குடனும் உரிமைகளுடனும் பாதுகாப்புடனும் வாழ இம்முறை உதவியது.[4].






May 29, 2021

21 நாள் தனிமை கேள்வி பதில்- தஸ்தாயெவெஸ்கி 200 -3

 

 

 கடந்த ஆண்டு2020ல் லாக்டவுனை ஒட்டி முக நூலில் வாசகர்கள் சிலரது கேள்விகளுக்கு  தினம் ஒரு பதில் சொல்லி எழுதி வந்தேன் அதில் வந்த இந்த கேள்வி இந்த தொடரோடு நெருங்கியிருப்பதால் பதிவிடுகிறேன் 

-அஜயன் பாலா


கேள்வி

தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறதா,? இருந்தால் அது எப்படி புனைவாக மாறுகிறது ?தனிமையில் உருவான குழப்பங்கள், எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றம். அதே நேரம் எல்லாவற்றையும் விட தூய அன்பு, நிர்கதி அவமதிப்பு இது அனைத்தும் அவரின் தனிப்பட்ட வாழ்கையை படிக்கும்பொழுதும் உணர முடிகிறது. அதேபோல் தாஸ்தாயெவெஸ்கி வாழ்ந்த காலகட்டத்தில் சில புரட்சிகர அமைப்புகள் அவரை நிராகரித்தர்கள் என்பது உண்மையா? மாக்சிம் கார்க்கி தீமையின் உருவம் என்று தாஸ்தாயெவெஸ்கியை பழித்தது உண்மையா? அப்படியானால் எதனடிப்படையில் புறக்கனித்தார்கள்.

.


பதில் :

தஸ்தாயேவெஸ்கியின் வாழ்க்கை பற்றி அவர் பாத்திரங்களோடு ஒப்பிடும் அளவுக்கு  எனக்கு எதுவும் தெரியாது . வாசித்ததும் இல்லை. ஜே.எம் .கூட்ஸியின்  அவர் வாழ்க்கைபற்றிய நாவல் கூட கற்பனைதான்.  ஆகவே அதை தவிர்த்துவிட்டு பின் பகுதி கேள்விக்கு வருகிறேன்

 

ருஷ்ய எழுத்தாளர்களில் பலருக்கும் தஸ்தாயெவெஸ்கி மேல் ஒரு வித கசப்புணர்ச்சி இருந்தது உண்மை. இதில்  மாக்ஸிம் கார்க்கி மட்டும் விதிவிலக்கல்ல 

வாழும் காலத்திலேயே பலரும் அவரை அங்கீகரிக்கத் தயங்கினர்

 

தனித்த இரு மலைகள் எப்போதும் பேசிக்கொள்வதில்லை என்பது போல டால்ஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும் சமகாலத்தவர்களாக இருந்த போதும் கூட  கடைசிவரை இருவரும் சந்தித்துக் கொண்டதேயில்லை. பெரும் மவுனம் அவர்களிடையே நிலவியது என்கின்றனர் ஆய்வாளர்கள் . நம் தமிழ்நாட்டிலும் பாரதியாரும் பெரியாரும் சம காலத்தவராக இருந்த போதும் கடைசிவரை அவர்கள சந்தித்துக்கொண்டதான எந்த ஒரு பதிவும் இல்லை .

 

ஒரு முறை புஷ்கின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு மாஸ்கோ வந்த தாஸ்தேவெஸ்கி டால்ஸ்டாயை  சந்திக்க விரும்பியபோது நண்பர்கள் தடுத்துவிட்டனர் இருவருமே வாழும் காலத்திலேயே புகழுச்சியில் இருந்தனர் என்பதையும் இருவருமே அகவுலகில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

அதேசமயம்   இறக்கும் வரை தஸ்தாயெவெஸ்கி பற்றி எதுவும் பேசியிராத டால்ஸ்டாய் அவர் இறந்தபின் என் வாழ்க்கையில் தஸ்தாயெவெஸ்கி எவ்வளவு நெருக்கமானவர் என்பதை அவர் இன்மையில் உணர்கிறேன் என கடிதம் எழுதினார் . அது போல டால்ஸ்டாய் இறப்பதற்கு முன்  வாசித்த கடைசி புத்தகம்  தாஸ்தாயேவெஸ்கி எழுதிய கரமசோவ் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .   இருவரது மனைவியும் இருவரது மரணத்துக்குப்பின் நெருங்கிய தோழிகளாக இருந்தனர் என்பது வேறு விஷயம்.  

              

அது போல அவரது இன்னொரு சமகாலத்தவரான  புகழ்பெற்ற எழுத்தாளர் . இவான் துர்கனேவ் தஸ்தாயெவெஸ்கி பற்றி குறிப்பிடும் போது ” அவரது கற்பனாவாத எழுத்து எதார்தத்துக்கு முற்றிலும் எதிரானது . நடுரோட்டில் சிங்கம் ஒன்றை  நாம் எதிர்கொள்ளும் போது நமது முகம் பயத்தால் சட்டென சிவக்கும் அடுத்த நிமிடமே ஓட்டமெடுப்போம் …..ஆனால் தச்தாயெவெஸ்கியின் பாத்திரம் அப்படிச் செய்யாது மாறாக முதலில் பயத்தில் முகம் சிவக்கும் பிற்பாடு நமக்கு ஏன் பயம் வருகிறது இப்போது ஓடாவிட்டால் இந்த சிங்கம் என்ன செய்யும் என யோசிக்கும் இது தான் தாஸ்தாயெவெஸ்கி கதைகளின் ப்ரசனை என கிண்டலாக கூறியிருக்கிறார்

பொதுவாக  வாழும் போது என்ன விமர்சனம் இருந்தாலும் இறப்புக்குபிறகு  உயர்ந்த எழுத்தாளர்கள் பலர் கொண்டாடப்படுவர் ஆனால் தஸ்தாயவெஸ்கிக்கு நேர்ந்ததோ தலைகீழ்  இவான் புனின், மாக்ஸிம் கார்க்கி , விளாதிமீர் நபக்கோவ் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களால்  தஸ்தாயெவெஸ்கி இறப்புக்குப் பின் கடுமையாக விமரசிக்கப்பட்டார்

ருஷ்யாவின் முதல் நோபல் பரிசு பெற்ற கவிஞரான இவான் புனின்  ருஷ்ய இலக்கியத்தில் தஸ்தாயெவெஸ்கியின்  எழுத்துக்கள் மக்களை சீரஷிவுபாதைக்கு அழைத்துச் செல்பவை என்றும் கடவுளின் இருப்பை பற்றியே சதா உளறுபவை  என்றும் . குறிப்பிட்டுள்ளார் . மேலும் வாசிப்பவனை அவர் சிந்திக்கவிடாமல் பெரும் கற்பனைக்குள் அழைத்துச்சென்று மயக்க நிலையில் ஆழ்த்துகிறார் என்றும் குறிப்பிடுகிறார்

அது போல இன்னொரு நோபல் பரிசு பெற்றவரான விளாதிமீர் நபக்கோவ்  தஸ்தாயெவெஸ்கியின் எழுத்தை முற்றிலும் நிராகரித்து  அவர் தன் பாத்திரங்கள் அனைத்தையுமே  கடவுளுக்கு பாவம் செய்பவர்களாக  மாற்றுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

இறுதியாக உங்கள் கேள்வியான மாக்சிம் கார்க்கி க்கு வருவோம் முதலாம் உலகப்போருக்கு முன்பாக ரஷ்யன் ஆர்ட் தியேட்டரில்  தஸ்தாயெவெஸ்கியின் குற்றமும் தண்டனையும்  நாவலை நாடகமாக நிகழ்த்த  சிலர் முயற்சித்த போது கடுமையாக அதை எதிர்த்து போராட்டங்கள்  நடத்திய மாக்ஸிம் கார்க்கி” தஸ்தாயெவெஸ்கி  கொண்டாடப்பட்வேண்டிய எழுத்தாளர் தான் ஆனால் அவர் தீமையின் உருவம் ”எனும்  கடும் குற்றாச்சாட்டை அப்போதுதான் முன் வைத்தார் . ருஷ்யமனிதர்களிடையே அருவருப்பையும் கீழ்மையையும்  இருண்டபக்கங்களையும் மட்டுமே தன் படைப்புகள் மூலம் காண்பிக்கிறார். மாறாக வாழ்வின் மீது நம்பிக்கையூட்டும் துளி வெளிச்சம்  கூட அவர் எழுத்தில் இல்லை எனக்கூறியிருக்கிறார்.  இதனை எதிர்த்து தஸ்தாயெவெஸ்கிக்கு ஆதரவாக பலரும்  மாஸ்கோ ஆர்ட் தியேட்டருக்கு கடிதம் எழுதி நாடகம் நடைபெறவேண்டும் என வலியுறுத்தினர் . ஆனாலும் அப்போது  லெனின் மாக்சிம்  கார்க்கிக்கு பக்கபலமாக இருந்தார் . காரணம் அவரும் தஸ்தாயெவெஸ்கியின்  எழுத்துக்களை அவநம்பிக்கையின் எழுத்துக்களாக கருதினார் . ஒருமுறை த்ஸ்தயேவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்களை நீங்கள் படித்திருக்கிறீகளா எனக்கேட்டபோது அவர்  அது போன்ற குப்பைகளை படிக்க நான் என் நேரததை பயனபடுத்துவதில்லை எனகூறியிருக்கிறார்.  ஆனாலும் லெனின்கூறிய இந்த கருத்தை அவர் மனைவி நடாஷாவிடம் வேறு ஒருமுறை கேட்டபோது  அப்படியில்லை தஸ்தாயெவெஸ்கியின் நாவல்களில் காணப்படும் அதீத ஆழ்மனத்தேடல்கள்  தனி,மனிதனை புரட்சியிலிருந்து விலக்கிவைக்கும் என்பதாலேயே அவர் அப்படி விமர்சித்தார் என்றும் லெனினுக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் தஸ்தாயேவெஸ்கியும் ஒருவர் என்றும் கூறியிருக்கிறார். ஏறக்குறைய இதே கருத்தை ட்ராட்ஸ்கியும் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

அது போல  புரட்சிக்குபின் போல்ஷ்விக் ஆட்சி ருஷ்யாவை கையகப்படுத்தியபின்  எழுத்தாளர்களுக்கு கலைஞர்களுக்கு சிலை வைக்கும் அவரது பட்டியலில் முதலில் இருந்த பெயர் லியோ டால்ஸ்டாய் இரண்டாவது பெயர் தஸ்தாயேவெஸ்கி .

இப்படி தஸ்தாயெவெஸ்கி எனும் மகத்தான எழுத்தாளன்  பலராலும்  விமர்சனத்துக்கு ஆளாலும் அவரது படைப்புகள் உலகின் மூலை முடுக்குகள் அனைவரிடத்தும் சென்று அழியாப்புகழை அடைந்துவிட்டவை . இன்று   உளவியல் கலாச்சாரம் பண்பாடு சமூகவியல்   இறையியல் என பல்வேறு ஆய்வுகளுக்கு அவரது நாவல்கள் எடுத்தாளப்பட்டு  மனிதகுலவளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வந்துள்ளன என்பதும் நாம் கவனிக்கத்தக்கது

; அஜயன் பாலா

 

 

Top of Form

Bottom of Form

 

May 27, 2021

கவியின் காதல் கதை – புஷ்கினும் ருஷ்ய தேசியமும் தஸ்தாயெவெஸ்கி 200 – சிறப்புக் கட்டுரை -2

அலெக்சாண்டர் புஷ்கின் 


19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  இலக்கியத்துக்கு ருஷ்யா வழங்கிய அருங்கொடைகள் தான் இன்றும் உலகை  உய்வித்து வருகின்றன.. அந்த சொற்கள் உருவாக்கிய ஈரமும் பசையும்தான்  மனித நேயத்தையும் அன்பையும் கற்றுக்கொடுத்து பேரன்பால் உலகை இயங்க வைக்கின்றன.   .ஒரு வெண்ணிற இரவுக:ள்   ஒரு புத்துயிர்ப்பு ,,ஒரு தாய்  ஒரு நம் காலத்துநாயகன் , 

ஒரு ஆறாவது வார்டு .. ஒரு நாய்க்கார சீமாட்டி , ஒரு செம்மணி வளையல் ஒரு முதல் ஆசிரியர்  போன்றவை உலக இலக்கியத்தில் உருவாககிய தாக்கம் அனைவரும் அறிந்ததே  இவையெல்லாம்  இல்லாவிட்டால்  பல மொழிகளில் மிகச்சிறந்த படைப்புகள் தோன்றாமலே  போயிருக்கும் அப்படிப்ப்ட்ட இலக்கியபடைப்புகள் ருஷ்யாவில் உருவாக காரணமாக  அவற்றுக்கெல்லம் விதையாக இருந்த ஒரு மூலப் பெயர்தான் அலெக்சாந்தர் புஷ்கின். வெறும்  37 வயது வரை மட்டுமே வாழ்ந்த  புஷ்கினுக்கு  இத்தகைய பெருமை என்றால் அந்த குறுகிய வாழ்க்கையில் அவர் எழுதிய சில கவிதைகளும் நாவல்களும்  எவ்வளவு  அடர்த்தியான புலமையு,ம் செறிவும் ஊட்டப்பெற்றவை என்பதை யோசித்துப் பாருங்கள்  . \

புஷ்கின் இறக்கும் போது தஸ்தாயெவெஸ்கிக்கு வயது 16 . அன்று அவருக்கு புஷகின் யாரெனத் தெரிய வாய்ப்பில்லை. இத்த்னைக்கும் அவரும் அப்போது பீட்டர்ஸ்பர்க் நகரத்தில்தான் படித்துக்கொண்டிருந்தார்.  அன்றைய சூழலில் புஷ்கினின்  கவி ஆளுமை வெகு சொற்பமாகவே  சிறு குழு அளவில்  அறியப்பட்டது  ஆனால் 1880 ஜுன் 20ம் தேதி மாஸ்கோவில்  ஸ்ராஸ்ட்னயா ஸ்கொயர்  எனுமிடத்தில்  புஷ்கினுக்கு  ஒரு சிலை எழுப்பியபோது  இடைப்பட்ட 46 வருடங்களில் அவர் புகழ் தேசம் முழுக்க பரவியிருந்தது .  அந்த சிலை திறப்பு விழா வில் வந்து உரை நிகழ்த்துமாறு பீட்டர்ஸ் பெர்க்க்லிருந்து தஸ்தாயெவெஸ்கி  அழைக்கப்ப்ட்டார் . அப்போது அவருக்கு வயது 60  தன் 16ம் வயதில் புஷகின் மறைவு செய்தியை கேட்டவர் 60வது வய்தில் அவருடைய  சிலை திறப்பு விழாவுக்கு அழைக்கப்படுகிறார்.  

அந்த புஷ்கின் சிலை திறப்பு விழாவின் போது தஸ்தாயேவெஸ்கி ஆற்றிய நீண்ட உரை  இன்றும் ருஷ்ய இலக்கிய உலகில் மகத்தான உரைகளூல் ஒன்றாக கருதப்படுகிறது .பெரும்பாலும் அந்த உரை ருஷ்ய தேசியம் பற்றியம் அதற்கு புஷகின் தன் கவிதைகள்  மூலம் உருவககியிருக்கும் உணர்வெழுச்சிபற்றியும் இருந்தது . இன்னொரு வகையில் பார்த்தால் புஷ்கின் என்ற கவிஞன் தான் ருஷ்ய இலக்கியத்தின் ஆன்மா என்பதை நிறுவியது . அந்த நெடிய உரையில் தஸ்தாவெஸ்கி  அவரது கவித்துத்திலிருந்து வெளிப்படும் மனிதத்தன்மையை சுட்டி அந்த இடம் தான் ருஷ்யா மூலம் உலகமக்கள் பெறப்போகும் அற்புத ஊற்றுக்களின் கண் என துல்லியமாக எடுத்தியம்புகிறார் .

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த கவிஞனான புஷகினின் மரணத்துகு பின்புள்ள கதைகள்  இன்றுவரை ருஷ்யாவில் அவிழ்க்கப்டாத  மர்ம முடிச்சுகளுடன் இருந்து வருகிறது. அதில்  இன்னும் பலவுத சர்ச்சைகள் தொடர்கின்றன  ருஷ்யாவின் புகழ்பெற்ற பெண் கவியான் அன்னா அகமதேவா உள்ளிட்ட பலரும் புஷகினின் காதல் மனைவி நட்டாலியாவின்  பேரழகுதான் அவர் உயிரை பறித்துவிட முக்கிய காரணம் என்கின்ற்னர். .

1831 வில்புஷ்கின் தேவதை போன்ற பேரழகுகொண்ட நட்டாலியாவை திருமணம் செய்கிறார் 1836ல் புஷ்கின் இறக்கும் வரையிலான் ஐந்து வருடத்தில் அவர்களிடையிலான பேரன்பின் பரிசாக நான்கு  அற்புத குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் அப்படி ஒரு காதல் வலையில் பின்னி பிணைந்திருந்தும் எப்படி நடந்தது அந்த இயற்கையின் சதி ?

1799ல் பிறந்த புஷகின் தன் முதல் கவிதை நூலை வெளியிடும் போது வருக்கு 15 வயது மட்டுமே நிரம்பியிருந்தது . .இயல்பில் ருஷ்யா மக்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்  மட்டுமல்லாமல் புஷ்கின் ஒரு மகத்தான கவிஞனும் கூட . எப்போதும் கவித்துவ மன நிலையோடு ததும்பும் அவரது மனம் பல பேரழகிகளின் பால் தொடர்ந்து வசீகரிக்கப்ப்ட்டு பல கவிதைகளை  எழுதத்தூண்டியது. ஒருபக்கம்  ஆட்சியர்களுகெதிரான டிசம்பர் இயக்க  புரட்சிகர கும்பலின் ரகசியத்தொடர்பு இன்னொருபக்கம் மன்னர் குடும்பத்து பேரழகுப் பெண்களின் பால் மையல் என புரட்சியும் காதலும் ஒரு சேர அவர் படைப்புகளை ஆகரமித்தன.

மிகையிலோவேஸ்கோவே எனும் அவரது துவகக கால  கவிதை தொகுப்பை எலிசவேட்டா  வோரோன்ஸ்டோவா எனும்  கவர்னரின் அழகு மனைவிக்கு சமர்ப்பணம் செய்தார் . அதே சமயம்  ஜார் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்த டிசம்பர் பூரட்சிக்குழுவுக்கு ஆதரவாக அவர் எழுதிய  ஓட் டு லிபர்ட்டி ( ode to liberty) எனும்  அரசு எதிர்ப்பு கவிதைக்காக ஒரு வருடம் சைபீரிய தனிமைச்சிறைக்கு அனுப்பப்பட்டரr.  . பிற்பாடு  அவரது உறவினர்கள் நண்பர்கள் தொடர்ந்து பரிந்துரைத்ததன் பேரில் ஜார் மன்னர் நிக்கோலஸ்  அவரை விடுவித்தது மட்டுமல்லாமல் மன்னரது நேரடி கண்காணிப்பில்  தேசிய ஆவணக்காப்பகத்தில் பணியமர்த்தப்பட்டார் .

அது அரச பதவியானாலும் அவருக்கு  நட்டாலியா எனும் தேவதை அவர் வாழ்வில் மனைவியாக  அடைந்த பிறகுதான் அவருக்கு முழுமையான  அங்கீகாரம் கிட்டியது  மன்னரின் அரசவை விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் ரகசிய உள்வட்ட குழுக்களிலும் பங்கேற்கும் அனுமதி கிட்டியதற்கு பின்னாலிருந்த ஒரே காரணம்  நட்டாலியாவின் வசீகர முகம்.  ஜார் மன்னர் நிக்கோலஸே அவளது அழகால் மிகவும் ஈர்க்கப்ப்ட்டார்.  . புஷகினுக்கு அரசவையில் கிட்டிய திடீர் அங்கீகாரத்துக்குப்பின் இப்படியெல்லாம் ஒரு கதை இருப்பது அவருக்கு தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால்   அவளைச்சுற்றி படர்ந்திருக்கும் அதிகார ஒளிவட்டத்துக்கு அவள் அழ.கும் ஒரு கார்ணம் என்பது .நட்டாலியாவுக்கே கூட தெரிந்திருக்கவில்லை

இதனிடையே புஷ்கின் எழுதிய நாவல்களும் கவிதைகளும் அவருக்கு இலக்கியமட்டத்தில் பெரும் மதிப்பை  உருவாக்கின . அவரது சமகாலத்தவரும்   மே;ல் கோட்டு போன்ற கதைகளை எழுதியவ்ருமான நிகாலோய் கோகல் புஷ்கின் கவிதைகளின் மகத்துவத்தை பலருக்கும் எடுத்துரைக்க துவங்கினார். கவிதை ,சிறுகதை , நாவல் நாடகம்  ,கட்டுரை என இலக்கியத்தின் பல வடிவங்களிலும்  தன் தடத்தை  அழுத்தமாக  பதியவைத்தார்  .  கவிதை வடிவிலான யூஜின் ஒன்னொஜின்  ,  கேப்டன் மகள் துப்ரோவ்ஸ்கி போன்ற நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. ,இப்படி  புஷ்கினுக்கு அதிகார மட்டத்திலும்  இலக்கியமட்டத்திலும் பெயர் கூடி வரும்போது கூடவே  சர்ச்சைகளும் அவரைச்சுற்றி சுழன்றன

அவரது ப்ரச்னையே எதுலும் உடனே உணர்ச்சி வசப்படுவது .. கோவமாயிருக்கும் போது எரிமலையும் அன்பால் நெகிழும்போது  பனிமலையுமாக  எப்போதும் ஒரு கொந்தளிப்பில் இருந்தார் . இதன் காரண்மாக  தன் கோபத்துக்கு ஆளான  எவரையும் டூயல் எனப்படும்  உயிருக்கு சவால் விடும் மரண பந்தயத்துக்கு அழைத்துவிடுவர . இந்த டூயல் என்பது ருஷ்ய கலாச்சார்த்தில் தொன்று தொட்டு  இருந்து வரும் அம்சம் . நம்மூரில் மடலேறுதல் ஜப்பானில் ஹரகிரி போல டூயல் ருஷ்யாவின் வாழ்க்கை முறையோடு கலந்துவிட்ட ஒரு அம்சம் .

ஒருவர் டூயலுக்கு அழைத்துவிட்டால் தொடர்ந்து குறிப்பிட்ட  சில முக்கியஸ்தவர்களின் முன்னிலையில்  இடத்தையும் நாளையும்  குறித்து  அறிவித்துக் கொள்ளவேண்டும் . அச்சமயம் இருவர் மட்டுமே சண்டையிட வேண்டும்  முற்காலத்தில் வாட் சண்டையாக இருந்த இந்த டூயல் பிற்பாடு துப்பாக்கியால் ஒரே நேரத்தில் சுட்டுக்கொள்வதாக மாறியது .  .  இருவரும்  குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சுட்டுக்கொள்ளவேண்டும்  பொதுவாக பத்து அடி  இடைவெளி இருவருக்கும் இருக்க வேண்டும் எம்னது விதி.

இப்படி டூயயாராகும் இருவரும்  இடைப்பட்ட  காலத்தில் நேரடியாக சந்திக்க கூடாது . கருத்து பரிமாற்றங்களுக்கு  தங்களின் செகண்ட்ஸ் எனும் இரண்டாம்  நிலைக்கு ஒருவரை  நியமிக்க வேண்டும்   இந்த உதவியாளர்களின் வேளையே தூதுபோய் சமாதானம் செய்து டூயலை எப்படியாவது நடக்கவிடாமல் செய்த்விடவேண்டும் என்பதுதான்.  பெரும்பலான டூயல்கள் இந்த உதவியாலர்களால் தடுத்து நிறுத்தபட்டுவிடும். ஆனால் சில தீர்க்கவே முடியாத பகைக்கு டூயல் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கும் /

இப்படிப்ப்ட்ட டூயலுக்கு புஷ்கின் மிதமிஞ்சிய உணர்ச்சுயில் அழைப்பதும் பிற்பாடு பின் வாங்குவதும்  பல முறை நிகழ்ந்துள்ளன.  எந்தனை முறை யார்யாரை அவர் டூயலுக்கு அழைத்தார் அந்த விளைவு என்ன என்ன என தனிப் பட்டியலே வரலாற்றாய்வாளர்கள் சேகரித்து வைத்திருக்கின்றனர். ,  ஜார் அரசங்கம் இந்த டூயல் பந்தயத்துக்கு தடை வித்தித்திருந்த போதும் அது பல இடங்களில் நடைபெற்று பலருடைய உயிரை பலி வாங்க்கிகொண்டேதான்  இருந்து வந்தது .

இச்சமயுத்தில்தான்  அவருடைய வாழ்க்கைகுள் ஒரு விதியென வந்து நுழைந்தான் ஜார்ஜெஸ் டி ஆன்தாஸ் . ருஷ்யாவில் குடியேற வந்த பிரெஞ்சு அதிகாரி                                                                                                      ஜார்ஜெஸ்டிஆன்தாஸ்

இங்கு ருஷ்ய மக்களுக்கு பிரெஞ்சு கலாச்சாரத்தின் மீதிருந்த மோகத்தை சொல்ல வேண்டும் . ருஷ்ய மக்களின் எழுத்தளர்களின் கலைஞர்களின் பலவீனம் பிரான்ஸ்.  . அதன் மிதமான  தட்ப வெட்ப சூழலும் நிலப்ப்ரப்பும் அவர்களுக்கு என்றும் வசீகரம்  மட்டுமல்லாமல்  இலக்கியத்தில்  ருஷ்யாவின் முன்னோடியும் அவர்களே  மேலும் அரசியலில்  பிரெஞ்சு புரட்சி ருஷ்ய மக்கலிடையேயும் பல விளைவுகளை உண்டககியது

இதனூடே  1812ல்   நெப்போலியன் போனபார்ட் ருஷ்யாவின் மீது நடத்திய  போருக்குப்பின் பல பிரெஞ்சு அதிகாரிகள் ருஷ்ய ஜார் மன்னன் அனுமதி பெற்று  சர்வ வல்லமையுடன் ருஷ்யாவில் வாழத்துவங்கினர்  அப்படி வசித்த்வர்கள் மீது ருஷ்ய பெண்களுக்கும் ஒரு வசீகரம் இருந்தது . அப்படித்தான்  ஜார்ஜச் டி ஆதன்ஸ் எனும் அந்த பிரெஞ்சு அதிகாரியிடம் பல ருஷ்ய பெண்கள் வீழ்ந்தனர் .

ஆனால் அவர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை  காரணம் அவனை அவனை ஈர்த்த ஒரே அழகுமுகம் புஷ்கினின் மனைவியான  நட்டாலியா  . அரசவை நிகழ்வுகளில் அவளை பார்க்க நேரிட்ட அன்றே ஆதன்ஸ் நட்டாலியாவுக்கக எதையும் செய்வது என முடிவுக்கு வந்துவிட்டான் ,. வரலாற்றில் இப்படித்தான் சில விபரீத காதல்கள் பெரும் திருப்பங்களை உண்டாக்கி  பெரும் திருப்பங்களை உருவாக்கியிருக்கின்ற்ன .   . ஒருமுறை நட்டலியாவே நான் மட்டும் புஷகினை திருமணம் செய்திராவிட்டால் டி ஆதன்ஸுடன் சென்றிருப்பேன் எனகூறியிருப்பதாகவும்  தகவல்கள் உண்டு  திருமண பந்தம் என்பது ருஷ்ய கலாச்சாரத்தில் உடைக்கவே முடியாத அழுத்தமான முடிச்சு


.

ஆனால் டி ஆதன்சோ   நட்டாலியாவை எப்படியும் அடைவது என உறுதியாக இருந்தான் . இதன் காரண்மாக லம்பூன் களை உருவாக்கி புழக்த்தில் விட்டான் / லம்பூன்கள் என்றால் நம் ஊரில் மொட்டை கடுதாசி என்பார்களே அதுபோல அநாமதேய  செய்தி.. . நட்டாலியாவுக்கும் மனனருக்கும் உறவு இருப்பதகாவும் வதந்திகளை  பரப்பினான் . இதனிடையே புஷ்கினை சுற்றி கடன் தொல்லைகளும்  நெருக்கியது .பணக்கார டி ஆதன்ஸ் நட்டாலியாவை சுலபமாக வலையில் வீழ்த்துவான் என பலரும் பேச  ஆருடம் சொல்ல ஆரம்பித்த்னர்

இந்த சேதியால் புஷ்கினின் இதயம் குமுறி கொந்தளித்தது .ஆவேசமாக டி ஆதன்ஸிடம் சென்று டூயல் எனப்படும்  ஒத்தைக்கு ஒத்தை உயிர் சண்டைக்கு அழைத்தான் . ஆனல புஷ்கின் நண்பர்கள் தலையீட்டால் இது ரத்து ஆனது .இச்சூழலில் தான்  டி ஆத்ன்ஸ் நட்டாலியாவை அடைய  அதன் இன்னொரு வழியாக அவள் தங்கை எக்டோரிணாவை   திருமணம் செய்தான்.  நட்டாலியாவின் குடும்பத்து வறுமைக்கு விழுந்தது முதல் பலி . ( பிற்பாடு ருஷ்யா 20ம் நூற்றாண்டில் சுக்குநூறாக சிதைவுற்ற பின் புகழ்பெற்ற ருஷ்ய பெண்களின் கற்பு வெறும் சிகர்ட்டுக்கு ஐரோப்பிய வீதிகளில் விற்கப்ப்ட்ட துயர சம்பவம் ஏனோ நினைவுக்கு வருகிறது )

தன் மைத்துனியை மாமனார் எதிரிக்கு பணத்தின் பொருட்டு தாரை வார்த்த இச்சம்பவம்  புஷ்கினை சுக்குநூறாக சிதைத்துவிட்டது

பலரும்  இனி டி ஆத்ன்ஸ்  நட்டாலியாவை  அடைவதை யாரலும் தடுக்க முடியாது என்பது போல புஷ்கினின் காதுபட பேச ஆரம்பித்த்னர் . நட்டாலியாவின் மனமோ  பெரும் நிம்மதியின்மைக்குள் வீழ்ந்தது . ஆனால் புஷ்கினுக்கோ மனைவி மீது மலையளவு நம்பிக்கை  அவருக்கு இது ருஷ்யாவின் தேசிய பிர்ச்னை . ஒரு பிரெஞ்சுக்காரன்  நம்மை கொக்கலிப்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை .அவரதூ ருஷ்ய இதயம் கொதிநிலையின் உச்சத்துக்குப் போனது  இனியும் தாமதிப்பது அழகல்ல என முடிவு செய்தார் .

26 ஜனவரி 1837 அன்று டி ஆதன்சை  கடுமையாக் கேலிசெய்து ஒரு கடிதம் அனுப்பினார் .மறைமுகமாக டூயலுக்க்கான் தூண்டுதல் .நேரடியாக் அழைப்பது அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றம் .  அவரது எண்ணம் போல டி ஆதன்ஸ்  புது மனைவியும் புஷ்கினின் மைத்துனியுமான   எக்டெரினா புஷ்கின் வீட்டை நோக்கி  வந்தார்.  அவளது கையில் ஒரு கடிதம் . பிரெஞ்சு தூதரக முத்திரையிட்ட  கடிதம் . அந்த கடிதத்தில் புஷ்கினை தன்னோடு  டூயல் செய்ய டி அத்ன்ஸ்  அழைப்பு விடுத்திருந்தார்  வாங்கிப் படித்த புஷ்கினும் சவாலை  ஏற்றார்  


நாள் நேரம் இடம் குறிக்கப்ப்ட்டது \

இடம்  புனித பீட்டர்ஸ் பர்க் நகரில் கறுப்பு நதி எனப்படும் சியோரான்யா நதி

நால்  27 ஜனவ்ரி 1837 கிரிகோரியன் கலண்டர்படி

புஷ்கின் தனக்கு  உதவியாளராக  நியமனம் செய்தது ஆர்தர் மேக்னிஸ்  பீட்ட்ர்ஸ் பர்க் நகர் பிரிட்டிஷ் தூதுரக அதிகாரி/   மேக்னிஸும் முந்தின இரவு இரண்டு மணிக்கு டி ஆதன்சின் பிரெஞ்சு தூதராகத்துக்கு சென்று கதவைத்தட்டினார் ஆனால் கொடூர மனம் படைத்த டி ஆதன்ஸ் திறக்க வில்லை . அவன் கையில் துப்பாக்கி இறுகபிடிக்கப்ப்ட்டிருந்தது.

கறுப்பு நதி என அழைக்கப்படும் சோரான்யா நதி ஏற்கனவே  சில டூயல்க்ளுக்கு பெயர் பெற்றது அதனாலேயே அது கறுப்பு நதி என பெயர்பெற்றது.  அந்த கறுப்பு நதிக்கு  27 ஜனவரி காலை விடியலில் இருவரும் வந்தனர் இருவர் கைகளிலும் துப்பாக்கி

இருவரும் ஒருசேர சுட்டுக்கொள்ள புஷ்கின் இடுப்பில் குண்டு துளைத்துகொட்டியது குருதி   அதே நேரம் டி ஆத்ன்ஸின் தோல்பட்டையில் புஷ்கின்னின் துப்பாக்கி குண்டு துளைத்தது

புஷ்கின் பெரும் துயரத்துடன் கறுப்பு நதியின்கரையில் பிணமாக வீழ்ந்தார்

அன்று மாலை புனித  பீட்டர்ஸ் பர்க் நகரமே  மேக மூட்டத்தால்  இரூண்ட்து. ஃநகர மக்கள்  பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.    புஷ்கின் மரண செய்தி கேட்டு இளம் கவி லெர்மந்தோவ்  பெரும் துக்கத்தில் வீழ்ந்தார்

அப்போது அவருக்கு வயது வெறும் 22  புஷ்கின் உடல் நட்டாலியாவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க சீருடை தவிர்க்கப்பட்டு சாதார்ன ஆடையுடன் மரணபெட்டியில் படுக்க வைக்கப்ப்டு பீட்டஸ் பர்க் நகரத்தின் புனித ஐசக் தேவாலய்த்துக்கு கொண்டு வர்ப்ட்டது

அந்த  இரண்டு மணி நேரத்தில் லெரம்ண்டோவ் எழுதிய டெத் ஆப்  எ பொயட் (  DEATH OF A POET) எனும் கவிதை நகரம் முழுக்க வினியோக்கிக்கப்ப்ட்டது அந்த கவிதை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆவேசத்தையும் உண்டககியது   ஜார் அரசு உடனடியாக அந்த கவிதைக்கு தடையாணை பிறப்பித்து உத்தரவிட்டது .புழக்கத்தில் இருந்த் கவிதைகளும் கைப்பற்றப்ப்ட்டன.  அந்த கவிதையின் கடைசி  நான்கு வரிகள் ஜார் அரசை கேள்விகேட்கும் வகையில் எழுதப்பட்டிருந்ததுதான் அந்த காரணம்


ஒரு வகையில் புஷ்கின் பிரெஞ்சு அதிகாரியால் வீழ்த்த்ப்ட்டதாலோ என்னவோ அவரை ருஷ்ய தேசியத்தின் விதையாக மக்கள் கருதினர் \

ஒரு இனத்தின் மொழியின்  கவிஞனின் ரத்தம் பூமியில் வீழும்போதுதான் அந்த நிலம்  தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ளும் வகையில் சுவாசிக்க துவங்கிறது .  இதன் காரணமகாவே  புஷ்கின் மரணம் ஒரு சாட்சியமாக வரலாற்றின் நினைவில் இன்றும் நிலைத்து நிற்கிறது  புஷ்கின் அன்று நிலத்தில் சிந்திய சிவப்புதான் பிற்பாடு ருஷ்ய தேசம் முழுக்க பரவி 80 ஆண்டுகளில் ருஷ்யாவை ஆண்ட கம்யூனிசத்தின் கொடியாக மாறியது


 

-    அஜயன் பாலா

27-05-2021

 

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...